புதன், 16 நவம்பர், 2016

தமிழில் மொழியசையும் யாப்பசையும்!

தமிழில் மொழியசையும் யாப்பசையும்! 
--------------------------------------------------------------------------------------
யாப்பிலக்கணத்தில் நேரசை, நிரையசை என்று பாரக்கிறோம். இதை யாப்பசை ( Prosodic Syllable) என்று கூறலாம். செய்யுள்களின் அமைப்பு அல்லது ஓசைக்கு இந்த அசை என்ற அலகு மிக அடிப்படையானது.
நேரசையில் ஒரு உயிர் மட்டுமே வரும் ( உல-கு, உல-கம், பா, பால்). கு, கம் என்பதில் ஒரு உயிரே வருகின்றது.
நிரையசையில் இரண்டு உயிர்கள் வரும் ( படி, படம், நிலா, விளாம்). இது யாப்பசையின் விதிகள்!
மொழியசை ( Linguistic Syllable) என்ற ஒன்று எல்லா மொழிகளிலும் உள்ளது. உயிரை அடிப்படையாகக்கொண்டே இந்த மொழியசை அமைகிறது. ஒரு உயிர் இருந்தால் ஒரு அசை. இரண்டு உயிர்கள் இருந்தால் ஈரசை. முதலில் குறிப்பிட்ட யாப்பு நேரசையில் ஒரு உயிரே இருக்கிறது. எனவே இது மொழியசை போன்று அமைந்துள்ளது. ஆனால் நிரையசையில் இரண்டு உயிர்கள் உள்ளன. எனவே மொழியசைப்படி, இது இரண்டு அசைகளைக் கொண்டது.
ஏன் உயிரை அடிப்படையாகக்கொண்டு மொழியசை அமைகிறது? உயிர் எழுத்துகள் தனித்து இயங்குபவை. காரணம், மூச்சுக்குழாயிலிருந்து வாயில் நுழைகிற காற்று, தடைசெய்யப்படாமல், அதில் ஒரு பேச்சொலி பிறந்தால், அது உயிர் ஒலி. வாயைத் திறந்து காற்றை வெளிவிட்டாலே உயிர் பிறந்துவிடும். தமிழில் 12 உயிர்களும் இத்தகையதே!
ஆனால் மெய் ஒற்று அவ்வாறு இல்லை. தமிழில் 18 மெய் ஒற்றுகளும் மூச்சுக்குழாயிலிருந்து வாயில் நுழைகிற காற்றைத் தடை செய்வதால் பிறக்கிற ஒலிகளாகும். பல வகைத் தடைகளுக்கேற்ப , பலவகை மெய்கள் அமைகின்றன. இங்குக் கவனமாகப் பாரக்கவேண்டியது.. மெய்களுக்கான காற்று தடைசெய்யப்படுவதால், அந்த மெய்கள் நமது காதில் விழாது. அதற்கு நாம் வாயைத் திறந்து, அந்தக் காற்றை வெளியிடவேண்டும்.
ஆனால் வாயைத் திறந்தாலே உயிர் ஒலி பிறந்துவிடும். எனவேதான் எந்தவொரு மெய் எழுத்தும் ஏதாவது ஒரு உயிரோடுதான் பிறக்கும். ''க்'' என்பதைக் கூறிப் பாருங்கள்! ஒன்று முதலில் ''இ' என்ற உயிரொலியோடுதான் ''இக்'' என்று கூறுவீர்கள் அல்லது ''அ'' என்ற உயிரொலியோடுதான் 'க'' என்று கூறுவீர்கள். உயிர் ஒலி தனித்து இயங்குவதற்கும், மெய்யானது உயிரைச் சார்ந்து இயங்குவதற்கும் இதுதான் அடிப்படை.
ஒரு சொல்லை நாம் கூறும்போது, அந்தச் சொல்லில் எத்தனை உயிர் ஒலிகள் இருகிறதோ, அத்தனை தடவை நாம் வாயைத் திறந்து காற்றுக் கற்றை அல்லது காற்றுக்கொத்தை வெளியிடுகிறோம். வாய்த் திறப்பின் எண்ணிக்கையை உயிர் ஒலிகள்தான் தீர்மானிக்கின்றன. மெய் ஒலிகள் இல்லை !
இப்போது மொழியசைக்கு வருவோம்! ஒரு உயிரொலிக்கு முன்னும் பின்னும் மெய் ஒலிகள் வரலாம். உயிரொலிக்கு முன்னால் வரும் மெய்யை அசையின் தொடக்கம் (Onset) என்றும் பின்னால் வரும் மெய்யை அசையின் ஒடுக்கம் ( Coda) என்றும் அழைப்பார்கள். அசையின் உயிரைச் சிகரம் அல்லது உச்சி ( Peak) என்று அழைப்பார்கள். ஆகவே அசையின் உறுப்புகள் மூன்று - தொடக்கம், உச்சி, ஒடுக்கம்!
ஒரு மொழியசையில் உச்சி நிச்சயமாக இருக்கும். இருக்கவேண்டும். ஆனால் அசையின் தொடக்க மெய்யோ, அல்லது ஒடுக்க மெய்யோ வரலாம், வராமலும் இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ''ஈ'' ''ஆ'' என்ற தமிழ்ச்சொற்களில் உச்சி - உயிர் மட்டுமே வந்துள்ளது. ''போ'' ''வா'' ''தா'' என்பவற்றில் தொடக்கம், உச்சி இரண்டும் வருகின்றன. ஆனால் ஒடுக்கம் இல்லை. ''ஆள்'' , ''ஊர்'' ஆகியவற்றில் உச்சி, ஒடுக்கம் இரண்டும் இருக்கின்றன. ஆனால் தொடக்கம் இல்லை. ''பல்'' ''கால்'' ஆகியவற்றில் தொடக்கம், உச்சி, ஒடுக்கம் மூன்றும் வருகின்றன.
தமிழில் ஒரு மொழியசையின் தொடக்கமாக ஒரு மெய் மட்டுமே வரமுடியும். ஆனால் ஒடுக்கத்தில் இரண்டு மெய்கள் வரலாம் ''வாழ்த் - து, வாய்க் - கால், பார்த் -தான் ஆகிய மூன்று சொற்களிலும் முதல் அசைகளில் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வருவதைப் பார்க்கலாம்.
எனவே எழுத்துகள் ( உயிர், மெய் ) பொருள் தரும் சொற்களாக அமையும்போது, மொழியசைகளாக அமைந்துதான், சொற்களாக மாறுகின்றன. எவ்வாறு சொற்கள் (Words)தொடர்களாக ( Phrase) அமைந்து, பின்னர் வாக்கியமாக ( clause/ sentence ) அமைகிறதோ, அதுபோல எழுத்துகளும் மொழியசைகளாக அமைந்துதான் சொற்களாக மாறுகின்றன. அதாவது ஒரு சொல்லில் தனி எழுத்துகளுக்கும் சொல்லுக்கும் இடையில் அசை - மொழியசை- என்ற ஒரு அலகு - அமைப்பு உள்ளது.
ஒவ்வொரு மொழியும் தனக்கென்று மொழியசை அமைப்பு விதிகளைக் கொண்டுள்ளது. மொழிகளிடையே வேறுபாடுகளுக்கு முதல் காரணம், மொழியசை அமைப்பே!
தமிழ்மொழியில் மொழியசையின் தொடக்கத்தில் ஒரு மெய்தான் வரும் என்று பார்த்தோம். ஆனால் ஆங்கிலத்தில் இரண்டு, மூன்று மெய்கள் வரலாம் .... slip, plot இரண்டு மெய்கள், screw மூன்று மெய்கள் தொடக்கமாக அமைகின்றன. ஒடுக்கத்தில் ஆங்கிலத்தில் இரண்டு மெய்கள் வருவதுபோல ( camp, womb) தமிழிலும் இரண்டு மெய்கள் வரலாம் ( வாழ்த்-து, வாய்க்-கால்). ஆங்கிலத்தில் சில மெய்கள்கூட அசை உச்சியாக வரும். bootle என்ற சொல்லின் உச்சரிப்பில் இரண்டாவது அசையில் ஒரு மெய்மட்டுமே உச்சியாக அமைகிறது.
தமிழ் மொழியசைகளில் எந்த ஒலிகள் - எழுத்துகள் - தொடக்கத்தில் வரலாம், ஒடுக்கத்தில் வரலாம், உச்சியாக வரலாம் என்பதை விளக்குவதே தொல்காப்பியரின் நூன்மரபு, மொழிமரபு இயல்களும் நன்னூலாரின் எழுத்தியலும் ஆகும். . மொழியசை என்று தொல்காப்பியரோ நன்னூலாரோ நேரடியாகக் கூறவில்லை. ஆனால் சொல்முதல், சொல் இறுதி, மெய் இரட்டித்தல் ( உடனிலை மயக்கம், வேற்றுநிலை மயக்கம்) ஆகியவைபற்றி விரிவாகக் கூறியுள்ளார்கள். கட்டுரை நீண்டுவிட்டது மன்னிக்கவும். நாளை தொடரலாம்!
தமிழ்ச் சந்தி விதிகளுக்கு ஒரு மிக முக்கியமான அடிப்படை இந்த மொழியசை அமைப்புக் கட்டுப்பாடுகள் அல்லது விதிகளே ஆகும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India