வியாழன், 8 ஜூலை, 2021

ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவியலா?

 ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவியலா?

---------------------------------------------------------------------------------------------------------
இன்று ( ஜூலை 7, 2016) தமிழ் 'தி இந்துவில்' ஒரு செய்தி! தமிழ்வழி பொறியியல் படிப்பில் 1257 இடங்கள் காலி! 121 பேர்மட்டுமே இதுவரை சேர்ந்துள்ளனர். அதற்குக் கூறப்பட்டுள்ள காரணம் ..... '' தனியார் துறையில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால், தமிழ்வழிப்பிரிவில் சேர மாணவர் தயக்கம் காட்டுகின்றனர்.. தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ வேலைவாய்ப்புகள் குறைவு. வேலைக்குத் தேர்வுசெய்யப்பட்டாலும் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. படித்து முடிக்கும் அனைவர்க்கும் எப்படி அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்? அரசு வேலைவாய்ப்பை மட்டுமே நம்பி, தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேரமுடியுமா என்று மாணவர்கள் கேட்கின்றனர்''
எனக்குள்ள ஐயங்கள்.....
1) தமிழில் படித்தாலும், ஆங்கிலத்திலும் படித்தாலும், பொறியியல் அறிவு ஒன்றுதானே? ஆங்கிலத்தில் அமைந்துள்ள பொறியியல் பாடங்கள் வேறு... தமிழில் அமைந்துள்ள பொறியியல் பாடங்கள் வேறா? எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை ...
2) சரி. அயல்நாட்டு நிறுவனங்களில் வேலைபார்க்க ஆங்கில அறிவு தேவை என்று வைத்துக்கொள்வோம். ஆங்கிலத்தை - ஒரு மொழியாக - சிறப்பாக மாணவர்கள் கற்றுக்கொள்ளலாமே! அறிவு வேறு.... அறிவைப் பெறுகின்ற மொழி வேறு. ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவா? அறிவைத் தாய்மொழியில் பெற்றுவிட்டு, அந்த அறிவை ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தத் தேவையான English for Technology என்று சிறப்பு ஆங்கிலத்தை நன்றாகக் கற்றுக்கொள்ளலாமே!
3) ஆங்கிலத்தில் படித்துவிட்டு, ஜெர்மனியில் அல்லது பிரான்ஸில் வேலைபார்க்கவேண்டிய ஒரு சூழலில், ஒருவர் என்ன செய்கிறார்? அங்கெல்லாம் அவர்கள் நாட்டு மொழியில்தானே வேலை நடைபெறுகிறது. அங்கு சென்றபின்னர், அந்த மொழியைக் கற்றுக்கொள்ளவில்லையா?
4) மொழிக்கல்விக்கும் பாடங்களைக் கற்றுக்கொளவதற்கும் உள்ள வேறுபாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாத காரணத்தால்தானே இதுபோன்ற மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன? தாய்மொழி அல்லாத தேவைப்படுகிற பிற மொழிகளை மொழிக்கல்வியில் பெறுமுடியாதா?
5) சாம்ஸ்கி கூறியுள்ளதுபோல ( Manufcturing consent) , ஆங்கிலம்பற்றிய ஒரு தவறான எண்ணத்தை - ஆங்கிலம் இருந்தால்தான் வேலை அல்லது அறிவு என்ற மூடநம்பிக்கையை - மக்களிடம் உருவாக்கி வைத்துவிட்டு, அதனடிப்படையில் மக்கள் அப்படி விரும்புகிறார்கள் என்று கூறுவது சரியா?
6) ஆங்கிலத்தையோ அல்லது வேறு எந்த மொழியையோ மொழியியல் பின்னணியில் மிகக் குறைந்த காலத்தில் கற்றுக்கொள்ளலாம். அதற்கான பல வழிமுறைகள் மொழிபயிற்றல் என்ற செயற்படுத்த மொழியியலில் உருவாக்கப்பட்டுள்ளன.' ஆடத் தெரியாதவளுக்குத் தெரு கோணல்' என்ற பழமொழிபோல, பயிற்றுமொழிக்கும் மொழிக்கல்விக்கும் உடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் ... ஆங்கிலத்தில் பாட அறிவைப் பெறவில்லையென்றால், அறிவே இருக்காது... வேலை வாய்ப்பே இருக்காது என்று நினைப்பது சரியா'
இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அகற்றாமல், தமிழகத்தில் தமிழ் வளர்ச்சியை - தமிழ்ப் பரவலை - ஏற்படுத்துவது மிகக் கடினம்.
மூன்று மாதங்களில் அடிப்படை ஆங்கிலத்தையும் அடுத்துச் சில காலங்களில் உயர்நிலை ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுக்கமுடியும் ... தேவைப்பட்டால்! எனவே மாயைகளில் ... மூடநம்பிக்கைகளில் நாம் வாழக்கூடாது! மொழி ஏகாதிபத்தியத்தை அடியோடு ஒழிக்கவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India