ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

''மகா விஷ்ணு அவதாரத்திற்கான'' அடிப்படைகள் .

 ''மகா விஷ்ணு அவதாரத்திற்கான'' அடிப்படைகள் .

-------------------------------------------------------------
நிலவும் புறக்கூறுகளிலிருந்து உண்மையைக் கண்டறிவதே அறிவியலின் அடிப்படை (Finding out the truth from the existing facts - the basis of science.)
பொருண்மை அல்லது பருப்பொருளின் பண்புக்கூறுகளே புறக்கூறுகள் ஆகும்(Facts are the properties of matter which are reflected in the mind.)
நமது மனதுக்கு வெளியே நீடித்து, நமது மனதில் பிரதிபலிக்கிற ஒன்றே பொருண்மை அல்லது பருப்பொருள்; மாறக, நமது மனம் பருப்பொருளைச் சார்ந்ததே. பருப்பொருளின் இருத்தல் நமது மனதைச் சார்ந்தது இல்லை - இதுவே பொருள்முதல்வாதம். (The matter is the one that exists outside of our mind and is reflected in our mind; on the contrary, our mind depends of the matter. The existence of matter does not depend upon of our mind - this is called materialism.)
புற உலகில் அனைத்தும் ஒன்றை ஒன்றுச் சார்ந்ததே ; தொடர்ந்து மாறிக்கொண்டு இருப்பதே. (Everything is relative and everything changes - this is the essence of dialectics.)
ஆனால் பொருள்முதல்வாதம் அனுபவவாதத்திலிருந்து மாறுபட்டது ( Materialism is different from empiricism).
அனுபவ அறிவிலிருந்து மனித மூளையால்
பெறப்படுகின்ற பகுத்தறிவை அனுபவவாதம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் பொருள்முதல்வாதம் ஏற்றுக்கொள்ளும் ( Empiricism won't accept rational knowledge; but materialism accepts rational knowledge).
இந்த மார்க்சிய மெய்ஞ்ஞானமே - அதன் அறிவுபற்றிய கோட்பாடே - அனைத்து அறிவியல் உண்மைகளுக்கும் அடிப்படை (This Marxist Philosophy - its theory of knowledge - is the basis for all scientific discoveries and scientific thoughts).
எனவேதான் பள்ளி அல்லது கல்லூரிக் கல்வி மேற்குறிப்பிட்ட அணுகுமுறையை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று நான் கூறுகிறேன்.
ஆனால் தற்போதைய கல்வியெல்லாம் , அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தனிமனிதர்களின் மூளையில் ''உதித்த'' - புற உலகைச் சார்ந்திராத - கருத்துக்கள் என்பதையே முன்னிலைப்படுத்துகிறன்றன.
இதுவே கருத்துமுதல்வாதத்தின் ஒரு வடிவமான ''ஆன்மீகத்தின்'' அடிப்படை ஆகும். இந்த ''ஆன்மீகம்தான்'' தற்போது நிலவுகிற கல்வியில் பல வகைகளில் வெளிப்படுகிறது. அதன் ஒரு வகை வெளிப்பாடே இந்த ''மகாவிஷ்ணு அவதாரம்''! கல்விமுறையில் இந்த ''ஆன்மீக அடிப்படை'' வெளியேற்றப்படும்வரை , ''மகாவிஷ்ணுக்கள்'' அவ்வப்போது வந்துகொண்டுதான் இருப்பார்கள்.

மார்க்சிய ஆய்வுமுறை

மார்க்சிய ஆய்வுமுறை 

நான் குறிப்பாக, தமிழ் இலக்கியம், மொழி, பண்பாடு, சமூகவியல் போன்ற துறைகளுக்கான மாணவர்களுக்குத் தேவையான ஆய்வுநூல்களைப் பரிந்துரைத்துள்ளேன். நான் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் எல்லோரும் தங்கள் தத்துவக் கண்ணோட்டத்தில் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள். நானும் ஒரு மார்க்சியவாதிதான். வெளிப்படையாகக் கூறுகிறேன்.

நான் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கல்வித்துறையில் பேராசிரியர்கள். சிறந்த ஆய்வாளர்கள். அவர்கள் மார்க்சிய ஆய்வுமுறைகளைப் பின்பற்றிய காரணத்தால்தான் தங்கள் துறைகளில் மிகச் சிறந்த ஆய்வுகளை முன்வைக்கமுடிந்தது. அறிவியலில்கூட ஜே டி பர்னால், ஜோசப் நீதாம் போன்றவர்கள் மிகப் பெரிய ஆய்வுகளை முன்வைத்துள்ளார்கள். சமூக இயக்கத்தோடு அறிவியலைப் பிணைத்துப் பார்த்த காரணத்தினால்தான் அவர்களால் தங்கள் துறைகளில் சாதனைபுரிய முடிந்தது.

மார்க்சியமானது பொருளாதாரம், அரசியல் என்பதைத் தாண்டி , எந்த ஒன்றையும் - இயற்கையோ சமுதாயமோ, மனமோ எது என்றாலும் சரி - புறவயமாக ஆய்வுசெய்வதற்கான ஒரு ஆய்வுமுறை. ''இயற்கையின் இயங்கியல் (Dialectics of Nature), லெனினின் ''பொருள்முதல்வாதமும் அனுபவவாதமும் ( Materialism and Empirio-criticism) ஆகிய நூல்கள் அறிவியல் ஆய்வுக்கு மிகவும் பயன்படும்.

ஆய்வு மாணவர்களுக்கு நான் பரிந்துரைக்கிற நூல்கள் இவை. இவையெல்லாம் மார்க்சிய ஆய்வுமுறைகளை ஏற்றுக்கொண்டவைதான். நான் மறுக்கவில்லை. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. மூடிமறைக்கப் போர்வைகள் தேவை இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு ஆய்வுக்கும் மார்க்சிய ஆய்வுமுறை மிகவும் பயன்படும். தாங்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த ஆய்வுமுறைகளை முன்வைக்கிற நூல்களை ஆய்வுமாணவர்களுக்குப் பரிந்துரைக்கலாம். நான் வேண்டாம் என்று கூறவில்லை.


பொருள்முதல்வாதத்தை (Materialism) இயங்கியல் (dialectics) நோக்கில் முழுமைப்படுத்தியது மார்க்சியமே என்பது எனது கருத்து. மார்க்சியத்தின் தத்துவக் கண்ணோட்டம் இயங்கியல் பொருள்முதல்வாதம் (Dialectical materialism) . ஹெகல் (இயங்கியல் கருத்துமுதல்வாதம்) முன்வைத்த இயங்கியலும் பியூர்பக் (இயங்கியலுக்கு அப்பாற்பட்ட பொருள்முதல்வாதம்) முன்வைத்த பொருள்முதல்வாதமும் மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாதத்திற்கு அடிப்படை. இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை முழுமையாக முன்வைத்தது மார்க்சியமே.

சனி, 7 செப்டம்பர், 2024

இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுடையவர்களுக்குமட்டும் . . . ''தினமணி'' கட்டுரைபற்றி!

 இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுடையவர்களுக்குமட்டும் . . . ''தினமணி'' கட்டுரைபற்றி!

------------------------------------------------------------------
சில நாள்களுக்குமுன் . . . ஆகஸ்டு 26 ஆம் தேதி ''தினமணி'' நாளிதழில் தலையங்கப் பக்கத்தில் முனைவர் கோ. விசுவநாதன் அவர்கள் (VIT University வேந்தர், முன்னாள் எம் பி) ''பொருளாதார ஆய்வு - எச்சரிக்கை மணி'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில குறிப்புக்கள்(மட்டும்) நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை என்ற நோக்கில் இப்பதிவை இடுகிறேன்.
நடுவண் அரசு இந்தாண்டுக்கான நிதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமுன் . . . ''பொருளாதார ஆய்வறிக்கையை'' நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அதனை அடிப்படையாகக்கொண்டு கட்டுரை ஆசிரியர் மேற்குறிப்பிட்ட கட்டுரையை எழுதியுள்ளார்.
1) நம் நாட்டில் 85 சதவீதத்துக்கு அதிகமான விளை நிலங்கள் 2 ஹெக்டேர் அளவிலோ அதற்குக் குறைவாகவோ இருக்கின்றன.
2) நாட்டில் வேலை வாய்ப்பில் 45 % விவசாயம் சார்ந்ததாக இருக்கிறது.
3) வேலைவாய்ப்பில் சரிபாதியை வழங்கக்கூடிய விவசாயத்தில் 85% பேர் சிறு விவசாயிகளாக இருக்கின்றார்கள்.
4) அவர்கள் விவசாயத்துக்குத் தேவையான ஆட்கள் கிடைக்காத நிலையில் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது அந்த விவசாயம் லாபகரமாக இல்லை.
5) 2000 முதல் 2010 வரை அதாவது 10 ஆண்டுகள் இந்தியாவில் 16 ஆயிரம் சதுர கி.மீ. விவசாய நிலம் விவசாயப் பயன்பாட்டுக்கு இல்லாமல் போனது.
6) அதே சமயம் 26,000 சதுர கி.மீ. விவசாயநிலம் நகரமைப்புப் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டது.
7) 2015 முதல் 2019 வரை 3 கோடி ஹெக்டேர் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிய சோக வரலாறு இங்குதான் நடந்திருக்கிறது.
8 ) நம்முடைய பொருளாதாரம் மேம்பட இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி விவசாயத்தை நாம் ஊக்கப்படுத்தவேண்டும். இரண்டாவது வழி தொழில்வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை. இதற்கு நாம் ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டும். கணிசமான அளவு இறக்குமதியைக் குறைக்கவேண்டும். இறக்குமதிக்கான அந்நிய செலவாணி மற்றும் கடன் இரண்டுமே நமக்குப் பொருளாதாரத்துக்கான முட்டுக்கட்டைகள்தான்.
மேற்குறிப்பிட்ட குறிப்புக்களைப் பார்க்கும்போது . . . இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை . . . கிராமப்புறங்களில் இன்று நீடிக்கிற சிறு விவசாயிகளை அடிப்படையாகக்கொண்ட விவசாயமும், அதன்மேல் மேலிருந்து திணிக்கப்படுகிற இயந்திரங்களால் ஏற்படுகிற நெருக்கடியும்தான் என்று ஆசிரியர் எண்ணுவதாகக் கொள்ளலாம். மேலும் பணக்கார விவசாயிகளின் வளர்ச்சிதான் இந்த நெருக்கடியைத் தீர்க்கும் என்று அவர் கருதுவதாகக் கொள்ளலாம்.
மேலும் விவசாய நிலங்கள் பல காரணங்களின் அடிப்படையில் விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறுகிறார். நகரமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் விவசாயத்திற்குப் பயன்படாமல் ஆகிக்கொண்டிருக்கிறது என்று தனது கவலையை வெளிப்படுத்துகிறார்.
அயல் நாடுகளை - ஏகாதிபத்திய நாடுகளை - சார்ந்து இருப்பதால்தான் இறக்குமதி அதிகரித்துள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ளது என்று கூறுகிறார். இதற்கு மாற்றாக அவர் கூறுகிற கருத்து . . . எடுத்துக்காட்டாக, சீனப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக சீனத் தொழிலாளிகளை இந்தியாவுக்கு ''இறக்குமதி'' செய்து, அவர்களுடைய தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறார். அவருடைய இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆனால் அவருடைய குரல் . . . கவலை . . . கிராமப்புறங்களில் விவசாய உற்பத்திமுறை பணக்கார விவசாய உற்பத்திமுறையாக மாறவேண்டும் என்பதாகும். அதற்குத் தடைகளாக இருப்பது எவை என்ற ஆய்வுக்கு அவர் செல்லவில்லை. அதுபோன்று, ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டலை நேரடியாக ஏற்றுக்கொள்ளாமல், அவர்களது தொழில்நுட்பங்களைச் சார்ந்த ஆலை உற்பத்தி அமையவேண்டும் என்று கருதுகிறார்.
மொத்தத்தில் அவருடைய ''கருத்து'' . . . இந்தியாவின் விவசாய உற்பத்திமுறை முழுமையாக மாற்றி அமைக்கப்படவேண்டும். பழைய நிலவுடைமை உற்பத்திமுறை மாற்றப்பட்டு, முதலாளித்துவ விவசாய உற்பத்திமுறை உருவாக்கப்படவேண்டும். தொழில் வளர்ச்சிக்காகவும், நகரமைப்பு வளர்ச்சி போன்றவற்றிற்காகவும் விவசாய நிலங்களை ''பலி ஆடுகளாக'' ஆக்கக்கூடாது.
அதுபோன்று இங்குள்ள தொழில் அதிபர்கள் ''ஏகாதிபத்தியத் தொழில்நுட்பங்களை'' இறக்குமதி செய்து, தொழில் உற்பத்தியை வளர்க்கவேண்டும் என்று கூறுகிறார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, ''சீனர்களின் பொருள்களை இறக்குமதி செய்வதற்குப பதிலாக, சீனத் தொழிலாளிகளேயே இறக்குமதி செய்யவேண்டும் '' என்று கூறுகிறார்.
மொத்தத்தில் இக்கட்டுரை இன்றைய அரைநிலவுடைமை உற்பத்திமுறை முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்ற குரலைப் பிரதிபலிக்கிறது. அப்போதுதான் விவசாய உற்பத்தி வளர்ச்சியடையும். நவீன இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தவேண்டும். இதற்குத் தற்போதைய தடை . . . சிறு விவசாயிகளின் விவசாய உற்பத்திமுறையே ஆகும்.
அதுபோன்று, தொழில் உற்பத்தியில் நேரடியான தேசிய முதலாளித்துவம் தற்போதைய ஏகாதிபத்தியச் சூழலில் நடைமுறைக்கு உதவாது; மாறாக, ஏகாதிபத்தியத் தொழில்நுட்பத்தைச் சார்ந்த ஒரு முதலாளித்துவ வளர்ச்சி - ''தரகு முதலாளித்துவ வளர்ச்சி - வளர வேண்டும் என்பதே அடிநாதமாகத் தெரிகிறது. தற்போது நடுவண் அரசும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு, இந்தியாவில் ஏகாதிபத்திய நாடுகளின் ''முதலீடுகளை'' சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இக்கட்டுரையில் நான் பார்ப்பது . . . இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நெருக்கடிகளை மறைமுகமாக, அதேவேளையில் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. அது உண்மையானது. ஆனால் அதற்கு அவர் முன்வைக்கிற மாற்று வழிமுறைகள் அவரது ''அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்'' அடிப்படையில் அமைந்துள்ளன என்பதில் ஐயம் இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டிருக்கும் என்பதை இங்கு மனதில் கொள்ளவேண்டும்.
சரியான மாற்றுவழி . . . கிராமப்புறங்களில் விவசாய உற்பத்திமுறை மாற்றி அமைக்கப்படவேண்டும்; நவீன உற்பத்திமுறை கொண்டுவரப்படவேண்டும். அதேவேளையில் அதனால் வேலை வாய்ப்புகளை இழக்கிற மக்களுக்கு நகர்ப்புறத் தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பு அளிக்கவேண்டும். இந்த நகர்புறத் தொழில்வளர்ச்சி ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்த தொழில்வளர்ச்சியாக அமையாமல் உள்நாட்டு முதலீட்டாலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தாலும் வளர்கின்ற ஒன்றாக இருக்கவேண்டும்.
உள்நாட்டுத் தொழில்முதலீட்டின் வளர்ச்சி . . . இந்திய விவசாயத்தின் உற்பத்தி வளர்ச்சியைச் சார்ந்த ஒன்று. மாறாக, விவசாய உற்பத்தி பாதிக்கப்பட , பாதிக்கப்பட இந்தியத் தொழில் வளர்ச்சி அந்நிய முதலீட்டைச் சார்ந்த - தரகு முதலாளித்துவமாவே- மேலும் மேலும் வளரும்.
இக்கட்டுரை எனக்கு ஆர்வத்தை அளித்தற்கு ஒரு காரணம் . . . இதுபற்றி இங்குள்ள அரசியல் கட்சிகள் அதுபற்றிக் கவலைப்படாமல் . . . மேற்குறிப்பிட்ட உண்மையான பொருளாதார நெருக்கடிகளை மக்கள் கவனத்திற்குக் கொண்டுசெல்லாமல் . . . போலி வாக்குறுதிகள், இலவசங்களை முன்னிலைப்படுத்தி . . . அரசியல் நடத்திக்கொண்டிருக்கிற ஒரு நேரத்தில் . . . உண்மையான பொருளாதார நெருக்கடிகளைக் கோடிட்டுக் காட்டுவதாலே ஆகும். ஆனால் இந்தக் கட்டுரையை ''இன்றைய அரசியல் தலைவர்கள்'' எத்தனை பேர்கள் படித்திருப்பார்கள்?
எல்லா உணர்ச்சிகளும்:
Dhanalakshmi Giri, Sidhambaram Voc மற்றும் 4 பேர்

பள்ளிகளில் ''மகா விஷ்ணு'' அவதாரம்!

 

பள்ளிகளில் ''மகா விஷ்ணு'' அவதாரம்!

------------------------------------------------------

''இறைவணக்கத்துடன்தான்'' அனைத்துப் பள்ளிகளும் தங்கள் பணிகளைத் ''தொடங்குகின்றன''.

'' பாவம்'' ''புண்ணியம்'' போன்ற கருத்துக்களை அடிப்படையாகக்கொண்ட பல ''இலக்கியங்கள்'' ''புராணங்கள்'' ''நாட்டுப்புறக் கதைகள்'' பள்ளிப்பாடங்களில் இடம் பெறுகின்றன. ''பாவம் செய்தவன் பல்லக்கு தூக்குவான்; புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பயணம் செய்வான்'' என்பதை முன்வைக்கும் ''அற இலக்கியங்களே'' கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ''

''பெண்ணடிமை'' ''ஆண் ஆதிக்கம்'' போன்ற கருத்துக்களைப் போதிக்கும் பாடங்கள் இடம் பெறுகின்றன. கணவன் தன்னைப் பிரிந்து சென்றாலும், அவன் வருகைக்காக வாசலில் காத்திருக்கவேண்டும் ; காலையில் எழுந்தவுடன் கணவனின் கால்களைத் தொழுது தன் ''பணிகளைத்'' தொடங்கவேண்டும் போன்ற பெண் அடிமைக் கருத்துக்களைக் கூறும் இலக்கியங்களே ''பாராட்டப்படுகின்றன''.

''ஆன்மீகத்தை'' அடிப்படையாகக் கொண்ட ''பாடங்களுக்குப்'' பஞ்சமே இல்லை!

ஒட்டுமொத்தத்தில் ''இயற்கையை இயக்குவது'' இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியே என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்றைய கல்வியில் ''கற்றுக்கொடுக்கப்படுகிறது''!

இதன் ஒரு பகுதியே இன்றைய ''மகாவிஷ்ணுவின்'' ஒரு அவதாரம்! இதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை! ஏதோ இவர் ஒரு ''புதிய'' அவதாரம் என்று நினைக்கவேண்டாம். ''மகா விஷ்ணு'' பல நிலைகளில் பள்ளிக்கல்வியில் "நீடிக்கிறார் " என்பதே உண்மை.

 

''அரசியல் அற்ற'' ஆன்மீகம் கிடையாது. ஆன்மீகத்திற்கு ''அரசியல்'' உண்டு. அந்த ''அரசியல்'' பல நேரங்களில் இலைமறைவு காயாக இருக்கும். சில நேரங்களில் வெளிப்படையான ''மகாவிஷ்ணுவாக'' தோன்றும். இவ்வாறு வெளிப்படையாகத் தோன்றுவதற்கு அடிப்படையே ''பள்ளிக்கல்வியில் நீடிக்கிற ஆன்மீகம்தான்'' என்பதே நான் கூற விரும்புவது ஆகும்.

''ஒருவனே தேவன்'' என்பதும் ''ஆன்மீகம்தான்''! ''மத வெறி'' ''மத நல்லிணக்கம்'' ''மதச் சார்பின்மை'' போன்ற எல்லாமுமே ''ஆன்மீக அரசியலின் '' பல்வேறு வடிவங்கள்தான். சூழலைப்பொறுத்து ஒவ்வொரு வடிவமும் ''முன்னிலைப்படுத்தப்படும்''. நான் தற்போதைய ''மகாவிஷ்ணு அவதாரத்தைக் '' கண்டிக்கக்கூடாது என்று கூறவரவில்லை. மாறாக, இந்த ''மாக விஷ்ணு அவதாரத்திற்கு'' அடிப்படையே பள்ளிக்கல்வியில் நீடிக்கிற ''ஆன்மீகமே'' என்றுதான் கூறவந்துள்ளேன். அதுதான் ''ஆணிவேர்''. அதிலிருந்து அவ்வப்போது வெளிப்படையாகத் தோன்றி நிற்பதுதான் இந்த ''மகாவிஷ்ணு''!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஆன்மீகத்திற்கு அரசியல் இருப்பதுபோல, ஆன்மீக எதிர்ப்பிற்கும் உறுதியாக அரசியல் உண்டு. தங்களுடைய கண்ணோட்டத்தின் அடிப்படையில் ''ஆன்மீக உணர்வு மனிதனை நெறிப்படுத்த'' இன்றியமைதாதது. என்னுடைய கண்ணோட்டத்தின்படி ''ஆன்மீக உணர்வு '' அடிப்படையில் அறிவியலுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தடையானது என்பதாகும். இதுபற்றிய விவாதத்தை இங்குத் தொடங்க நான் விரும்பவில்லை. ஆன்மீகத்தைப் பள்ளிக்கல்வியில் அறிமுகப்படுத்தும்போது, ஆன்மீகத்திற்கு மாற்றான பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தையும் அறிமுகப்படுத்தலாமே. எது சரியானது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே. பொருள்முதல்வாதத் தத்துவத்தைமட்டும் பள்ளிகளுக்குள் நுழையவிடாமல் ஏன் தடுக்கவேண்டும்?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India