வியாழன், 28 மே, 2020

பேராசிரியர் சி. இலக்குவனார்

தமிழ்ப்பணி என்பது தமிழாய்வு, தமிழ்க்கல்வி என்பதோடுமட்டும் நின்றுவிடாமல்... தமிழ்மொழிக்கு எதிரான... தமிழினத்திற்கு எதிரான எந்த ஒரு ஆதிக்க நடவடிக்கையாக இருந்தாலும் சரி... அதனையும் எதிர்த்துநின்று செயல்பட வேண்டும் என்பதைத் தமிழாசிரியர்களுக்கு உணர்த்திய பெரும்பேராசிரியர்... தமிழ்ப்போராளி பேரா. சி. இலக்குவனார் அவர்கள். அவர்கள்பற்றி நான் 5 ஆண்டுகளுக்குமுன் மிகச் சுருக்கமாக பதிவுசெய்த ஒன்றை மீள்பதிவாக இன்று இடுவதில் பெருமையடைகிறேன்...

பேராசிரியர் சி. இலக்குவனார் (1909) … நாடறிந்த தமிழறிஞர். தமிழ்ப்பணி என்பது வெறும் ஆய்வுகள் மட்டுமல்ல, தமிழ்மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களைக் காப்பதும் அதில் அடங்கும் என்பதைத் தனது வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டியவர். தமிழ்ப்பேராசிரியர்… தமிழ்ப்போராளி. இவருடைய பெற்றோர் இட்ட பெயர் ‘இலட்சுமணன்’ . இப்பெயரை ‘இலக்குவன்’ என்று மாற்றியமைத்தவர் அறிஞர் . சாமி சிதம்பரனார் ஆவார். பி ஓ எல் (1942) , எம் ஓ எல் ( 1946 – “Origin and Growth of Tamil Language” ), தமிழ் முதுகலை (1951) , முனைவர் பட்டம் (1963 – “Tholkappiyam in English with Critical Studies”) ஆகிய பட்டங்களைப் பெற்று, பல கல்வி நிலையங்களில் - நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி, நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி, விருதுநகர் கல்லூரி, மதுரைத் தியாகராசர் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, ஆந்திரா உஸ்மானியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்பு உட்பட பல அரசியல்நிலைபாடுகளுக்காகப் பதவியிலிருந்து பலதடவை விலக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளானவர். ஆசிரியப்பணி, படைப்பிலக்கியப் பணி, தமிழ்ப்பாதுகாப்புப்பணி போன்ற பல்வேறு பணிகளுக்கிடையே அவர் குறிப்பிடத்தக்க தமிழ் ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டது உண்மையில் வியப்புக்குரியதே. தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தேவையான ஆய்வுக்கருத்துரைகளோடு ( அறிஞர் அண்ணாவின் முன்னுரையோடும்) அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. தமிழின் தோற்றம்பற்றியும் வரலாற்றின் ஊடே அதன் வளர்ச்சிபற்றியும் அவர் தெளிவான கருத்துகளைத் தனது எம் ஓ எல் பட்ட ஆய்வேட்டில் வெளிப்படுத்தியுள்ளார். மொழியியல் கண்ணோட்டத்துடன் தமிழின் ஒலியியல், தொடரியல், பொருண்மையியல், உரிச்சொற்கள், இடைச்சொற்கள்பற்றி அவர் தனித்தனியே நூல்கள் ( ஆங்கிலத்தில்) வெளியிட்டுள்ளார். இதன் பயனாகத் தமிழரல்லாதோரும் தமிழ்மொழியின் சிறப்புகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்துள்ளார். படைப்பிலக்கியம், தமிழிலக்கிய ஆராய்ச்சி, வரலாறு, பண்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றிலும் பேராசிரியர் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆங்கிலத்தில் 5 நூல்களும் தமிழில் 14 நூல்களும் இவர் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் (“Dravidian Federation” , Kuralneri” ) தமிழிலும் ( ‘குறள்நெறி’, ‘இலக்கியம்’ ) இதழ்களையும் நடத்திவந்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்காகப் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கியும், பல்வேறு தமிழ்ச்சங்கங்கள், கழகங்களுக்குப் பொறுப்பேற்று நடத்தியும் உள்ளார். ‘பெரும்பேராசிரியர்’, ‘முதுபெரும் புலவர்’ உட்பட பல்வேறு சிறப்புப்பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன. 1973 செப்டம்பர் 3 ஆம் தேதி ( அகவை 64) மறைந்தார். அவருடைய தமிழ்ப் பணிகளை இன்றும் தொடர்ந்து வருகின்றனர் அவரது மகன்கள் … பேராசிரியர் மறைமலை இலக்குவனார், திரு. திருவள்ளுவன் இலக்குவனார் ஆகியோர். மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும். http://ta.wikipedia.org/s/1amn

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India