வியாழன், 25 மே, 2023

கல்விக்கொள்கை உருவாக்கத்தில் தமிழாசிரியர்களுக்குப் பங்கு அளிக்கலாமா? கூடாதா என்பதுபற்றிய விவாதத்தில் எனது இறுதிக் கருத்து !

 கல்விக்கொள்கை உருவாக்கத்தில் தமிழாசிரியர்களுக்குப் பங்கு அளிக்கலாமா? கூடாதா என்பதுபற்றிய விவாதத்தில் எனது இறுதிக் கருத்து !

---------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியில் சேர்ந்து பணியாற்றும்போது, அப்பணிக்குரிய அறிவைப் பெற்றிருப்பார்; பெற்றிருக்கவேண்டும். ஆனால் அதேவேளையில் . . . அவர் இந்தப் பிரபஞ்சத்தின் . . . சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் . . . அவைபற்றிய அறிவையும் கொண்டிருப்பார்.; கொண்டிருக்கவேண்டும்.
அதனால் ஒருவர் தமிழாசிரியராக இருப்பதாலேயே . . . . தமிழ்மொழி அறிவியல், தமிழ் இலக்கிய அறிவியல் தாண்டி . . . பிற அறிவியல்துறைகள்பற்றிய அறிவைப் பெற்றிருக்கமாட்டார் என்று கருதக்கூடாது.
இது பிற துறைப் பேராசிரியர்களுக்கும் பொருந்தும். பிரபஞ்ச, சமுதாய அறிவியல்களில் மொழியும், இலக்கியமும் அடங்கும்.
மேலும் கல்விக்கொள்கை என்பதில் வெறும் துறைசார் பாடத்திட்டம் மட்டும் அடங்குவது இல்லை; மாணவரின் மனித மூளை எந்த ஒன்றையும் எவ்வாறு கற்றுக்கொள்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, கற்றல் - கற்பித்தல் கொள்கையை வரையறுப்பதும் அடங்கும்; இந்தக் கொள்கையானது அனைத்துத் துறை ஆசிரியர்களுக்கும் பொதுவானது.
ஒரு மாணவருக்கு எதையும் உணரும் திறன், ஒன்றைப் படைக்கும் திறன் ஆகியவற்றை எவ்வாறு கற்றுக்கொடுப்பதும் என்பதும் அடங்கும்.
இவை எல்லாவற்றையும் விட . . . ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் . . . மக்களின் . . . . வாழ்க்கையை மேம்படுத்துவதற்கே கற்றலும், கற்பித்தலும் நீடிக்கின்றன; எனவே குறிப்பிட்ட சமுதாயத்தின் தேவைகள் என்ன, அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதுபற்றிய அறிவும் தேவைப்படுகிறது. இதுவும் அனைத்துத் துறை ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கான கல்விக்கொள்கையை வரையறுப்பதற்கான குழுவில் ஒரு (தமிழ்ப்) பேராசிரியர் இணைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றே. இங்குப் பேராசிரியர் என்று பார்க்கவேண்டுமே ஒழிய, அவரது சிறப்புத்துறைபற்றிய விமரிசனத்திற்கு இங்கு இடம் இல்லை!
ஆனால் இந்தக் குழு பரிந்துரைக்கும் கொள்கையை ஏற்றுக்கொண்டு, செயல்படுத்துவது ஆட்சியாளர்களின் - அவர்களின் முடிவுகளைச் செயல்படுத்துகிற அதிகாரிகளின் - பொறுப்பு ஆகும். கல்வித் துறையில் தனியார் ஆதிக்கம் வளர்ந்துநிற்கிற ஒரு சூழலில் இது எந்த அளவு சாத்தியம் என்பது ஒரு தனி வினா!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India