ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கணினித்தமிழ் ஆய்வாளர் திருமதி அபிராமி முத்து

 கணினித்தமிழ் ஆய்வாளர்

திருமதி அபிராமி முத்து .... எம்சிஏ., எம்பிஏ., ... திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக என்னுடன் இணைந்து , தமிழ்க்கணினிமொழியியல் ஆய்விலும், தமிழ் மென்பொருள் உருவாக்கத்திலும் ஈடுபட்டுவரும் ஒரு மென்பொருள் பொறியாளர். நாகர்கோவில் மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கணினியியல் இளங்கலை படிப்பும் பச்சையப்பன் கல்லூரியில் எம்சிஏ படிப்பும் பாரதிதாசன் நிர்வாகவியல் கல்விநிறுவனத்தில் ( BIM ) எம்பிஏ படிப்பும் மேற்கொண்டவர்.
எம்சிஏ படிப்பிற்கான இறுதி ஆய்வேட்டிற்குத் துணிந்து, எனது வழிகாட்டுதலில் தமிழ்க் கணினிமொழியியல் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, வகுப்பிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர், எனது என் டி எஸ் லிங்க்சாப்ட் சொலூஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர், மென்தமிழ் ஆய்வுத்துணைவன், மென்தமிழ் சந்தித்துணைவன் , கணினிவழியே திருக்குறள் ஆய்வு என்று தமிழுக்கான பல மென்பொருள்களை உருவாக்குவதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளவர். சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்திற்காகச் சிங்கப்பூர் எழுத்துத்தமிழ் தரவகத்தை உருவாக்கி, மொழி ஆய்வு செய்ததில் பெரும்பங்கு ஆற்றியவர். தற்போது கணினியின் தானியங்கு கற்றலில் (Machine Learning, Deep Learning) தனது திறமையை வளர்த்துவருகிறார். பிற மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இருப்பினும், எங்கள் குழுவினருடன் இணைந்து, கணினித்தமிழிலேயே தொடர்ந்து பணிமேற்கொண்டுவருகிறார். ஒரு சிறந்த தமிழ்க்கணினிமொழியியலாளராக இன்று திகழ்கிறார். இவருடைய கணவர் திரு. நவீன் ராஜ் அவர்களும் ஒரு மென்பொருள் பொறியாளரே.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India