புதன், 27 மே, 2020

கணினிக்கு ஒரு மொழிநடை... நமக்கு ஒரு மொழிநடை...எது சரி?

கணினிக்கு ஒரு மொழிநடை... நமக்கு ஒரு மொழிநடை...எது சரி?
-----------------------------------------------------------------------------------
நண்பர் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் `அவர்களும் திரு. சிவ சிவா அவர்களும் ஒரு முக்கியமான வினாவை எழுப்பியுள்ளார்கள். அந்த வினா அனைவருக்கும் தேவையான ஒன்று என்று நான் நினைப்பதால் இங்கு அதைப் பதிவு செய்கிறேன்.

பொருள்மயக்கம் இல்லாதவகையில் ... நாம் பேசினால் ... கணினிக்குப் புரியும் அல்லவா? அதற்குத்தானே இலக்கணம் உள்ளது. ஒரு தொடரில் பயன்படுத்தப்படுகின்ற சொல்களைச் சொல்லிலக்கணத்தை முறையாகப் பின்பற்றி எழுதினால் சிக்கல் இல்லையே என்று நண்பர் வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள் எண்ணுகிறார்களோ என்று நான் கருதுகிறேன்(நான் தவறாகப் புரிந்து இருக்கலாம். ) இதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால் இவ்வாறு யாரையும் நாம் கட்டுப்படுத்தமுடியாதே!. மேலும் இலக்கணத்தை முறையாகக் கற்றவர்களைத்தவிர மற்றவர்களால் முடியாதே! சாரியை, சந்தி, சொல்களைச் சேர்த்து எழுதுவது, பிரித்து எழுதுவது ஆகியவற்றில் நாம் செய்கிற தவறுகளைப் பார்த்தால் இது தெரியும்!
மொழிப் பயன்பாடானது படைப்பாக்கத்திறன் ( creative one) உடைய ஒரு செயல்பாடு (act) ! ஆனால் அதற்காக ஒருவர் ''நான் நேற்று வருவேன் '' என்று பேசக்கூடாது. அவர் அப்படிப் பேசவும் மாட்டார். ஆனால் மற்றபடி சொல் பொருளிலோ அல்லது தொடர் அமைப்பிலோ பொருள் மயக்கம் இருந்தால்... மொழிசாரக் கூறுகளையும் - அதாவது பேசப்படுகிற பொருள், பேசப்படுகிற சூழல் ஆகியவற்றைப் பயன்படுத்தி நம்மால் பொருளைப் புரிந்துகொள்ளமுடியும்! எனவேதான் மொழிப் பயன்பாட்டில் இரண்டு இலக்கணங்கள் உள்ளன என்பது சமூகமொழியியல் அறிஞர்கள் கருத்து. தொடருக்கு இலக்கணம் (linguistic competence- usage) இருப்பதுபோல, தொடரை முறையாக முன் பின் தொடர்களோடும், மொழிசாராச் சூழலை அடிப்படையாகக் கொண்டும் பேசுவதற்கும் இலக்கணம் உள்ளது. இதை ஆங்கிலத்தில் communicative competence .. use என்று அழைக்கிறார்கள்.! மொழித்திறன் ( language performance ) என்பது மொழியிலக்கணம், பொருள் வெளிப்படுத்தும் கருத்தாடல் இலக்கணம் ( Discourse grammar) இரண்டையும் உள்ளடக்கியது ஆகும்!
அப்படியென்றால் என்ன செய்வது? கணினிமொழியியலின் நோக்கம் என்ன? நாம் பேசுவதை அப்படியே கணினி உள்வாங்கிக் கொண்டு, அதைப் புரிந்துகொள்ளவைப்பதா? அல்லது கணினியின் இன்றைய திறனை அடிப்படையாகக்கொண்டு,நமது நடையை மாற்றிக்கொள்வதா? அதாவது கணினிக்காக நமது மொழிநடையை... படைப்பாக்கத்திறன்கொண்ட நமது மொழிச்செயல்பாட்டை.. மாற்றிக்கொள்வதா?இது இயலாத ஒரு செயல்! மொழிநடையில் ஏற்படுகின்ற பொருள்மயக்கத்தைத் தீர்க்க நமக்கு மொழிப்பயன்பாட்டு இலக்கணம் துணைசெய்கிறது! இந்தத் திறன் இன்று கணினிக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை!
மற்றொரு வழிமுறை... நம்மிடையே நாம் கருத்தாடல் செய்வதற்கு ஒரு மொழிநடையையும் ( மொழிப்பயன்பாட்டு இலக்கணத்தை விட்டுவிட்டு) கணினியுடன் கருத்தாடல் மேற்கொள்ளும்போது ஒரு மொழிநடையையும் ( மொழித்தொடர் இலக்கணத்தை மட்டும் கொண்டுள்ள) பின்பற்றுவதா?
தற்போது கணினிமொழியியலார்கள் மேற்கொள்கிற வழிமுறை என்ன? கணினிக்கு மொழிபெயர்ப்புக்கோ அல்லது புரிந்துகொள்வதற்கோ நமது உரையை அனுப்பும்போது, பொருள் மயக்கம் இல்லாமல், பதிப்பித்து அல்லது சற்று மாற்றிக் கொடுப்பதுதான்( pre-editing) . அதுபோன்று, கணினி தனது புரிதலை வெளிக்கொடுத்தபிறகு, அந்த மொழிநடையை நாம் புரிந்துகொள்வதற்குச் சற்றுப் பதிப்பித்து அல்லது மாற்றி கொடுப்பதுதான் (post-editing) . இது கணினிமொழியியலின் ஒரு இடைப்பட்ட அல்லது ஒரு''சமரச நோக்கு'' வழிமுறை!
ஆனால் கணினிமொழியியலின் இறுதி நோக்கம்... படைப்பாக்கத்திறன்கொண்ட நமது மொழிநடையைப் ( creative language use) புரிந்துகொள்ள வைப்பதுதான்! அதற்குத் தேவையான மனிதனின் பின்புல அறிவு, உலக அறிவு இரண்டையும் அதற்கு அளித்து.. இறுதியாக நம்முடைய இயற்கையான உரையாடலை அது புரிந்துகொள்ளவைப்பதுதான்! மொழித்தொடர் இலக்கணம், மொழிப்பயன்பாட்டு இலக்கணம் இரண்டையும் அதற்கு அளிப்பதுதான்!
மேற்குறிப்பிட்ட வளர்ச்சியானது கணினிமொழியியல் துறையில் ஏற்படுகிறவரை... நாம் கணினிக்கு நமது இயற்கையான மொழிநடையைச் சற்று முன்பதிப்பு செய்து அளிப்பதுதான். இது ஒரு இடைப்பட்ட நிலையே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India