செவ்வாய், 3 ஜூன், 2025

தேசிய இனங்களின் ஒற்றுமையே இந்திமொழித் திணிப்பை முறியடிக்கமுடியும்!

 தேசிய இனங்களின் ஒற்றுமையே இந்திமொழித் திணிப்பை முறியடிக்கமுடியும்!

----------------------------------------------------------------------
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றே இன்றைய இந்தியா! தமிழ், கன்னடம், தெலுங்கு , மலையாளம் என்று பல்வேறு தேசிய இனங்கள் இந்தியாவின் தென்பகுதியில் நீடிக்கின்றன. தேசிய இனம் என்பது நிலப்பகுதி, அரசியல் , பொருளாதாரம், பண்பாடு, மொழி போன்ற பல கூறுகளைக் கொண்டு ஒன்று.
குறிப்பிட்ட ஒரு தேசிய இனம் என்பது முந்தைய வரலாற்றில் ஒன்றுபட்ட ஒன்றாக நீடிக்கவில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றைப் பார்த்தால், பல்வேறு நிலப்பகுதிகளாகவும், பல்வேறு அரசுகளின்கீழும் நீடித்து வந்துள்ளன. ஆனால் அவை அனைத்துக்கும் ஒரு பொதுக்கூறு தமிழ்மொழியும் தமிழர் பண்பாடும். அரசியல், பொருளாதாரக் கூறுகள் வேறுபட்டு இருந்தாலும், மொழி , பண்பாடு இரண்டும் அவற்றிக்குப் பொதுக்கூறுகளே.
கிபி 10 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு, அந்நியர்களின் படையெடுப்பு, அந்நியர்களின் அரசியல் ஆதிக்கம் போன்றவற்றாலும் நிலவுடமை அரசியல் பொருளாதார அமைப்பு பலவீனமடையத் தொடங்கியதாலும், உற்பத்திமுறை மாறத் தொடங்கியதாலும் தமிழ் பேசும் மக்கள் - தமிழ்ப்பண்பாடு உடைய மக்கள் - ஒரே திரட்சியாக - அரசியல் பொருளாதாரத் திரட்சியாக - தமிழ்த் தேசிய இனமாகப் பரிணமிக்கத் தொடங்கியது. இதுபோன்றே இந்தியப் பூகோளப் பகுதியில் பல்வேறு தேசிய இனங்கள் உருவெடுக்கத் தொடங்கின.
இவ்வாறுதான் இன்று இந்தியப் பூகோளப்பகுதியில் நிலவுகிற பல்வேறு தேசிய இனங்கள் தோன்றி வளர்ந்திருக்கமுடியும். இந்தத் தேசிய இனம் என்பது மனிதகுல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றி நிலவுகிற வரலாற்று விளைபொருளே ஆகும்.
இங்குத் தேசிய இனங்கள் தோன்றி வளர்ந்த சூழலில் உலகில் மேலைநாடுகளில் முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றி, வளர்ந்து நிலவியது. மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக, தங்கள் பூகோள எல்லைகளைத் தாண்டி, தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிறுவி, அதைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அந்த ஆதிக்க முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகள் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை நிறுவினர். தங்களுக்கு ஏற்றவகையில் இந்தியப் பகுதியின் பொருளாதார அமைப்பையும் மாற்றத் தொடங்கினர்.
அதன் ஒரு பகுதியாகவே இங்கு நிலவிய நிலவுடமை உற்பத்திமுறையும் மாறத் தொடங்கியது. இங்கு நிலவிய விவசாய உற்பத்தியும் உற்பத்திமுறையும் மாறத் தொடங்கின. இங்கிருந்த நிலவுடைமையாளர்கள் மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகளின் ஆதரவுடன் முதலாளித்துவ உற்பத்திக்கு மாறத் தொடங்கினர். இந்தியப் பகுதியின் பொருளாதாரம் காலனித்துவப் பொருளாதாரமாக மாறத் தொடங்கியது.
மேலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி வளர்ந்த ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலன்களுக்காகவே இங்குப் பொருளாதார உற்பத்திமுறைகளை மாற்றி அமைக்கும்போது, உள்ளூர் நிலவுடைமையாளர்களுடன் கைகோர்த்தபோது, ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த உள்ளூர் முதலாளிகள் வளரத் தொடங்கினர். அவர்களில் ஒரு சிறு பகுதியினர் முழுக்க முழுக்க ஏகாதிபத்திய தாசர்களாக மாறியநிலையில், உள்ளூர் முதலாளிகள் தங்கள் நலன்களுக்காகத் 'தங்கள் மண்' என்னும் முழக்கத்தை முன்வைக்கத் தொடங்கினர். இங்குள்ள நிலவுடைப் பொருளாதாரமும் மாறவேண்டும், அதேவேளையில் ஏகாதிபத்தியங்களும் முழுமையாக இங்கு ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்ற ஒரு நிலையை எடுக்கத் தள்ளப்பட்டனர்.
இதுபோன்ற ஒரு சூழலில் இந்தியப் பூகோளப் பகுதியில் பல்வேறு தேசிய இனங்கள் தோன்றி நிலைக்கத் தொடங்கின. இந்தத் தேசிய இனங்கள் அனைத்துக்கும் பொது எதிரியாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நீடித்தது.
ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு இவ்வாறு தேசிய இனங்கள் வளரத் தொடங்கியது ஆபத்து. எனவே, அவை தங்களுக்குள் ஒன்றிணைந்து பொது எதிரி என்ற வகையில் தனக்கு எதிராக நின்றுவிடக்கூடாது என்பதற்காகப் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டன. அவற்றின் ஒரு பகுதியே ஒப்பீட்டு மொழியியல் ஆய்வில் ஏற்பட்ட வளர்ச்சி. எல்லீஸ், சர் வில்லியம்ஸ் ஜோன், இராபர்ட் கால்டுவெல் போன்றோர் முன்வைத்த இந்தோ ஆரிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பம் போன்ற கருத்துகள். இவற்றை அடிப்படையாகக்கொண்டு, இந்தியப் பகுதியில் ஆரியர், திராவிடர் என்ற இரண்டு 'இனங்களே' உண்டு என்று கூறத் தொடங்கினர். பொது எதிரிக்கு - ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு - எதிராக இங்குள்ள தேசிய இனங்கள் ஒன்றுபட்டு விடக்கூடாது, தங்கள் அரசியல் அதிகாரம் பலவீனமடைந்துவிடக்கூடாது என்பதே அவற்றின் நோக்கம்.
தமிழ்த் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம், கன்னடத் தேசிய இனம், மலையாளத் தேசிய இனங்கள் , தங்களுடைய பொது எதிரிக்கு எதிராகப் போராடக்கூடாது, பிளவுபட்டு நிற்கவேண்டும் என்பதே இன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் - அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தின் விருப்பம் போன்று - விருப்பம். அதன் ஒரு பகுதியே திராவிடமொழிகளைப் பற்றிய ஆராய்ச்சியை - மூல திராவிடம் என்ற கருதுகோளை - ஆரியர், திராவிடர் என்ற கற்பனை 'இனங்கள்' பற்றிய கருத்தை - பலவகைகளில் தேசிய இனங்களின்மீது மீண்டும் திணிக்க விரும்புகிறது. அத்தோடு நிற்காமல், தமிழிலிருந்துதான் தெலுங்கு வந்தது, கன்னடம் வந்தது, மலையாளம் வந்தது அல்லது பிறந்தது போன்ற கருத்துகளைப் பரப்ப விரும்புகின்றன. தேசிய இனங்களின் ஒற்றுமைக்கு எதிரான இதுபோன்ற 'பரப்பல்களை' தெரிந்து சொய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி, அது தேசிய இனங்களின் ஒற்றுமையையை சீர்குலைக்கும். இன்றைய ஆளும் வர்க்கங்களின் ஆதிக்க அரசியலுக்கே பயன்படும்.
இந்த சூழ்ச்சிக்குத் தேசிய இனங்கள் பலியாகிவிடக்கூடாது. மொழிகளில் நீடிக்கிற ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்கிற மொழியியலின் ஒரு பிரிவைத் தவறாக அரசியல் நோக்கத்திற்காக ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்த முயல்கின்றன. தமிழ்த் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம் என்று அந்தந்தத் தேசிய இனங்கள் தங்களுடைய தேசிய இனத்தின் தனித்துவத்தைத் தக்கவைப்பதை மழுங்கடிக்க முயல்கின்றன. ஆங்கிலேயர் தொடங்கிவைத்த ஆரிய - திராவிட 'இனக் கோட்பாட்டை' பல வகைகளில் மீண்டும் திணிக்க முயல்கின்றன. இந்தச் சூழ்ச்சிக்கு நாம் பலியாகிவிடக்கூடாது.
இன்று தேவையானது அனைத்துத் தேசிய இனங்களின் தனித்துவமும் அரசியல் உரிமையும் மொழி உரிமையும் ஆகும். இந்திமொழியின் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும். அனைத்துத் தேசிய இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாக அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டும். அதற்காக அனைத்துத் தேசிய இனங்களும் ஒன்றுபட்டு, தங்களுக்கு எதிராக நிற்கிற பொது எதிரியை எதிர்த்துப் போராடவேண்டும். ஆளும் வர்க்கங்களின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடக்கூடாது.
ஒடுக்கப்படுகிற அனைத்தும் தேசிய இனங்களும் தங்களுக்கு எதிரான பொது எதிரியை எதிர்த்து ஒன்றுபட்டு நிற்கவேண்டும். தங்களது தேசிய இன உரிமைகளைப் பெறவேண்டும்.
--------------------------------------------------------------------------------------
நான் 'தமிழ்த் தேசிய இனம் (Nationality) ' என்னும் புறவய நீடிப்பை ஏற்றுக்கொண்டவன். பல்வேறு தேசிய இனங்களின் ஒரு ஒன்றிய நாடாகத்தான் (Country) இந்தியாவைப் பார்க்கிறேன்.
இந்தியாவில் தேசிய இனங்கள் கரைந்துவிடவில்லை.; மறைந்துவிடவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிற மக்கள் போராட்டங்களே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தங்களுடைய நிலைபாடுதான் காங்கிரஸ், பிஜேபி நிலைபாடு. என்னைப் பொறுத்தவரையில் 'திராவிட இனம் (Dravidian Race) ' என்பது கிடையாது. தமிழ்த்தேசிய இனம், தெலுங்கு தேசிய இனம், கன்னடத் தேசிய இனம்' மலையாளத் தேசிய இனம் என்றுதான் பல தேசிய இனங்கள் இங்கு நீடிக்கின்றன.
புறநானூற்றுக் காலத்திலேயே 'தமிழ்த் தேசிய இனம்' நீடித்தது என்ற கருத்தும் என்னுடைய அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டதின்படி தவறு. தமிழ்மொழி பேசிய மக்கள் என்பது வேறு; தமிழ் இலக்கியம் நீடித்தது என்பது வேறு. குறிப்பிட்ட அரசியல் பொருளாதார அமைப்பில் 'தமிழ்த் தேசிய இனம்' என்று ஒன்று தோன்றியது என்பது வேறு. தேசிய இனம் (Nationality), தேசம் (Nation) என்பதும் நாடு (Country) என்பதும் ஒன்று இல்லை.

ஞாயிறு, 1 ஜூன், 2025

மொழியியலில் வேறுபட்ட கோட்பாடுகள் . . .

 மொழியியலில் வேறுபட்ட கோட்பாடுகள் . . .

-----------------------------------------------------------------------
மொழியியலில் பல பிரிவுகள் உண்டு. ஒரே பிரிவில்கூட வேறுபட்ட கோட்பாடுகள் , ஆய்வுமுறைகள் உண்டு. எனவே, ஒரு குறிப்பிட்ட மொழியியல் கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு முடிவுக்கு வருகிற மொழி ஆய்வுக் கருத்துக்களைப் பொதுவாக 'மொழியியலாளர்கள் கருத்து' என்று குறிப்பிடுவதைவிட, குறிப்பிட்ட மொழியியல் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களின் முடிவு என்று கூறுவதே சரியாக இருக்கும்.
ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட மொழிக் கோட்பாட்டின் அடிப்படையில் கூறப்படுகிற கருத்துகளை ஏற்காதவர்கள், மொத்தத்தில் மொழியியலே இப்படித்தான் என்று கூறுவதைத் தவிர்க்கலாம்.
அமைப்புமொழியியல் கோட்பாட்டிலிருந்து மாறுபடுகிற மாற்றிலக்கணக் கோட்பாட்டில்கூட பல்வேறு உட்பிரிவுகள், வேறுபட்ட கருத்துகள், வேறுபட்ட ஆய்வுமுறைகள், வேறுபட்ட ஆய்வுமுடிவுகள் உள்ளன.
இது மொழியியலுக்கு மட்டும் பொருந்துவது இல்லை. பிற அறிவியல்களிலும் இந்நிலை உண்டு என்பது தெரிந்ததே. பிரபஞ்சத்தின் தோற்றம், உயிரின் தோற்றம் போன்றவற்றில் வேறுபட்ட கருத்துகள் இருப்பதுபோல, மொழியியலிலும் உண்டு. பொதுவாக, நேரடியாகப் பார்க்கமுடியாத, ஊகித்து அறிய வேண்டிய அறிவியல் பிரிவுகளில் இந்நிலை நீடிக்கும். மூலமொழி, மொழிக்கிளைப்பு போன்றவை இந்த வகையைச் சேர்ந்ததுதான்!
மேலும் மொழியியல் ஒரு அறிவியல் துறையாக இருப்பினும், ஆய்வாளரின் தத்துவக் கோட்பாடு, அரசியல், பண்பாட்டுக் கொள்கை ஆகியவை அவரது ஆய்வில் உறுதியாகப் பிரதிபலிக்கும். இது மற்ற அறிவியல்களுக்கும் - குறிப்பாக, பிரபஞ்சத் தோற்றம், பருப்பொருள் ஆய்வு, உயிர்த் தோற்றம், வளர்ச்சி ஆகிய பிரிவுகளில் வெளிப்படும்.

'மூல திராவிடம்' தமிழே! 'மூல திராவிட இனம்' தமிழ் இனமே ! இவை இரண்டும் நமது விருப்பமா? அல்லது அறிவியல் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளா?

 'மூல திராவிடம்' தமிழே! 'மூல திராவிட இனம்' தமிழ் இனமே ! இவை இரண்டும் நமது விருப்பமா? அல்லது அறிவியல் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளா?

----------------------------------------------------------------------
இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. ஆங்கிலேய ஆட்சியாளர் இந்தத் தேசிய இனங்கள் 'தேசிய இன உரிமை' அடிப்படையில் போராடத் தொடங்கினால் தங்களுக்கு ஆபத்து என்று எண்ணினர். அதற்கு அவர்கள் எல்லீஸ், வில்லியம் ஜோன்ஸ், கால்டுவெல் மொழியியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தினர். மொழி ஒப்புமை ஆய்வைப் பயன்படுத்தி, ஆரிய இனம், திராவிட இனம் என்று இரண்டு 'இனங்கள்'தான் இந்தியாவில் உண்டு என்று 'கற்பனை இனங்களை' உருவாக்கி மேலிருந்து திணித்தனர். இந்த வஞ்சகம் அவர்களுக்கு உதவியது. இந்த 'இனம்' என்பது ஐரோப்பியர்கள் திணித்த 'நிற, உடல் 'வேறுபாடுகளைக்கொண்ட 'இனமா (Race) ' அல்லது முதலாளித்துவ வளர்ச்சியையொட்டி மேலைநாடுகளில் தோன்றிய 'தேசிய இனமா (Nationality) ' ?
தமிழ்த் தேசிய இனம் (Tamil Nationality) உண்மையில் நிலவுகிற ஒன்று. அரசியல் பொருளாதாரக் கூறுகளின் அடிப்படையில் தோன்றி நிலவுகிற உண்மையான ஒன்று! ஆனால் 'திராவிட இனம் (Dravidian Race) ' என்பது திட்டமிட்ட ஒரு திணிப்பே!
மொழி ஒப்புமை ஆய்வில் பல மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை அடிப்படையாகக்கொண்டு, சில சொற்களின் 'மூலம்' என்ற ஒரு கருத்து முன்வைக்கப்- படுகிறது. இதை ஒப்பியல் அடிப்படையிலான உருவாக்கம் (proto form constructed by the comparative study) என்று கூறுவார்கள். இது hypothetical form - புனைவுகோள் வடிவம்! அதனடிப்படையில்தான் 'மூல திராவிடம் (Proto-Dravidian) ' என்னும் 'சொல் மூலத்தை' அடிப்படையாகக் கொண்டு, இரண்டு கற்பனைக் கருத்துகள் முன்- வைக்கப்பட்டன. ஒன்று, 'மூல திராவிடம்' என்ற ஒரு 'மூல மொழியிலிருந்துதான்' தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 25 மொழிகள் உருவாகின; அடுத்து, 'மூல திராவிடத்தைப்' பேசியவர்கள் 'திராவிட இனத்தினர்' . இதற்குத் தெளிவான ஏகாதிபத்திய அரசியல் பின்னணி உண்டு.
மேற்கூறிய 'கற்பனைக் கருத்துகள்' இன்று அடுத்த நிலைக்கு 'வளர்ந்துள்ளன'. 'மூல திராவிடம்' என்பதே 'தமிழ்தான்'! 'திராவிட இனம்' என்பதே 'தமிழ் இனம்தான்'! இவை உண்மையென்றால், தமிழன் என்ற முறையில் உண்மையில் நான் பெருமைப்படுவேன். ஆனால் இதை நிரூபிக்க அறிவியல்ரீதியான, புறவயமான, விருப்புவெறுப்பு அற்ற ஆய்வுமுறைகள் தேவை. அவற்றின் அடிப்படையில் இவை நிரூபிக்கப்படவேண்டும். அவ்வாறு நிரூபிக்காதவரை, நம் விருப்பத்திற்கு எதையும் கூறக்கூடாது.
திராவிட மொழி ஒப்பாய்வில் ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் நான்கும் தென்திராவிட மொழிகள் என்று கூறப்பட்டன. ஆனால் அதை விரும்பாத தெலுங்குமொழி ஆய்வாளர்கள் (குறிப்பாக பேரா. பி எச் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்) , தமிழோடு தெலுங்கை இணைவாக வைப்பது தவறு, தெலுங்குமொழியானது மத்திய திராவிட மொழி (South Central Dravidian language) என்று கூறினார்கள். இவ்வாறு இன்றைய தேசிய இனங்களின் உணர்வுகள் திராவிட மொழி ஒப்பாய்வைத் தங்கள் விருப்பத்திற்குத் திசைதிருப்புகின்றன.
இதுபோல்தான் தமிழ் உணர்வாளர்களும் 'மூல திராவிடம்' என்பதே 'தமிழ்தான்' என்றும் 'மூல திராவிட இனம்' என்பது தமிழ் இனமே என்றும் கூறுகின்றனர். கன்னடம், மலையாளம் , தெலுங்கு எல்லாம் 'மூல தமிழிலிருந்து' பிரிந்த குழந்தைகளே என்று கூறுகின்றனர். இதைத் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள்! அவ்வளவுதான்!
நம்பிக்கை வேறு! அறிவியல் ஆய்வு வேறு!
விருப்பம் வேறு! அறிவியல் முடிவு வேறு!

கன்னடம் தமிழிலிருந்து பிறந்ததா ? அல்லது தனியே பிறந்த வளர்ந்த ஒன்றா? - கருத்து மோதல்!

 கன்னடம் தமிழிலிருந்து பிறந்ததா ? அல்லது தனியே பிறந்து வளர்ந்த ஒன்றா? - கருத்து மோதல்!

--------------------------------------------------------------------
மனித மொழிகளுக்கிடையே நீடிக்கிற ஒற்றுமைகள், வேற்றுமைகள், இலக்கண வகைப்பாடுகள், மொழி வரலாறு போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள மொழியியல் துறையில் பலவகைப்பட்ட கோட்பாடுகள், ஆய்வுமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை முன்வைப்பவர்கள் அவற்றிக்கான காரணங்களை முதலில் தெளிவாக்கிக்கொண்டு, தங்கள் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அவ்வாறு ஆய்வுகளை மேற்கொள்ளும்போதுதான் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஆய்வுமுடிவுகளை அடையமுடியும்.
அவ்வாறு இல்லாமல் தாய்மொழிப்பற்று, விருப்பு வெறுப்பு, அரசியல் காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற கருத்துகள் பயனற்றவை.
மேற்கூறிய வகையிலான ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் முதலில் தங்களுடைய மொழிக்கோட்பாடு, மொழி ஆய்வுமுறை போன்றவற்றை முதலில் தெளிவாகக் கூறிவிட்டு, தங்கள் ஆய்வு முடிவுகளை முன்வைக்கவேண்டும்.
திராவிட மொழி ஒப்பிலக்கணத்தில் தலைசிறந்த பேராசிரியர் மறைந்த பி.எஸ். சுப்பிரமணியம் (பி எஸ் சுப்பிரமணிய சாஸ்திரி இல்லை இவர்). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியாகப் பணியாற்றியவர். ஆந்திராவைச் சேர்ந்த பேரா. பி எச் கிருஷ்ணமூர்த்தி போன்று திராவிட மொழியியலில் வல்லவர். என்னுடைய பேராசிரியர். அவரது திராவிட ஒப்பிலக்கண அறிவு ஒரு மிகப் பெரிய கடல் போன்றது.
அவர் திராவிட மொழிகள் ஒப்பிலக்கணத்தில் தலைசிறந்த 23 நூல்களைத் தமது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் (Dravidian Comparative Grammar -1 : 2008). அதுபோன்று 'Areal Diffusion and Genetic Inheritance - Problems in Comparative Linguistics Edited by Alexandra Y. Aikhenvald & R.M. w. Dixon :Oxford University Press: 2001). அதுபோன்று உலகமொழிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமைகளின் அடிப்படையில் "Language Typology" என்னும் மொழியியல் பிரிவு வளர்ந்துநிற்கிறது.
மேற்கூறிய நூல்களில் முன்வைக்கப்படுகிற ஆய்வுமுறைகள், முடிவுகள் ஆகியவற்றைப் படித்துவிட்டு, அதனடிப்படையில் முடிவுகளுக்கு வந்து, ஒருவர் கருத்து கூறினால் சரியாக இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒரு நடிகர் ஏதோ ஒரு கூட்டத்தில் போகிறபோக்கில் ஏதோ ஒன்றைக் கூறியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை. அவரது கருத்தைப்பற்றி 'எரிந்த கட்சி - எரியாத கட்சி' என்று பிரிந்துநின்று விமர்சிக்கத் தேவையே இல்லை என்பது எனது கருத்து.
மீண்டும் கூறுகிறேன் . . மொழி ஆய்வு என்பது ஒரு மிகப் பெரிய அறிவியல் துறை. பிற அறிவியல் துறைகளில் ஒன்றைப்பற்றி வேறுபட்ட கருத்துகள் இருப்பதுபோல் அதிலும் வேறுபட்ட கோட்பாடுகள், ஆய்வுவழிமுறைகள் உண்டு.
மேற்கூறிய மொழியியல் ஆய்வாளர்களின் நூல்களை மொழி ஆய்வாளர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டும். அறிவியல் ஆய்வுமுறைகளைப் பின்பற்றவேண்டும். மொழி உணர்வு, மொழிப்பற்று ஆகியவற்றை மொழி ஆய்வோடு வைத்துக் குழம்பிக்கொள்ளக்கூடாது; மற்றவர்களையும் குழப்பி விடவும்கூடாது.

திங்கள், 5 மே, 2025

இன்றைய கல்வி . . .

இன்றைய கல்விக்கும் இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார உற்பத்திக்கும் தொடர்பு கிடையாது. மொழிப் படிப்புகள் மட்டுமல்ல, இயற்பியல், வேதியியல், தாவரயியல் போன்ற படிப்புகளுக்கும் இது பொருந்தும். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பொறியாளர்களை உருவாக்கும் படிப்புகளுக்கே முக்கியத்துவம் அளிப்படுகிறது. எந்தப் படிப்புக்கு இந்தியாவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. மொழிப்படிப்புகளுக்கும் பொது அறிவியல் படிப்புகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அதனால்தான் அவற்றிற்கான துறைகளின் அவலநிலைபற்றி இங்குள்ள மாநில, நடுவண் அரசாங்கங்கள் கவலைப்படுவதில்லை. ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள பொது அறிவியல் துறைகள், மொழி, இலக்கியம், சமூகவியல் படிப்புகளுக்கான துறைகள் மூடப்பட்டாலும் கவலைப்படுவதில்லை.

மருத்துவத்துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்கருவிகள், மருந்துகள் ஆகியவற்றிற்கு சந்தை உருவாக்குவதற்கே இங்கு மருத்துவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் அந்த மருத்துவமனைகளில் 'இறக்குமதி செய்யப்பட்டுள்ள' மருத்துவ உபகரணங்களுக்கு (CT Scan, MRI, PET, Robotic instruments etc.,) நோயாளிகளைப் 'பிடித்துத்தரவேண்டும்'! இதற்கு ஒரு இலக்கை ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவர்களுக்குக் கொடுக்கிறது. அந்த இலக்கை முடித்துத்தராதவர்கள் அங்கு தொடர்ந்து பணியாற்றமுடியாது. மருந்துகள் பரிந்துரைப்பிலும் இதுதான் இங்கு நடைபெறுகிறது. பிறந்த குழந்தைக்கு முன்னால் ஒரு அம்மை தடுப்பூசி போடுவார்கள். இப்போதெல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்குத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குழந்தைக்கு என்ன தடுப்பூசி போடுகிறார்கள் என்ற விவரம்கூட மக்களுக்குத் தெரியாது. மருத்துவர் சொல்கிறோர், ஆகவே போடுகிறோம் என்றுதான் அவர்கள் கூறுவார்கள். இந்தத் தடுப்பூசி மருந்துகள் எல்லாம் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தியே ஆகும்!

எனவே, இன்றைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சந்தை உருவாக்கித்தரும் தொழில்களுக்கான படிப்புகளுக்கே கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஏனைய படிப்புகளைப் பெறுபவர்கள் வேலையின்றித் தெருக்களில் நிறுத்தப்படுகிறார்கள்.

''அனைத்தையும் துறத்தல்'' - பொருள் என்ன?

 ''அனைத்தையும் துறத்தல்'' - பொருள் என்ன?

-------------------------------------------------------------------
சிலர் தங்களது குடும்பம், சொத்து, சுகம், இளம்வயது வாழ்க்கை அனைத்தையும் துறந்து . . . ''தத்துவ வல்லுநர்களாக'' மாறி . . . ''இறைவனின் தூதர்களாக'' மாறி . . .
''சந்நியாசம்'' வாங்கிக்கொண்டு, இலட்சம் கோடிகள் சொத்துகளின் 'இளவரசர்களாக' மதங்களின் பீடங்களில் அமர முன்வருகிறார்கள் . . . இதுவல்லவோ ''தியாகம்?'' . . . இது இந்து மதத்தில்மட்டுமல்ல, கிறித்தவ மதம் , புத்த மதம், சமண மடம் போன்ற அனைத்து மதங்களிலும் உண்டு! வடிவங்கள் மாறலாம்! அவ்வளவுதான்!
இச்செய்தி பரவலாக ஊடகங்களில் தற்போது கூறப்பட்டுவருகிறது!
இந்தப் பதிவில் மதங்கள்பற்றியோ, மதங்களின் 'மடங்கள்' பற்றியோ நான் விமர்சனம் செய்யவில்லை! இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்யவில்லை!
சமூக வரலாற்றில் தோன்றிய நிலவுகிற 'இறை நம்பிக்கை' 'மடங்கள்' போன்றவை, சமூக வரலாற்றில் இன்னொரு கட்டத்தில் மறையும்! மறைந்துதான் தீரும்! எனவே அதுபற்றி விவாதிப்பதற்கான தளங்கள் வேறு!
ஒரே ஒரு செய்தியைத்தான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்!
'அனைத்தையும் துறத்தல்' என்பதுபற்றிய ஒரு கருத்தே இது! 'அனைத்து' என்பதை எவற்றைக் குறித்து நிற்கிறது? இதுதான் எனது ஐயம்!
இவ்வாறு 'இளவரசர்களாக' அல்லது 'சக்கரவர்த்திகளாக' மாறியவர்களுக்கு இருக்க இடம் இல்லையா? உண்ண உணவு இல்லையா? பயணிக்க ஊர்திகள் இல்லையா? உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? அரசாங்கங்களின் அரவணைப்பு இல்லையா? அதுமட்டுமல்ல . . . மடங்களின் சொத்துகளை அபகரிப்பதில் ஏற்படுகிற போட்டி, பொறாமைகள் . . . கொலைகளில்கூட முடிவடைகின்றன!
ஆனால், உண்மையில் மேற்கூறியவை எதுவும் இல்லாமல் . . . மக்களுக்காகவே . . . மக்களிடையே வாழ்ந்து . . . அவர்கள் அளிக்கிற கஞ்சியைக் குடித்துக்கொண்டு . . . கட்டாந்தரையில் படுத்து உறங்கிக்கொண்டு . . . மக்களுடைய உழைப்பிலும் பங்கேற்று . . . மக்களுக்காகவே போராடி . . . இறுதியில் மக்களுக்காகவே . . . அடித்து அல்லது சுட்டுக்கொல்லப்படுகிறார்களே . . . இது 'அனைத்தையும் இழத்தல்' என்னும் சொற்றொடருக்குப் பொருள் இல்லையா?
பகத்சிங், குருதேவ், வாஞ்சிநாதன் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டங்களில் தூக்கில் இடப்பட்டவர்கள்! அல்லது போராட்டத்தில் தாங்களாகவே தங்களைச் சுட்டுக்கொன்று மறைந்தவர்கள்! தங்களது நாட்டுக்காக இவர்கள் தங்கள் குடும்பம், பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து போராடியவர்கள்! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போராட்டங்களில் குதித்தவர்கள்!
கியூபாவில் மக்கள் புரட்சியில் பெரும்பங்காற்றிய பிறகும், பிற நாடுகளின் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் புரட்சியாளர் குவேரா. கியூபாவில் தனக்கு அளிக்கப்பட்ட அமைச்சர் பதவியைத் துறந்து, பொலிவியா நாட்டின் விடுதலைக்காகப் போராடி , இறுதியில் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்!
1948-50 களில் இந்தியாவிலும் ஹைதராபத் நிஜாமை எதிர்த்த விவசாயிகளின் புரட்சியில் பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், சொத்து, சுகங்களைத் துறந்து, போராட்டங்களில் பங்கேற்று, எதிரிகளால் கொல்லப்பட்டார்கள்!
1969-இல் இந்தியாவின் பல பகுதிகளில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகப் போராடிய பத்தாயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள்! அவர்களின் தலைவரான தோழர் சாரு மஜூம்தார் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறையிலேயே கொல்லப்பட்டார். இவர்கள் அனைவரும் குடும்பம், சொத்து, பதவி, சுகம் போன்றவற்றைத் துறந்து தியாகம் செய்தவர்கள்!
எனக்குத் தெரிந்து தமிழகத்திலேயே மேற்குறிப்பிட்ட புரட்சியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கொல்லப்பட்டவர்கள் தோழர்கள் அப்பு, கணேசன், சர்ச்சில், சீராளன், பாலன், தமிழரசன், இரவிச்சந்திரன் போன்ற இளைஞர்கள்! இவர்கள் எல்லோரும் தங்கள் படிப்பு, பதவி, குடும்பம், சொத்து போன்றவற்றைத் துறந்து , மக்களுக்காகப் போராடி . . . போராட்டங்களிலேயே உயிர்துறந்தவர்கள்!
மேலே நான் கூறிய வரிசையில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் . . . தங்கள் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், சொத்து, பதவி போன்ற அத்தனையையும் துறந்து போராடி உயிர் துறந்தவர்கள்!
எது 'அனைத்தையும் இழத்தல்' ? எது 'துறவறம்'? தற்போது இருக்கிற வாழ்க்கையைவிட வசதியான வாழ்க்கைக்குப் பட்டம் சூட்டிக்கொள்பவர்களா?
அல்லது தங்களுக்கு இருக்கிற சொத்து, சுகம் அனைத்தையும் துறந்துவிட்டு, மக்களுக்காவே வாழ்கிறார்களே, இவர்களின் நடைமுறையை அல்லது வாழ்க்கையை 'அனைத்தையும் துறத்தல்' என்பதற்குப் பொருளாகக் கொள்வதா?
ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது! ஆமாம், 'அனைத்தையும் துறத்தல்' என்னும் சொல்லுக்கும் பின்னாலும் வர்க்கங்கள் . . . வர்க்க நலன்கள் ஒளிந்துகொண்டிருக்கிறது!
அனைத்து நாடுகளிலும் . . . அனைத்து மதங்களின் மடங்கள் அல்லது தலைமைப்பீடங்களுக்கு . . . கோடியே கோடி சொத்துகளைக் கொட்டிக் கொடுத்தவர்கள் யார்? மடாதிபதிகளும் அவர்களுடைய சீடர்களும் உழைத்துச் சேர்த்த சொத்துகளா இவை? இல்லை.
மக்கள் உழைப்பைக் கொள்ளையடித்த அரசர்கள் . . . சக்கரவர்த்திகள் . . . அரசுகள் 'நன்கொடையாக' கொடுத்தவையே இச்சொத்துகள்! ! ஏன் அவ்வாறு கொட்டிக்கொடுத்தார்கள்? 'பொது நலனா'? அல்லது 'வேறு நலன்களா? ' சிந்தித்துப் பார்த்தால் விடை கிடைக்கும்!

'சில', 'பல' - எண்ணுப்பெயரடைகளா, எண்ணுப்பெயர்களா?

 'சில', 'பல' - எண்ணுப்பெயரடைகளா, எண்ணுப்பெயர்களா? ஒரு குழப்பம் எனக்கு! தமிழ் ஆய்வாளர்கள் தயவுசெய்து உதவவும்.

------------- -------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கருத்து:
-----------------
‘சில’, ‘பல’ என்பவை எண்ணுப்பெயரடைகளாகவும் (Quantifier) ‘சிலர்’, ‘பலர்’ என்பவை பால் ஈறுபெற்ற எண்ணுப்பெயர்களாகவும் பயன்படுகின்றன.
‘மாணவர்கள் சிலர் இன்னும் வரவில்லை’
‘சில புத்தகங்கள் கிடைத்தன’ ('புத்தகங்கள் சில கிடைத்தன')
மேற்கண்ட வாக்கியங்களில் ‘மாணவர்கள்’ ‘புத்தகங்கள்’ ஆகியவற்றின் எண்ணிக்கையைச் ‘சிலர்’ ‘சில’ என்பவை குறித்து நிற்கின்றன.
‘சில’ என்னும் எண்ணுப்பெயரடை , பலர்பால் பாலீறு ஏற்று ‘சிலர்’ எனவும், ‘பல’ என்னும் எண்ணுப்பெயரடை ‘பலர்’ எனவும் அமைகின்றன. ‘ஒரு’ என்னும் எண்ணுப்பெயரடை ‘அர்’ என்னும் பாலீறு பெற்று ‘ஒருவர்’ என்று அமைவதுபோல, ‘சில’ ‘பல’ என்பவையும் ‘சிலர்’ ‘பலர்’ என்று அமைகின்றன.
‘மாணவர்கள்’ என்னும் பெயர்ச்சொல் பன்மை விகுதி பெற்றிருப்பதால், அவர்களைக் குறித்து நிற்கிற ‘சிலர்’ ‘பலர்’ என்னும் சொல்லும் ஒன்றுக்குமேற்பட்ட மாணவர்களைக் குறிக்கின்றன.
மற்றொரு கருத்து:
-------------------------------------------------------
‘சில’ ‘பல’ என்பவை வேற்றுமைகளை ஏற்பதால், அவற்றை அஃறிணை ‘எண்ணுப் பெயராகவும்’ கொள்ளலாம். இங்கு ‘அவை’ ‘இவை’ என்னும் அஃறிணைப் பதிலிடு பெயர்கள் வேற்றுமைகள் ஏற்று, ‘அவற்றை’ ‘இவற்றை’ என்று மாறி அமைவதை ஒப்பிட்டு நோக்கலாம்.
‘ஆசிரியர் பல புத்தகங்கள் வாங்கினார்’
‘ஆசிரியர் புத்தகங்கள் பலவற்றை வாங்கினார்’
‘ஆசிரியர் சில புத்தகங்கள் வாங்கினார்’
‘ஆசிரியர் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினார்’
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளிலும் ‘பல + அற்று (சாரியை) , பலவற்று + ஐ --> பலவற்றை’ என்றும் அதுபோன்றே ‘சில + அற்று --> சிலவற்று + ஐ --> சிலவற்றை’ என்றும் மாறுகின்றன.
‘சில / பல புத்தகங்கள்’ என்று வரலாம்; ஆனால், ‘சில / பல மாணவர்கள்’ என்று வரக்கூடாது; அதற்குக் காரணம், ‘மாணவர்கள்’ உயர்திணை; எனவே, ‘மாணவர்கள் சிலர் / பலர்’ என்றுதான் கூறவேண்டும் என்னும் கருத்தும் உள்ளது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India