வியாழன், 8 ஜூலை, 2021

ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவியலா?

 ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவியலா?

---------------------------------------------------------------------------------------------------------
இன்று ( ஜூலை 7, 2016) தமிழ் 'தி இந்துவில்' ஒரு செய்தி! தமிழ்வழி பொறியியல் படிப்பில் 1257 இடங்கள் காலி! 121 பேர்மட்டுமே இதுவரை சேர்ந்துள்ளனர். அதற்குக் கூறப்பட்டுள்ள காரணம் ..... '' தனியார் துறையில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால், தமிழ்வழிப்பிரிவில் சேர மாணவர் தயக்கம் காட்டுகின்றனர்.. தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ வேலைவாய்ப்புகள் குறைவு. வேலைக்குத் தேர்வுசெய்யப்பட்டாலும் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. படித்து முடிக்கும் அனைவர்க்கும் எப்படி அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்? அரசு வேலைவாய்ப்பை மட்டுமே நம்பி, தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேரமுடியுமா என்று மாணவர்கள் கேட்கின்றனர்''
எனக்குள்ள ஐயங்கள்.....
1) தமிழில் படித்தாலும், ஆங்கிலத்திலும் படித்தாலும், பொறியியல் அறிவு ஒன்றுதானே? ஆங்கிலத்தில் அமைந்துள்ள பொறியியல் பாடங்கள் வேறு... தமிழில் அமைந்துள்ள பொறியியல் பாடங்கள் வேறா? எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை ...
2) சரி. அயல்நாட்டு நிறுவனங்களில் வேலைபார்க்க ஆங்கில அறிவு தேவை என்று வைத்துக்கொள்வோம். ஆங்கிலத்தை - ஒரு மொழியாக - சிறப்பாக மாணவர்கள் கற்றுக்கொள்ளலாமே! அறிவு வேறு.... அறிவைப் பெறுகின்ற மொழி வேறு. ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவா? அறிவைத் தாய்மொழியில் பெற்றுவிட்டு, அந்த அறிவை ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தத் தேவையான English for Technology என்று சிறப்பு ஆங்கிலத்தை நன்றாகக் கற்றுக்கொள்ளலாமே!
3) ஆங்கிலத்தில் படித்துவிட்டு, ஜெர்மனியில் அல்லது பிரான்ஸில் வேலைபார்க்கவேண்டிய ஒரு சூழலில், ஒருவர் என்ன செய்கிறார்? அங்கெல்லாம் அவர்கள் நாட்டு மொழியில்தானே வேலை நடைபெறுகிறது. அங்கு சென்றபின்னர், அந்த மொழியைக் கற்றுக்கொள்ளவில்லையா?
4) மொழிக்கல்விக்கும் பாடங்களைக் கற்றுக்கொளவதற்கும் உள்ள வேறுபாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாத காரணத்தால்தானே இதுபோன்ற மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன? தாய்மொழி அல்லாத தேவைப்படுகிற பிற மொழிகளை மொழிக்கல்வியில் பெறுமுடியாதா?
5) சாம்ஸ்கி கூறியுள்ளதுபோல ( Manufcturing consent) , ஆங்கிலம்பற்றிய ஒரு தவறான எண்ணத்தை - ஆங்கிலம் இருந்தால்தான் வேலை அல்லது அறிவு என்ற மூடநம்பிக்கையை - மக்களிடம் உருவாக்கி வைத்துவிட்டு, அதனடிப்படையில் மக்கள் அப்படி விரும்புகிறார்கள் என்று கூறுவது சரியா?
6) ஆங்கிலத்தையோ அல்லது வேறு எந்த மொழியையோ மொழியியல் பின்னணியில் மிகக் குறைந்த காலத்தில் கற்றுக்கொள்ளலாம். அதற்கான பல வழிமுறைகள் மொழிபயிற்றல் என்ற செயற்படுத்த மொழியியலில் உருவாக்கப்பட்டுள்ளன.' ஆடத் தெரியாதவளுக்குத் தெரு கோணல்' என்ற பழமொழிபோல, பயிற்றுமொழிக்கும் மொழிக்கல்விக்கும் உடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் ... ஆங்கிலத்தில் பாட அறிவைப் பெறவில்லையென்றால், அறிவே இருக்காது... வேலை வாய்ப்பே இருக்காது என்று நினைப்பது சரியா'
இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அகற்றாமல், தமிழகத்தில் தமிழ் வளர்ச்சியை - தமிழ்ப் பரவலை - ஏற்படுத்துவது மிகக் கடினம்.
மூன்று மாதங்களில் அடிப்படை ஆங்கிலத்தையும் அடுத்துச் சில காலங்களில் உயர்நிலை ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுக்கமுடியும் ... தேவைப்பட்டால்! எனவே மாயைகளில் ... மூடநம்பிக்கைகளில் நாம் வாழக்கூடாது! மொழி ஏகாதிபத்தியத்தை அடியோடு ஒழிக்கவேண்டும்.

மொழியியல் தமிழாய்வுக்கு எதிரானதா?

 வினா : மொழியியல் தமிழ்மொழிக்கு எதிரானது, அது உண்மையான தமிழ்மொழி ஆய்வுக்கு எதிரானது என்று கூறப்படும் கருத்து சரியா?

விடை: இல்லை. பிற அறிவியல்கள்போன்று சமூக வளர்ச்சியில் தேவையையொட்டித் தோன்றி வளர்ந்துள்ள ஒரு அறிவியல்தான் மொழியியல். குறிப்பிட்ட மொழிபற்றிய ஆய்வாக இல்லாமல், பொதுவாக ‘மனித மொழி’ என்பதை ஆய்வு செய்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கின்ற ஒரு அறிவியலே இது. ஆய்வுகளுக்குக் கருதுகோள்களை முன்வைப்பது, அவற்றின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வது, அந்த ஆய்வுகளின் அடிப்படையில் மொழிபற்றிய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் முன்வைப்பது போன்றவற்றை உள்ளடக்கியதுதான் மொழியியல். மொழியின் அமைப்பைப்பற்றி மட்டுமல்லாமல், மொழிக்கும் மனித மூளைக்கும் உள்ள தொடர்பு, மொழிக்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு, மொழிக்கும் மனித மனத்திற்கும் உள்ள தொடர்பு என்று பல முனைகளில் வளர்ந்துள்ளது மொழியியல். இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டில்தான் இத்துறை அறிமுகமாகியது. பூனே டெக்காண் கல்லூரியில்தான் இந்த அறிவியலைப் பயிற்றுவிக்கும் கோடைகாலச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. அதில் பயின்ற அல்லது பயிற்சியாளராகப் பணியாற்றிய பேராசிரியர்கள் தெ.பொ.மீ., வ.அய். சுப்பிரமணியம், முத்துச்சண்முகம்பிள்ளை, பி ஹைச் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்தான் தென்னகத்தில் இந்தத் துறையைப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தினார்கள். தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கேரளப் பல்கலைக்கழகத்திலும் ஆந்திராவில் உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் மொழியியல் துறைகள் நிறுவப்பட்டன. அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்ப் பேராசிரியர்களாக உருவாகியிருந்த அகத்தியலிங்கம், இ. அண்ணாமலை, கு. பரமசிவம், இராம. சுந்தரம், குமாரசாமி ராஜா, தாமோதரன், செ.வை. சண்முகம், காமாட்சிநாதன், க. முருகையன், பா.ரா. சுப்பிரமணியன், இஸ்ரேல், விஜயவேணுகோபால் போன்றோர் தமிழ்மொழியை மொழியியல் அடிப்படையில் ஆராயத் தொடங்கினர். பேரா. வ. அய். சுப்பிரமணியம, அகத்தியலிங்கம், கு. பரமசிவம் போன்றோர் அமெரிக்காவிற்குச் சென்று சிறப்புப் பயிற்சிபெற்றார்கள். பின்னர் அவர்களின் மாணவர்களாகப் பேராசிரியர்கள் எம் எஸ் திருமலை, நீதிவாணன், கருணாகரன், சீனிவாசவர்மா, பொற்கோ, ஆர். கோதண்டராமன், ஞானசுந்தரம், கி. ரங்கன், ராஜாராம் போன்றார் மொழியியல் பயிற்சிபெற்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்ப்புலவர் படிப்பு பெற்றவர்கள். திராவிடமொழி ஒப்பிலக்கணம், தமிழ்மொழி வரலாறு, இன்றைய தமிழ் இலக்கணம், சங்கத்தமிழ் வரலாறு, பிற காலகட்டத் தமிழிலக்கியங்களின் மொழி ஆய்வு என்று பல்வேறு தலைப்புகளில் தமிழின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளனர். உலகமொழிகள், திராவிடமொழிகள், சங்கத்தமிழ், இன்றைய தமிழ் என்ற பல தலைப்புகளில் பேரா. அகத்தியலிங்கம் தமிழை ஆராய்ந்து, நூல்கள் வெளியிட்டுள்ளார். பொற்கோ இன்றைய தமிழுக்கான இலக்கணம், தமிழை அயல்நாட்டவர்க்குக் கற்பித்தல் , தமிழுக்கும் ஜப்பானியமொழிக்கும் இடையில் உள்ள உறவு போன்ற தலைப்புகளில் மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டார். தமிழகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றிய பேரா. வ.அய். சுப்பிரமணியம் தமிழாய்வை எவ்வாறு வளர்த்தெடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்கள் அரசுகளின் உதவிகொண்டு, குப்பத்தில் திராவிடப் பல்கலைக்கழகத்தையே உருவாக்குவதில் அவர் பெரும்பங்காற்றினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வரலாற்றைப் பேரா. தெ.பொ.மீ. முன்வைத்தார். இன்றும் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், ஜெர்மனி , அமெரிக்கா, கனடா, போலந்து போன்ற பல நாடுகளில் தமிழ்மொழியைப் பயிற்றுவித்து வருபவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டில் மொழியியல் பயின்ற பேராசிரியர்கள்தான். இன்றைய தமிழுக்கான ஒரு சிறந்த அகராதியை அளித்த கிரியா அமைப்பில் அதற்காக உழைத்தவர்கள் பெரும்பாலும் மொழியியல் பின்னணி உள்ளவர்கள்தான். கணினித்தமிழிலும் மொழியியல் கல்வி பெற்றவர்கள் இன்று அளித்துவருகிற பங்கு தெரிந்ததே. இவ்வாறு தமிழ்மொழி ஆய்வுக்கும், தமிழ்க்கல்விக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பெரும்பங்கு அளித்துவருகிற பேராசிரியர்கள் பலர் மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, மொழியியல் தமிழுக்கு எதிரானது என்று எவ்வாறு கூறமுடியும்? மேற்குறிப்பிட்ட மொழியியலார்கள் எல்லோரும் தமிழ் மொழியுணர்விலோ, மொழிக்காப்பிலோ குறைந்தவர்கள் அல்லர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

புதன், 30 ஜூன், 2021

இலக்கணமும் மொழியியலும் அறிவியல் துறைகளே!

 

இலக்கணமும் மொழியியலும் அறிவியல் துறைகளே!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திரு. ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்கள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதையெல்லாம் படிக்கும்போது எனக்கு எழும் ஒரு உண்மையான அச்சத்தை இங்கு பதிவுசெய்ய கடமைப்படுகிறேன். நான் தமிழறிஞனும் அல்லேன், அறிஞர்களுக்கு எதிர்ப்பான மனப்பாங்கு உடையவனும் அல்லேன்.

பொற்கோ அவர்களின் இக்கால இலக்கண நூலில் பல புதுமையான கருத்துகளை சொல்கிறார். அவற்றுள் சிலவற்றை நான் தவறானவையாக காண்கிறேன். இவற்றுள் ஒன்றைப்பற்றி நாம் இருவரும் எதிரெதிரான கருத்துகளுடன் நீண்ட உரையாடலை முன்பொருமுறை மேற்கொண்டிருக்கிறோம்.

புத்திலக்கணம் எழுதுகிறேன் என்ற பெயரில் மேலும் தவறான கூறுகளை இக்காலப்பேராசிரியர்கள் புகுத்திவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

 

ந. தெய்வ சுந்தரம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலக்கணம், மொழியியல் என்பவை புறவயமான விதிகளை அடிப்படையாகக் கொண்டவையே. நீடிக்கிற இயற்கையின் அமைப்பையும் செயல்பாட்டையும் கண்டறிந்து விளக்குகிற துறையே அறிவியல். இல்லாத ஒன்றை முன்வைப்பது அறிவியல் இல்லை.

அதுபோலவே இலக்கணமும் மொழியியலும். இன்றைய தமிழின் வளர்ச்சிநிலையை - அதன் அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றை - ஆய்ந்து, அவைபற்றிய கருத்துகளையும் அவற்றில் நீடிக்கிற ஒழுங்கமைவு, விதிகள் ஆகியவற்றையும் கூறுகிற துறைகளே ஆகும். மொழியில் இல்லாத ஒன்றைக் கூறமுடியாது. பிற அறிவியல் துறைகள் போன்றவையே இலக்கணமும் மொழியியலும். (டாக்டர் பொற்கோ - '' ஆராய்ச்சியில் ஈடுபட ஈடுபடப் புதிய புதிய விதிகளை நாம் கண்டறிகிறோம். விதிகளை நாமே உண்டாக்க முடியாது. முன்பே இருக்கிற விதிகளைக் கண்டறிகிறோம். மொழி உலகில் நாம் கண்டறிய வேண்டிய விதிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன'')

பிறதுறைகளில் ஆய்வாளர்களை ''இக்காலப் பேராசிரியர்கள்'' ''அக்காலப் பேராசிரியர்கள்'' என்று ''வகைப்படுத்தி'' பேசுவது எவ்வாறு தவறானதோ, அதுபோன்றதுதான் இலக்கணத்திலும் மொழியியலிலும் முறையான கல்வியும், பயிற்சியும் பெற்ற பேராசிரியர்களைப்பற்றிக் கூறுவது ஆகும்.

இயற்கைபற்றிய கருத்துக்களிலும் அறிவியலாளர்கள் நடுவில் மாறுபட்ட, வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதுபோன்றே இலக்கண, மொழியியல் ஆய்வாளர்கள் நடுவிலும் இருக்கலாம். அவ்வளவே.

இன்றைய தமிழின் வளர்ச்சியைப் புறவயமாக ஆய்ந்து, அதன் அமைப்பு, செயல்பாட்டு வளர்ச்சிகளைக் கண்டறிந்து, முந்தைய நிலையிலிருந்து இன்றைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எவ்வாறு தமிழ் வளர்ந்துள்ளது என்பதை விளக்குவதே புதிய இலக்கணத்தின் பணியாகும். இதற்குத் தொல்காப்பியம், நன்னூல் உட்பட மரபு இலக்கணங்களில் புலமையும் இன்றைய மொழியியல் பயிற்சியும் உள்ள ஆய்வாளர்களின் பணிகளையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். ஏனோ தானோ என்று கருத்துக்களை அவர்கள் வழங்கமாட்டார்கள். அவர்கள் அவ்வாறு வழங்கினாலும் பிற ஆய்வாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

புதிய இலக்கணத்தின் தேவைபற்றிப் பேரா. பொற்கோ அவர்கள் தனது ''இக்காலத் தமிழ் இலக்கணம்'' என்ற நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

//மொழியின் பயன்பாட்டு எல்லையின் விரிவாக்கம் புதிய இலக்கணத்திற்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய சூழலில் புதிய இலக்கணங்கள் தோன்றவேண்டும்; அப்போதுதான் மொழியில் தோன்றியுள்ள புதிய இலக்கணக் கூறுகளுக்கு நிலைபேறு ஏற்படும். மொழியிலும் அப்போதுதான் புதிய வளர்ச்சி தோன்றும். இந்த இலக்கணநூல் தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட இலக்கண நூல். தேவையான பழைமைகளைப் போற்றிக் காப்பதோடு மொழியில் தோன்றியுள்ள புதுமைக்கூறுகளுக்கு இடம் தந்து வாழ்வளிப்பதையும் இந்த இலக்கண நூல் ஒரு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மரபில் கால் ஊன்றிப் புதுமையில் அடியெடுத்து வைக்க இந்த நூல் வழிகாட்டுகிறது. //

எனவே பேராசிரியர் ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்களே... தாங்கள் தமிழ் இலக்கண, மொழியாசிரியர்களைக் ( தங்கள் சொற்களில் சொல்வதென்றால் ''இக்காலப் பேராசிரியர்கள்'') கண்டு ''அச்சப்படத்'' தேவையில்லை. அவர்களின் கருத்துக்களில் தங்களுக்கு உடன்படாத எதுவும் இருந்தால், அதைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்து, அவர்களுக்கு உதவலாம்! நன்றி.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திரு. ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்கள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதையெல்லாம் படிக்கும்போது எனக்கு எழும் ஒரு உண்மையான அச்சத்தை இங்கு பதிவுசெய்ய கடமைப்படுகிறேன். நான் தமிழறிஞனும் அல்லேன், அறிஞர்களுக்கு எதிர்ப்பான மனப்பாங்கு உடையவனும் அல்லேன்.

பொற்கோ அவர்களின் இக்கால இலக்கண நூலில் பல புதுமையான கருத்துகளை சொல்கிறார். அவற்றுள் சிலவற்றை நான் தவறானவையாக காண்கிறேன். இவற்றுள் ஒன்றைப்பற்றி நாம் இருவரும் எதிரெதிரான கருத்துகளுடன் நீண்ட உரையாடலை முன்பொருமுறை மேற்கொண்டிருக்கிறோம்.

புத்திலக்கணம் எழுதுகிறேன் என்ற பெயரில் மேலும் தவறான கூறுகளை இக்காலப்பேராசிரியர்கள் புகுத்திவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

 

ந. தெய்வ சுந்தரம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலக்கணம், மொழியியல் என்பவை புறவயமான விதிகளை அடிப்படையாகக் கொண்டவையே. நீடிக்கிற இயற்கையின் அமைப்பையும் செயல்பாட்டையும் கண்டறிந்து விளக்குகிற துறையே அறிவியல். இல்லாத ஒன்றை முன்வைப்பது அறிவியல் இல்லை.

அதுபோலவே இலக்கணமும் மொழியியலும். இன்றைய தமிழின் வளர்ச்சிநிலையை - அதன் அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றை - ஆய்ந்து, அவைபற்றிய கருத்துகளையும் அவற்றில் நீடிக்கிற ஒழுங்கமைவு, விதிகள் ஆகியவற்றையும் கூறுகிற துறைகளே ஆகும். மொழியில் இல்லாத ஒன்றைக் கூறமுடியாது. பிற அறிவியல் துறைகள் போன்றவையே இலக்கணமும் மொழியியலும். (டாக்டர் பொற்கோ - '' ஆராய்ச்சியில் ஈடுபட ஈடுபடப் புதிய புதிய விதிகளை நாம் கண்டறிகிறோம். விதிகளை நாமே உண்டாக்க முடியாது. முன்பே இருக்கிற விதிகளைக் கண்டறிகிறோம். மொழி உலகில் நாம் கண்டறிய வேண்டிய விதிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன'')

பிறதுறைகளில் ஆய்வாளர்களை ''இக்காலப் பேராசிரியர்கள்'' ''அக்காலப் பேராசிரியர்கள்'' என்று ''வகைப்படுத்தி'' பேசுவது எவ்வாறு தவறானதோ, அதுபோன்றதுதான் இலக்கணத்திலும் மொழியியலிலும் முறையான கல்வியும், பயிற்சியும் பெற்ற பேராசிரியர்களைப்பற்றிக் கூறுவது ஆகும்.

இயற்கைபற்றிய கருத்துக்களிலும் அறிவியலாளர்கள் நடுவில் மாறுபட்ட, வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதுபோன்றே இலக்கண, மொழியியல் ஆய்வாளர்கள் நடுவிலும் இருக்கலாம். அவ்வளவே.

இன்றைய தமிழின் வளர்ச்சியைப் புறவயமாக ஆய்ந்து, அதன் அமைப்பு, செயல்பாட்டு வளர்ச்சிகளைக் கண்டறிந்து, முந்தைய நிலையிலிருந்து இன்றைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எவ்வாறு தமிழ் வளர்ந்துள்ளது என்பதை விளக்குவதே புதிய இலக்கணத்தின் பணியாகும். இதற்குத் தொல்காப்பியம், நன்னூல் உட்பட மரபு இலக்கணங்களில் புலமையும் இன்றைய மொழியியல் பயிற்சியும் உள்ள ஆய்வாளர்களின் பணிகளையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். ஏனோ தானோ என்று கருத்துக்களை அவர்கள் வழங்கமாட்டார்கள். அவர்கள் அவ்வாறு வழங்கினாலும் பிற ஆய்வாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

புதிய இலக்கணத்தின் தேவைபற்றிப் பேரா. பொற்கோ அவர்கள் தனது ''இக்காலத் தமிழ் இலக்கணம்'' என்ற நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

//மொழியின் பயன்பாட்டு எல்லையின் விரிவாக்கம் புதிய இலக்கணத்திற்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய சூழலில் புதிய இலக்கணங்கள் தோன்றவேண்டும்; அப்போதுதான் மொழியில் தோன்றியுள்ள புதிய இலக்கணக் கூறுகளுக்கு நிலைபேறு ஏற்படும். மொழியிலும் அப்போதுதான் புதிய வளர்ச்சி தோன்றும். இந்த இலக்கணநூல் தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட இலக்கண நூல். தேவையான பழைமைகளைப் போற்றிக் காப்பதோடு மொழியில் தோன்றியுள்ள புதுமைக்கூறுகளுக்கு இடம் தந்து வாழ்வளிப்பதையும் இந்த இலக்கண நூல் ஒரு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மரபில் கால் ஊன்றிப் புதுமையில் அடியெடுத்து வைக்க இந்த நூல் வழிகாட்டுகிறது. //

எனவே பேராசிரியர் ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்களே... தாங்கள் தமிழ் இலக்கண, மொழியாசிரியர்களைக் ( தங்கள் சொற்களில் சொல்வதென்றால் ''இக்காலப் பேராசிரியர்கள்'') கண்டு ''அச்சப்படத்'' தேவையில்லை. அவர்களின் கருத்துக்களில் தங்களுக்கு உடன்படாத எதுவும் இருந்தால், அதைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்து, அவர்களுக்கு உதவலாம்! நன்றி.

இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவையா?

 

இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவையா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் திரு. மாலன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தொல்காப்பியத்திற்குச் சொன்னது நன்னூலுக்கும் பொருந்துமா? இன்று இன்னொரு நூல் தமிழுக்குத் தேவைப்படுகிறதா?

 ந. தெய்வ சுந்தரம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆமாம் நண்பரே. நன்னூல் காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இடையில் சில நூற்றாண்டுகள் இடைவெளி இருக்கிறதே! உறுதியாக நன்னூல் 100 விழுக்காடு அப்படியே இன்றைய எழுத்துத் தமிழுக்குப் பொருந்தாது. மாற்றங்கள் உள்ளன. மாற்றங்கள் இல்லையென்றால் தமிழ்ச்சமுதாயமும் மாறவில்லை... வளர்ச்சியடையவில்லை... எனவே தமிழும் வளர்ச்சியடைவில்லை என்றுதானே பொருள்! இதுபற்றிப் பேராசிரியர் பொற்கோ பின்வருமாறு கூறுகிறார் - ''தொல்காப்பியர் கால இலக்கியத் தமிழுக்கும் நன்னூலார் கால இலக்கியத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. அதைப் போலவே இன்றைய இலக்கியத் தமிழுக்கும் முந்தைய இலக்கியத் தமிழுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவன் வருகிறான், அவன் வருகின்றான் முதலான தொடர்களிலுள்ள நிகழ்கால இடைநிலைகளை நாம் பழந்தமிழில் - தொல்காப்பியர் காலத் தமிழில் காண முடிவதில்லை. ஆகவே, தொல்காப்பியம் என்ற அந்த இலக்கணத்தில் நிகழ்கால இடைநிலைகள் குறிப்பிடப்படவில்லை. அவர் என்ற சொல் இக்கால இலக்கியத் தமிழில் ஒருவரைமட்டுமே குறிக்கும். பலரைக் குறிப்பதற்கு அவர் என்ற சொல்லை இன்று நாம் கையாளமுடியாது. ஆனால் , இடைக்காலத் தமிழிலும் முற்காலத் தமிழிலும் அவர் என்ற சொல் பலரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்பட்டிருக்கிறது. ஆகவே, அவர் என்பது நன்னூலார் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் பலர்பால் என்று கொள்ளப்படுகிறது. இக்காலத்தில் அவர் என்பதைப் பலர்பால் என்று கொள்ளமுடியாது. இன்றைய இலக்கியத் தமிழில் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். காலந்தோறும் இலக்கிய மொழிநடையிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பதை நாம் உணர்ந்துகொண்டு இன்றைய இலக்கியத் தமிழுக்கு ஏற்றவகையில் ஒரு இலக்கணத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. இன்றைய இலக்கியத் தமிழுக்கு நன்னூல் என்ற இலக்கணமும் தொல்காப்பியம் என்ற இலக்கணமும் போதுமானதாக அமையவில்லை. ஆகவே, இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவை'' ( இக்காலத் தமிழ் இலக்கணம். பேரா. பொற்கோ( 2006) ப. 2

கணினியின் எதிர்கால வளர்ச்சியும் தமிழின் சிறப்பும்...

 

கணினியின் எதிர்கால வளர்ச்சியும் தமிழின் சிறப்பும்...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் திரு. மாலன் அவர்களும் நண்பர் திரு. இராச. தியாகராசன் அவர்களும் கூறியுள்ள கணினித்திறன் வளர்ச்சி உறுதியாக எதிர்காலத்தில் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.

கணினியானது நாம் செய்யும் தவறுகளைத் தவறுகள் என்று தெரிந்துகொள்ளவும் அவற்றிற்கு மாற்றாகச் சரியான தொடர்களை அளிக்கவும் முதலில் நாம் கணினிக்குச் சரியான தரவுகளை (அகரமுதலி, இலக்கணம் ) அளிப்பது தேவையான ஒன்றாகும். அதற்குத் தமிழின் முறையான இலக்கணமும் அகரமுதலியும் தேவை. அவற்றைக்கொண்டுதான் நாம் கணினியைப் பயிற்றுவிக்க இயலும்.

கடந்த பல ஆண்டு ஆய்வுகளைத் தொடர்ந்து, எங்கள் குழுவினர் தானியங்கு பரிந்துரை (auto-suggestion) கருவி ஒன்றை உருவாக்கியுள்ளோம். தற்போது கூகில் போன்றவற்றில் உள்ள இதுபோன்ற கருவிகள் ... அவற்றின் தரவுத்தளங்களில் காணப்படுகிற தொடர்களை அடிப்படையாகவும் புள்ளியியலை அடிப்படையாகவும் கொண்டவை. எடுத்துக்காட்டாக , ''படி'' என்று தட்டச்சு செய்தவுடன் ''படித்தான், படித்தாள், படித்தார், படித்தால் '' என்ற தொடர்கள் தோன்றும். அவற்றில் நாம் தட்டச்சு செய்ய விரும்பிய தொடர் இருந்தால், அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதாவது முழுத்தொடரை நாம் தட்டச்சு செய்யவேண்டாம்.

ஆனால் ''படித்துக்கொண்டிருக்கவேண்டும்'' என்ற ஒரு நீண்ட தொடரை நாம் தட்டச்சு செய்ய விரும்பியிருந்தால், அது கணினியில் தோன்றாது. புள்ளியியல் - குறிப்பாக Probabilistic statistics துறை அறிவைப் பயன்படுத்தி, கணினி பரிந்துரை அளிக்கிறது.

இங்குச் சிக்கல் என்னவென்றால் ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு இதுபோன்ற தானியங்கு பரிந்துரை உருவாக்கம் சற்று எளிது. ஆனால் தமிழ் போன்ற மொழிகளில் ஒரு வினைச்சொல்லுக்குப் பல லட்சம் விகுதி ஏற்ற வடிவங்கள் உண்டு. ஒரு பெயர்ச் சொல்லுக்கும் அப்படியே. ஆனால் அனைத்தும் தெளிவான, குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில்தான் உருவாகுகின்றன. இவை அனைத்தையும் நாம் முதலில் உருவாக்கி, அவற்றைத் தானியங்கு பரிந்துரைக்கான தரவுத்தளத்தில் ஏற்றவேண்டிய தேவை உள்ளது.

அதற்குப் பதிலாக, தட்டச்சு செய்யும்போதே அவற்றை உருவாக்கிக்கொள்ளும் தொடர் உருவாக்கிக் கருவி இருந்தால் சிறப்பு. அந்த அடிப்படையில் தற்போது நாங்கள் தமிழுக்கு இந்தக் கருவியை உருவாக்கியுள்ளோம். எந்த சொல் வடிவம் என்றாலும் இந்தக் கருவி அதற்குரிய தேவையான அனைத்து வடிவங்களையும்... நாம் தட்டச்சு செய்யச் செய்ய. (in real-time).. கணினி அளிக்கும்வகையில் இந்தக் கருவி அமைகிறது. இதற்குத் தேவையான சரியான தமிழ் அகரமுதலியையும் சரியான இலக்கணத்தையும் அவற்றைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்கும் தொடர் உருவாக்கிக் கருவியையும் தற்போது உருவாக்கியுள்ளோம்.

இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க எங்களுக்கு தமிழ்ச் சொல் இலக்கணத்தைப்பற்றிய - குறிப்பாகப் புணர்ச்சி, சாரியை, ஆக்க விகுதிகள், திரிபு விதிகள் , அவை செயல்படும் முறை ஆகியவைபற்றிய - மிகத் தெளிவான அறிவு தேவைப்பட்டது. பல சிக்கல்கள் எழுந்தன. இவற்றையெல்லாம் ஓரளவிற்குத் தீர்த்துள்ளோம்.

இங்கு நான் குறிப்பிட விரும்புவது... இப்பணியில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு முதலில் முறையான இலக்கணப் பயிற்சியும், கணினியியல் தொழில்நுட்பமும் (கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம்) தேவை.

தற்போதைய எங்கள் ''தானியங்கு பரிந்துரை'' மென்பொருள் கருவி எடுத்துக்காட்டுவது .... தமிழ்ச்சொல் இலக்கணவிதிகள் 100 விழுக்காடு கணித அடிப்படையில் அமைந்துள்ளன என்ற உண்மையேயாகும். இல்லையென்றால் இந்தக் கருவியை உருவாக்க இயலாது. இதனையே தமிழ்மொழியின் சிறப்பாகவும் எங்கள் ஆய்வின் சிறப்பாகவும் நான் கருதுகிறேன்.

இன்றைய தமிழின் இலக்கணக் கட்டமைப்பை நாம் முறையாக உணர்ந்துகொள்வதும் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமா?

 

இன்றைய தமிழின் இலக்கணக் கட்டமைப்பை நாம் முறையாக உணர்ந்துகொள்வதும் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுத்துத் தமிழை அதற்கே உரிய இலக்கணக் கட்டமைப்பின் அடிப்படையில்தான் எழுதவேண்டுமா? புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவேண்டுமா? அவ்வாறு பின்பற்றாவிட்டால் என்ன குறைந்துவிடும்? மக்களுக்குப் புரியாமலா போய்விடும்? தினத்தந்திபோன்ற நாளிதழ்களில் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றாமல் செய்திகள் வெளிவருகின்றனவே! அவற்றை மக்களால் புரிந்துகொள்ளமுடியவில்லையா? இவைபோன்ற பல வினாக்களை நண்பர்கள் சிலர் முன்வைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன விடை அளிப்பது?

மனிதமூளைக்கு உள்ள மொழித்திறன் வியக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட தொடரைக் கேட்கும்போதோ அல்லது வாசிக்கும்போதோ ... அத்தொடருக்கு முன்பின் உள்ள தொடர்களையும், குறிப்பிட்ட கருத்தாடல் நடைபெறுகிற மொழிசாராச் சூழல்களையும் அடிப்படையாகக் கொண்டு ... நம்மால் குறிப்பிட்ட தொடரின் பொருண்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட தொடரில் இலக்கண மீறலோ, புணர்ச்சிவிதிகள் மீறலோ இருந்தாலும்... நம்மால் அந்தத் தொடரின் பொருண்மையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மீறப்பட்ட விதிகளை நாம் புரிந்துகொண்டு.... அவற்றைச் செயல்படுத்தி... குறிப்பிட்ட தொடரின் பொருண்மையைப் புரிந்துகொள்கிறோம்.

''கைப்பிடி'' ''கைபிடி'' என்ற இரண்டு தொடர்களும் வெவ்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தினாலும்.... பேசுபவர் இந்த வேறுபாட்டைப்பற்றிக் கவலைப்படாமல் பேசினாலும்.... முன்பின் தொடர்களையும் பிற புறச் சூழல்களையும் கவனத்தில்கொண்டு, நாம் பேசுபவர் கூற விரும்புகிற கருத்தைப் புரிந்துகொள்கிறோம். பேசுபவரே தவறு இல்லாமல் பேசினால்... கேட்பவர் இந்த இரண்டாவது வேலையைச் செய்யாமலேயே... பொருண்மையைப் புரிந்துகொள்ளமுடியும். இல்லையென்றால், இந்தத் ''திருத்தல்'' பணிகளை கேட்பவர் மேற்கொள்வார். அவ்வளவுதான். எனவே எப்படி வேண்டும் என்றாலும் பேசினாலும் அல்லது எழுதினாலும்... மற்றவர்கள் ''திருத்தல் பணியை'' மேற்கொள்ளாமல் ... முன்வைத்த கருத்துக்களைப் புரிந்துகொள்வார் என்பது உண்மை இல்லை! சந்தியோ, சாரியையோ, பிற இலக்கணக் கட்டமைப்புக் கூறுகளோ சும்மா அழகியலுக்காகப் பயன்படுத்தப்படவில்லை! ஒவ்வொரு விதியும் கருத்தாடல் வெற்றிகரமாக நடைபெறுவதற்காகவே நிலவுகின்றது என்பதை மனதில் கொள்ளவேண்டும்!

இது ஒருபுறம்... மறுபுறம் கணினி தொடர்பான ஒரு உண்மை! கணினி வாயிலாக எல்லாவிதமான மொழிவழிக் கருத்தாடல்களையும் மேற்கொள்ளத் தற்போது நாம் அனைவரும் விரும்புகிறோம். நாம் பேசுவதைக் கணினியே தவறு இல்லாமல் எழுதவேண்டும்... நாம் அதில் தட்டச்சு செய்வதை அதுவே பேச்சாக மாற்றவேண்டும்! ஒரு மொழியில் பேசினால் அல்லது எழுதினால், அதை மற்றொரு மொழியில் மொழிபெயர்த்துத் தரவேண்டும். ஒரு புத்தகத்தைப் படித்து, புரிந்துகொண்டு, அதன் சுருக்கத்தைத் தரவேண்டும்!

இதுபோன்ற வசதிகளைக் கணினிவாயிலாக நாம் பெறவேண்டும் என்றால்.... நமக்கு உள்ள மொழி அறிவை அதற்கு அளிக்கவேண்டும்! இங்கு நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான ஒன்று... மனிதமூளைக்கு உள்ள இயற்கைமொழித்திறன் கணினிக்குக் கிடையாது. கருத்தாடல் நடைபெறுகிற புறச் சூழல், பேசப்படுகிற பொருள் ஆகியவற்றை எல்லாம் இப்போது கணினிக்கு நம்மால் கொடுக்க இயலாது.

இந்தச் சூழலில்... தனக்குக் கொடுக்கப்படுகிற விதிகளின் அடிப்படையில் அமைந்த தொடர்களைத்தான் கணினியால் புரிந்துகொள்ளமுடியும்! ! மாறாக, நாம் மேற்கூறிய (மனிதமூளையின்)''பிழைதிருத்தப் பணிகளை'' கணினியும் மேற்கொண்டு, தனக்குமுன் வைக்கப்படுகிற விதிகளுக்கு அப்பாற்பட்ட தவறான தொடர்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு! விதி என்றால் விதி! முழுக்க முழுக்கக் கணித அடிப்படையில் இயங்குகிற ஒன்றே கணினி! எனவே விதிகளில் தவறுகள் இருந்தால், அவற்றை நம் மூளை திருத்திக்கொண்டு, புரிந்துகொள்வதுபோல, கணினியும் திருத்திக்கொண்டு, பொருண்மையைப் புரிந்துகொள்ளும் என்று நினைப்பது தவறானது ! இதுதான் புறவய உண்மை!

எனவே இன்றைய கணினி உலகில் முறையாக... தமிழின் கட்டமைப்பை ... இலக்கண விதிகளை ... முறையாகக் கணினிக்குக் கற்றுக் கொடுக்கவேண்டியது இன்று தமிழ் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான பணியாகும்! எனவே இந்த இலக்கண விதிகளைச் சரியாக நாம் புரிந்துகொள்ளவில்லை என்றாலோ அல்லது தவறாகக் கணினிக்குக் கொடுத்தாலோ... கணினி தனது மொழிச்செயல்பாடுகளில் முன்னேறமுடியாது! தமிழைப் புரிந்துகொண்டு... நமக்கு உதவியாக ... கணினியால் செயல்படமுடியாது!

எனவே இன்றைய எழுத்துத்தமிழின் தரப்படுத்தம் மிக மிக முக்கியமான ஒரு பணியாகும்! ''நான் எப்படி வேண்டும் என்றாலும் பேசுவேன், எழுதுவேன். இருந்தாலும் அதைக் கேட்பவர்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு, பொருண்மையைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று கூறுவது சரி இல்லை! இது ஒரு விதண்டாவாதமே ஆகும்!

நாமும் முறையாகத் தமிழைப் பயன்படுத்துவோம் .. (மாணவர்களுக்கும்) கணினிக்கும் முறையாகத் தமிழைக் கற்றுக்கொடுப்போம்! இதுவே தொன்மையும் தொடர்ச்சியும் வளர்ச்சியும் உடைய தமிழ்மொழியை அடுத்த உயர்கட்டத்திற்கு வளர்த்தெடுத்துச் செல்லும் பாதையாகும்!

தமிழைத் தமிழாக எழுதுங்கள்! ஆங்கிலத்தை ஆங்கிலமாக எழுதுங்கள்!

 

சந்தி , இலக்கண விதிகள் ஒருபுறம் இருக்கட்டும். எனது வினா ... தமிழகத்திலுள்ள மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் .... தமிழோ அல்லது ஆங்கிலமோ... எதுவாக இருந்தாலும்.... அந்த மொழியில் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் எழுதமுடியாதா? அதுவும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிற விளம்பரப் பலகைகள், அறிவிப்புகள் போன்றவற்றில் தவறு இல்லாமல் மொழியைப் பயன்படுத்தமுடியாதா? அதற்கான கருத்துரைகளை வழங்கும் ஆசிரியர்கள் இருக்கமாட்டார்களா? ஆங்கிலமொழியைத் தவறு இல்லாமல் கையாளவேண்டுமென்று நினைக்கிற நிறுவனத்தார்கள்... தமிழ்மொழியைக் கையாளுவதில்மட்டும்.. ஏன் இவ்வாறு பொறுப்பு இல்லாமல் செயல்படுகிறார்கள்? தமிழ் என்றால் ஒரு இளக்காரம் இவர்களுக்கு என்பதுதான் எனது கருத்து. இந்த அலட்சியப்போக்கு கைவிடப்படவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஆங்கிலத்தை ஆங்கிலமாக எழுதுங்கள். அதுபோலத் தமிழைத் தமிழாக எழுதுங்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India