வியாழன், 16 நவம்பர், 2023

தமிழ்த் தொடரியலில் (Tamil Syntax) ஆர்வம் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு

 

தமிழ்த் தொடரியலில் (Tamil Syntax) ஆர்வம் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு .---------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று மருத்துவர் ஐயா ரவீந்திரன் வெங்கடாச்சலம் அவர்களின் பதிவையொட்டி நடைபெற்ற ஒரு உரையாடலில் . . . ''தங்கையான சூர்ப்பனகை'' என்று ''ஆன'' விகுதியை ஏன் சேர்க்கவேண்டும் என்று திரு. சௌமியா நடராசன் அவர்கள் கேட்டிருந்தார்கள். அதையொட்டிய உரையாடல் கீழே. தமிழ்த்தொடரியலில் ஆர்வமுள்ளவர்களுக்காக அந்த உரையாடலை இங்குப் பதிவிடுகிறேன்.

 மருத்துவர் ஐயா ரவீந்திரன் வெங்கடாச்சலம்

-------------------------------------------------------------------

//இராவணனின் தங்கையான சூர்ப்பனகை

சூரபத்மனின் தங்கையான அசமுகி//

 திரு. சௌமியா நடராசன்

----------------------------------------------------------------------

//சிறப்பு ஒப்பீடு.

ஓர் இலக்கண ஐயம். சூரபத்மனின் தங்கையான, ராவணனின் தங்கையான... இவற்றை சூரபத்மனின் தங்கை, ராவணனின் தங்கை என்று எழுதினால் போதுமல்லவா? இப்படி சொற்களின் ஈற்றில் தேவையின்றி 'ஆன' விகுதி சேர்த்து எழுதுவது சிலருக்குப் பழகிவிட்டது.//

 மருத்துவர் ஐயா ரவீந்திரன் வெங்கடாச்சலம்

--------------------------------------------------------------------------

//ஏன் அதில் என்ன தவறு? ஆன ஆனவள் என்பன தமிழின் சொல்லுருபுகள் தானே?//

//ஆன விகுதி இல்லை. அது வேற்றுமை உருபு. உறவுகளை இராவணனுக்குத் தங்கை, இராவணனது தங்கை, இராவணனின் தங்கையான என விரித்தும் எழுதலாம் இராவணன் தங்கை எனத் தொகையாக்கியும் எழுதலாம்.//

 ந. தெய்வ சுந்தரம்

---------------------------------------------------------------------

மருத்துவர் ஐயா, 'தங்கையான' என்பது '' தங்கையானவள்'' என்ற பயனிலைத்தொடர் எனக் கருதுகிறேன். 'இராவணனின் தங்கை சூர்ப்பனகை ஆவாள்'' என்ற தொடர் சுருங்கி, 'இராவணனின் தங்கையான சூர்ப்பனகை'' என்ற பெயர்த்தொடராக மாறி அமைகிறது. ''ஆனவள்' என்பது இணைப்புவினை (link or copula verb - equivalent to English "be" verb ) எனக் கொள்ளலாம்.

''இராவணனின் தங்கை சூர்ப்பனகை ஆவாள்; சூர்ப்பனகை இன்று வந்தாள்'' என்ற இரண்டு வாக்கியங்களும் ( sentences) இணையும்போது, முதல் வாக்கியம் வாக்கியநிலையிலிருந்து பெயர்த்தொடர் (Noun Phrase) நிலைக்குச் சுருங்கி, இரண்டாவது வாக்கியத்தின் எழுவாயாக (Subject Noun phrase) அமைகிறது என்று கூறலாம் அல்லவா?

''இராமன் நேற்று வந்தான்'' என்பதைச் சுருக்கி, ''நேற்று வந்த இராமன்'' என்று அமைப்பதைப்போல, ''இராவணனின் தங்கை சூர்ப்பனகை ஆவாள்'' என்பது '' இராவணனின் தங்கையான சூர்ப்பனகை'' என்று மாறுகிறது.

இதில் ''இராவணனின் தங்கை'' என்பதில் வேற்றுமை உறவு (Casal relation) உள்ளது. ஆனால் ''தங்கை'' ''சூர்ப்பனகை'' இரண்டுக்கும் இடையில் வேற்றுமை உறவு இல்லை (non-casal relation) எனக் கருதுகிறேன்.

''இராவணனின் தங்கை சூர்ப்பனகை நேற்று வந்தாள்'' என்ற தொடரின் உருவாக்கம் . . .

[ [ {இராவணனின் தங்கை} {தங்கை சூர்ப்பனகை} ] [{நேற்று வந்தாள்}] ] என்பதில் இரண்டு வாக்கியங்கள் இணைந்துள்ளன.

1) [இராவணனின் தங்கை சூர்ப்பனகை ஆவாள்]

2) [ இராவணனின் தங்கை நேற்று வந்தாள்]

இரண்டும் வாக்கியங்களும் இணையும்போது . . .

[ [ ''இராவணனின் தங்கை {இராவணனின் தங்கை சூர்ப்பனகை ஆவாள்} ] [நேற்று வந்தாள்.''] ]

[ [ {''இராவணனின் தங்கையான சூர்ப்பனகை}] [ { நேற்று வந்தாள் } ] ]

இவ்வாறு அமையும்போது, ''தங்கையான சூர்ப்பனகை'' என்பதில் ''ஆன'' என்பது வேற்றுமை உருபு இல்லை எனக் கருதுகிறேன்.

மாறாக, ''ஆகு' / ''' என்ற வினையின் பெயரெச்ச வடிவமெனக் (grammatical category) கருதலாம். இதனுடைய இலக்கணச் செயற்பாட்டை (grammatical function) ஆங்கிலத்தில் compliment /complementizer என்று கூறுவார்கள்.

கீழே மற்றொரு 'ஆன' -க்கான எடுத்துக்காட்டு. அது வேற்றுமை உறவைக் காட்டுவதுபோலத் தெரிகிறது. ஆனாலும் இதுவும் மேலே கூறப்பட்டுள்ள ''ஆன'' மாதிரிதான் தெரிகிறது. மேலும் ஆராயவேண்டும்.

''நான் அவனுக்காகப் பேசுகிறேன்'' - இதில் -க்கு என்ற நான்காம் வேற்றுமை உருபுக்கு (Case suffix) அடுத்து ''ஆக'' என்ற பின்னொட்டு (Post-position) வருகிறது. இது பின்னொட்டாக - ஒரு இலக்கண விகுதியாக இருந்தாலும் - 'ஆன' என்ற பெயரெச்ச வடிவத்தையும் எடுக்கிறது.

'நான் அவனுக்காக இந்தச் சட்டையை எடுத்தேன்'

'இந்தச் சட்டை நான் அவனுக்காக எடுத்தது'

'இந்தச் சட்டை அவனுக்கான ஒன்று ஆகும்.'

'இந்தச் சட்டை அவனுக்கு ஆனது'

மேற்கூறிய நான்கு தொடர்களிலும் ''அவனுக்காக'' ''அவனுக்கான'' என்ற இரண்டு தொடர்களும் "for" என்ற பொருளையே தருகிறது.

'அவனுக்கு ஆனது'' என்பது 'அவனுக்கான' என்று மாறுகிறது என்று கூறலாம். இந்த நோக்கில் பார்த்தால் இங்கும் 'ஆன' என்பது'' ஆனது'' (Copula verb) என்ற வினைமுற்றின் மற்றொரு வடிவமாகத்தான் தெரிகிறது.

இந்த 'ஆகு' என்பதற்கும் மற்றொரு 'ஆகு' என்ற முதன்மை வினைக்கும் சற்று வேறுபாடு தெரிகிறது. முதல் 'ஆகு' என்பது இணைப்பு வினை ("be" copula verb) . இரண்டாவது 'ஆகு' முதல்வினை - அகராதிப்பொருள் ("to become") தரும் வினை.

''"நேற்று பேரவை உறுப்பினராக இருந்த மணி இன்று அமைச்சர் ஆனான்.'' இதில் உள்ள ''ஆ(கு) '' முதன்மை வினை.'' (Today became as a minister)

 

மற்றொரு 'ஆன' -க்கான எடுத்துக்காட்டு. அது வேற்றுமை உறவைக் காட்டுவதுபோலத் தெரிகிறது. ஆனாலும் இதுவும் மேலே கூறப்பட்டுள்ள ''ஆன'' மாதிரிதான் தெரிகிறது. மேலும் ஆராயவேண்டும்.

''நான் அவனுக்காகப் பேசுகிறேன்'' - இதில் -க்கு என்ற நான்காம் வேற்றுமை உருபுக்கு அடுத்து ''ஆக'' என்ற பின்னொட்டு வருகிறது. இது பின்னொட்டாக - ஒரு இலக்கண விகுதியாக இருந்தாலும் - 'ஆன' என்ற பெயரெச்ச வடிவத்தையும் எடுக்கிறது.

'நான் அவனுக்காக இந்தச் சட்டையை எடுத்தேன்'

'இந்தச் சட்டை நான் அவனுக்காக எடுத்தது'

'இந்தச் சட்டை அவனுக்கான ஒன்று ஆகும்.'

'இந்தச் சட்டை அவனுக்கு ஆனது'

மேற்கூறிய நான்கு தொடர்களிலும் ''அவனுக்காக'' ''அவனுக்கான'' என்ற இரண்டு தொடர்களும் "for" என்ற பொருளையே தருகிறது.

'அவனுக்கு ஆனது'' என்பது 'அவனுக்கான' என்று மாறுகிறது என்று கூறலாம். இந்த நோக்கில் பார்த்தால் இங்கும் 'ஆன' என்பது'' ஆனது'' என்ற வினைமுற்றின் மற்றொரு வடிவமாகத்தான் தெரிகிறது.

இந்த 'ஆகு' என்பதற்கும் மற்றொரு 'ஆகு' என்ற முதன்மை வினைக்கும் சற்று வேறுபாடு தெரிகிறது. முதல் 'ஆகு' என்பது இணைப்பு வினை ("be" copula verb) . இரண்டாவது 'ஆகு' முதல்வினை - அகராதிப்பொருள் ("to become") தரும் வினை. "நேற்று பேரவை உறுப்பினராக இருந்த மணி இன்று அமைச்சர் ஆனான்.'' இதில் உள்ள ''ஆ(கு) '' முதன்மை வினை.

  திரு. சுந்தர் இலட்சுமணன்

அருமையான அலசல் ஐயா. வாய்ப்பு குறைவெனினும் கருதுதற்பொருட்டு கேட்கிறேன். கருப்பான சட்டை, உருண்டையான பந்து என்பதுபோல “இராவணனின் தங்கை”மையை ஒரு பண்பாகக் கொள்ள இடமுள்ளதா?

 ந. தெய்வ சுந்தரம்

சரிதான் நண்பரே. ''இராவணனின் தங்கையான சூர்ப்பனகை இன்று வந்தாள்'' என்பதில் (இராவணனின் தங்கையான) (சூர்ப்பனகை) என்பதில் 'இராவணனின் தங்கை'' என்பதின் செயற்பாடு பண்புதான்! ''ஆன'' ''என்ற'' 'என'' ''என்பது - இவையெல்லாம் ஒரு முழுத்தொடரைச் சுருக்கி, மற்றொரு தொடரில் உள்ள பெயர்த்தொடரில் உள்ள பெயருக்கு பண்பு அடையாகச் செயல்படச் செய்கிறது. Noun Complementation. இங்கு ஒன்றின் இலக்கணவகைப்பாடு (Grammatical Category) , இலக்கணச்செயல்பாடு (Grammatical Function) இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். ஒரு தனித்தொடரோ (Phrase), அல்லது ஒரு வாக்கியமோ(Clause/ Sentence) இரண்டுமே தங்கள் செயற்பாடுகளில் அடையாகப் பயன்படலாம்.

''ராமன் மாணவன் ஆவான்'' ''ராமன் நல்லவன்'' --> மாணவனான ராமன் (ராமன் நல்லவன்). Equi-NP deletion என்ற அடிப்படையில் ஒரு ''ராமன்'' நீக்கப்பட்டு, ''மாணவனான ராமன் நல்லவன்'' என்ற தொடர் கிடைக்கிறது.

இதுபோல, ஒரு முழுத்தொடரை மற்றொரு தொடரின் வினைமுற்றில் உள்ள வினைக்கு அடையாக மாற்றலாம். இது Verb Complementation. அங்கு ''என்று'' ''ஆக'' போன்றவை முதல் முழுவாக்கியத்தைச் சுருக்கி, மற்றொரு வாக்கியத்தின் வினைக்கு அடையாக மாற்றுகின்றன.

ராமன் நேற்று வந்தான். நான் கூறினேன்.

நான் ( ராமன் நேற்று வந்தான்) கூறினேன்.

நான் (ராமன் நேற்று வந்ததாக/ வந்தான் என்று) கூறினேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------

ஆகவே, தமிழ் இலக்கண ஆய்வில் எந்த அளவு சொல் இலக்கணம் முக்கியமோ, அந்த அளவுக்குத் தொடர் இலக்கணமும் முக்கியத்துவம் உடையது. இதுபோன்ற பல தொடரியல் ஆய்வுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பேரா. அகத்தியலிங்கம், பேரா. க. பாலசுப்பிரமணியன், பேரா. செ வை சண்முகம், பேரா. குமாரசாமி இராஜா , பேரா. பிரபாகர வாரியார் , பேரா. பி எஸ் சுப்பிரமணியம் போன்றோர் வழிகாட்டுதலில் நடைபெற்றுள்ளன. தமிழுக்குமட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற திராவிடமொழிக் குடும்ப மொழிகளுக்கும் நடைபெற்றுள்ளது. பேராசிரியர்கள் பொற்கோ, ஆர். கோதண்டராமன், செம்மொழி இராமசாமி, அ. கோபால், மறைந்த நண்பர் இராதாகிருஷ்ணன் உட்பட பலர் முனைவர் பட்ட ஆய்வுகளாக இவற்றை மேற்கொண்டுள்ளனர். இதையெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம் . . . தமிழகத்தில் மொழியியலாளர்கள் தமிழ் இலக்கணத்திற்கு பல ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதைத் தெரியப்படுத்தவே.

குறிப்பாகச் சொல்லப்போனால், பழந்தமிழ் இலக்கணங்களில் சொல் இலக்கணத்திற்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அது அன்றைய மொழி ஆய்வு வளர்ச்சி நிலை. ஆனால் நோம் சாம்ஸ்கியின் தொடரியல் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டபிறகு, தமிழுக்குப் பல தொடரியல் ஆய்வுகளைத் தமிழகத்தின் மொழியியலாளர்கள் செய்துள்ளனர். சாம்ஸ்கி போன்றோரின் மொழியியல் கோட்பாடுகளே இவற்றிற்கு உதவின என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்.

 மருத்துவர் இரவீந்திரன் வெங்கடாச்சலம்

உருண்டையான பந்து =

(1). பந்து வேறு வடிவிலிருந்து உருண்டை வடிவமாக மாறியது. இதில் உள்ள ஆன வினைச்சொல்.

(2) இப்பந்தின் தன்மை உருண்டை. பிற பந்துகள் வேறு வடிவமாகலாம். இதில் உள்ள ஆன பண்பு உருபு. (உருண்டைப் பந்து எனத் தொகையாக்க ஆன விடப்படும்)

(3) பந்து உருண்டை வடிவினது. இதில் உள்ள ஆன முதல்வேற்றுமை உருபு.

ந. தெய்வ சுந்தரம்

1) (சென்ற வாரம் நீளமாக இருந்து, இன்று) உருண்டையான பந்து <-- சென்ற வாரம் பந்து நீளமாக இருந்தது; அந்தப் பந்து நேற்று உருண்டை ஆனது; இதில் '' ஆனது'' என்ற வினைமுற்றின் குறுகிய பெயரெச்ச வடிவத்தின் விகுதி ''-ஆன''!

2) நான் வாங்கிய உருண்டையான பந்து <-- நான் வாங்கிய பந்து உருண்டையாக இருந்தது; நீளமாக இல்லை. இதில் விகுதி ''-ஆன'' என்பது பெயரடை விகுதி.

3) உருண்டை வடிவமான பந்து <-- பந்து உருண்டை வடிவத்தில் இருக்கிறது. - பந்து உருண்டையாக இருக்கிறது- -> உருண்டையாக இருக்கிற பந்து --> உருண்டையான பந்து.

ஆகவே, புதை அமைப்பில் (Deep Structure) தொடர் எவ்வாறு அமைகிறதோ, அதைப்பொறுத்து புற அமைப்பில் (Surface Structure) தொடர்கள் மாறி அமையும். எந்தப் புதை அமைப்பிலிருந்து புற வடிவத்தை உருவாக்குகிறோமோ அதைப்பொறுத்துத்தான் புற அமைப்பில் நீடிக்கிற சொற்களின் இலக்கண வகைப்பாடு (Grammatical Category) அமையும். இதுபோன்ற பொருண்மை மயக்கத்தினால் (Semantic Ambiguity) ஏற்படுகிற தொடரமைப்பு மயக்கத்தை (Syntactic Ambiguity) அகற்றவே மாற்றிலக்கணம் (Transformational Generative Grammar) உதவுகிறது. இது தொடரமைப்பு மயக்கம். இதுபோன்று சொல்லமைப்பு மயக்கமும் (Word Structure Ambiguity) உண்டு. 'விஷமருந்து' - விஷம் அருந்து ; விஷம் மருந்து; இதுபோன்ற எந்தவகையான மயக்கமாக இருந்தாலும், அதைத் தீர்க்க உதவுவதே இலக்கண அடிப்படை அல்லது இலக்கண அறிவு அல்லது இலக்கணக் கோட்பாடு (Grammatical theory or Principles) .

-----------------------------------------------------------------------------------------------

மருத்துவர் இரவீந்திரன் வெங்கடாச்சலம்

நன்னூல் உரைக்காரர் தொகையாற்றல் 12 என எண்ணுவார். விஷமருந்து - விஷத்தை முறிக்கும் மருந்து; விஷமான மருந்து; விஷத்தினின்று எடுத்த மருந்து, விஷத்துக்குக் கொடுக்கும் மருந்து; விஷமும் மருந்தும்......(விஷம் அருந்து என்பது பிரிமொழி ஆற்றலைக் குறித்தது)

 

ந. தெய்வ சுந்தரம்

-----------------------------------------------------------------------

ஆமாம் ஐயா. நன்றி . அதைத்தான் நான் கூறுகிறேன் . . . பல பொருண்மை உள்ளன. புதை அமைப்பு - புற அமைப்பு பற்றிய மொழியியல் கோட்பாடு இதற்கான அடிப்படைகளை விளக்குகிறது. பழங்கால இலக்கணிகள், உரையாசிரியர்கள் இதை உணர்ந்தே உள்ளனர். ''புலிகொல்யானை'' இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

நம்மிடையே ஒரு பிரச்சினை. பழங்கால இலக்கண ஆசிரியர்கள் கூறியதை அடுத்த கட்ட இலக்கண வளர்ச்சிக்கு எடுத்துச்சென்றிருந்தால், சாம்ஸ்கியின் கோட்பாடு இங்கேயே தோன்றியிருக்கலாம். சாம்ஸ்கி கூறியபிறக்கு, இங்கு நாம் ''ஆமாம், எங்களிடமும் ஒரு எடுத்துக்காட்டு நிற்கிறது; எங்கள் இலக்கண ஆசிரியர்களும் இதுபற்றி கூறியிருக்கிறார்கள்'' என்று கூறுகிறோம்.

இதுபோன்று பல எடுத்துக்காட்டுக்களை நம்மால் கொடுக்கமுடியும். கருத்தாடல் ஆய்வு (Discourse Analysis) என்ற அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள மொழியியல் கோட்பாட்டுக் கூறுகள்கூட தொல்காப்பியத்தில் இருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை எடுத்து, அடுத்த நிலை மொழிக் கோட்பாடுகளாக வளர்த்தெடுப்பது இல்லை. இலக்கண ஆசிரியர்கள் கூறியதோடு நிறுத்திக்கொள்கிறோம்.

 

தாங்கள் கூறுவதுபோல ''தங்கைமை'' என்று பண்புப்பெயராகக் கொள்ளலாம். இங்கு ''மை'' பண்புக்கான விகுதியாக இருப்பதால், தாங்கள் ''தங்கையான'' என்பதில் உள்ள ''ஆன'' என்பது ''மை'' விகுதிக்குப்பதில் வருவதாகக் கொள்ளலாம் எனக் கருதுகிறீர்களா?

ஆனால், ''மை'' என்ற பண்புப்பெயர் விகுதி பண்புப்பெயர்களுக்குப் பின்னால்மட்டுந்தானே வருகிறது. 'அழகு' - அழகான; 'வேகம்' - வேகமான; 'கலகலப்பு' -கலகலப்பான; 'அன்பு' - அன்பான; ஆனால் ''தங்கை'' என்பதைப் பண்புப்பெயராகக் கொள்ளமுடியாமா?

''ஆசிரியரான, மாணவரான, தலைவரான '' ஆகியவற்றைப் பண்புப்பெயர்களாகக் கொள்ளமுடியுமா? இவற்றின் உருவாக்க வரலாறு வேறுமாதிரி இருக்கிறது எனக் கருதுகிறேன்.

வேகம், அழகு போன்ற பண்புப்பெயர்கள் abstract nouns ; ஆசிரியர், மாணவர் என்பவை concrete nouns;

அடுத்து, இந்த ''மை'' பல்வேறு வினையடிகளுடன் இணைந்து பண்புப்பெயர்களை உருவாக்குகிறது. தங்கள் ஐயத்துடன் இதற்குத் தொடர்பு இல்லையென்றாலும், அவற்றையும் கீழே அளிக்கிறேன்.

''மை'' விகுதி வினைகளோடு இணைந்து பெயர்ச்சொற்களாக மாறுவதைப் பார்க்கிறோம். (வறுமை) வறு-மை, (பெருமை) பெரு-மை, (சிறுமை) சிறு-மை, (கொல்லாமை) கொல்-ஆ-மை; (பொல்லாமை) பொல்-ஆ-மை; (கருமை) கரு-மை; (இல்லாமை) இல்-ஆ-மை ; (சார்மை) சீர்-மை; (பொறுமை) பொறு-ஆ-மை; (வராமை)வர்-ஆ-மை ; (நன்மை( நல்(நன்)-மை; (இனிமை) இனி-மை; (அறியாமை) அறி-ஆ-மை; (ஒத்துழையாமை) ஒத்துழை-ஆ-மை; (நிலைமை) நிலை-ஆ-மை; (பொருந்தாமை) பொருந்து-ஆ-மை; (உணராமை) உணர்-ஆ-மை; (செய்யாமை) செய்-ஆ-மை; (கொல்லாமை) கொல்-ஆ-மை; (உள்ளமை) உள்(ள்) - ஆ- மை; (உண்மை) உள்-மை;

ஆகவே, ''தங்கையான'' என்பதைப் பண்புப்பெயராகக் கொள்ளவேண்டுமென்றால், (1) ஒன்று ''தங்கை'' என்பது பண்புப்பெயராக இருக்கவேண்டும். (2) அல்லது, வினையடியாக இருக்கவேண்டும் எனக் கருதுகிறேன். மேலும் ஆய்வு செய்யலாம்.

தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India