வியாழன், 7 செப்டம்பர், 2023

மூன்று மெய்களின் மயக்கமும் திரிதல் புணர்ச்சி விதியும் . . .

மூன்று மெய்களின் மயக்கமும் திரிதல் புணர்ச்சி விதியும் . . . 

--------------------------------------------------------------------------------------------------------------------

 'ஆள்' என்ற வினை 'ஆண்டேன்' என்று மாறுகிறது. ஆனால் 'கேள்' என்பது கேட்டேன் என்றுதான் மாறுகிறது. இரண்டிலும் நிலைமொழி இறுதியில் 'ள்' நிற்கிறது; முன்னால் நெடில் வருகிறது. ஆனால் வருமொழியில் இறந்தகால விகுதியாக ஒன்றில் -த்- நிற்கிறது ; மற்றொன்றில் -த்த்- நிற்கிறது. 'ஆள் + த் ' -> ஆண்-ட் ; கேள் + த்த் -> கேட் - ட் ;

முதல் எடுத்துக்காட்டில்( ஆள் + த்) வருமொழி 'த்' என்பது 'ட்' ஆக மாறுகின்றது; இரண்டாவது எடுத்துக்காட்டிலும் அப்படியே இரண்டாவது 'த்' (-த்த்-) 'ட்' என்று மாறுகின்றன. வேறுபாடு இதில் இல்லை.

ஆனால் இரண்டாவதில் உள்ள முதல் 'த்' -உம் நிலைமொழி இறுதியில் உள்ள 'ள்' -உம் இணைந்து 'ட்' என்று மாறுகிறது. இவ்வாறு மூன்று மெய் வருமிடங்களில் முதல் இரண்டு மெய்களும் (இடையினம் + வல்லினம்) இணைந்து ஒரே வல்லினமாக மாறுகின்றன.

ஆள் + த் + ஏன் -> ஆண்(ள்) + ட் (த்) + ஏன் -> ஆண்டேன்

கேள்+ த்த் + ஏன் -> கேட்(ள் +த் ) + ட் (த்) + ஏன் -> கேட்டேன்

தமிழ் இலக்கணத்தில் 'திரிதல்' என்று கூறுவது இரண்டு செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. முதலில் ஒற்று தோன்றி , பின்னர் அது திரிகிறது. இது பெயர்த்தொகைகளிலும் நிலவுகிறது. பால் + குடம் -> பால் + க் + குடம் -> பாற்குடம். ஆனால் 'பால் + குடிக்கிறேன்' என்பது 'பாற் குடிக்கிறேன்' என்று மாறுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது.

இது ஒரு கருதுகோள்தான். மேலும் ஆய்வு செய்யலாம். இறந்தகால விகுதியாக 'த்' 'த்த்' 'ந்த்' 'இன்' ஆகிய நான்கும் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 'ட்' 'ற்' ஆகியவை சந்தி மாற்றங்களே! மூன்று மெய் மயக்கங்களில் ர், ழ், ய் முதல் மெய்யாக இருந்தால்மட்டும் மூன்று மெய்மயக்கங்கள் தமிழில் அனுமதிக்கப்படுகின்றன. ஏனைய மெல்லினங்கள், இடையினங்கள் மூன்று மெய் மயக்கங்களில் முதல் மெய்யாக இருக்க அனுமதி இல்லை. ) இதுபற்றித் தங்கள் கருத்து தேவை. மாறுபட்ட எடுத்துக்காட்டுக்கள் கிடைத்தாலும் கூறவும். இந்தக் கருதுகோளை அப்போதுதான் விதியாகக் கூறமுடியும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

'பால்குடித்தேன்' - இதனை மறைந்த சீனி நைனா முகம்மது ( 'நல்ல தமிழ் இலக்கணம்' பக்கங்கள் 126, 132 -33) போன்றோர் உருபுமட்டும் தொக்க வேற்றுமைத்தொகை என்று கூறுகிறார்கள். பேரா. ச. அகத்தியலிங்கம் ('தமிழ்மொழி அமைப்பியல்' பக்கம்106, 109-110) போன்றோர் இதனைத் தொகை எனக் கூறுவது பொருந்தாது என்றும் வேண்டுமானால் தனியாக இதனை உருபுத்தொகை எனக் கூறலாம் என்றும் கூறுகிறார்கள். இலக்கணிகள் சிலர் 'நிலங்கடந்தான்' என்பதை வேற்றுமைத் தொகையாகக் கூறியதைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் அகத்தியலிங்கம் அவர்கள் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகிறார் - '' இங்கு நிலங்கடந்தான் என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் இல்லை; இதனை நிலமா கடந்தான், நிலமே கடந்தான் போன்று இடைச்சொற்களுடன் இணைத்துக் கூறமுடியும். மேலும் 'கடந்தான் நிலம்' என வரிசை முறையை மாற்றவும் முடியும். இந்நிலையில் இது தொகை இலக்கணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனவே இதனைத் தொகை எனக் கூறுவது பொருந்தாது. வேண்டுமானால் தனியாக இதனை உருபுத்தொகை எனக் கூறலாம். இதனால்தான் மரபு இலக்கணிகள் பணப்பெட்டி போன்றவற்றை முன்னர்க் கூறியபடி 'உருபும் பயனும் உடன்தொக்க தொகை' எனப் பிரிவுபடுத்திக் கூறியுள்ளனர்''.

மேலும் அவர் பின்வருமாறு கூறுகிறார் : தொகை என்பது (1) ஒரு சொல் நீர்மைத்தாய் நின்று புதிய புதிய சொல்லாக்கங்களுக்குத் துணைபுரிவது. தமிழில் காணப்படும் புதுச் சொல்லாக்கங்களில் பெரும்பான்மையானவை தொகைச் சொல்லாகவே இருக்கும். ஒரு பெயர்ச்சொல் போன்றே வரும் (2) பணப்பெட்டி போன்றவற்றில் இவ்விரு சொற்களுக்கிடையே வேறு ஒரு சொல்லையோ அல்லது உருபுகளையோ இட்டுக் கூறுவது முடியாத ஒன்று. (3) ஒரு வினை அடிச் சொல்லை முதல் சொல்லாகவும் ஒரு பெயரை அதை அடுத்துவரும் சொல்லாகவும் கொண்டு ஒரு சொல் நீர்மைத்தாய் நின்று ஒரு பொருளைச் சுட்டும் தொகை .

அறிஞர் சீனி நைனா முகம்மது அவர்களும் 'தொடர்கதை' என்பதைத்தான் வினைத்தொகை என்கிறார். 'தொடர்' - வினையடி; 'கதை' - பெயர்ச்சொல்.

எனவே, 'பால்குடித்தான்' என்பதை வினைத்தொகையாகக் கொள்ளமுடியாது எனக் கருதுகிறேன். பொதுவாக, அஃறிணைப் பெயர்ச்சொற்கள் 2- ஆம் வேற்றுமையை ஏற்கும்போது, வேற்றுமை விகுதி வெளித்தோன்றாமலும் இருக்கலாம். ஆனால் உயர்திணைச் சொற்களில் வெளிப்படும். '' ஆசிரியர்பார்த்தேன்' என்று வரமுடியாது ( சில விதிவிலக்குகள் இருக்கலாம்.)

'பால் + குடம் ' -> பாற்குடம் - பெயர்த்தொகை; தொகை என்ற அடிப்படையில் இங்கு ஒற்று மிகும் - 'பால் + க் + குடம்' - ல்க்க் என்று மூன்று மெய்கள் வருகின்றன. தமிழில் மூன்று மெய்ம் மயக்கங்களில் முதல் மெய்யாக ய், ர், ழ் ஆகியவை மட்டுமே வரும். வாய்க்கால், பார்த்தான், வாழ்க்கை. ஆனால் 'ல்க்க்' என்ற மூன்று மெய்ம்மயக்கம் கிடையாது. எனவே, 'ல்' என்ற இடையினம் தனக்கு அடுத்து நிற்கிற 'க்' என்ற வல்லினத்தோடு இணைந்து தனக்கு இணையான வல்லினமாகிய 'ற்' என்று ஆகிறது. இங்கு (1) பெயர்த்தொகையில் ஒற்று மிகும் என்ற விதியும் செயல்படுகிறது. (2) மூன்று மெய்ம்மயக்க விதியும் செயல்படுகிறது.

இதுபோன்று வினையடிகள் காலவிகுதி ஏற்கும்போது, 9-ஆவது வினைத்திரிபில் 'கேள் + க்கிறு + ஆன்' - > கேள்க்க்கிறு + ஆன் -> கேட்கிறு + ஆன் -> கேட்கிறான் என்று அமைகிறது. ஆனால் 2-ஆவது வினைத்திரிபில் ' ஆள் + கிறு + ஆன்' -> ஆள்கிறான் என்றே அமைகிறது. அதாவது 'ள்' என்பது 'ற்' என்று மாறவில்லை. ஆனால் இறந்தகாலத்தில் இந்த 'ள்' என்பது 'ண்' ஆக மாறும். ஆனால் 9-ஆவது வினைத்திரிபில் இந்த 'ள்' என்பது 'ட் ' என்றுதான் அமைகிறது; 'ண்' என்று மாறாது.

இது ஒரு கருதுகோள்தான் இன்றைய நிலையில்!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மூன்று மெய் மயக்கம் ஏற்பட்டு . . . அந்த மயக்கம் தமிழின் மூன்று மெய் மயக்க அமைப்புக்கு எதிராக இருந்தால்- அதாவது முதல் மெய் ய், ர், ழ் என்று அமையாமல் இருந்தால்- , திரிதல் என்று ஒன்று நிகழ்கிறது. இந்தத் திரிதல் தொகைகளிலும் நிகழ்கிறது. வினைகள் கால விகுதிகளை ஏற்கும்போதும் நிகழ்கிறது. இதுதான் தற்போது எங்களது கருதுகோள்.

இவ்வாறு கொண்டால் தமிழ் இலக்கணத்தின் மிகச் சிறந்த ஒழுங்கமைவு வெளிப்படுகிறது. இங்கு திரிதல் இரண்டு நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது.

( மரம் + பன்மை விகுதி 'கள்' என்பதில் 'ம்' என்பது 'ங்' மாறுவது ஒரு நிகழ்வுதான். இது நேரடித் திரிதல்! ஆனால் மரம் + பெயர்ச்சொல் 'கள்' என்று தொகையாக அமையும்போது மரம் + க் + கள் என்று தோன்றலும் திரிதலும் நிகழ்ந்து 'மரக்கள்' என்று அமைகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேற்றுமை ஏற்கிற ( எழுவாய் வேற்றுமை முடிவு செய்யவேண்டும்!) எல்லாப் பெயர்ச்சொற்களும் வினையடை செயல்பாட்டைத்தான் மேற்கொள்கின்றன. எனவேதான் இலக்கண வகைப்பாடு ( grammatical category ) வேறு, இலக்கணச் செயல்பாடு (grammatical function ) வேறு என்று பிரித்துப்பார்க்கவேண்டியுள்ளது. 'அங்கு, இங்கு, எங்கு' என்பதில் வருகிற 'கு' -வை 4- ஆம் வேற்றுமை விகுதியாகக்கூட எடுத்துக்கொள்ளலாமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. (அ -கு, இ-கு,எ-கு ) . இதுபற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். 'வீட்டுக்குப் போனேன்' - 'அங்குப் போனேன் ' ; ஆனால் 'வீட்டில் இருக்கிறேன் - அங்கு இருக்கிறேன்' என்று இட வேற்றுமையிலும் இது வருகிறது. இதுபற்றிய தங்கள் கருத்து தேவை ஐயா. 'நேற்று' என்பது கூட 'நேற்றைக்கு' என்றும் வருகிறது. 'எப்போது வந்தாய்' என்ற வினாவுக்கு 'நேற்று' 'இன்று' நாள் ' (நேற்றைக்கு, இன்றைக்கு, நாளைக்கு) என்று பதில் தரும்போது வினையடை செயல்பாடு தான். ஆனால் 'நேற்று ஞாயிறு' 'இன்று திங்கள்' 'நாளை செவ்வாய்' என்று கூறும்போது வேறு பொருள்கள் தருகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஃறிணைப் பெயர்ச்சொல்லும் அதையடுத்து மற்றொரு பெயர்ச்சொல்லும் அமையும்போதுதான் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாகத் தோன்றலாம் ; வெளிப்படையாகத் தோன்றாமலும் இருக்கலாம். 'சிதம்பரம்பார்த்தேன்' - இங்குச் 'சிதம்பரம்' ஊர்ப்பெயர்;

ஆனால் உயர்திணை முதற்சொல்லாக இருந்தால் இந்த உருபு மறையாது. ஆனால் 'சிதம்பரம்' ஒருவரின் பெயராக இருந்தால் உருபு மறையாது எனக் கருதுகிறேன். 'சிதம்பரம்பார்' என்று கூற இயலாது எனக் கருதுகிறேன். 'சிதம்பரத்தைப் பார்த்தேன்' என்றுதான் கூறமுடியும். ஆகவே, தாங்கள் கூறியுள்ளதுபோல, புணர்ச்சி என்பதற்கு முதல் அடிப்படைகள் பொருண்மை, இலக்கணம் இரண்டும். ஒலி என்பது அதற்கு அடுத்ததுதான்!

இதற்கு மாற்றாக , மற்றொரு விதி . . . ''அரசு + கல்லூரி'' -> அரசுக் கல்லூரி . இங்கு 'அரசு' என்பது அஃறிணை! ஆனால் 'அரசு' என்பது உயர்திணையாக இருந்தால் ' அரசு கல்லூரி' தான்! 'அரசு என்ற நபரின் கல்லூரி'! சரியா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India