தேர்தல் அரசியலும் சாதியம் தக்கவைப்பும் . . .
------------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் தற்போதைய 'தேர்தல் அரசியல்' சாதி அடிப்படையிலான ஒன்றாகத்தான் நீடிக்கிறது. குறிப்பிட்ட தொகுதியில் எந்த சாதியினர் அதிகம் என்பதை அடிப்படையாகக்கொண்டே தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தெரிவுசெய்கின்றனர். அடுத்து, அமைச்சர் பதவிகளை அளிப்பதிலும் சாதிய அடிப்படை நீடிக்கிறது. 'நாங்கள் அனைத்துச் சாதியினர்களுக்கும் ஒதுக்கீடு செய்கிறோம்' என்று இந்தக் கட்சிகள் தங்களை நியாயப்படுத்தலாம். ஆனால் அது உண்மை இல்லை!
கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளை நியமிப்பதிலும் குறிப்பிட்ட பகுதியில் எந்தச் சாதி அதிகமாக இருக்கிறது என்பதையே அடிப்படையாகக் கொள்கின்றன. ஆகவே, ஒட்டுமொத்தத்தில் 'சாதியப் பிரிவினைகள்' தக்கவைக்கப்படுகின்றன. பொருளாதாரத்தைக் கைகளில் வைத்துள்ள 'மேல்சாதியினர்களுக்கு' இது பயன்படுகிறது. வர்க்க அடிப்படையில் மக்கள் அணிசேர்வதைத் தடுக்கிறது. வர்க்க அடிப்படையில் மக்கள் அணிதிரளும் சூழல் எப்போது வருகிறதோ, அப்போதுதான் ஓரளவாவது 'மேல்சாதியினரின்' தீண்டாமை நீங்கும். தலீத் மக்களுக்குத் தனித்தொகுதி ஒதுக்குவதால்மட்டும் அவர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி இல்லாமல் போய்விடாது.
கோயில் வழிபாடுகளிலும் பெரும்பாலான இடங்களிலும் சாதிய வேறுபாடு நீடிக்கிறது. . கோயில் வழிபாடுகளில் பிராமணர்களின் ஆதிக்கத்தைப் பிற மேல்சாதியினர் ஏற்றுக்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, திருமணம், பிற சடங்குகள் ஆகியவற்றில் பிராமணர்களின் 'ஆதிக்கத்தை' இந்த மேல்சாதியினர் தாமே முன்வந்து ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கோயில்களுக்குள் நுழைய அல்லது திருவிழா கொண்டாட தலீத் மக்களை அனுமதிப்பதில்லை.
ஆக, மொத்தத்தில் அரசியல், வழிபாடு, திருமண உறவு ஆகிய மூன்றிலும் தலீத் மக்களின்மீது இந்த மேல்சாதியினர் வன்கொடுமைகளில் இறங்குகின்றனர். இந்த மூன்றிலும் சாதி வேறுபாடு என்று மறைகிறதோ அன்றுதான் தமிழ் மண்ணைப் 'பகுத்தறிவு மண்' என்று கூறமுடியும்.
சாதிய வன்கொடுமை செயல்கள் தனிமனிதர் பிரச்சினை இல்லை என்பதைத் தலீத் மக்களும் புரிந்துகொள்ளவேண்டும். கொலை உட்பட வன்முறையில் பாதிக்கப்படுகிற தலீத் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளச் சில இடங்களில் வன்முறை நடவடிக்கைகளில் இறங்கினாலும், அதுவே சாதியக் கொடுமைகளுக்குத் தீர்வு ஆகாது. மேலும் மேலும் அடித்தட்டு மக்களைப் பிரித்தாளும் மேல் வர்க்கங்களின் சூழ்ச்சிகளுக்கே அது உதவும்.
தீர்வு என்ன?
----------------------
அனைத்துச் சாதிகளிலும் இருக்கிற சமுதாய உணர்வாளர்கள் . . . சாதி எல்லையைத் தகர்த்தெறிந்து, வர்க்க அடிப்படையில் ஒன்றிணைந்து , அரசியல், பண்பாட்டுத் தளங்களில் போராடுவதுதான் தலீத் மீதான வன்கொடுமைகளுக்குத் தீர்வாக அமையும். இல்லையென்றால், மேல்தட்டு வர்க்கங்கள் தங்கள் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள . . . சாதி மோதல்களை அதிகரிக்கவே முயலும்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக