வியாழன், 25 மே, 2023

தமிழாசிரியர்கள்பற்றிய தவறான பதிவுக்கு மறுப்பு!

 தமிழ்நாட்டுக் கல்விக்கொள்கைக்கான குழுவில் தமிழாசிரியர்களை நியமித்தது தவறு என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ள தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களுக்கான தோழமை அடிப்படையிலான பதில் இது!

-----------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்கள் ஒரு முற்போக்குத் தோழர் (எனக்கு நெருங்கிய நண்பரும்கூட). அவர் தமிழ்நாட்டுக் கல்விக்கொள்கைக்கான குழுவில் தமிழாசிரியர்களை நியமிப்பது தவறு என்று கூறிய பதிவுக்குப் பதிலாகத் தோழமை அடிப்படையில் நான் இந்தப் பதிவை இடுகிறேன்.
தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களே. தங்களது கருத்து மிகத் தவறு என்றே நான் கருதுகிறேன். பொதுவாகத் தமிழாசிரியர்கள்பற்றித் ''தமிழகத்தில்'' ''தமிழ் உணர்வுமிக்க தமிழகத்தில்'' சிலர் கொண்டிருக்கிற கருத்தையே தங்களைப் போன்றவர்கள் கொண்டிருப்பது மிக்க வேதனையாக இருக்கிறது.
தமிழ்த்துறையில் பணிபுரிபவர்களுக்குக் ''மக்களுக்கான கல்விக் கொள்கையை'' வரையறுப்பதில் ''திறமையோ அல்லது அறிவோ'' இருக்காது என்று தாங்கள் கருதுவது தவறு. அதுபோல பிற ''அறிவியல் துறைகளில்'' இருப்பவர்கள் அனைவருக்கும் அந்தத் ''திறமையும் அறிவும் இருக்கும்'' என்று தாங்கள் கருதுவதும் தவறு.
ஒருவர் ஆசிரியர் பணிக்கு வருகிறார் என்றாலே அவருக்குக் கல்விக்கொள்கைகளைத் தீர்மானிப்பதிலும் பங்கு உண்டு. இதில் தமிழ்த்துறை, பிற அறிவியல் துறை என்று வேறுபடுத்துவது தவறு.
மக்களுக்கான கல்விக்கொள்கைகளை வரையறுப்பதற்குத் தேவையானது . . . சமுதாயம்பற்றிய முற்போக்குக் கொள்கைகளும் ஆய்வுமுறையுமே தேவை! மாணவர்களிடம் நேரடித் தொடர்பும் தேவை. இவை ''தமிழ்ப் பேராசிரியர்களுக்கு'' இருக்காது, ஆனால்'' பிற அறிவியல் துறையினருக்கு'' மட்டுமே இருக்கும் என்று தாங்கள் கருதுவது ஆசிரியர் சமுதாயத்தில் ஒருவகையான ''வர்க்க வேறுபாடுகளை'' திணிப்பதாகவே அமையும்.
இந்தக் குழுவில் பிற துறையினர்கள் நீடிக்கும்போது, அதுவும் ஒரு நீதிபதியின் தலைமையில் குழு இயங்கும்போது, தமிழ்ப் பேராசிரியர்களை உறுப்பினராக நியமிப்பது தவறு என்று தாங்கள் கருதுவது ஒருவகை''மேலாண்மைத் தன்மைகொண்ட'' ஒரு ''ஆதிக்கக் கருத்தே'' ஆகும்.
பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் ''அ, ஆ-வைக்'' கற்றுக்கொடுத்து, பிற துறை அறிவுகளைப் பெறுவதற்கான மொழித்திறனை அளிப்பது மொழிக் கல்வியே ஆகும்.
தமிழாசிரியர்களின் மத்தியில் மட்டுமல்ல, பிற துறை ஆசிரியர்கள் மத்தியிலும் சமூக விழிப்புணர்வும் அறிவியல் நோக்கு, பார்வையும் கொஞ்சம்கூட இல்லாதவர்கள் பலர் இருக்கின்றனர். தங்களுடைய துறை அறிவைத்தவிர , பிற துறை அறிவு இல்லாதவர்கள் பலர் நீடிக்கின்றனர். மேலும் இயற்கைபற்றிய பல்வேறு ''மூட நம்பிக்கைகளை'' கொண்டிருக்கின்றவர்கள் இருக்கிறார்கள்.
மேலும் பல்கலைக்கழக நிலையில் - தமிழ் ஆய்வுத் துறையில் பணியாற்றுகிற ஒரு பேராசிரியர் கல்விக்கொள்கை குழுவில் இடம்பெற்றதைத் தவறு என்று கூறுவது எவ்விதத்திலும் சரியில்லை.
மேலும் தற்போதைய இந்தியாவில் கல்விக்கொள்கைகளின் பின்புலம் . . . இன்றைய ஆளும் வர்க்கங்களின் நலன்களே ஆகும். மக்களின் நலன் இல்லை! எனவே தாங்கள் முன்வைத்துள்ள ''அறிவியலாளர்கள்'' உண்மையில் மக்களுக்கான கல்விக்கொள்கையை முன்வைத்தாலும், இறுதிமுடிவு யார் கைகளில்?
எனவே, தாங்கள் இந்தப் பதிவில் கூறியிருப்பதற்கு எவ்வித அடிப்படையும் கிடையாது. ஒரு தமிழாசிரியராகப் பணியாற்றி - அதுவும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியாற்றி - ஓய்வுபெற்ற ஒரு தமிழாசிரியர் என்ற முறையில் தங்களது கருத்தை உறுதியாக மறுக்கிறேன்.
தயவுசெய்து, பிற துறை ஆசிரியர்களிடமிருந்து தமிழ் ஆசிரியர்களைப் ''பிரித்துப் '' பேசுவதைத் தவிர்க்கவும். இந்தப் பதிவில் தாங்கள் முன்வைத்த கருத்துக்களுக்கு மிக்க வேதனையுடன் மறுப்பு தெரிவிக்கிறேன். முற்போக்குக் கொள்கையுடைய தங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India