வியாழன், 25 மே, 2023

தற்போதைய ''கல்விக்கொள்கைகளும்'' ''புதிய கல்விக்கொள்கைகளும்''!

 தற்போதைய ''கல்விக்கொள்கைகளும்'' ''புதிய கல்விக்கொள்கைகளும்''!

----------------------------------------------------------------------------------------------------
இன்று நிலவுகிற கல்வியானது இந்தியாவின் தற்சார்புப் பொருளாதாரம், உற்பத்தி ஆகியவற்றிற்குப் பயன்படாத ஒன்று மட்டுமல்ல . . . அதற்கு எதிரானதும்கூட!
தற்சார்புப் பொருளாதாரத்திற்குப் பயன்படாத ஒன்று என்றால் . . . எதற்குப் பயன்படுகிறது?
அந்நிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரச் சுரண்டலுக்கு உதவுகிறது இந்தக் கல்விமுறை! பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நீடிப்புக்கும் உதவுகிறது இந்தக் கல்விமுறை!
பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தேவையான மனிதசக்தியை உருவாக்கித் தருவதே அதன் நோக்கமாகும்! அவற்றின் இந்திய மண்ணில் நீடிக்கிற தொழிற்சாலைகளுக்குமட்டும் அல்லாமல் . . . அவற்றின் சொந்த நாடுகளாகிய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இந்திய மனித சக்தியை ''ஏற்றுமதி செய்யும்'' கல்விக்கொள்கைதான் தற்போதைய கல்வி! (அதனால்தானே ''ஆங்கிலத்தின் செல்வாக்கு'' ஓங்கி நிற்கிறது!)
மறுபுறம் . . . அறிவியல்பூர்வமான சமுதாயநோக்கு மக்களிடையே ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக . . . இந்தியாவின் ''பழம்பெருமை , பழம்பண்பாடு'' என்ற போர்வையில் . . . ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நீடிப்புக்கு ஆணிவேராக நீடிக்கிற நிலவுடமைச் சிந்தனைகளை . . . பண்பாடுகளை . . . இலக்கியங்களைப் ''புனிதப்படுத்தி'' மக்களிடையே நீடிக்கவைக்கிற கல்விமுறையாக நீடிக்கிறது!
தத்துவச் சிந்தனையோ, இலக்கியங்களோ, பண்பாடோ . . . எதுவும் வர்க்க நலன்களுக்கு அப்பாற்பட்டது இல்லை! கல்வி அமைப்பும் இதற்கு விதிவிலக்கு இல்லை!
இந்தக் கல்விமுறையை அவ்வப்போது தங்களுக்கு ஏற்றாற்போல . . . ''புதிய மொந்தையில் பழைய கள்'' என்ற பழமொழிக்கேற்ப . . . மாறி மாறி ''புதுப்பித்துக் கொள்கின்றன '' இந்தியாவின் ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும்!
''நாடுதழுவிய கல்விக்கொள்கை '' ஆகட்டும், ''மாநிலங்கள் தழுவிய கல்விக்கொள்கை ஆகட்டும்'' இரண்டுமே மேலே நான் குறிப்பிட்ட பயன்பாடுகளையே அடிப்படையாகக்கொண்டவை ஆகும்!
பன்னாட்டு ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரான . . . அதற்கு உதவுகிற நிலவுடைமை உறவுக்கு எதிரான . . . ஒரு சமுதாய, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு இங்கு உருவாகாதவரையில் . . . இந்திய மக்களுக்கான உண்மையான ஒரு கல்விக்கொள்கை இங்கு உருவாகாது! உருவாக்கவிடமாட்டார்கள்!
ஏதோ மக்களுக்கான ஒரு ''புதிய கல்விக்கொள்கையை'' உருவாக்குகிறோம் என்று நடுவண் அரசும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு . . . 'பிரகடனப்படுத்தி வருவது'' ஒரு ஏமாற்று வித்தையேயாகும் என்பதில் ஐயம் இல்லை!
இந்தியாவில் தற்சார்புப் பொருளாதாரம் உருவாகாதவரையில் . . . எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்திலும்கூட . . . ஏகாதிபத்திய, நிலவுடமை நலன்களுக்கு எதிரான ஒரு கல்விமுறையைக் கொண்டுவரமுடியாது!
ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை . . . ''மரத்தில் பால் வடிகிறது'' என்று கூறுகிற ஏமாற்றுவேலையும் நீடிக்கத்தான் செய்யும்! ஏமாற்றுவது அவர்களின் உயிர்நாடிக்குத் தேவையான ஒன்று! அதை அவர்கள் செய்யத்தான் செய்வார்கள்!
மக்கள்தான் ஏமாறாமல் இருக்கவேண்டும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India