ஆணவக்கொலையும் 'பகுத்தறிவு இயக்கங்களும்'!
-------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் நடைபெறும் ஆணவக்கொலைபற்றிப் பல பதிவுகளை நான் இட்டுள்ளேன். எனவே புதிதாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.
ஆனால் ஒரே ஒரு கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பகுத்தறிவு இயக்கம், சுயமரியாதை இயக்கம் , திராவிட இயக்கம் , பிராமணர் எதிர்ப்பு இயக்கம் என்று பல பெயர்களில் நடைபெற்ற போராட்டங்கள் எல்லாம் . . . பிராமணர்களுக்கு எதிரான பிரமாணர் அல்லாத மேல்சாதிகளின் (பிள்ளை, முதலியார், நாயுடு, கவுண்டர் போன்ற சாதியினர்) இயக்கங்கள்தான் என்பதை ஆணவக்கொலைகள் மீண்டும் நிலைநாட்டுகின்றன.
நிலவுடைமையாளர்களாக நீடித்த பிராமணர்கள், நிவுடைமையாளர்களாக நீடித்த மேற்குறிப்பிட்ட மேல்சாதியினர்மீது செலுத்திய பண்பாட்டு ஆதிக்கத்தை . . . தீண்டாமையை . . . எதிர்த்து இந்த மேல் சாதியினர் இயக்கங்களைக் கட்டினர். பிராமணர்களின் சாதிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள். இது தவறு இல்லை. ஆனால் இந்த மேல்சாதியினர் அன்றிலிருந்து இன்றுவரை அடிமட்ட விவசாயத் தொழிலாளிகளான தலீத் மக்களின்மீது சாதிய வன்கொடுமைக்கு எதிராக ஏன் செயல்படவில்லை? அவ்வாறு செயல்படாதது மட்டுமல்ல, தாங்களே தலீத்மக்கள்மீது சாதிய ஒடுக்குமுறையை ஏவிவிடுவது ஏன்?
தங்கள்மீது பிராமணர்கள் சாதிய ஒடுக்குமுறையைச் செலுத்தக்கூடாது, ஆனால் தாங்கள் தலீத் மக்கள்மீதான சாதியக் கொடுமையைக் கைவிடமாட்டோம் என்பதுதானே இந்த ''இயக்கத் தலைவர்களின்'' 'இலட்சியம்'?
தஙகளைப் ''பகுத்தறிவுக் கட்சிகள்'' என்று கூறிக்கொள்கிற இந்த இயக்கங்கள் சாதியக் கொடுமைக்கு எதிரானவர்கள் இல்லை . . . மாறாக, தங்கள்மீது பிராமணியர் தீண்டாமை கூடாது;
தாங்களும் நிலவுடைமையாளர்கள்தான் . . . பிராமணர்களும் நிலவுடைமையாளர்கள்தான் . . . எனவே தங்கள்மீது பிராமணர்கள் சாதிய ஆதிக்கம் கூடாது! இதுதான் இந்த மேல்சாதியினரின் 'பகுத்தறிவுக் கொள்கை'!
அதேவேளையில் தலீத்கள் விவசாயத் தொழிலாளிகள்தான் . . . எனவே அவர்கள்மீது தாங்கள் சாதிய வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்! இதுதான் இந்தப் 'பகுத்தறிவாதிகளின் கொள்கை'! இதற்கு எடுத்துக்காட்டுகள்தான் பல வருடங்களாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல வருடங்களாகப் பிராமணர் அல்லாத மேல்சாதியினர் மேற்கொள்கிற 'ஆணவக்கொலைகளாகும்'!
பொருளாதாரரீதியாகவும் சாதிய ரீதியாகவும் ஆண்டாண்டுகாலமாக ஒடுக்கப்பட்டுவருகிற தலீத் மக்கள் . . . இனியாவது தங்கள்மீதான மேல்சாதிகளின் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக . . . வர்க்க உணர்வுடன் உண்மையான சமூக இயக்கத்தைக் கட்டி. தங்களது உண்மையான விடுதலைக்காகச் செயலாற்றவேண்டும்! தமிழ்நாடு உண்மையான 'பகுத்தறிவு மண்' என்றால் , 'சுயமரியாதைக்கு முன்னுதாரணம்' என்றால் . . . தலீத்கள்மீதான மேல்சாதியினரின் வன்கொடுமை . . . ஆணவக்கொலைகள் . . . நடைபெறக்கூடாது! என்று இந்தவொரு நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் தமிழ்நாட்டைப் 'பகுத்தறிவு மண்' 'சுயமரியாதை மண்' என்று கூறமுடியும்! இல்லையென்றால் இதுபோன்ற முழக்கங்கள் எல்லாம் போலித்தனம்தான். . . ஏமாற்றுக் கலைகள்தான்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக