ஞாயிறு, 17 மே, 2020

நட்பும் பகையும் (பகுதி 1)


நட்பும் பகையும் (பகுதி 1) ..... ஏதோ எழுதத் தோன்றியது .. எழுதுகிறேன்! தயவுசெய்து ஓய்வுநேரங்களில்மட்டும் நண்பர்கள் படிக்கவும்!
--------------------------------------------------------------------------------------------------------
இரு நபர்களுக்கு இடையே பிரச்சினை வரும்போது.... அதை எவ்வாறு தீர்ப்பது என்பதில் தீவிரக் கவனம் செலுத்தவேண்டும். எவ்வாறு தீர்ப்பது .... என்ன வழிமுறையைக் கையாள்வது என்பதைத் தீர்மானிக்க ... பிரச்சனையின் தன்மையை மிகத் தெளிவாக ஆராயவேண்டும். இருவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையின் தன்மை பகைமைத் தன்மை உடையதா. அல்லது பகைமையற்ற தன்மை உடையதா என்பதை ஆராயவேண்டும். இந்த ஆய்வின் முடிவே ... குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறையின் தன்மை எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். பிரச்சினையானது பகைமையற்ற தன்மை உடையதாக இருந்தால், அதைத் தீர்க்கிற வழிமுறையும் பகைமையற்ற தன்மை உடையதாக இருக்கும். மாறாக, பகையுள்ள தன்மை உடையதாக இருந்தால், வழிமுறையும் பகைமைத் தன்மை கொண்டதாக அமையும்.
இருநாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினை என்று வைத்துக்கொள்வோம். இந்த எல்லைப் பிரச்சினை தோன்றுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று... ஒரே நாடு சில அரசியல் காரணங்களுக்காக இரண்டாகப் பிரிக்கப்படவேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போது இரண்டுக்கும் இடையே எல்லையைத் தீர்மானிப்பதில் வேறுபட்ட கருத்துகள் தோன்றலாம். அப்போது இரு பிரிவினரும் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் இருவருக்குமிடையே உள்ள பிரச்சினை ... பகைமையற்ற தன்மை உடையதுதான். எனவேதான் பேச்சு வார்த்தை வழிமுறை பின்பற்றப்படுகிறது.
ஆனால் பகைமையற்ற தன்மையுடையதாக இருக்கிறபோதிலும், ஏதோ ஒரு தரப்பு ... பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாமல்... தன் வலிமையினால் மற்ற தரப்பை தன் விருப்பத்திற்கு உட்பட வைக்க முயற்சிக்கலாம். இது பகைமைத்தன்மை உடைய வழிமுறையாகும். இது எங்கு சென்று முடியும்? பகைமையற்ற தன்மையாக இருந்த எல்லைப் பிரச்சினை... இப்போது பகைமையுள்ள எல்லைப் பிரச்சினையாக மாறிவிடுகிறது. அதாவது, பகைமையற்ற தன்மையையுடைய ஒரு பிரச்சினையைத் தீர்க்க.. பகைமையற்ற வழிமுறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக ஒரு தரப்பு... பகைமைத் தன்மை உடைய வழிமுறையைப் பின்பற்ற விரும்புவதால்... பிரச்சினையின் தன்மையே ... பகைமையற்ற தன்மையே.. பகைமையுள்ள தன்மை உடையதாக மாறிவிடுகிறது. அதன் விளைவு... இந்த எல்லைப் பிரச்சினைக்குப் பகைமைத் தன்மையுள்ள போரே தீர்வாக அமைந்துவிடுகிறது. அதாவது, பிரச்சினையின் தன்மைக்கேற்ற வழிமுறைக்குப் பதிலாக, மாறுபட்ட வழிமுறையைப் பின்பற்றுவதால்... பிரச்சினையின் தன்மையே மாறிவிடுகிறது!
அதுபோல... இரு தரப்புக்கு இடையே உள்ள ஒரு பிரச்சினையானது பகைமையுள்ள தன்மை உடையது என்றால்... அதற்கான வழிமுறையும் பகைமைத் தன்மை உடைய வழிமுறையாகத் தான் இருக்கமுடியும். இங்கு ஒரு தரப்பு .. '' இல்லை, இல்லை, நாங்கள் பகைமைத் தன்மையில்லாத வழிமுறையை விரும்புகிறோம் '' என்று சொன்னால்... அதனால் பயன் இல்லை. பிரச்சினை தீராது மட்டுமல்ல.. பின்கண்ட தரப்பு தோல்வியே அடையும்!
பகைமையற்ற தன்மையுடைய பிரச்சினைக்குத் தீர்வு பகைமையற்ற வழிமுறை! பகைமையுள்ள தன்மையுடைய பிரச்சினைக்குத் தீர்வு பகைமைத் தன்மை உடைய வழிமுறையே ஆகும்! அவ்வாறு இல்லாமல்... பொருந்தாத வழிமுறையைப் பின்பற்றினால்... பிரச்சினை தீராது!
ஒரு மிருகம் நம்மைத் தாக்கவந்தால்... அதோடு நாம் பேச்சுவார்த்தை வைக்கமுடியுமா? அதை அடித்துத்தான் தீர்க்கவேண்டும். அதேவேளையில் அண்ணன்-தம்பிக்கிடையே உள்ள பிரச்சினை அல்லது நண்பர்களுக்கு இடையே உள்ள பிரச்சினை... பகைமையற்ற தன்மை உடையதுதான். இதைப் பேசித்தான் தீர்க்கவேண்டும். மாறாக, ஒருவர் மற்றொருவரைத் தாக்கப் புறப்பட்டால்... பிரச்சினையே பகைமையுள்ளதாக மாறிவிடும். பிறகு, வேறுவழியில்லாமல்... பிரச்சினையே பகைமை உள்ளதாக மாறிவிடும்!
இங்கு நாம் பொதுவாகப் பார்ப்பது... அண்ணன்-தம்பி , அல்லது நண்பர்கள் இருவர் ஆகியோருக்கிடையே யாராவது ஒருவர் ''தான் கொண்டதுதான் .. தான் எண்ணுவதுதான் சரி'' என்று எண்ணிவிட்டால்... அல்லது இருவர் மனதிலும் ''தான் என்ற ஆணவம்'' தோன்றிவிட்டால்... ''இவர் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது'' என்று எண்ணிவிட்டால்... பகைமையற்ற பிரச்சினையானது இப்போது பகைமை உள்ள பிரச்சினை ஆகிவிடும்!
ஒருவர் சற்று தேவையற்ற வேகத்தில் பிரச்சினையை அணுக முற்பட்டாலும், மற்றவர் அதை நட்பு அடிப்படையில் எடுத்துக்கொண்டால் ... '' இவர் ஒன்றும் நமக்கு எதிரி இல்லையே , நிச்சயமாக உண்மையை விரைவில் புரிந்துகொள்வார், கொஞ்சம் நாம் தணிந்து அல்லது பொறுத்திருந்து பார்க்கலாமே! அல்லது கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பார்க்கலாமே '' என்று நினைத்துவிட்டால், பிரச்சினையே இல்லை. இந்த அணுகுமுறை மற்றவரையும் ஒரு கட்டத்தில் நேர்மறையாகச் சிந்திக்கவைத்துவிடும்!
''பேசித் தீர்க்கவேண்டும் ... தீர்க்கலாம் ... இது பகைமையற்ற பிரச்சினைதான்'' என்று இருவரும் முடிவுசெய்துவிட்டால், பிரச்சினையே இல்லை! ஆனால் இதற்கு மாறாக முடிவு எடுத்துவிட்டால்.... இருவருக்கிடையே பகை .. தேவையற்ற பகை ... தோன்றி நீடிக்க ஆரம்பித்துவிடும்! மேலும் இருவருக்கும் பொதுவாக இருக்கிற விரோதிகள் சிலருக்கு 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் '' என்று ஆகிவிடும்!
எனவேதான் இருவருக்கு இடையே உள்ள பிரச்சினையானது - மக்களுக்கு இடையேயுள்ள.. அண்ணன்-தம்பிகளுக்கிடையே உள்ள ... நண்பர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையானது, பெரும்பாலும் அது பகைமையற்ற தன்மையுடைய பிரச்சினைதான்... பகைமையற்ற முரண்பாடுதான்! இதைத் தீர்க்கப் பகைமைத்தன்மை உடைய வழிமுறைகளைப் பின்பற்றக்கூடாது. அதுபோன்று, மக்களுக்கும் எதிரிகளுக்குமிடையே உள்ள பிரச்சினையானது பகைமைத்தன்மை உடையது என்பதால், அதைத் தீர்க்கப் பகைமையற்ற வழிமுறை சரிவராது. அதை அடித்துத்தான் தீர்க்கவேண்டும்!
நட்புத் தன்மை உடைய பிரச்சினை என்றால்... நட்பு அடிப்படையிலான வழிமுறையைப் பின்பற்றவேண்டும். பகைமைத் தன்மை உடைய பிரச்சினை என்றால், அதற்குத் தகுந்த வழிமுறையைத்தான் பின்பற்றவேண்டும். இதற்கு மாறாக... தவறான அணுகுமுறையைப் பின்பற்றினால்... நட்பானது பகைமையாகிவிடும். இதைத்தான் நாம் '' யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துப் போனால்... அல்லது பிரச்சினையைச் சற்று ஆறப் போட்டால் சரியாகிவிடும்'' என்று கூறுகிறோம்.
நமக்கு வேண்டிய ஒருவர், நாம் ஒரு செயலைச் செய்ததில் தவறு செய்திருக்கிறோம் என்று சுட்டிக் காட்டினால், அதை ஒரு குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளாமல், ''விமர்சனமாக'' எடுத்துக்கொள்ளாமல், அவர் சொல்வது சரியா தவறா என்று பார்க்கவேண்டும். அது சரியாக இருந்தால், அதை ஏற்றுக்கொண்டால், அது நம்மை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். எனவே, அதை நமது வளர்ச்சிக்கான ஒன்றாகப் பார்க்கவேண்டும். இந்த வகையான போராட்டம் வளர்ச்சிக்கான ஒரு வழியாகும். ஆனால் இந்த இடத்தில் நமது ''நான் என்ற ஆணவம்'' நம்மைக் கீழே தள்ள முயலும்! நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!
அதுபோல, ஒரு பிரச்சினையில் நமது மனத்திற்குள்ளேயே நாம் நினைப்பது அல்லது செய்வது சரியா தவறா என்ற போராட்டம் நடக்கும்; நடக்கவேண்டும். இதைத்தான் தன்னாய்வு அல்லது உள்ளாய்வு (''சுயவிமர்சனம்'') என்று அழைக்கிறோம். மற்றவர்கள் அதைச் சுட்டிக்காட்டுதற்குமுன்னாலேயே , நாமே ஒரு முடிவுக்கு வந்து, நம்மை வளர்த்துக்கொள்வது நல்லதுதானே. சிலவேளைகளில் நம் நண்பர்கள் ''நமக்கேன் வம்பு?'' என்ற நம் தவறைச் சுட்டிக்காட்டவில்லையென்றால், இழப்பு அவருக்கு இல்லை; நமக்குத்தான்! எனவே, எந்த ஒரு பிரச்சினையையும் அதன் உள்ளார்ந்த பண்புக்கூறுகளை ஆராய்வதும், அதற்கேற்றவாறு வழிமுறைகளைத் தீர்மானிப்பதும் மிக மிக அவசியம்!
பிரச்சினைகளைப் பற்றிய நமது ஆழமான ஆய்வும், அவற்றைத் தீர்ப்பதற்கான சரியான வழிமுறைகளும்... பகைவரையும் நண்பராக மாற்றிவிடும்! அதுபோல இதில் கவனக்குறைவாக இருந்தால், நண்பரும் பகைவராக ஆகிவிடுவார்!
நான் எனது வாழ்க்கையில் பல இடங்களில் .. பல நேரங்களில் ... கீழே விழுந்து... அடிபட்டு... காயமடைந்து .. பெற்ற பட்டறிவு இது (" A fall in a pit, a gain in your wit ") ! நண்பர்களும் பகைவர்களாக ஆகியிருக்கின்றனர். பகைவர்களும் நண்பர்களாக மாறியுள்ளனர். இது ஒன்றும் ஒரு '' பெரிய, புதிய கண்டுபிடிப்பு இல்லை'' என்பதும் எனக்குத் தெரியும்! 70 வயதில் '' ஞானோதயமா?' என்று நீங்கள் நினைப்பதும் எனக்குப் புரிகிறது!!!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India