சனி, 23 மே, 2020

பேராசிரியர் மு. இராமசாமி

பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள் எனது 50 ஆண்டுகால நண்பர். முதுகலை (தமிழ்) படிப்பில் இணைந்து படித்தோம். அவரைப்பற்றி 5 ஆண்டுகளுக்குமுன்பாக நான் எழுதிய பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன். அன்றும் இன்றும்... தனது பண்பிலும் நேர்மையிலும் யாராலும் குறைகாணமுடியாத ஒரு மனிதர். தான் எடுத்துக்கொண்ட துறையில் - நாடகத்துறையில் - இமாலய சாதனை புரிந்துவருபவர். சமூக உணர்வுள்ள அறிஞர். மிக மிக எளிமையானவர். எதற்கும் அஞ்சாதவர். சுயநலம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவர்.

பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரியில் தமிழ் முதுகலை (1971-1973) படிப்பிலிருந்து எங்களது நட்பு தொடங்கி, தற்போது 45 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. . மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேரா. முத்துச்சண்முகம் அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வுக்கு நான் விண்ணப்பிப்பதற்குத் துணையாக என்னுடன் வந்தார். என்னைவிட மதிப்பெண் அவருக்கு அதிகம் . எனவே மு.ரா. வையே விண்ணப்பிக்கும்படி பேராசிரியர் கூறினார். எனக்கு இடம் கிடைக்காதே என்பதற்காக வேண்டாம் என்று மறுத்த அவரைக் கட்டாயப்படுத்தி, பேராசிரியரிடம் இணையச் சொன்னேன். பின்னர் மு.ரா. பேராசிரியரின் செல்லப்பிள்ளை ஆனார். தோற்பாவைக்கூத்தில் முனைவர் பட்டம்.. நாட்டுப்புறவியல், நாடகக்கலை இரண்டிலும் இன்று தலைசிறந்த பேராசிரியர் ... நடிகரும்கூட. அநீதியையோ அநியாயத்தையோ கண்டுவிட்டால், பொங்கி எழுவார். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் பின்னர் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையின் தலைவரானார். நிஜநாடக இயக்கக்குழுவைத் தோற்றுவித்து, இன்றுவரை நடத்திவருகிறார். முற்போக்குச் சிந்தனையாளர். அவரது துணைவியார் மறைந்த பேரா. திருமதி செண்பகம் அவர்கள் சிறந்த ஒப்பிலக்கிய ஆய்வாளர். ஒரே மகன். பேரா. மு.ரா.பற்றிய மலரும் நினைவுகள் ஏராளம். முகநூல் தோட்டத்தில் அதற்கு இடமின்றி , விடைபெறுகிறேன்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India