திங்கள், 19 அக்டோபர், 2020

முனைவர் அருள் நடராசன் .....

 தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநர்.... சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ் இளங்கலையும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் முதுகலை, ஆய்வு நிறைஞர் பட்டங்களும் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நன்கு திறன் பெற்றவர். அவருடைய தனிச்சிறப்பே அவரது மலர்ந்த முகமும் புன்னகையும்தான். தனது நட்பு வட்டாரங்களை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பவர். ஆய்வுத்துறையிலும் தனது பணிகளைத் தொடர்ந்து, இரண்டு நூல்களையும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்குப் பயனுள்ளவகையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் கொண்டவர். தமிழ்ப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்துவருபவர். தமிழை ஒரு சிறந்த அறிவியல்மொழியாகவும் கணினித்தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மொழியாகவும் வளர்க்கவேண்டும் என்பதில் மிக உறுதியானவர். கணினிவழி மொழிபெயர்ப்பு மென்பொருள்களைத் தமிழுக்கு உருவாக்கிவிடவேண்டும் என்பதில் தேவையான வேகத்தைக் காட்டிவருபவர். அவரால் இயன்ற அளவு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருபவர்.

தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராகவும், தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறையின் முன்னாள் செயலராகவும், மொழிபெயர்ப்புத்துறையின் முன்னாள் இயக்குநராகவும் பணியாற்றியுள்ள... தமிழுலகிற்கு அறிமுகம் தேவையில்லாத... தமிழறிஞர் முனைவர் அவ்வை நடராஜன் அவர்களின் புதல்வர்! தமிழ் இலக்கிய உலகில் ஒப்பற்ற அறிஞராக விளங்கிய அவ்வை துரைசாமி அவர்களின் பேரன். நான் பணியாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையின் மாணவர் என்பதிலும் நான் பெருமைகொள்கிறேன்.
நாளை செய்யவேண்டிய தமிழ்ப்பணியை இன்றே செய்துமுடித்துவிடவேண்டும் என்ற துடிப்புடன் செயல்படும் திரு. அருள் நடராஜன் அவர்களுக்கு நாளைதான் பிறந்தநாள் என்றாலும், இன்றே அவரை வாழ்த்துகிறேன். அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India