வெள்ளி, 22 மே, 2020

பேரா. சு. சுசீந்திரராஜா

பேரா. சு. சுசீந்திரராஜா அவர்களை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இல்லை. ஆனால் அவரது மொழியியல் ஆய்வுபற்றி நிறையவே கேட்டுள்ளேன். இலங்கையைச் சேர்ந்த அவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பயின்றவரே. மூத்த மொழியியல் அறிஞர். இன்று நம்மிடையே இல்லை. அவரைப்பற்றி நான் சேகரித்த தகவல்கள் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்குமுன் நான் முகநூலில் இட்ட பதிவை மீள்பதிவு செய்வதில் மிக்க மகிழ்வடைகிறேன்.

பேரா. சு. சுசீந்திரராஜா (1933) … இலங்கையின் மிகச் சிறந்த தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியர். இலங்கையில் பள்ளிக்கல்வி பெற்று, தமிழார்வத்தினால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேரா. மு.வ. அவர்களின் தலைமையில் இருந்த தமிழ்த்துறையில் பி. ஏ. (ஹானர்ஸ்) பட்டம் (1958) பெற்றார். அப்போது பேரா. தெ.பொ.மீ., பேரா. துரையரங்கனார் ஆகியோரின் வகுப்புகளுக்கும் சென்றுள்ளார். 1959 –இல் இவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ., பட்டமும் அளிக்கப்பட்டது. பின்னர் இலங்கை சென்று, ஊடகத்துறையில் சிறிதுகாலம் பணியாற்றினார். அப்போது இலங்கை வந்த பேரா. தெ.பொ.மீ. அவர்களின் அறிவுரையை ஏற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையில் (அப்போதுதான் தொடங்கப்பட்ட – 1960 ) முதுகலைப்படிப்பில் சேர்ந்தார். தொடர்ந்து முதலில் பேரா. தெ.பொ.மீ. இடமும், பின்னர் பேரா. ச. அகத்தியலிங்கம் அவர்களிடமும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, இத்துறையில் முதல் முனைவர் பட்ட (1967) மாணவரானார். ஆய்வாளராக இருக்கும்போதே, பேரா. தெ.பொ.மீ. அவர்களின் உதவியால் அங்கேயே விரிவுரையாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அவரது இலங்கைத் தமிழ்பற்றிய முனைவர் பட்ட ஆய்வேட்டுக்குப் புறத் தேர்வாளர்களாகயிருந்த பேரா. ஜேம்ஸ் கெயிர் ( கார்னல் பல்கலைக்கழகம், அமெரிக்கா), பேரா. ஏ.இ. ஆஷர் ( எடின்பரோ பல்கலைக்கழகம், இங்கிலாந்து) இருவரும் இவரது ஆய்வேட்டை வெகுவாகப் பாராட்டினார்கள். இரஷியாவைச் சேர்ந்த பேரா. எம். ஆன்டிரனோவ் இவரது ஆய்வேட்டைப் பாராட்டித் தனிமடல் எழுதினார். பின்னர் இலங்கை திரும்பி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையிலும் (1971), களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையிலும் பணியாற்றினார். 1980 – இல் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக நியமனம்செய்யப்பட்டு, அங்கு மொழியியல்துறையையும் நிறுவி அதன் மூத்த பேராசிரியராகப் பணியாற்றினார். 1987 – இல் ஓராண்டு இங்கிலாந்து சென்று பேரா. ஆஷருடன் ஆய்வு மேற்கொண்டார். இலங்கையில் மொழியியல் துறையை வளர்த்து, இலங்கைத் தமிழ்பற்றி மொழியியல் அடிப்படையிலான பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்ட பேராசிரியர் 1998 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். அவருடைய 65 ஆவது பிறந்தநாளையொட்டி, அவருடைய மாணவர்களும் நண்பர்களும் அவருடைய ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து, ஒரு நூல் ( “ Studies in Srilankan Tamil Linguistics and Culture”) வெளியிட்டனர். அவருடைய மாணவரான இலங்கை மொழியியல் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் ( ‘அடிப்படைத் தமிழ் இலக்கணம்’ ஆசிரியர்) தனது பேராசிரியர்பற்றிக் கூறுகிறார் ‘ பிரபலத்தில் ஆர்வம் காட்டாது, தமிழ்மொழி ஆராய்ச்சியையே தன் முதன்மைப் பணியாகக் கருதியவர்’ என்று.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India