வெள்ளி, 25 நவம்பர், 2016

பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா? (2).

பெயரெச்சம், பெயரடை ஆகியவற்றிற்குப் பின்னர் வல்லொற்று மிகுமா? (2).
--------------------------------------------------------------------------------------
(1) முந்தைய உரையில் ''அழகான குதிரை'' என்பதில் உள்ள ''அழகான '' என்பது கூட்டுநிலைப் பெயரடை என்று பார்த்தோம். அதாவது ''அழகு'' என்ற பெயர்ச்சொல்லோடு ''ஆன'' என்ற பெயரடைவிகுதி இணைந்து இது உருவாகிறது. ''ஆன'' போன்றே ''உள்ள'' ''ஆர்ந்த'' ''சான்ற'' ''வாய்ந்த'' ''வாய்ந்த'' ''இல்லாத'' போன்ற விகுதிகளும் கூட்டுநிலைப் பெயரடை விகுதிகளாகப் பயன்படுகின்றன (பேரா. பொற்கோ).

'' அன்புள்ள தம்பி .... பண்புள்ள பையன்
அன்பார்ந்த தலைவர் ... அன்புசான்ற தலைவர்
தகுதிவாய்ந்த தலைவர் ... அறிவாய்ந்த தலைவர்
தகுதியில்லாத தலைவர் ''

மேற்கண்ட கூட்டுப்பெயரெச்சங்களுக்குப்பின்னர் ( வருமொழியில் வல்லினத்தை முதலாகக்கொண்ட சொற்கள் வந்தாலும்) மிகாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(2) ''என்ற'' ஈற்றுப் பெயரடை: குறிப்புப்பொருளைக்கொண்ட சில பெயரடைகள் உள்ளன. அந்தக் குறிப்பு ஒலிக்குறிப்பாகவோ உணர்வுக்குறிப்பாகவோ இருக்கலாம். இவற்றின்பின்னும் வல்லொற்று மிகாது என்று பேரா. பொற்கோ கூறுகிறார்.

''திடீரென்ற சத்தம்''... ''கலகலவென்ற சிரிப்பு''
''கன்னங்கரேலென்ற நிறம்'' ''பச்சைப்பசேலென்ற நிறம்''
(3) ''ஒரு'' என்ற எண்ணுப்பெயரடையின் பின்னும் வல்லொற்று மிகாது. ''ஒரு பையன்''
(4) ''ஆவது''  என்னும் விகுதியைக்கொண்ட எண்ணுமுறை அல்லது வரிசைமுறைப் பெயரடைகளின்பின்னும் வல்லொற்று மிகாது.
''நான் பத்தாவது படிக்கிறேன்'' 

(5) ''தக்க'' ''வேண்டிய'' ''தகாத'', ''வேண்டாத'' போன்ற கூட்டுப்பெயரெச்சங்களுக்குப்பின்னும் வல்லொற்று மிகாது. இது கட்டாயம்.
செய்யத்தக்க காரியம்
செய்யவேண்டிய காரியம்
செய்யத்தகாத காரியம்
செய்யவேண்டாத காரியம்

(செய்யத்தக்க என்பதில் ''செய்ய'' என்பது செயவாய்பாட்டு வினையெச்சவடிவமாக இருப்பதாலும் அதனுடன் இணைகிற தக்க, தக்க என்பவை வல்லினத்தை முதலாகக் கொண்டுள்ளதாலும், இரண்டுக்கும் இடையில் வல்லின ஒற்று மிகுகிறது என்பதைக் கவனிக்கவும்).
ஆகவே,
(1) அந்த , இந்த, எந்த, புது, எல்லா ஆகியவையும் ''செல்லா'' போன்ற ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள், எட்டு, பத்து ஆகிய வன்தொடர்க்குற்றியலுகரத்தை இறுதியாகக்கொண்ட எண்ணுப்பெயரடைகள் ஆகியவற்றைத்தவிர , வேறு எந்த பெயரெச்சத்திற்கும் அல்லது பெயரடைக்கும்பின்னால் (வருமொழியானது வல்லினத்தில் தொடங்கினாலும்) வல்லொற்று மிகாது.

இதற்குக் காரணம் தொடரியலே என்று நான் கருதுகிறேன். பெயரெச்சம் அல்லது பெயரடைக்குப்பின்னர் எந்த ஒரு விகுதியையும் சேர்க்க முடியாது. எடுத்துக்காட்டாக, ''நல்ல'' , ''வந்த'' ஆகியவற்றுடன் ஏதாவது ஒரு இலக்கணவிகுதியைச் சேர்த்துப்பாருங்கள்! ( ஆனால் வினையெச்சங்களுடன் சேர்க்கலாம் .... ''வரவே (வர+ஆ) செய்தான்' ' ''படித்தா (படித்து+ஆ) இருக்கிறான் '').
தமிழில் பெயரெச்சம்பற்றி ஒரு மிக ஆழமான முனைவர் பட்ட ஆய்வைப் பேராசிரியர் க. இராமசாமி ( மேனாள் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர்) 80-களில் மேற்கொண்டார். தமிழில் பெயரடைபற்றி முனைவர் அ. கோபால் 80-களில் ஒரு முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். இவர்களுக்கு வழிகாட்டிகள் பேரா. ச. அகத்தியலிங்கம் அவர்களும் பேரா. செவை. சண்முகம் அவர்களும் ! இரண்டு ஆய்வுகளுமே நோம் சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாட்டின் அடிப்படையில் - தொடரியல் அடிப்படையில் - மேற்கொள்ளப்பட்டவையாகும். பெயரெச்சம்பற்றி முதன்முதலாக ஒரு தெளிவான ஆய்வுக்கட்டுரையைப் பேரா. ச. அகத்தியலிங்கம் அவர்கள் 70-களில் வெளியிட்டார். இக்கட்டுரை பேரா. ந. வானமாமலை அவர்கள் நடத்திய ''ஆராய்ச்சியில்'' வெளிவந்த நினைவு!

2 கருத்துகள்:

enRenRum-anbudan.BALA சொன்னது…

ஐயா, உங்கள் கட்டுரைகள் பலருக்கும் மிக்க பயனுள்ளவை. தங்கள் தொண்டுக்கு நன்றி, வாழ்த்துக்கள்
அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA சொன்னது…

ஐயா,
ஓர் ஐயம்.
"கூற்றிற்கு, கூற்றுக்கு" என்ற இரண்டு பயன்பாடுகளில், இலக்கணப்படி, எது சரியானது ?
தாங்கள் விளக்கினால், நன்று. நன்றி

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India