சனி, 9 டிசம்பர், 2023

சிறப்புப் பட்டிமன்றம் . . . எரிந்த கட்சி ! எரியாத கட்சி லாவணி!

 சிறப்புப் பட்டிமன்றம் . . . எரிந்த கட்சி ! எரியாத கட்சி லாவணி!

----------------------------------------------------------------------------------------------------
சென்னை வெள்ளத்திற்கு என்ன காரணம்?
மழையின் அளவு அதிகமா? குறைவா?
கடல் மழைத்தண்ணீரை உள்வாங்கியதா? இல்லையா?
''எங்கள் ஆட்சியிலும்தான் கடல் இருந்தது!''
''பௌர்ணமியில்மட்டுந்தான் கடல் வெளிநீரை உள்வாங்காது . . . இப்போது பௌர்ணமி இல்லையே!''
போன்ற ''அறிவியல் உண்மைகளையெல்லாம்'' விவாதிக்கிறார்கள்!
தொலைக்காட்சிகளைப் பார்த்தாலே . . . இந்தப் பட்டிமன்றந்தான் நடந்துகொண்டிருக்கிறது!
மக்கள் என்ன அவ்வளவு பெரிய முட்டாள்களா?
அதே நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் அலைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது!
எனக்குத் தெரிந்து 50 ஆண்டுகளுக்குமுன்பு சென்னையின் புறப்பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கிடையாது. பன்னாட்டுக் கணினி நிறுவனங்கள் கிடையாது! புதிய புதிய ''நகர்கள்'' கிடையாது! கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கிடையாது! சென்னையில் எல் ஐ சி கட்டிடம் ஒன்றுதான் அடுக்குமாடிக் கட்டிடம்! சென்னை என்பதற்கு அப்போதெல்லாம் அடையாளம் எல் ஐ சி தான்!
மேற்கூறிய எல்லாம் வளர்ச்சிதானே! அவை தேவை இல்லையா என்று யாரும் கேட்கலாம்! உறுதியாகத் தேவைதான்! யாரும் வளர்ச்சியை வேண்டாம் என்று கூறமாட்டார்கள்!
ஆனால் மழைபெய்து தண்ணீர் ஓடும் பகுதியை அல்லது தண்ணீரை உள்வாங்கிக்கொள்ளும் நிலப்பகுதிக்கு . . . எவ்வித மாற்றும் இல்லாமல் அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாற்றினால் . . . மழை நீர் எங்கு செல்லமுடியும்? முடிந்த அளவு ஆங்காங்கே உள்ள ஏரிகளுக்குச் செல்லலாம்.
ஏரி நிரம்பிவிட்டால் . . . உபரி நீர் எங்கு செல்லும்? குளங்களில் புக வேண்டிய அது குடியிருப்புப் பகுதிகளுக்குள்தான் புகும்! ஏரியின் கரையும் உடையும். புதிய ''நகர்கள்'' வெள்ளத்தில் மிதக்கவே செய்யும்!
மழைத் தண்ணீர் வரத்து அல்லது தண்ணீர் போக்கு - அதாவது ''தண்ணீருக்கான போக்குவரத்துச் சாலைகள்'' இப்போது கிடையாது!
இறுதியில் தண்ணீர் பிடிப்புப் பகுதியும் கிடையாது! அதாவது தண்ணீருக்கான ''குடியிருப்புப் பகுதியும் '' கிடையாது!
இருக்கிற சிறு சிறு குட்டைகள் எல்லாம் பலமாடிக் கட்டிடங்களாக மாறியிருக்கின்றன! கல்லூரிகளாகவும், பல்கலைக்கழகங்கள் ஆகவும் மாறியிருக்கின்றன.
மாற்றமும் வளர்ச்சியும் தேவைதான்! ஆனால் மேற்குறிய தேவைகளை எல்லாம் ஒரு கட்டிடத்திற்கு அனுமதி கொடுக்கும்போது கவனிக்கவேண்டாமா?
சென்னைக்குள்ளும் ஏராளமான பலமாடிக் கட்டிடங்கள்! அவற்றின் தண்ணீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் வசதி இவைபற்றியெல்லாம் கணக்கில் கொள்ளாமல் . . . ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதும் அதனால் அரசியல்வாதிகள் தங்கள் பைகளை நிரப்புவதில்மட்டுமே கவனம் கடந்த 50 ஆண்டுகளாகச் செலுத்தியிருக்கின்றனர் என்பதே உண்மை! இதில் இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்ற வேறுபாடே கிடையாது! கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ''சமத்துவக் கொள்கை''!
திட்டமிட்ட நகர வளர்ச்சி என்பது இங்கே கிடையவே கிடையாது! மிக மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ''கொடுப்பதைக் கொடுத்து'', ''வாங்க வேண்டிய'' அனுமதிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதுபோல்தான் ''கல்வித் தந்தைகளும்'' செய்கிறார்கள்! இனி என்ன செய்யமுடியும்? வணிக நிறுவனங்களின் பல மாடிக் கட்டிடங்களை இடித்துத் தள்ளமுடியுமா? பல்கலைக்கழகக் கட்டிடங்களை இடிக்கமுடியுமா? புதிது புதிதாகத் தோன்றியுள்ள ''நகர்களை'' அழிக்கமுடியுமா? இதுவெல்லாம் இனி நடக்காத காரியம்! அல்லது ''சர்வரோக நிவாரணியாகக்'' கருதப்படுகிற ''ஐ ஐ டிகள்'' இதற்கு மாற்றுவழிகளைக் கூறமுடியுமா?
ஆகவே ஒரே வழி . . . ஆண்டுக்கு ஒருதடவை மக்கள் இந்த இன்னல்களைத் தாங்கிக்கொள்ள வேண்டியது தான்! இந்த 50 ஆண்டுகால மாற்றங்களுக்குப் பொறுப்பான இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகந்தான்! அவர்களுக்கு தெரியும் இந்த மழைப் பாதிப்பிற்கு . . . வெள்ளப் பாதிப்பிற்கு மாற்றாக இன்று ஒன்றும் செய்யமுடியாது என்று!
ஆகவே, மழைத் தண்ணீரின் ''போக்குவரத்துக்கும்'' ''குடியிருப்புக்கும்'' ஏதாவது மாற்றுவழி உண்டா என்பதுபற்றித் தொழில்நுட்ப அடிப்படையில் சிந்தித்துப் பார்ப்பதைவிட்டு விட்டு . . . ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருப்பது அவர்கள் தங்களது ''அரசியல் பகையைத்'' தீர்த்துக்கொள்ள உதவுமே தவிர . . . உண்மையான பிரச்சினைக்குச் சரியான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுவதற்கு கொஞ்சங்கூட உதவாது!
மாநில அரசு தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்கிற நிவாரணப் பணிகளைக் குறைத்துப்பார்ப்பதோ அல்லது கிண்டல் அடிப்பதோ எனது நோக்கம் இல்லை! எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் இதைச் செய்துதான் ஆகவேண்டும். அதற்கு முழு ஆதரவும் தரவேண்டும். இதில் ஐயம் இல்லை!
சுனாமி போன்ற இயற்கைச் சீற்றம் பல தலைமுறைகளுக்கு ஒரு தடவைதான் வருகிறது ! ஆனால் இந்த வெள்ளப் பிரச்சினை அவ்வப்போது - சில ஆண்டுகளுக்கு ஒருமுறை - வந்துகொண்டுதானே இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதுபற்றியே எனது இந்தப் பதிவு! ''கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது '' என்பது இல்லாமல் ''கண்ணும் வேண்டும், சித்திரமும் வேண்டும்'' என்பதே எனது கருத்து!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India