ஆட்சிமொழி, பயிற்றுமொழி தொடர்பாக . . .
-----------------------------------------------------------------------
இந்தியாவின் ஆட்சிமொழி இந்திமொழிதான் என்பதில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே உறுதியாக இருக்கின்றன.
ஆனால் மொழிதொடர்பான கொள்கையில் மாற்றம் சாத்தியமில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்திபேசாத மக்கள் சிறுபான்மையாக இருந்தாலும்கூட, எல்லோருக்குமான இந்தியக் குடியரசில் அனைத்துமொழிகளுக்கும் சம உரிமை அளிக்கவேண்டும்.
தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதிதானே! அதன் மொழி தமிழ்தானே! அதற்கு ஏன் இந்திமொழிக்கு அளிக்கப்பட்டுள்ள ஆட்சிமொழி தகுதி அளிக்கக்கூடாது? எது ஒன்றிலும் , சிறுபான்மை, பெரும்பான்மை அடிப்படையில் பல தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு குடியரசு முடிவு எடுக்கக்கூடாது!
தமிழ்நாட்டுக்குள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் பயிற்றுமொழி என்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இங்குள்ள மாநில அரசுதான் பொறுப்பு. பிறமொழிகளை மாணவர்கள் தங்கள் விருப்பம், தேவை அடிப்படையில் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கவேண்டியதும் மாநில அரசுகளின் பொறுப்புதான்! ஆங்கிலம் உட்பட எந்த ஒரு அந்நிய மொழியையும் மாணவர்கள் கற்றுக்கொள்ளக்கூடாது என்று நான் கூறவில்லை.
ஆனால் . . . இந்திய அரசியல் சட்டத்தில் தமிழ்மொழியும் ஒரு ஆட்சிமொழியாக இடம்பெறவேண்டும். தாய்மொழி தமிழ்தவிர, பிற மொழிகளை எந்த ஒரு வடிவத்திலும் (இருமொழிக்கொள்கையோ, மும்மொழிக்கொள்கையே) தமிழ்நாட்டில் மேலிருந்து திணிக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் கல்வியில் அனைத்து நிலைகளிலும் தமிழே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். சாத்தியம் இல்லை என்று கூறுவது எல்லாம் வெறும் ஏமாற்றும் வேலையே!
மொழிக்கொள்கையில் இரண்டு கூறுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(1) தேசிய இனங்களின் உரிமை என்னும் அடிப்படையில் தமிழ்மொழியும் இந்திய அரசின் ஆட்சிமொழியாக அங்கீகரிக்கப்படவேண்டும்.
(2) தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தாய்மொழியில் கல்வியை அனைத்து நிலைகளிலும் பெறுவதற்கு உரிமை உண்டு. அறிவியல் அடிப்படையிலும் இதுவே சரி!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக