வியாழன், 25 மே, 2023

தமிழ்வழிக் கல்விக்கான கருத்தாடலில் ஒரு கருத்து . . .

 நண்பர் திரு மாலன் கருத்தும் எனது கருத்தும்

------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்வழிக் கல்விதொடர்பான எனது இன்றைய இரண்டு பதிவுகளைத் தொடர்ந்து, நண்பர் திரு. மாலன் அவர்கள் நடுவண் அரசு, மாநில அரசு முயற்சிகள் பற்றி விளக்கியிருந்தார். தமிழ்வழிக் கல்வியை ஏற்றுக்கொண்டுதான் அவர் அதைக் கூறுகிறார். இதில் ஐயம் இல்லை! ஆனால் இவ்வளவு முயற்சிகள் நடைபெற்றும் தமிழ்வழிக் கல்விக்கு நாம் எதிர்பார்க்கிற வரவேற்பு கிடைக்கவில்லை என்ற ஒரு ஆதங்கத்தில் சில கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். அவருக்கு நன்றி. அதையொட்டி, எனக்குத் தோன்றிய கருத்துக்களையும் இங்கு முன்வைக்கிறேன்.
நண்பர் திரு. மாலன் அவர்கள்
-----------------------------------------------------------------------
''அரசு எதுவும் செய்யவில்லை என்பது சரியல்ல. தமிழ்வழியில் படித்த மாணவருக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு, அரசுப்பணிகளுக்கான தேர்வில் தமிழில் கட்டாயத் தேர்ச்சி, பொறியியல் கல்வியில் முதலாண்டு இரு பருவங்களில் தமிழ்ப்பாடம், பள்ளிகளில் அறிவியல் பாடம், பாடத்திட்டத்தில் தமிழ் முதல் மொழி, தமிழ்நாட்டிலுள்ள எத்தகைய பள்ளியாயினும் அவற்றில் தமிழ்ப்பாடம் என்பன மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, குடிமைப்பணி, நீட் போன்ற தேர்வுகளைத் தமிழில் எழுத வாய்ப்பு, தொழிற்கல்வியை தமிழில் பயிற்றுவித்தல் இவை மத்திய அரசின் முயற்சிகள் கணினி, கைபேசி, செய் மதியில் (செயற்கை நுண்ணறிவில்) தமிழ் என்பன தனியார் அளித்த கொடைகள் இருந்தும் நீங்கள் சொல்லும் நிலைதான் இருந்து வருகிறது (ஏறத்தாழ 100 ஆண்டுகளாக) ஆனால் யாரும் எதையும் திட்டமிட்டுத் திணித்ததாக சொல்வதற்கில்லை''.
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------------------------------------------
நன்றி நண்பர் மாலன் அவர்களே. மிகத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். பல முனைகளிலும் தமிழ்வழிக் கல்விக்கு நடுவண் அரசும் தமிழ்நாடு அரசும் பல முயற்சிகளை எடுத்துள்ளன. இருப்பினும் . . . ?
நிலைமை மாறவில்லை! தமிழ்வழிக் கல்விக்கு மக்களிடையே ஆதரவு இல்லை! இதைத்தான் நான் மற்றொரு பதிவில் கூறியுள்ளேன். ''ஆங்கிலத்திற்கு ஆதரவான ஒரு பொய்ம்மை நீண்ட நாள்களாக . . . . இல்லை வருடங்களாக . . . உருவாக்கப்பட்டிருக்கிறது!
//''பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் ஆதரவு ஆட்சியாளர்களும் . . . . முதலிலேயே ஒரு பொருளை உற்பத்திசெய்து விற்பதைவிட . . . அப்பொருளுக்கான ''சந்தையை'' . . . அப்பொருளின் விற்பனைக்குத் தேவையான ''மக்களின் வரவேற்பை . . . இசைவை'' முதலில் ''உற்பத்தி'' செய்வார்கள்! அதன்பின்னர் அந்தப் பொருளின் விற்பனைக்குச் சிக்கலே இல்லை! அந்த நிறுவனங்களே வந்து, ''இந்தப் பொருள் வேண்டாம்'' என்றாலும் , மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! //
எனவே, 100 ஆண்டுகளுக்குமேலாக இங்குத் திணிக்கப்பட்டுள்ள . . . ''உருவாக்கப்பட்டுள்ள'' ''உற்பத்திசெய்யப்பட்டுள்ள'' ஆங்கிலமோகம் . . . ஆங்கில ஆதிக்கத்தை . . . அவ்வளவு ''எளிதில்'' தகர்த்தெறியமுடியாது!
தகர்த்தெறியவே முடியாது என்று நான் கூறவில்லை. ஆனால் அதற்கு பல முனைகளில் மக்கள் முயல வேண்டும்! ஏனென்றால் அதற்கு அவ்வளவு பலமான அடித்தளம் இங்குப் போடப்பட்டிருக்கிறது!
அதற்கு அடிப்படையான சமூக, பொருளாதார, அரசியல் கூறுகள் மறையவேண்டும். இதை ''நிமிடங்களில், மணிகளில், நாள்களில், மாதங்களில், ஆண்டுகளில் ''செய்துவிடமுடியும் என்ற ஒரு ''கற்பனை ஆசை'' எனக்குக் கிடையாது! அதுபோன்று சமூக உளவியல் ஆய்வுகளும் தீர்வுகளும் தேவைப்படும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India