வியாழன், 25 மே, 2023

தமிழ்மொழி, இலக்கியம் அறிவியலாளர்களையும் பிற துறை அறிவியலாளர்களையும் எதிர் எதிராக நிறுத்தாதீர்கள்

 தமிழ்மொழி, இலக்கியம் அறிவியலாளர்களையும் பிற துறை அறிவியலாளர்களையும் எதிர் எதிராக நிறுத்தாதீர்கள் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களே !

----------------------------------------------------------------------------------------------------
நேற்று தமிழ் ஆசிரியர்கள்பற்றித் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஒரு பதிவு இட்டிருந்தார்கள். அதற்கு நானும் பதில் கூறியிருந்தேன். அதன்பின்னர் தோழர் அப்பதிவை நீக்கிவிட்டு, ஒரு விரிவான பதிலை இன்று இடுவதாகக் கூறியிருந்தார். தான் சொன்னபடி இன்று ஒரு பதிவை இட்டு, என் கவனத்திற்கும் அதைக் கொண்டுவந்தார்.
முழுவதும் படித்துப்பார்த்தேன். அவரது புரிதல் மிகத் தவறானது என்பதே எனது கருத்து! ஆனால் இதுபோன்ற கருத்துக்களுக்கு நீண்ட பதில் எழுத நான் விரும்பவில்லை! பயன் இருந்தால் உறுதியாக நான் எழுதுவேன்.
ஒரு நாட்டின் பொருளாதார உற்பத்தியில் . . . . பிற உற்பத்தி சக்திகளுக்கு இணையாக அந்த மக்களின் மொழி நீடிக்கிறது என்பதே தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறுகிற மார்க்சியத்தின் - மக்கள் ஜனநாயகத்தின் அடிப்படை என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.
ஆனால் இந்தியாவில் அந்நிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதார ஆதிக்கம்தான் நீடிக்கிறது என்பதால் . . . . அந்நிய மொழியாகிய ஆங்கிலம் மற்ற இந்திய மொழிகள்மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
மேற்கூறிய அந்நிய ஏகாதிபத்தியங்களின் தரகர்களாகச் செயல்படும் இந்திய முதலாளிகள் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு . . . அதற்கு அடுத்தபடியாக ''இந்தியின்'' ஆதிக்கத்தை ஆட்சி அதிகாரத்தில் நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். பொருளாதார உற்பத்தியில் ஆங்கிலம், நிர்வாக அதிகாரத்தில் இந்தி என்ற இந்த மக்கள் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக மக்கள் போராடவேண்டிய ஒரு சூழலில் . . .
சில தனிப்பட்ட அறிவியலாளர்களைத் தமிழ் ஆசிரியர்களுக்கு எதிராக நிறுத்தி . . . தமிழ்மொழிக் கல்வியையும் தமிழ் ஆசிரியர் , ஆய்வாளர்களையும் மிகத் தவறாகச் சித்தரிக்க முயல்கிறார் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள்! ஏதோ பிற துறை அறிவியலாளர்களுக்கு எதிராக மொழி, இலக்கிய அறிவியலாளர்கள் ( இதைத் தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!) நிற்பதுபோன்ற ஒரு மாயையை உருவாக்க அவர் முயல்கிறார்.
எந்தவொரு பிற துறை அறிவியலாளர்களையும் தாழ்வாகக் கருதும் எண்ணம் தமிழ் ஆசிரியர்களுக்குக் கிடையாது. மாறாக, தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் அவர்களைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள்!
நான் ஒரு தமிழ் ஆசிரியன்தான்! அறிவியல் பார்வையும் சமுதாய நோக்கும் உள்ள ஒரு ஆசிரியன்தான்!
பிரபஞ்சத்தின் தோற்றம், இயக்கம்பற்றியும் . . . ஏன் மார்க்சியப் பொருளாதாரம், அரசியல்பற்றியும் பேசக்கூடிய தமிழ் ஆசிரியர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். மேலும் உண்மையான போராட்டக் களத்தில் நின்று உயிரை இழக்கவும் தயாராக இருக்கின்றனர்! எனவே தமிழ் ஆசிரியர்களைத் ''தற்குறிகள்'' என்று கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் தோழரே.
அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கமும் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையும் இந்தி மொழி ஆதிக்கமும் நீடிக்கிற இன்றைய இந்தியச் சூழலில் . . . அவற்றை எதிர்த்து நின்று போராடவேண்டிய தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களின் இதுபோன்ற தவறான புரிதல்களுக்கு . . . கருத்துக்களுக்கு என்ன பதில் சொல்வது?
ஒரே பதில் . . . அவரது ''கருத்துச் சுதந்திரத்தை'' மதித்து . . . இந்தப் பதிவுத்தொடரை இத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
உண்மையில் தூங்குகிறவர்களை எழுப்ப முயலலாம்! ஆனால் . . . ?
இந்த எனது பதிலே தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களுக்கானது இல்லை! தமிழ்மொழி அறிவு எந்த அளவுக்குத் தேவை என்பதை மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லவே எழுதியுள்ளேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India