வியாழன், 21 மே, 2020

கொரோனா - இயற்கை நிகழ்வா ? விபத்தா?

கொரோனா - இயற்கை நிகழ்வா ? விபத்தா?
--------------------------------------------------------------------------------------
கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு ... ஒரு இயற்கை நிகழ்வா அல்லது விபத்தா?

ஒரு பொருள் அல்லது நிகழ்வில் ஏற்படுகிற மாற்றம் ... அதற்கு உள்ளேயே உள்ள அகக் காரணிகளால் (internal forces ) ஏற்பட்டால், அது ஒரு இயற்கை நிகழ்வே ஆகும். இந்த மாற்றமானது ஒரு அவசிய நிகழ்வாக ( Necessity) அமைகிறது.
அவ்வாறு இல்லாமல் .... அப்பொருளுக்கு அல்லது நிகழ்வுக்கு வெளியே உள்ள புறக்காரணிகளால் (external forces) ஏற்பட்டால் அது விபத்து (Accident)
ஒருவர் பிறந்து, வாழ்ந்து, தனது முதுமையில் இறப்பது என்பது ஒரு அவசிய நிகழ்வு. பொதுவாக 120 வயதுக்குமேல் மனிதர்கள் உயிருடன் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. ஒன்றிரண்டு மனிதர்கள் சற்று இன்னும் ஒன்று அல்லது இரண்டு வயது கூட வாழ்ந்து இருக்கலாம்.
கருவில் தோன்றிய உயிரியல் இயக்கம் , நாம் பிறந்து, வளர்ந்து, முதுமை அடைகிறவரை செயல்படுகிறது.. நீடிக்கிறது! பின்னர் முதுமையின் ஒரு கட்டத்தில் அந்த இயக்கம் நின்றுவிடுகிறது. பிறப்பு போன்று இறப்பும் ஒரு இயற்கை நிகழ்வே. உயிரியல் இயக்கமானது உள்ளார்ந்த காரணிகளால் தோன்றி நீடிக்கிறது. இந்த இறப்பு நிகழ்வை யாரும் தடுக்கமுடியாது. இது இயற்கையின் இயற்கை! ஒரு அவசிய நிகழ்வு. ஒரு வாழைமரம் முளைத்து, வளர்ந்து, குலை தள்ளி, பூப்பூத்து, காய் காய்த்து, பின்னர் மண்ணோடு மண்ணாக ஆகிவிடும்!
ஆனால் உடலின் மேற்கூறிய உள்ளார்ந்த காரணிகளால் இல்லாமல்.... வெளிப்புறத்தில் உள்ள சில புறக் காரணிகளால் நமது உயிரியல் இயக்கம் நின்றுபோனால்.... அது விபத்து. ஒரு வாகன விபத்திலோ, தீ விபத்திலோ, அல்லது சிலரின் கொடூரச் செயல்களாலோ ஒருவர் இறந்தால்தான் அது விபத்து. இது ஒரு அவசிய நிகழ்வு இல்லை. விபத்தைத் தடுக்கலாம்.காய்க்க வேண்டிய வாழைமரம் ஒரு புயலால் வீழ்ந்தால் அது விபத்து!
எவ்வாறு இயற்கை நிகழ்வுகளுக்கு விதிகள் இருக்கிறதோ, அதுபோன்றுதான் விபத்துக்கும் சில விதிகள் இருக்கின்றன. விபத்துகளுக்கும் விதிகளா என்று நினைக்காலம். ஆனால் உண்டு! எடுத்துக்காட்டாக, சில ஆப்பிரிக்க நாடுகளில் ஏராளமான சிறு குழந்தைகள் வறுமையினால்... பசியினால்... இறந்துபோகின்றன. முதுமைக்கு முன்னாலேயே இறந்துவிடுகின்றன. இது இயற்கை நிகழ்வு இல்லை.. செயற்கை நிகழ்வு... விபத்து.. புறக் காரணிகளால் நடைபெறுகிறது. இந்தப் புறக் காரணிகளுக்குச் சில அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றைத் தகர்த்துவிட்டால்... வறுமையை ஒழித்துவிட்டால், குழந்தைகளுக்கு அங்கே இறப்பு இல்லை!
எனவே எது இயற்கை நிகழ்வு.. எது செயற்கை நிகழ்வு அல்லது விபத்து என்பதில் நமக்குத் தெளிவு தேவை!
மனித உடம்பில் கொரோனாத் தொற்றுக்குப் புறக் காரணிகளே அடிப்படை! புறமாகத் தோன்றிய ஒரு வைரசே காரணம். எனவே கொரோனாத் தொற்றும் அதனால் ஏற்படுகிற கோவிட்-19 நோயும் விபத்துகளே!
ஆனால் ஒரு பொருள் அல்லது நிகழ்வில் புறக் காரணிகள் தாமே ஒன்றும் செய்துவிடமுடியாது. அவை அப்பொருளின் உள்ளே உள்ள அகக் காரணிகளைத் தூண்டி... அல்லது பாதித்துத்தான் அப்பொருளில் மாற்றத்தை உருவாக்கமுடியும். இந்த அகக் காரணிகளால் தம்மைத் தாக்குகின்ற புறக்காரணிகளை எதிர்த்துநின்று போராட முடிந்தால், பிரச்சினை இல்லை! நமது உடலின் தடுப்பாற்றல் இயக்கம் சிறப்பாக இருந்தால்... கொரோனா வைரசு நம்மை ஒன்றும் செய்துவிடமுடியாது! ஆனால் அதற்கு தேவையான வலிமை உடலில் இல்லையென்றால், புறக்காரணிகள் செயல்பட்டு, நமது உயிரைப் பறிக்கும்!
இங்குத்தான் தடுப்பூசிகளும் பயன்படுகின்றன. அவையும் தாமே கொரோனாவை எதிர்த்துப் போராடமுடியாது. மாறாக, உடம்பின் இயற்கையான தடுப்பாற்றல் இயக்கத்தின் வழியே செயல்பட்டுத் தான்... தடுப்பாற்றல் இயக்கத்தின்மூலமாகத்தான்... கொரோனா வைரசை எதிர்த்துப் போராடமுடியும்!
எனவே , கொரோனா வைரசுத் தொற்றுக்கு வாய்ப்பு இருப்பதால், சிலர் தேவையற்ற பயத்தைக் கிளப்புகிறார்கள். பீதியடைகிறார்கள்!
அதேவேளையில் சிலர்... கொரோனா வைரசு தொற்றினால் தொற்றட்டும்... கவலையில்லை.. எப்போதோ இறக்கப்போகிறோம், இப்போதே இறந்தால் இறந்துவிட்டுப் போகிறோம்... கொரோனா வைரசுத் தொற்றுக்கு எதிரான எந்தவிதக் கவன நடவடிக்கையையும் எடுக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றனர். இதுவும் சரியல்ல. விபத்து ஏற்படும் என்று தெரிந்தபிறகு முடிந்தவரை அதைத் தடுக்கலாமே! அதையும் மீறி அது உடம்புக்குள் தொற்றினால்... உடம்பின் இயற்கையான தடுப்பாற்றல் இயக்கம் போராடும்! அது அடுத்த பிரச்சினை!
எனவே, கொரோனாபற்றித் தேவையில்லாத பயமும் வேண்டாம்! அதுபோலத் தேவையில்லாத பொறுப்பற்ற செயல்களும் வேண்டாம்!
பலவகை விபத்துகளைத் தடுக்கும் வலிமை உடையது மனித உடம்பு! எதிரிகளை எதிர்த்துப் போராட அது பலவகைப் படைகளை வைத்துள்ளது.
அதேவேளையில் நாமும் தேவையான.. கவனமான.. நடவடிக்கைகளை மேற்கொள்வதன்மூலம்.... தேவையற்ற இழப்புகளை இல்லாமல் ஆக்கலாம்! விபத்தைத் தவிர்க்கலாம்! கொரோனாவைக் கண்டு, வாழ்க்கையையே முடக்கவேண்டாம்! அதோடு வாழக் கற்றுக்கொள்வோம்! கொரோனாப் பிரச்சினை '' இந்த மாதம்.. இந்த நாள் .. இந்த நேரம் தீர்ந்துவிடும் '' என்று யாராலும் கூறமுடியாது!
மனித சமுதாயம் தனது இலட்சக்கணக்கான ஆண்டு வரலாற்றில் இதுபோன்ற எத்தனையே புறக் காரணிகளைச் சந்தித்திருக்கிறது! வெற்றி பெற்றிருக்கிறது! அதுபோல கொரோனா வைரசு பிரச்சினையும் ஒன்று!
பயம் வேண்டாம்! பீதி வேண்டாம்! அதே வேளையில் தேவையற்ற கவனக்குறைவும் வேண்டாம்!
பயமற்ற பொறுப்புணர்வே ... விபத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே தேவை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India