வியாழன், 23 ஏப்ரல், 2020

கரோனாவும் பொருளாதார நெருக்கடியும் - பகுதி 1



பொருளாதாரப் பிரச்சினையில் ஆர்வம் உள்ளவர்களுக்குமட்டும்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கரோனாவும் பொருளாதார நெருக்கடியும் (1) (ஏப்ரல் 2, 2020)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
1930 -
களில் ஏற்பட்ட உலக அளவிலான பொருளாதார நெருக்கடிகளைவிட கரோனாவால் இன்று உலகிற்கு நெருக்கடி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகளையும் இயந்திரங்களையும் பிற மூலப்பொருள்களையும் சொந்தாக வைத்திருக்கிற பிரிவினர் ஒருபுறம்... இவையெல்லாம் இல்லாமல், ஆனால் அவற்றை இயக்கத் தேவையான கைகளையும் மூளைகளையும் உடைய பிரிவினர் மற்றொருபுறம் ! இந்த இரண்டவாது பிரிவினர் இல்லாமல், முதல் பிரிவினர் ஆலைகளை இயக்கமுடியாது. அதுபோல, முதல் பிரிவினர் ஆலைகளை இயக்கவில்லையென்றால், தங்கள் கைகளையும் மூளைகளையும் பயன்படுத்தி, உற்பத்தியைத் தொடரமுடியாத நிலையில் இரண்டாவது பிரிவினர்! உற்பத்தி தொடரவில்லையென்றால்.... வேலையை இழந்து, கூலியை இழந்து ... வறுமையில் வாடுவார்கள் இரண்டாவது பிரிவினர். சமுதாயத்தின் பெரும்பான்மையான இந்த இரண்டாவது பிரிவினர்கள் கைகளில் காசு இல்லையென்றால் ... வாங்கும் சக்தி இல்லையென்றால்... ஏற்கனவே உற்பத்திசெய்யப்பட்ட பொருள்களையும் விற்று , பணமாக்க ... தொழில் அதிபர்களுக்கு வாய்ப்பு இல்லை! இயற்கையில் கிடைக்கும் மூலப்பொருள்களின்மீது , தொழிலாளிகள் தங்களுக்குச் சொந்தமில்லாத இயந்திரங்களின் மீது தங்கள் கைகளைக்கொண்டு உழைப்புத்திறனைச் செயல்படுத்தினால்தான்... அந்த மூலப்பொருள்கள் மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான நுகர்பொருள்களாக மாறமுடியும். இந்த நுகர்ப் பண்பை அளிப்பது இரண்டாவது பிரிவினரின் உழைப்புத்திறன்தான். உயிரற்ற இயந்திரங்கள் தாமாகச் செயல்படாது. உயிருள்ள நபர்கள் (தங்கள் உழைப்புத்திறனைக் கூலிக்கு விற்க ) உழைப்புச் சந்தையில் கிடைக்கவேண்டும்! அடுத்து , இவ்வாறு உற்பத்திசெய்யப்பட்ட நுகர்பொருள்களை விற்றால்தான், உற்பத்திச் சொந்தக்கார்களுக்குப் முதலீடு செய்த பணமும் அதற்குமேலான லாபமும் கிடைக்கும். பொருள்களையும் உற்பத்திசெய்யவேண்டும்... உற்பத்தி செய்த பொருள்கள் விற்பனையும் ஆக வேண்டும். அதற்கு மக்களிடம் - பெரும்பான்மையான இரண்டாவது பிரிவினரிடம் - பணம் .. வாங்கும் சக்தி அல்லது திறன் இருக்கவேண்டும். எனவே இது ஒரு சுழற்சி.
தற்போது... கரோனாவால் இந்த சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆலைகளும் மூடப்படுகிறது. விவசாய உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களுக்கும் பற்றாக்குறை ஏற்படும். ஆலைகள் மூடப்படும். வேலையில்லாதோர்... தங்கள் உழைப்புத்திறனைக் கூலிக்கு வாங்குவதற்கு ஆலை அதிபர்கள் இல்லையென்றால் .. என்ன செய்யமுடியும்? ஆலைகள் மூடல்... போக்குவரத்து நிற்றல்... விவசாயம் பாதிப்பு.... தங்களது விவசாய உற்பத்திப்பொருள்களை விற்றால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்று நிலையில் இருக்கும் சிறுசிறு விவசாயிகள்... இன்று கத்திரிக்காயையும் வெள்ளரிக்காயையும் தக்காளிகளையும் பூக்களையும் குப்பையில் கொட்டுகிறார்கள். பால் உற்பத்தியாளர்கள் பாலைத் தரையில் கொட்டுகிறார்கள். காரணம் என்ன? இந்த உற்பத்திப் பொருள்களுக்குத் தேவை இல்லையா? தேவை இருக்கிறது. ஆனால் வாங்கக் கைகளில் காசு இல்லை. ஆலைத்தொழிலாளிகள்.. போக்குவரத்துத்துறை ஊழியர்கள்... விவசாயிகள் ... அன்றாடம்காய்ச்சிகளான கூலித்தொழிலாளர்கள் ... யோசித்துப் பாருங்கள்!
சிலர் நினைக்கலாம்... தொழிலாளிகள் இல்லாமல், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகொண்டு, தானியங்கு இயந்திரங்களைக்கொண்டு... ஆலை அதிபர்கள் உற்பத்தியைத் தொடரமுடியாதா என்று! முடியாது. இயந்தரங்களுக்கான மூலதனம் ( மாற மூலதனம்) அதிகரிக்க அதிகரிக்க.. மூலப்பொருள்களை நுகர்ப்பொருள்களாக மாற்றியமைக்கிற தொழிலாளிகளுக்குக் கூலி என்ற பெயரில் அளிக்கும் மூலதனம் ( மாறும் மூலதனம்) குறையக் குறைய .. ஒட்டுமொத்தமாக இலாப விகிதம் குறையும் .. எனவே தொழில் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும். தொழில் உற்பத்தியைச் சார்ந்து நிற்கும் சேவைப்பிரிவு தொழிலாளர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்(மென்பொறியாளர்கள் உட்பட) . தேக்கமடையும். சமுதாயத்தில் பெரும் நெருக்கடி உண்டாகும்.
ஆனால் சென்ற நூற்றாண்டில் இந்த நெருக்கடிகளை மேலைநாட்டு உற்பத்தியாளர்கள்... தங்கள் நாடுகளைத் தாண்டிச் சென்று.. வளர்ச்சியடையாத நாடுகளின் இயற்கை வளங்களையும், கைகளைமட்டுமே சொத்தாகக்கொண்ட உழைப்பாளர்களையும், அங்குள்ள மக்களின் வாங்கும் சக்தியையும் .... சுரண்டி.. அபகரித்து... சமாளித்துக்கொண்டார்கள். மக்களின் காசை, வங்கி மூலமாக மாற்றி, தங்களுக்குத் தேவையான நிதிமூலதனமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.
ஆனால் இன்றோ....கரோனாவால் .. முழு உலகமே பாதித்துள்ளது. அரசு கஜானாக்கள் காலியாகிறது. வங்கி முடங்குகிறது. ஏற்கனவே நீடிக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியோடு ... கரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியும் இணைந்து நிற்கிறது.
இன்று... உயிர் ஒன்றே மிக முக்கியம் என்ற அடிப்படையில் ... அதைக் காப்பாற்றப் போராடுகிறோம். ஆனால் இப்பிரச்சினை தீர்ந்தபிறகுதான்.... உலகம் சந்திக்க இருக்கிற மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உள்ளது! சமுதாயத்தின் இருபிரிவினர்களுக்குமே மிகப் பெரிய நெருக்கடி காத்துக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து விவாதிக்கலாம்!
( மேற்கூறிய கருத்துகள் எல்லாம் மக்களுக்கான அரசியல் பொருளாதார நூல்களிலிருந்து - குறிப்பாக , காரல் மார்க்சின் ''மூலதனம்' நூலிலிருந்து - பெறப்பட்டவையே!)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India