வியாழன், 11 ஜனவரி, 2024

புல்தரை? புற்றரை? புல்த்தரை?

 புல்தரை? புற்றரை? புல்த்தரை? - தமிழ் இலக்கணம், மொழியியல் ஆய்வாளர்கள் கவனத்திற்கு ! ( படிப்பதற்குச் சற்றுச் சோர்வாகத்தான் இருக்கும். எனவேதான் ஆய்வாளர்களுக்கு என்று கூறியுள்ளேன்.)

--------------------------------------------------------------------------
கணிதத்தில் ஒன்றிலிருந்து அதில் உள்ள மற்றொன்றை வருவிக்க அல்லது வெளிப்படுத்த derivation -ஐப் பயன்படுத்தும்போது, ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லத் தெளிவான கணித விதிகள் இருக்கும். அதுபோன்றதுதான் மொழியிலக்கணமும். தமிழிலக்கணம் இவ்வாறுதான் அமைந்துள்ளது.
புல் + தரை --> புல்+ த் + தரை --> புற்தரை --> புற்றரை . புணர்ச்சி விதிகளின்படி இவ்வாறு வரும். ஆனால் தற்காலத்தமிழில் ''புல்தரை'' என்றே எழுதப்படுகிறது. ஆனால் . . . (1) 'புல்' என்ற பெயர்ச்சொல்லும் 'தரை' என்ற பெயர்ச்சொல்லும் இணைந்து தொகையாக மாறும்போது, இடையில் ஒற்று வரவேண்டும். அப்போது அது 'புல்த்தரை' என்று அமையும். (2) இதற்கு அடுத்த கட்டமாக, 'புற்தரை' ; (3) அதற்கு அடுத்த கட்டமாக 'ற்' தனக்கு அடுத்த 'த்' என்பதை 'ற்' என்று மாற்றும் - 'புற்றரை'.
இதை மொழியியலில் Reciprocal assimilation என்று அழைப்பார்கள். அதாவது முதலில் ஒற்று தோற்றம் (புல்த்தரை); அடுத்து, திரிதல் (புற்தரை); மூன்றாவதாக அடுத்து ஒரு திரிபு (புற்றரை).
ஆனால் தற்காலத்தமிழில் 'புற்றரை' என்று எழுதுவது கிடையாது. ஆனால் மேற்கண்ட திரிபுகள் நடைபெறாத நிலையில் . . . புல்த்தரை என்று எழுதினால்தான் பெயர்த்தொகையாக அமையும். (பால் + குடம் --> 'பாற்குடம்' அல்லது 'பால்க்குடம்' (நெல்லை தமிழில்) என்று அமையவேண்டும். அவ்வாறு இல்லாமல் 'பால்குடம்' என்று எழுதுவது சரி இல்லை.)
இரண்டு பெயர்ச்சொல்கள் இணைந்து தொகையாக மாறும்போது ஒற்று மிகவேண்டும். அது மிகுந்தபிறகு, நான் மேலே என் உரையில் கூறியபடி திரியலாம்; அல்லது திரியாமல் இருக்கலாம்; ஆனால் ஒற்று மிகுந்தால்தான் இது பெயர்த்தொகையாக அமையும். இதில் ஏதாவது ஒன்று நடைபெறவில்லையென்றால், பெயர்த்தொகை கிடைக்காது.
(1) ''புல் தரையில் வளர்ந்துள்ளது''
(2) ''மாடு புல்த்தரையில் (புற்றரையில்) படுத்துள்ளது''.
முதல் தொடரில் ''புல்'' எழுவாய். ''தரையில்'' என்பது பயனிலையில் அமைகிற வேற்றுமைத்தொடர்.
இரண்டாவது தொடரில் 'புல்த்தரை'' என்பது பயனிலையில் அமைகிற ஒரு வேற்றுமைத்தொடர். இதில் 'புல்' எழுவாய் இல்லை. 'மாடு' எழுவாய்.
மேற்குறிப்பிட்ட வேறுபாட்டை வெளிப்படுத்த உறுதியாக ஒற்று மிகவேண்டும். அதற்கு அடுத்து திரிவது திரியாதது வேறு ஒரு பிரச்சினை.
இங்கு ஒற்று வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது தொகை என்பதைச் சுட்டிக்காட்டத்தான் வருகிறது.
ஆகவே , அவ்வாறு இல்லாமல் ''மாடு புல் தரையில் படுத்துள்ளது'' என்று எழுதினால் , பொருண்மை மயக்கம் ஏற்படும். (1) தரையில் மாடு படுத்துள்ளதா (2) புல்த்தரையில் மாடு படுத்துள்ளதா? ''மாடு புல்'' என்பது 'ஆண் பெண்' (ஆணும் பெண்ணும்) என்ற உம்மைபோல 'மாடும் புல்லும்' என்று அமைந்துவிடும்.
இதுபோன்ற இடங்களில் கணினிக்குத் தமிழ் கற்பிக்கும்போது, கணினியானது பொருண்மை மயக்கம் இல்லாமல் மேற்குறிப்பிட்ட தொடர்களைப் புரிந்துகொள்வதற்கு ஒற்று உறுதியாகத் தேவை. மனிதர்களுக்கு உலக அறிவு (Pragmatic knowledge) இருப்பதால் ஒற்று இல்லையென்றாலும், இத்தொடர் அமைகிற மொழிச்சூழல், மொழிசாராப் புறச்சூழல் (linguistic context and nonlinguistic context) வைத்துக்கொண்டு, பொருண்மை மயக்கம் இல்லாமல் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அந்த அறிவு இல்லாத கணினிக்கு 'புல்த் தரை'' அல்லது ''புற்றரை'' என்றே தரவுகளைக் கொடுக்கவேண்டும். இது முழுக்க முழுக்க ஒரு கணித விதி.
தமிழ்க் கட்டமைப்பு அல்லது இலக்கணம் தெளிவான கணித விதிகள்போன்று இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தமிழ், மொழியியல் மாணவர்கள் இதுபோன்று இலக்கணத்தை ஆராய்ந்து படித்தால் சிறப்பாக இருக்கும்.
விரும்புக
கருத்துத் தெரிவி
பகிர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India