திங்கள், 15 ஜூலை, 2024

குறிப்புவினைபற்றி மேலும் ஒரு ஐயம் . . .

 குறிப்புவினைபற்றி மேலும் ஒரு ஐயம் . . .

----------------------------------------------------------------------
உண்மை --> உண் + மை --> உள் + மை
மென்மை --> மென் + மை --> மெல் + மை
சிறுமை --> சிறு + மை
பெருமை --> பெரு + மை
வெண்மை --> வெண் + மை --> வெள் + மை
பன்மை --> பன் + மை --> பல் + மை
இளமை --> இள + மை
நன்மை --> நன் + மை --> நல் + மை
மேற்கூறியவற்றில் உள்ள அடிச்சொல்கள் எல்லாம் குறிப்பு வினைகள் என்று கூறலாமா?
'மை' விகுதி குறிப்பு வினையடியுடன் மட்டுமல்லாமல் தெரிநிலை வினைகளுடனும் இணைந்து பெயர்கள் ஆகின்றன.
பொறுமை --> பொறு + மை
ஆண்மை --> ஆண் + மை --> ஆள் + மை
பொய்மை --> பொய் + மை
'மை' விகுதி பெயர்ச்சொல்களோடும் இணைகிறது.
தலைமை --> தலை + மை
குடிமை --> குடி + மை.
இறைமை --> இறை + மை
தாய்மை --> தாய் + மை
வாய்மை --> வாய் + மை
மேற்கூறியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது . . .
கீழ்க்கண்டவற்றில் உள்ள அடிச்சொல்கள் - மேல், கீழ் என்பவை - குறிப்புவினைகளா என்பதில் எனக்கு ஐயம்! நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். (மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டிக்களில் தவறுகள் இருந்தாலும் சுட்டிக்காட்டவும்)
மேன்மை --> மேன் + மை --> மேல் + மை
கீழ்மை --> கீழ் + மை
அதாவது, 'மேல்' 'கீழ்' என்பவற்றின் இலக்கண வகைப்பாடுகள்பற்றித் தெளிவு (எனக்குத்) தேவைப்படுகிறது.

இதுபோன்ற பல ஐயங்களுக்கு நாம்தான் தொல்காப்பியம், நன்னூல் போன்ற தமிழ் இலக்கணநூல்கள், மொழியியல் ஆகியவற்றின் உதவியோடு விடை ''காணவேண்டும்''. அவற்றில் நமது சில ஐயங்களுக்கு நேரடியான விடைகள் இல்லாமல் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கின்றன. இதுதான் இலக்கண ஆய்வு வளர்ச்சி. நேரடியான விடைகள் அவற்றில் இருந்தால் நமக்குச் சிக்கலே இல்லை. ஆனால் அவ்வாறு இல்லை.
இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அன்று தேவையான மொழித்தரவுகள் இலக்கண ஆசிரியர்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது அல்லது அவர்களது கண்களில் சிக்காமல் இருந்திருக்கலாம். இரண்டு, மொழி தொடர்ந்து வளர்ச்சியடைவதால் புதிய கூறுகள் தோன்றி நிலவலாம். மூன்றாவதாகவும் ஒரு காரணம் கூறலாம். நமது அறிவுக்கு இலக்கண ஆசிரியர்களின் நுட்பங்கள் தெரியாமல் இருக்கலாம். போராடித் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு வளரும் மொழிக்கு இலக்கண ஆய்வு தொடர்ந்து வளர்ச்சியடைந்துகொண்டிருக்கவேண்டும். பிற துறை அறிவியல் போன்று மொழி தொடர்பான இலக்கண அறிவியலும் தொடர்ந்து வளரவேண்டும். வளர்க்கப்படவேண்டும். நண்பர்கள் இக்கருத்தில் வேறுபடலாம். ஆனால் இந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். மொழி அறிவியல் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி கிடையாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India