வெள்ளி, 14 அக்டோபர், 2022

எனது மொழிக்கொள்கை (3)

 எனது மொழிக்கொள்கை (3)

------------------------------------------------------------------------------------------------------------------------------

பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் அவர்கள் மொழிக்கொள்கைபற்றிய எனது பதிவை வரவேற்று எழுதியுள்ளார்கள். அதையொட்டி, நான் மேலும் ஒரு விளக்கத்தை இங்கு அளிக்கிறேன்!
''நன்றி பேராசிரியர் அவர்களே. ''தொடர்புமொழி'' பற்றிய உரையாடல் ஒருபுறம் இருக்கட்டும். அதைச் சமுதாய வளர்ச்சியின் இயக்கத்தில் மக்களே தீர்மானித்துக்கொள்வார்கள். ஆனால் அரசியல் சட்டத்தில் இந்திமொழியோடு பிற மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குவதில் என்ன சிக்கல்?
''சென்னை ஐ ஐ டி -யின் செயற்கை அறிவுத்திறன் வளர்ச்சிக்கும்'' இதற்கும் என்ன தொடர்பு? இதற்குக் கீழே நான் விடை அளிக்கிறேன் பேராசிரியரே. . . அது சரிதானா என்று பாருங்கள்!
'' இந்திமொழிதான் அரசியல்சட்டப்படி இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழி. அதற்கு இணையாகப் பிற இந்திய மொழிகளை ஆட்சிமொழிகளாக அரசியல் சட்டத்தில் சேர்க்கமாட்டோம். பிறமொழி பேசுபவர்களால் இந்தியில் ஒன்றிய அரசோடு தொடர்புகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் தங்கள் மொழிகளிலேயே ஒன்றிய அரசுக்குக் கோப்புகளை அனுப்பட்டும். நாங்கள் சென்னை ஐ ஐ டி-யின் உதவியுடன் அவற்றை இந்திமொழியில் மொழிபெயர்த்துக் கொள்கிறோம்! அவற்றிற்கான பதில்களை இந்தியில் நாங்கள் தயாரித்து, பின்னர் சென்னை ஐ ஐ டி-யின் உதவியுடன் அவரவர் மொழிகளுக்கு மொழிபெயர்த்து அனுப்புகிறோம். போதுமா? இதற்குப்பிறகும் பிற மொழிகள் ஏன் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும்? ''
காதில் பூ சுற்றுகிற ஏமாற்று வேலை இது! கணினி அறிவியல் வளர்ச்சிக்கும் இனங்களின் தன்னுரிமைக் கோரிக்கைகளுக்கும் என்ன தொடர்பு? பிறமொழிகள் ஆட்சிமொழிகளாக ஆக்கப்பட்டுவிட்டால், அந்தக் கணினி அறிவியல் வளர்ச்சி மக்களுக்குப் பயன்படாதா?
இங்கு எனக்குத் தெரிந்த ஒரு (100 விழுக்காடு) உண்மையைக் கூறுகிறேன் ... இந்திய ஒன்றிய அரசு இதுபோன்ற கணினிமொழியியல் வளர்ச்சித் திட்டங்களில் செய்வது என்ன? இந்தி (வடமொழி உட்பட) மொழியை அடிப்படையாகக்கொண்டு - அதன் அகரமுதலி, இலக்கணம் ஆகியவற்றிற்கு ஏற்ப பிற மொழிகளின் அகரமுதலிகளையும் இலக்கணங்களையும் கணினிவழியே ''செதுக்கிக்கொள்ள'' ஏராளமான கோடிகள் செலவிடப்படுகிறது.
அதற்காகவே TDIL ( Technology Development of Indian Languages) என்ற அமைப்பு ஒன்றிய அரசின் மின்னணுவியல் துறையின்கீழ் இயங்குகிறது. மேலும் வட இந்தியாவில் உள்ள IIT களும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நீடிக்கிற IIIT என்ற ஆய்வு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்தியை அடிப்படையாகக்கொண்டு தமிழ்க்கணினி மொழியியலில் யாரும் இங்கு வேலை செய்யத் தயாராக இருந்தால், அதற்கு எவ்வளவு நிதி வேண்டுமென்றாலும் கொடுக்க இந்திய ஒன்றிய அரசு தயாராக உள்ளது!
எனவே இதில் நாம் ஏமாறாமல் இருக்கவேண்டும். நமது ஒரே கோரிக்கை . . . தமிழ் உட்பட அனைத்து இந்தியமொழிகளுக்கும் இந்திய ஒன்றியத்தின் அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழி தகுதி வழங்கப்படவேண்டும். இந்திமொழி வளர்ச்சிக்கு அளிக்கப்படுகிற அத்தனை திட்டங்களும் பிற மொழிகளுக்கும் அளிக்கப்படவேண்டும். இதைச் செய்துவிட்டு, ஐ ஐ டி - களைப் பயன்படுத்தி, மக்களுக்கு உதவிபுரியட்டும்! வரவேற்போம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India