ஆணவக்கொலை . . . தலீத் மக்களுக்கும் மேல்சாதியினர்க்கு இடையில் மட்டும்தானா? தலீத் மக்களிடையே இல்லையா?
-------------------------------------------------------------------------
மேல்சாதிகளின் குடும்பங்களைச் சார்ந்த பெண்களை, தலீத் சாதியினரின் ஆண்கள் காதலித்துத் திருமணம் செய்வதால்மட்டும் ஆணவக்கொலை நடக்கிறதா? தலீத் மக்களிடையேகூட பிரிவுகள் இருக்கின்றன; அவர்களிடையேயும் 'ஆணவக்கொலை' நடைபெறுகிறதே, அதை யாரும் கேள்விக்கு உட்படுத்தமாட்டீர்களா என்று சில நண்பர்கள் முகநூலில் பதிவு இட்டிருந்தார்கள்! உண்மைதான்! அதையும் நாம் கண்டிக்கவேண்டும்; எதிர்க்கவேண்டும். அதில் ஐயமே கூடாது!
இங்குத் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான ஒன்று மட்டுமல்ல; இரு குடும்பங்களுக்கு இடையிலான ஒன்று! மணமகன், மணமகள் இருவரின் முடிவு மட்டுமல்ல இங்கு! இரு குடும்பங்களின் முடிவாகவும் இருக்கின்றன. இரு குடும்பங்களுக்கு இடையே உருவாக்கப்படும் ஒரு உறவாகவும் பார்க்கப்படுகிறது! ஆனால் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் திருமணம் செய்யும் இருவரின் முடிவாகவே பெரும்பாலும் நீடிக்கிறது. அங்கு இருவரின் வர்க்க நிலை கணக்கில் கொள்ளப்படலாம். மிகப் பெரிய பன்னாட்டு முதலாளிகளின் குடும்பம், அங்குள்ள சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மணமக்களின் இனம், நாடு போன்றவற்றையெல்லாம் வர்க்கத் தகுதி பின்னுக்குத் தள்ளிவிடும்.
இங்கும் வர்க்கநிலையைமட்டும் கணக்கில் கொள்ளும் 'உயர்வர்க்கக் குடும்பங்கள்' இருக்கின்றன! அக்குடும்பத்தினர் சாதி, இனம், நாடு தாண்டியும் திருமண உறவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.
திரைப்பட நாயகர்கள், நாயகிகள்கூட சாதி, மதங்களைவிட 'செல்வநிலையையே' கணக்கில் கொள்கிறார்கள்!
ஆனால் கிராமப்புறங்களில் . . . முதலாளித்துவம் முழுமையாக வளர்ந்து நீடிக்காத இடங்களில் . . . திருமணங்களில் முதலில் 'சாதியே' கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால் அத்துடன் 'வர்க்க நிலையும்' கணக்கில் கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் எனக்குத் தெரிந்து சில பணக்காரக் குடும்பங்களின் பெண்கள், தங்கள் சாதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளிகளை அல்லது வேலையாட்களைக் காதலித்துத் திருமணம் செய்வதை அக்குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதில்லை. அதனடிப்படையில் ஏழை மணமகன்களை மட்டுமல்ல, தங்கள் (மண) மகள்களையே வெட்டிச் சாய்த்த நிகழ்ச்சிகள் உண்டு! இது தொடர்ந்துகொண்டும் இருக்கிறது! மறுக்கமுடியாது!
அதுபோன்று, தலீத் மக்களிடையேயும் சில பிரிவுகள் நீடிக்கின்றன. ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவர், மற்றொரு பிரிவைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்வதில் அங்கும் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் இது மிகச் சிறுபான்மை! அதற்காக இந்த 'வன்கொடுமையைக்' கண்டிக்கக்கூடாது என்பது இல்லை. உறுதியாகக் கண்டிக்கவேண்டும். எதிர்க்கவேண்டும்! இதில் ஐயமே இல்லை!
ஆங்காங்கே மிகச் சிறிய அளவில் இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் இடையேயும் இப்பிரச்சினை தோன்றி நீடித்து, கொலைகளிலும் முடிகிறது. அதையும் நாம் எதிர்க்கவேண்டும். ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களை மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்வதை உறுதியாக எதிர்க்கவேண்டும்!
ஆனால் . . . ஒரு பெரும் மக்கள் தொகுதியையே 'தீண்டத்தகாதவர்கள்' என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒதுக்கிவைத்து, ஊருக்குவெளியே 'குடியிருக்கச்செய்து' , 'அவர்கள் உடலைக்கூடத் தொடக்கூடாது என்று கூறி, பல்வேறு வகையான ஒடுக்குமுறைகளை அவர்கள்மீது ஏவிவிடுகிற 'மேல்சாதிகளைச் சேர்ந்த உயர்வர்க்கங்களின் ' 'வன்கொடுமையைக் ' கண்டிக்காமல் இருக்கமுடியாது! அந்தப் பலவகையான சாதிய ஒடுக்குமுறைகளில் ஒன்றுதான் இந்தக் காதலையொட்டிய 'ஆணவக்கொலை'! ஒருவரைச் 'சாதி' 'வர்க்கம்' என்று இரண்டு அடிப்படைகளிலும் இச்சமுதாயம் பார்க்கிறது! இதுதான் உண்மை!
சாதிக்குள் உயர் வர்க்கம் - ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்! காதலர்களின் குடும்பங்கள் முதலில் சாதியைக் கணக்கில் கொள்ளும்! அதிலேயே பிரச்சினை என்றால் திருமணம் எதிர்க்கப்படும்! அவ்வாறு இல்லாமல் சாதி ஒன்றுதான், ஆனால் வர்க்கம் வேறு என்றால், அப்போது வர்க்கநிலையும் கணக்கில் கொள்ளப்படும்! சாதியும் வர்க்கமும் இங்குப் பின்னிப் பிணைந்து நீடிக்கிறது. இதில் நமக்குத் தெளிவு வேண்டும்!
சாதிய அடிப்படையில் நடைபெறுகிற கொலைகளும் 'சாதிய ஆணவக்கொலைகள்தான்'! வர்க்க அடிப்படையில் நடைபெறுகிற கொலைகளும் 'வர்க்க ஆணவக்கொலைதான்'! இரண்டையுமே நாம் எதிர்க்கவேண்டும்! காதலர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவராக இருந்து, ஆனால் வேறுபட்ட வர்க்கங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் கொலைசெய்யப்பட்டால் அதுவும் 'ஆணவக்கொலைதான்'!
ஆனால் தலீத் மக்களிடையே சில பிரிவுகள் இருந்தாலும், அவர்களை அனைவரையும் ஒன்றாகத்தான் உயர்சாதியினர் 'தீண்டத் தகாதவர்களாகப்' பார்க்கிறார்கள்! இதுதானே உண்மை! திருமண உறவில்மட்டுமா தலீத் மக்கள் கொல்லப்படுகிறார்கள்? ஒடுக்கப்படுகிறார்கள்? இந்தச் சூழலில் 'தலீத்' என்பதற்காகவே காதலர்கள் கொலைசெய்யப்படுவதை 'ஆணவக்கொலை' என்று கண்டிப்பதுதானே உண்மையான ஒரு ஜனநாயகவாதியின் கடமையாக இருக்கமுடியும்?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக