ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

தலீத் மக்களிடையே சாதி உணர்வு இல்லையா? அதை ஏன் முற்போக்காளர்கள் கண்டிக்கவில்லை? -----------------------------------------------------------------

 தலீத் மக்களிடையே சாதி உணர்வு இல்லையா?

அதை ஏன் முற்போக்காளர்கள் கண்டிக்கவில்லை?
-----------------------------------------------------------------
நெல்லையில் அண்மையில் நடைபெற்ற ஆணவக்கொலையைத் தொடர்ந்து, மற்றொரு விமர்சனமும் முகநூலில் பார்க்கிறேன். ''தலீத் மக்களிடையே சாதி உணர்வு இல்லையா?'' என்பதே அந்த விமர்சனத்தின் உள்ளடக்கம்.
தலீத் மக்களிடையே சாதி உணர்வு இல்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால் அந்த உணர்வு அவர்களிடையே தோன்றி நீடிப்பதற்கு என்ன காரணம் என்பதையும் பார்க்கவேண்டும்.
நூற்றாண்டுகாலமாகத் தலீத் மக்களின்மீதான பிற சாதியினரின் மிகக் கொடுமையான தீண்டாமையை யாராலும் மறுக்கமுடியாது. ஒரு சாதி, இரண்டு சாதிகள் இல்லை . . . தமிழகத்தில் உள்ள அனைத்து ''மேல்சாதியினரும் இடைச்சாதியினரும்'' தலீத் மக்களிடம் தீண்டாமையைப் பின்பற்றினர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அவர்களை யாரும் தொடக்கூடக் கூடாது. இந்தச் சாதியினரின் குழந்தைகள் தலீத்களைத் தெரியாத்தனமாக தொட்டுவிட்டால், 'தீட்டு' என்று கூறி, குழந்தைகளின் ஆடைகளைக் களைவதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன்! ஆதிக்கச் சாதியினரின் தெருக்களில் தலீத்கள் காலணிகூட அணிந்துசெல்லக்கூடாது! ஊருக்கு வெளியே தனியே தலீத்களுக்குத் தனிக் குடியிருப்பு! பள்ளிக்கூடங்களில் தனி அமர்வு! கோயில்களில் ஏனைய சாதியினருடன் ஒன்றாக இணைந்து வழிபாடு செய்யக்கூடாது!
இதுபோன்ற நிலை தலீத் அல்லாத மேல்சாதியினர், இடைச்சாதியினர் யாருக்கும் கிடையாது என்பதே உண்மை. அவர்களுக்கிடையில் திருமண உறவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருவரை ஒருவர் தொடுவதற்குத் தடை இல்லை. இணைந்து பள்ளிகளில் அமரத் தடை இல்லை! கோயில்களில் நுழையத் தடை இல்லை!
தலீத் மக்களும் இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சூழல் அப்போது இருந்தது இல்லை எனக் கருதுகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் தலீத் மக்களிடையே கல்வி, தொழில் போன்றவற்றின் காரணமாக விழிப்புணர்வு வந்துள்ளது. தலீத் இளைஞர்கள் விழிக்கத் தொடங்கினர். கல்வி, தொழில் ஆகியவற்றால் சற்று வாழும் வசதிகளைப் பெற்ற தலீத் இளைஞர்கள் தங்களது முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கொந்தளிக்கத் தொடங்கினர்.
இந்த வளர்ச்சி நிலையில் தலீத் அல்லாத பிற சாதியினரின் குடும்ப வாரிசுகளுடன் கல்வி நிறுவனங்கள், உற்பத்தித் தளங்களில் தலீத் இளைஞர்கள் தொடர்புகொள்ளும் ஒரு வளர்ச்சி நிலை ஏற்பட்டது. சாதிகளுக்கு அப்பாற்பட்டு காதல், திருமணங்கள் நீடிக்கத் தொடங்கியுள்ளன. இதை மேல்சாதியினர் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை! தலீத்களைத் தாக்கத் தொடங்கினர். இதுவரை எதிர்த்துப்போராடாத தலீத் மக்கள் இப்போது திருப்பித் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். தலீத் இளைஞர்கள் தங்கள்மீது பிற சாதியினர் வன்முறைத் தாக்குதல் தொடுக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதை விரும்பவில்லை. திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள்.
இதன் பின்விளைவு . . . தலீத் மக்களுக்கும் மேல்சாதினர், இடைத்தட்டு சாதியினர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் தொடங்க ஆரம்பித்தது.. இதுபோன்ற தற்காப்புத் தாக்குதல்களில் தலீத் இளைஞர்கள் ஈடுபடும்போது, அவர்களிடையே 'சாதிய உணர்வு' வளரத்தானே செய்யும்! இது அவர்கள்மீது 'திணிக்கப்பட்ட' ஒரு 'கட்டாயச் சூழல்தானே'!
ஒட்டுமொத்தமாகச் சாதிய உணர்வு அடிப்படையில் மேல்சாதியினர், இடைத்தட்டுச் சாதியினர் 'சாதிய ஒடுக்குமுறைகளை' தலீத் மக்களின்மீது ஏவும்போது, தலீத் இளைஞர்கள் தற்காப்புக்காக, சுய மரியாதைக்காக ஒன்றுபட்டு போராடவேண்டிய சூழல் ஏற்பட்டது. தாங்கள் தாக்கப்பட்டால், திருப்பித் தாக்குவோம் என்று தலீத் இளைஞர்களும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இதை மனத்தளவில்கூட ஏற்றுக்கொள்ள மேல்சாதியினர் தயார் இல்லை. இதன் விளைவு . . . தலீத் மக்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வன்முறைகளில் ஈடுபடவேண்டிய தேவை அவர்கள்மீது திணிக்கப்பட்டது. இதை நான் சரி என்று கூறவரவில்லை. வர்க்க உணர்வின் அடிப்படையிலான அரசியல் உணர்வு தலீத் மக்களிடையேயும் பிற சாதியின மக்களிடமும் வளராத காரணத்தால், ஆதிக்கச் சாதியினர்களிடையே நீடிக்கிற பணக்காரர்கள் தங்கள் நலன்களுக்காக இப்போராட்டங்களை 'சாதியப் போராட்டங்களாக' வளர்க்கத் தொடங்கினர். எல்லாச் சாதிகளிலும் உள்ள பணக்காரர்கள் தங்கள் தங்கள் சாதிகளில் 'அடியாட்களை' 'கூலிப்படைகளை' வளர்த்துவிடுகிறார்கள். இதை இந்தியச் சமூகத்தின் ஆளும் வர்க்கங்களும் திட்டமிட்டும் 'தூண்டிவிடுகின்றனர்'. அவர்களுக்கு மக்களிடையே வர்க்க அடிப்படையிலான அரசியல் உணர்வு தோன்றி வளர்ந்துவிடக்கூடாது. 'சாதிய மோதலா' அல்லது 'வர்க்க அரசியலா' - எது வளரவேண்டும் என்பதில் ஆளும் வர்க்கங்கள் தெளிவாக இருக்கின்றன!
அதன் விளைவே . . . இன்றைய சாதிய அடிப்படையிலான வன்முறைகள்! எனவே, தலீத் இளைஞர்கள் மத்தியில் இன்று சாதிய உணர்வு நீடிக்கிறது என்றால், அது அவர்களின் 'தற்காப்புக்காக' வளர்ந்துள்ள ஒன்றாகும். இது தவறான ஒன்று என்பது 100 விழுக்காடு உண்மை. மேல்சாதியினரின் சாதியக் கொடுமைகளை எதிர்த்து நிற்க 'சாதிய உணர்வையே' தலீத் மக்கள் கையாளக்கூடாது! மேல்சாதியினரின் சாதிய உணர்வுக்கு மாற்று தலீத் மக்களின் சாதி உணர்வு இல்லை! உண்மையான வர்க்க அரசியல் உணர்வும் அதன் அடிப்படையிலான போராட்டங்களுமே உண்மையான , சரியான வழிமுறைகள்! ஆனால் ஆளும் வர்க்கங்கள் அதுபோன்ற அரசியல் உணர்வுகள் தலீத் மக்களிடையே வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். சாதிய அடிப்படையிலான மோதல்கள்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கவலைப்படவும் அவர்களுக்குத் தேவை இல்லை! உழைக்கும் மக்கள் தங்களுக்கிடையே சாதிய அடிப்படையில் மோதிக்கொண்டால் ஆளும் வர்க்கங்களுக்கு நல்லதுதானே! இது பிரித்தாளும் சூழ்ச்சிதானே!
இதிலிருந்து தலீத் இளைஞர்களை மட்டும் அல்லாமல் பிற சாதியின இளைஞர்களையும் அரசியல் படுத்தவேண்டும். இங்குக் கவனமாகப் பார்க்கவேண்டியது ஒன்று. தற்போதைய தேர்தல் அரசியலுக்குச் சாதிய அடிப்படையிலான மோதல்கள் தேவை. எனவே அவை சாதிய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, மக்களைப் பிளவுபடுத்தத்தான் செய்யும்.
நான் கூறுவது, சமூக வளர்ச்சிக்கான, உழைக்கும் மக்களுக்கான . . . வர்க்க அடிப்படையிலான அரசியல்!
சாதிய அடிப்படையிலான வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியதுதான்! அதற்கு மாற்று வர்க்க அடிப்படையிலான அரசியல் உணர்வுதான்! ஆனால் இதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? இதுவே இன்று நம்முன் நீடிக்கிற வினா! விடை தேடலாம்!
என்னுடைய வயது இப்போது 75. கடந்த 65 ஆண்டுகளாக நான் பார்த்த நேரடியான அனுபவமும் (குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்!) , எனது தத்துவ அரசியல் அடிப்படையுமே மேற்கூறிய எனது கருத்துகளுக்கு அடிப்படை.

சாதி அடிப்படையிலான . . . வர்க்க அடிப்படையிலான 'ஆணவக்கொலைகளுக்கு' இன்றைய தீர்வு . . .

 சாதி அடிப்படையிலான . . . வர்க்க அடிப்படையிலான 'ஆணவக்கொலைகளுக்கு' இன்றைய தீர்வு . . .

-------------------------------------------------------------------------
ஆணவக்கொலைகளைத் தடுத்துநிறுத்த தனிச்சட்டம் தேவை என்று கூறப்படுகிறது. தனிச்சட்டம் வரட்டும்! வரவேற்போம்!
ஆனால் இன்றைய சூழலில் அச்சட்டத்தினால் பெரிதாக எந்த மாற்றைத்தையும் கொண்டுவந்துவிடமுடியாது! ஆதிக்க சாதியினர் பலவகைகளில் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டு!
மாறாக, கிராமப்புறங்களில் சமுதாய உணர்வுடைய (சாதி உணர்வு இல்லை!) மேல்சாதியின இளைஞர்கள் . . . தலீத் மக்களின்மீதான வன்முறைகளை . . . ஆணவக்கொலைகளை . . . தடுத்துநிறுத்த ஒன்றுதிரளவேண்டும்! தலீத் மக்களின் போராட்டங்களுக்கு மேல்சாதியின இளைஞர்களே தலைமைதாங்கவேண்டும்! இவர்களைப் பயன்படுத்தித்தான் மேல்சாதியினரின் மேல்தட்டு வர்க்கங்கள் தங்கள் 'தலீத் எதிர்ப்பு ' ( வர்க்க உள்நோக்கத்துடன்) நடவடிக்கைகளைச் செயல்படுத்துகின்றனர். இது தடுத்துநிறுத்தப்பட வேண்டும்!
இதுபோன்ற செயல்பாடுகள் கிராமப்புறங்களில் பெருகவேண்டும். இதுவே இன்று மேற்கொள்ளக்கூடிய வழிமுறை!
ஆனால் இது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழலாம்! சாத்தியமாக்க வேண்டும்! வேறு வழி இல்லை!

ஆணவக்கொலை . . . தலீத் மக்களுக்கும் மேல்சாதியினர்க்கு இடையில் மட்டும்தானா? தலீத் மக்களிடையே இல்லையா? ------------------------------------------------------------------

 ஆணவக்கொலை . . . தலீத் மக்களுக்கும் மேல்சாதியினர்க்கு இடையில் மட்டும்தானா? தலீத் மக்களிடையே இல்லையா?

-------------------------------------------------------------------------
மேல்சாதிகளின் குடும்பங்களைச் சார்ந்த பெண்களை, தலீத் சாதியினரின் ஆண்கள் காதலித்துத் திருமணம் செய்வதால்மட்டும் ஆணவக்கொலை நடக்கிறதா? தலீத் மக்களிடையேகூட பிரிவுகள் இருக்கின்றன; அவர்களிடையேயும் 'ஆணவக்கொலை' நடைபெறுகிறதே, அதை யாரும் கேள்விக்கு உட்படுத்தமாட்டீர்களா என்று சில நண்பர்கள் முகநூலில் பதிவு இட்டிருந்தார்கள்! உண்மைதான்! அதையும் நாம் கண்டிக்கவேண்டும்; எதிர்க்கவேண்டும். அதில் ஐயமே கூடாது!
இங்குத் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான ஒன்று மட்டுமல்ல; இரு குடும்பங்களுக்கு இடையிலான ஒன்று! மணமகன், மணமகள் இருவரின் முடிவு மட்டுமல்ல இங்கு! இரு குடும்பங்களின் முடிவாகவும் இருக்கின்றன. இரு குடும்பங்களுக்கு இடையே உருவாக்கப்படும் ஒரு உறவாகவும் பார்க்கப்படுகிறது! ஆனால் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் திருமணம் செய்யும் இருவரின் முடிவாகவே பெரும்பாலும் நீடிக்கிறது. அங்கு இருவரின் வர்க்க நிலை கணக்கில் கொள்ளப்படலாம். மிகப் பெரிய பன்னாட்டு முதலாளிகளின் குடும்பம், அங்குள்ள சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மணமக்களின் இனம், நாடு போன்றவற்றையெல்லாம் வர்க்கத் தகுதி பின்னுக்குத் தள்ளிவிடும்.
இங்கும் வர்க்கநிலையைமட்டும் கணக்கில் கொள்ளும் 'உயர்வர்க்கக் குடும்பங்கள்' இருக்கின்றன! அக்குடும்பத்தினர் சாதி, இனம், நாடு தாண்டியும் திருமண உறவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.
திரைப்பட நாயகர்கள், நாயகிகள்கூட சாதி, மதங்களைவிட 'செல்வநிலையையே' கணக்கில் கொள்கிறார்கள்!
ஆனால் கிராமப்புறங்களில் . . . முதலாளித்துவம் முழுமையாக வளர்ந்து நீடிக்காத இடங்களில் . . . திருமணங்களில் முதலில் 'சாதியே' கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால் அத்துடன் 'வர்க்க நிலையும்' கணக்கில் கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் எனக்குத் தெரிந்து சில பணக்காரக் குடும்பங்களின் பெண்கள், தங்கள் சாதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளிகளை அல்லது வேலையாட்களைக் காதலித்துத் திருமணம் செய்வதை அக்குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதில்லை. அதனடிப்படையில் ஏழை மணமகன்களை மட்டுமல்ல, தங்கள் (மண) மகள்களையே வெட்டிச் சாய்த்த நிகழ்ச்சிகள் உண்டு! இது தொடர்ந்துகொண்டும் இருக்கிறது! மறுக்கமுடியாது!
அதுபோன்று, தலீத் மக்களிடையேயும் சில பிரிவுகள் நீடிக்கின்றன. ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவர், மற்றொரு பிரிவைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்வதில் அங்கும் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் இது மிகச் சிறுபான்மை! அதற்காக இந்த 'வன்கொடுமையைக்' கண்டிக்கக்கூடாது என்பது இல்லை. உறுதியாகக் கண்டிக்கவேண்டும். எதிர்க்கவேண்டும்! இதில் ஐயமே இல்லை!
ஆங்காங்கே மிகச் சிறிய அளவில் இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் இடையேயும் இப்பிரச்சினை தோன்றி நீடித்து, கொலைகளிலும் முடிகிறது. அதையும் நாம் எதிர்க்கவேண்டும். ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களை மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்வதை உறுதியாக எதிர்க்கவேண்டும்!
ஆனால் . . . ஒரு பெரும் மக்கள் தொகுதியையே 'தீண்டத்தகாதவர்கள்' என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒதுக்கிவைத்து, ஊருக்குவெளியே 'குடியிருக்கச்செய்து' , 'அவர்கள் உடலைக்கூடத் தொடக்கூடாது என்று கூறி, பல்வேறு வகையான ஒடுக்குமுறைகளை அவர்கள்மீது ஏவிவிடுகிற 'மேல்சாதிகளைச் சேர்ந்த உயர்வர்க்கங்களின் ' 'வன்கொடுமையைக் ' கண்டிக்காமல் இருக்கமுடியாது! அந்தப் பலவகையான சாதிய ஒடுக்குமுறைகளில் ஒன்றுதான் இந்தக் காதலையொட்டிய 'ஆணவக்கொலை'! ஒருவரைச் 'சாதி' 'வர்க்கம்' என்று இரண்டு அடிப்படைகளிலும் இச்சமுதாயம் பார்க்கிறது! இதுதான் உண்மை!
சாதிக்குள் உயர் வர்க்கம் - ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்! காதலர்களின் குடும்பங்கள் முதலில் சாதியைக் கணக்கில் கொள்ளும்! அதிலேயே பிரச்சினை என்றால் திருமணம் எதிர்க்கப்படும்! அவ்வாறு இல்லாமல் சாதி ஒன்றுதான், ஆனால் வர்க்கம் வேறு என்றால், அப்போது வர்க்கநிலையும் கணக்கில் கொள்ளப்படும்! சாதியும் வர்க்கமும் இங்குப் பின்னிப் பிணைந்து நீடிக்கிறது. இதில் நமக்குத் தெளிவு வேண்டும்!
சாதிய அடிப்படையில் நடைபெறுகிற கொலைகளும் 'சாதிய ஆணவக்கொலைகள்தான்'! வர்க்க அடிப்படையில் நடைபெறுகிற கொலைகளும் 'வர்க்க ஆணவக்கொலைதான்'! இரண்டையுமே நாம் எதிர்க்கவேண்டும்! காதலர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவராக இருந்து, ஆனால் வேறுபட்ட வர்க்கங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் கொலைசெய்யப்பட்டால் அதுவும் 'ஆணவக்கொலைதான்'!
ஆனால் தலீத் மக்களிடையே சில பிரிவுகள் இருந்தாலும், அவர்களை அனைவரையும் ஒன்றாகத்தான் உயர்சாதியினர் 'தீண்டத் தகாதவர்களாகப்' பார்க்கிறார்கள்! இதுதானே உண்மை! திருமண உறவில்மட்டுமா தலீத் மக்கள் கொல்லப்படுகிறார்கள்? ஒடுக்கப்படுகிறார்கள்? இந்தச் சூழலில் 'தலீத்' என்பதற்காகவே காதலர்கள் கொலைசெய்யப்படுவதை 'ஆணவக்கொலை' என்று கண்டிப்பதுதானே உண்மையான ஒரு ஜனநாயகவாதியின் கடமையாக இருக்கமுடியும்?

தேர்தல் அரசியலும் சாதியம் தக்கவைப்பும் . . .

 தேர்தல் அரசியலும் சாதியம் தக்கவைப்பும் . . .

------------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் தற்போதைய 'தேர்தல் அரசியல்' சாதி அடிப்படையிலான ஒன்றாகத்தான் நீடிக்கிறது. குறிப்பிட்ட தொகுதியில் எந்த சாதியினர் அதிகம் என்பதை அடிப்படையாகக்கொண்டே தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தெரிவுசெய்கின்றனர். அடுத்து, அமைச்சர் பதவிகளை அளிப்பதிலும் சாதிய அடிப்படை நீடிக்கிறது. 'நாங்கள் அனைத்துச் சாதியினர்களுக்கும் ஒதுக்கீடு செய்கிறோம்' என்று இந்தக் கட்சிகள் தங்களை நியாயப்படுத்தலாம். ஆனால் அது உண்மை இல்லை!
கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளை நியமிப்பதிலும் குறிப்பிட்ட பகுதியில் எந்தச் சாதி அதிகமாக இருக்கிறது என்பதையே அடிப்படையாகக் கொள்கின்றன. ஆகவே, ஒட்டுமொத்தத்தில் 'சாதியப் பிரிவினைகள்' தக்கவைக்கப்படுகின்றன. பொருளாதாரத்தைக் கைகளில் வைத்துள்ள 'மேல்சாதியினர்களுக்கு' இது பயன்படுகிறது. வர்க்க அடிப்படையில் மக்கள் அணிசேர்வதைத் தடுக்கிறது. வர்க்க அடிப்படையில் மக்கள் அணிதிரளும் சூழல் எப்போது வருகிறதோ, அப்போதுதான் ஓரளவாவது 'மேல்சாதியினரின்' தீண்டாமை நீங்கும். தலீத் மக்களுக்குத் தனித்தொகுதி ஒதுக்குவதால்மட்டும் அவர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி இல்லாமல் போய்விடாது.
கோயில் வழிபாடுகளிலும் பெரும்பாலான இடங்களிலும் சாதிய வேறுபாடு நீடிக்கிறது. . கோயில் வழிபாடுகளில் பிராமணர்களின் ஆதிக்கத்தைப் பிற மேல்சாதியினர் ஏற்றுக்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, திருமணம், பிற சடங்குகள் ஆகியவற்றில் பிராமணர்களின் 'ஆதிக்கத்தை' இந்த மேல்சாதியினர் தாமே முன்வந்து ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கோயில்களுக்குள் நுழைய அல்லது திருவிழா கொண்டாட தலீத் மக்களை அனுமதிப்பதில்லை.
ஆக, மொத்தத்தில் அரசியல், வழிபாடு, திருமண உறவு ஆகிய மூன்றிலும் தலீத் மக்களின்மீது இந்த மேல்சாதியினர் வன்கொடுமைகளில் இறங்குகின்றனர். இந்த மூன்றிலும் சாதி வேறுபாடு என்று மறைகிறதோ அன்றுதான் தமிழ் மண்ணைப் 'பகுத்தறிவு மண்' என்று கூறமுடியும்.
சாதிய வன்கொடுமை செயல்கள் தனிமனிதர் பிரச்சினை இல்லை என்பதைத் தலீத் மக்களும் புரிந்துகொள்ளவேண்டும். கொலை உட்பட வன்முறையில் பாதிக்கப்படுகிற தலீத் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளச் சில இடங்களில் வன்முறை நடவடிக்கைகளில் இறங்கினாலும், அதுவே சாதியக் கொடுமைகளுக்குத் தீர்வு ஆகாது. மேலும் மேலும் அடித்தட்டு மக்களைப் பிரித்தாளும் மேல் வர்க்கங்களின் சூழ்ச்சிகளுக்கே அது உதவும்.
தீர்வு என்ன?
----------------------
அனைத்துச் சாதிகளிலும் இருக்கிற சமுதாய உணர்வாளர்கள் . . . சாதி எல்லையைத் தகர்த்தெறிந்து, வர்க்க அடிப்படையில் ஒன்றிணைந்து , அரசியல், பண்பாட்டுத் தளங்களில் போராடுவதுதான் தலீத் மீதான வன்கொடுமைகளுக்குத் தீர்வாக அமையும். இல்லையென்றால், மேல்தட்டு வர்க்கங்கள் தங்கள் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள . . . சாதி மோதல்களை அதிகரிக்கவே முயலும்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே!

ஆணவக்கொலையும் 'பகுத்தறிவு இயக்கங்களும்'!

 ஆணவக்கொலையும் 'பகுத்தறிவு இயக்கங்களும்'!

-------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் நடைபெறும் ஆணவக்கொலைபற்றிப் பல பதிவுகளை நான் இட்டுள்ளேன். எனவே புதிதாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.
ஆனால் ஒரே ஒரு கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பகுத்தறிவு இயக்கம், சுயமரியாதை இயக்கம் , திராவிட இயக்கம் , பிராமணர் எதிர்ப்பு இயக்கம் என்று பல பெயர்களில் நடைபெற்ற போராட்டங்கள் எல்லாம் . . . பிராமணர்களுக்கு எதிரான பிரமாணர் அல்லாத மேல்சாதிகளின் (பிள்ளை, முதலியார், நாயுடு, கவுண்டர் போன்ற சாதியினர்) இயக்கங்கள்தான் என்பதை ஆணவக்கொலைகள் மீண்டும் நிலைநாட்டுகின்றன.
நிலவுடைமையாளர்களாக நீடித்த பிராமணர்கள், நிவுடைமையாளர்களாக நீடித்த மேற்குறிப்பிட்ட மேல்சாதியினர்மீது செலுத்திய பண்பாட்டு ஆதிக்கத்தை . . . தீண்டாமையை . . . எதிர்த்து இந்த மேல் சாதியினர் இயக்கங்களைக் கட்டினர். பிராமணர்களின் சாதிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள். இது தவறு இல்லை. ஆனால் இந்த மேல்சாதியினர் அன்றிலிருந்து இன்றுவரை அடிமட்ட விவசாயத் தொழிலாளிகளான தலீத் மக்களின்மீது சாதிய வன்கொடுமைக்கு எதிராக ஏன் செயல்படவில்லை? அவ்வாறு செயல்படாதது மட்டுமல்ல, தாங்களே தலீத்மக்கள்மீது சாதிய ஒடுக்குமுறையை ஏவிவிடுவது ஏன்?
தங்கள்மீது பிராமணர்கள் சாதிய ஒடுக்குமுறையைச் செலுத்தக்கூடாது, ஆனால் தாங்கள் தலீத் மக்கள்மீதான சாதியக் கொடுமையைக் கைவிடமாட்டோம் என்பதுதானே இந்த ''இயக்கத் தலைவர்களின்'' 'இலட்சியம்'?
தஙகளைப் ''பகுத்தறிவுக் கட்சிகள்'' என்று கூறிக்கொள்கிற இந்த இயக்கங்கள் சாதியக் கொடுமைக்கு எதிரானவர்கள் இல்லை . . . மாறாக, தங்கள்மீது பிராமணியர் தீண்டாமை கூடாது;
தாங்களும் நிலவுடைமையாளர்கள்தான் . . . பிராமணர்களும் நிலவுடைமையாளர்கள்தான் . . . எனவே தங்கள்மீது பிராமணர்கள் சாதிய ஆதிக்கம் கூடாது! இதுதான் இந்த மேல்சாதியினரின் 'பகுத்தறிவுக் கொள்கை'!
அதேவேளையில் தலீத்கள் விவசாயத் தொழிலாளிகள்தான் . . . எனவே அவர்கள்மீது தாங்கள் சாதிய வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்! இதுதான் இந்தப் 'பகுத்தறிவாதிகளின் கொள்கை'! இதற்கு எடுத்துக்காட்டுகள்தான் பல வருடங்களாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல வருடங்களாகப் பிராமணர் அல்லாத மேல்சாதியினர் மேற்கொள்கிற 'ஆணவக்கொலைகளாகும்'!
பொருளாதாரரீதியாகவும் சாதிய ரீதியாகவும் ஆண்டாண்டுகாலமாக ஒடுக்கப்பட்டுவருகிற தலீத் மக்கள் . . . இனியாவது தங்கள்மீதான மேல்சாதிகளின் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக . . . வர்க்க உணர்வுடன் உண்மையான சமூக இயக்கத்தைக் கட்டி. தங்களது உண்மையான விடுதலைக்காகச் செயலாற்றவேண்டும்! தமிழ்நாடு உண்மையான 'பகுத்தறிவு மண்' என்றால் , 'சுயமரியாதைக்கு முன்னுதாரணம்' என்றால் . . . தலீத்கள்மீதான மேல்சாதியினரின் வன்கொடுமை . . . ஆணவக்கொலைகள் . . . நடைபெறக்கூடாது! என்று இந்தவொரு நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் தமிழ்நாட்டைப் 'பகுத்தறிவு மண்' 'சுயமரியாதை மண்' என்று கூறமுடியும்! இல்லையென்றால் இதுபோன்ற முழக்கங்கள் எல்லாம் போலித்தனம்தான். . . ஏமாற்றுக் கலைகள்தான்!

திங்கள், 14 ஜூலை, 2025

தேசிய இனங்களின் பொது எதிரியே தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரி!

 ''தென்மொழி'' - தூயதமிழ்த் திங்களிதழில் (ஜூன் 2025) எனது கட்டுரை . . . ஆசிரியர் முனைவர் மா. பூங்குன்றன் அவர்களுக்கு எனது நன்றி!

-----------------------------------------------------------------------
தேசிய இனங்களின் பொது எதிரியே
தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரி!
--------------------------------------------------------------------------
இன்றைய கட்டத்தில் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களுக்கும் ஒடுக்குகிற தேசிய இனத்தின் ஆளும் வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாடே முதன்மையான முரண்பாடு!
இன்றைய இந்திய நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள் நீடிக்கின்றன. குமுக வரலாற்றில் நிலவுடைமைக் குமுதாயத்தின் இறுதிக் கட்டத்தில் முதலாளிய உந்து ஆற்றல் வளர்ச்சியையொட்டித் தோன்றி நீடிப்பதே தேசிய இனம் என்னும் ஒரு உருவாக்கம்!
இந்தியாவில் மேற்கூறியவாறு தோன்றிய தேசிய இனங்கள் பல இருக்கின்றன. நிலப்பகுதி, மொழி, பண்பாடு, பொருளாதார வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குமுக உருவாக்கமே தேசிய இனம் என்பதாகும். இஃது உடலியல் அடிப்படையில் முதலாளியச் சிந்தனையாளர்களால் திணிக்கப்பட்ட 'இனம் (Race) ' இல்லை. குலங்கள், குலமரபுகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் உருவாகுகிற 'தேசிய இனம்' என்பதாகும்.
இந்திய நிலப் பகுதியில் இன்று பல்வேறு தேசிய இனங்கள் தோன்றி நீடித்து வருகின்றன. இதனால் பல மொழிகள் அருகருகே நீடிக்கின்றன. தென் பகுதியில் தமிழ்த்தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம், கன்னடத் தேசிய இனம், மலையாளத் தேசிய இனம் என்று நான்கு பெரும் தேசிய இனங்கள் நீடிக்கின்றன. அதுபோன்று வட இந்தியாவில் நீடிக்கிற இந்தித் தேசிய இனத்தோடு, வடகிழக்குப் பகுதியில் நாகலாந்து, மணிப்பூர், மிசோராம் போன்ற பகுதிகளிலும் பல்வேறு தேசிய இனங்கள் நீடிக்கின்றன.
எனவே 'இந்தியா' என்னும் நாடு - நிலப் பகுதி - ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றாக நீடிக்கிறது. இருப்பினும் இந்தி பேசும் தேசிய இனத்தின் சுரண்டும் வகுப்புகளே ஆட்சியில் அமர்ந்துள்ளன. இந்தச் சுரண்டு வர்க்கங்கள் இந்தி, சமசுகிருதம், இந்து மதம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்து, அரசு அதிகாரத்தையும் தாங்களே வைத்துக்கொண்டு, தங்கள் வகுப்பு நலன்களை - பொருளியல் நலன்களை - பாதுகாத்து வருகின்றன.
மேற்குறிப்பிட்ட வகுப்புகளும் அவற்றின் அரசியல் தலைமைப் பீடத்தில் இருக்கிற கட்சிகளும் ( காங்கிரசு, பாரதிய சனதா கட்சி) இந்தியாவில் உள்ள இந்திமொழி பேசாத தேசிய இனங்களைப் பலவகைகளில் அடக்கி ஆள்கின்றன. அந்தத் தேசிய இனங்களின் தன்தீர்வு (சுயநிர்ணய) உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கின்றன.
குறிப்பாக, ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் மொழிகளின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. பல தேசிய இனங்களையும் அவற்றின் பல மொழிகளையும் கொண்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் மொழியான இந்திமொழியை இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்திய அரசியல் சட்டத்தில் முதன்மைப்படுத்தியுள்ளது. மற்ற மொழிகளுக்கு அத்தகுதியை வழங்குவதற்கு மேற்கூறிய வகுப்புகள் அணியமாக இல்லை.
அரசுப் பணிகள், நடைமுறைகள் அனைத்திலும் இந்திமொழியே என்னும் மொழி ஆதிக்கத்தை நீடித்துவருகிறது. அதற்கு அடுத்து ஆங்கில மொழியைத் துணையாக வைத்துக்கொள்கிறது. ஏனைய எந்தவொரு தேசிய இனத்தின் மொழிக்கும் மேற்குறிப்பிட்ட உரிமைகளை அது வழங்கவில்லை.
இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட 1950 - இலிருந்து இந்தி பேசாத தேசிய இனங்களுக்காக ஆங்கிலத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்; ஆனால் அது 15 ஆண்டுகளுக்குமட்டுமே - 1965 ஆண்டுவரைதான் என்று அறிவிக்கப்பட்டது. 1965 -இல் இந்த இந்திமொழித் திணிப்பை எதிர்த்து, ஒடுக்கப்படுகிற, தாக்கமுறுகிற தேசிய இனங்கள் போராடின. குறிப்பாக, தமிழ்த் தேசிய இனம் களத்தில் உறுதியாக நின்று போராடியது. இதன் பயனாக, அன்றைய பிரதமர் நேரு அவர்கள் 'இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை, ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும்' என்னும் 'உறுதிமொழியை' அளித்தார்.
1950-இலிருந்து இன்றுவரை - 75 ஆண்டுகளாக - இந்தி, ஆங்கிலம் தவிர எந்தவொரு தேசிய இனத்தின் மொழிக்கும் அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு இணையாக எந்தவொரு உரிமையும் அளிக்கப்படவில்லை. அதுபோன்று நடுவண் அரசின் 'பார்வைக்காக' காத்துக்கிடக்கிற மாநிலக் கட்சிகளும் 'இந்திமொழி எதிர்ப்பு' என்னும் போர்வையில் ஆங்கிலமொழியை அனைத்துச் செயல்பாடுகளிலும் நீடிக்க வைத்துக்கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஒரு காலகட்டத்தில் பள்ளிகளில் பயிற்றுமொழியாக நீடித்த தமிழ்மொழிக்குப் பதிலாக, இன்று பெரும்பான்மையான பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்றுமொழியாக நீடிக்கிறது. தமிழ்வழிப் பள்ளிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அரசுப் பள்ளிகளிலும் தற்போது தமிழ்மட்டுமே பயிற்றுமொழி என்பதற்குப் பதிலாக ஆங்கிலமும் பயிற்றுமொழி என்னும் நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. இதன் விளைவாக, பள்ளிகளில் தமிழ் மறைந்துவருகிறது!
உயர்கல்வியில் ஆங்கிலமே என்பது பொதுவான நடைமுறையாக ஆக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் பயிற்றுமொழியாக நீடிப்பதற்குத் தமிழ் இன்னும் 'தகுதி பெறவில்லை' என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறி, ஆங்கிலமே பயிற்றுமொழியாக நீடித்து வருகிறது.
பொருள் உருவாக்கம், வணிகம் போன்ற பிற துறைகளில் ஆங்கிலமே இன்று நீடிக்கிறது. காய்கனிக் கடையிலிருந்து மின்னியல் கருவிகளை விற்கும் கடைகள் வரை அனைத்து மொழிவழிச் செயற்பாடுகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கமே நீடிக்கிறது.
ஆட்சி மொழி, அலுவலக மொழி என்றுமட்டுமல்லாமல், பண்பாட்டுத் துறையிலும் இந்திய ஆளும் வகுப்புகள் வடமொழியான சமசுகிருத மொழியையே உயர்த்திப்பிடிக்கின்றன. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் மொழிகளுக்கும் மூலமொழி சமசுகிருதமே என்னும் கருத்தைத் திணித்துவருகிறது.
ஆக, இந்தி, ஆங்கிலம், சமசுகிருதம் என்ற மூன்று மொழிகளையும் பிற தேசிய இனங்களின்மீது இந்திய ஆளும்வகுப்புகள் திணித்துவருகின்றன. இந்த ஆதிக்கத்தை எதிர்த்து, பிற தேசிய இனங்கள் ஒன்றுபட்டு போராடுவது இன்றைய தேவையாக உள்ளது. ஆனால் இந்த வகையான ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் இந்திய ஆளும் வகுப்புகள் செயல்பட்டுவருகின்றன. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கிடையே நிலவும் சிறு சிறு பகைமையற்ற முரண்பாடுகளைப் பகையுள்ள முதன்மையான முரண்பாடுகளாக மாற்றுவதற்கு இந்திய ஆளும் வகுப்புகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றன. தேசிய இனங்களுக்கிடையே நதிநீர்ப் பங்கீடு, அணைகள் கட்டுதல் போன்றவற்றில் ஆளும் வர்க்கங்களின் இந்த 'பிரித்தாளும் சூழ்ச்சியைப் ' பார்க்கலாம்.
அடுத்து, அண்டை மாகாணங்களாக நீடிக்கிற தமிழ்த் தேசிய இனம், கன்னடத் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம், மலையாளத் தேசிய இனங்களிடையே மொழி அடிப்படையில் நீடிக்கிற சிறு சிறு பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்க இந்திய ஆளும் வர்க்கங்கள் முயல்கின்றன. இந்தத் தேசிய இனங்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டு, தேசிய இன சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்கின்றன. 'மூலமொழி' பற்றிய சில ஆய்வுகளை முன்வைத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைப் பேசுகிறவர்களுக்கு இடையில் பகைமையை வளர்க்க இந்திய ஆளும் வகுப்புகள் முயல்கின்றன. 'மூலமொழி' பற்றிய கோட்பாடுகள் மொழி ஆய்வில் தெளிவுபடுத்த வேண்டியவை ஆகும். ஆனால் இந்த மொழிகளைப் பேசும் தேசிய இனங்களிடையே ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக இந்திய ஆளும் வர்க்கங்கள் 'மூலமொழிக் கொள்கை' 'தாய் - சேய் மொழிகள்' போன்ற கருத்துகளை முன்வைத்து, ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேசிய இனங்களைப் பிளவுபடுத்த முயல்கின்றன.
தமிழ்த் தேசிய இனம் உட்பட முன்குறிப்பிட்ட பிற அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் பொது எதிரி இந்திமொழி, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் திணிக்கிற ஆளும் வகுப்புகளே! எனவே, இவைதான் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் எதிரி. இப்பொது எதிரிக்கு எதிராக ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் ஒன்றுபட்டு போராடவேண்டும். இதுவே இன்றைய காலக்கட்டத்தின் முதன்மையான பணி!
அதுபோன்று தமிழ் நாட்டில் கல்வி, அலுவலகம், உருவாக்கத் தொழிற்சாலைகள் அனைத்திலும் தமிழே என்னும் நிலையை வராமல் தடுக்க முயலும் ஆங்கில ஆதரவு ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராகப் போராடுவதும் இன்றைய முகாமைப் பணியாகும்.
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மேற்கூறிய முதன்மையான பணிகளைச் செய்யவிடாமல் ஆளும் வகுப்புகள் பலவகை சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றன. இவற்றிற்கு எந்தவோர் ஒடுக்கப்பட்ட தேசிய இனமும் பலியாகிவிடக்கூடாது. இதில் அதிகக் கவனம் தேவை.
தமிழின் தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சி ஆகியவை உலகுக்குத் தெரிந்ததே. இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பழந்தமிழின் பங்குபற்றி அனைவருக்கும் தெரிந்ததே. அதன் பயனாகவே தமிழ் 'செம்மொழி' என்னும் தகுதியை உலக அளவில் பெற்றுள்ளது. அதுபோன்று, இன்றைய அறிவியல் உலகில் அனைத்து மொழிச் செயல்பாடுகளிலும் தமிழ் தன் இடத்தை உறுதிப்படுத்தவேண்டும். இன்றைய செயற்கை அறிவுத்திறனில் இடம்பெற்றுள்ள 'பெரிய மொழி மாதிரிகளில்' ஒரு முதன்மையான மொழியாக நீடிக்கவேண்டிய தமிழ்மொழி, அத்துறையில் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இடம்பெறவில்லை. இதற்குக் காரணம் என்ன?
பெரிய மொழி மாதிரிகளை உருவாக்குவதற்கு ஒவ்வொரு மொழியிலும் கோடியே கோடி மின்னணுத் தரவுகள் வேண்டும். ஆங்கிலம், பிரஞ்சு, சீனம் போன்ற மொழிகளுக்கு அந்த அளவு மின்னணுத் தரவுகள் கிடைத்துள்ளன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்குத் தமிழ் மின்னணுத் தரவுகள் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், தமிழகத்திலேயே இன்று கணினியில் ஆங்கிலமே செல்வாக்கு செலுத்துகிறது. இதன் விளைவாகவே தமிழுக்குப் போதிய மின்னணுத் தரவுகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் உள்ள மொழியை 'போதிய மின்தரவு இல்லாத மொழி (Low Resource or Under Resource language) என்று அழைக்கின்றனர். கணினித்துறையில் தமிழ்மொழி முழுமையாகத் தனக்குரிய இடத்தைப் பெறவேண்டும். இன்று அவ்வாறு பெறாமல் இருப்பதற்குக் காரணம் 'தமிழ்மொழியின் சொற்களஞ்சியமும் இலக்கணமும் ' இல்லை! தமிழுக்குத் தகுதி இல்லை என்பது இல்லை! மாறாக, அன்றாட மொழிச்செயல்பாடுகளில் தமிழ்மொழியின் பயன்படுத்தம் மிகக் குறைவாக உள்ளது. பழந்தமிழில் இலக்கியம், இலக்கணத்தில் தனியிடம் பெற்றிருந்த தமிழ், இன்று கணினியுலகத்தில் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்குப் போராடவேண்டியுள்ளது.
இதுபோன்றவற்றில் கவனம் செலுத்தி, தமிழ்மொழியை அடுத்த உயர்கட்டத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். தமிழ் நாட்டில் அன்றாட மொழிச் செயல்பாட்டிலிருந்து கல்வி, ஆராய்ச்சி, பொருள் உருவாக்கம், வணிகம், அரசு அலுவல்கள் போன்ற அனைத்துப் பிரிவுகள்வரை தமிழே - தமிழ்மட்டுமே என்ற நிலை நீடிக்கவேண்டும். இதுவே தமிழ் நாட்டுக்குள் தமிழ்மொழி தொடர்பான பணிகளில் முதன்மையான ஒன்றாகும். அடுத்து, நாட்டளவில் மேலிருந்து திணிக்கப்படுகிற இந்தி, சமசுகிருதம், ஆங்கிலம் ஆகியவற்றின் ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராடவேண்டும். இதற்குத் தேவை, ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமுமே ஆகும்.
ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் முதன்மையான போராட்டம், தம்மை ஒடுக்குகிற ஆளும் வகுப்புகளுக்கு எதிராக இருக்கவேண்டும்; தங்களுக்குள் இருக்கிற சில முரண்பாடுகளைப் பகைமையற்ற முரண்பாடுகளாகப் பார்க்கவேண்டும்; இதுவே ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மொழிகளுக்குரிய இடம் பெறுவதற்கான ஒரே வழி!
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் அனைத்தும் தமிழ்த் தேசிய இனத்திற்கு நண்பர்களே!
தேசிய இனங்களின்மீதான இந்திய ஆளும் வகுப்புகளின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டமே இன்று தேவை!

புதன், 4 ஜூன், 2025

மொழியியலாளர் தமிழுக்கு எதிரிகளா?

மொழியியலாளர் தமிழுக்கு எதிரிகளா?
----------------------------------------------------------------
பேராசிரியர் செல்லப்பெருமாள் ஆதிமூலம்
-------------------------------------------------------------
தமிழக மொழியியலர்கள் எப்போதுமே தமிழுக்கு ஆதரவான கருத்துக்களைக் கூறமாட்டார்கள். மற்ற மாநில மொழியியலர்கள் அப்படி அல்ல. தங்களுடைய மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக தெலுங்குக்கு வாதிட்ட Bh. கிருஷ்ணமூர்த்தி, இப்போது குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் கன்னட மொழியியலர்களைக் குறிப்பிடலாம். தமிழ் நாட்டு மொழியியலர்கள் அவர்களுடைய கருத்தை விமர்சித்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள். ஆனால் தமிழின் சிறப்பைக் கூறினால் ' அறிவியல்' பார்வையில் ஓடிவந்து மறுப்பர். இதில் தமிழர்களுக்கு மொழி வெறியர் என்ற அவப் பெயர் உண்டு. உண்மையில் தமிழர்கள் Hypocritical in nature.
----------------------------------------------------------------------
தமிழ்ப் பல்கலைக்கழகம் வளராமல் போனதற்குக் காரணம் அங்கு தொடரந்து மொழியியலர்கள் துணைவேந்தர்களாக வந்தது தான். இலக்கியவாதிகள் கூட அங்கு துணைவேந்தர்களாக வந்துள்ளனர். இதுவரை அங்கு பண்பாட்டு அறிஞர்களை துணைவேந்தர்களாக அமர்த்தியதில்லை.
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------------------------------------
அன்பிற்குரிய பேராசிரியர் செல்லப்பெருமாள் ஆதிமூலம் அவர்களே. தமிழ் - கன்னடம் இரண்டுக்கும் உள்ள உறவு தாய் - மகளா அல்லது தங்கைகளா என்பதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, மொழியியலாளர்கள்மீது தங்கள் கோபத்தைக் காட்டவேண்டிய தேவை இல்லை. மேலும் எனது கருத்தை வைத்துக்கொண்டு மொழியியலாளர்களை மொத்தமாகத் திட்டவேண்டாம். நான் ஒரு அடிப்படை மொழியியல் மாணவன்தான். திராவிட மொழியியலில் ஆய்வு செய்தவன் இல்லை. எனக்குத் தெரிந்த அறிவைக்கொண்டு, தமிழ் - கன்னடம் உறவு தங்கைகள் உறவு என்று கூறியுள்ளேன். அவ்வளவுதான். எதிர்கால ஆய்வுகள் மாறுபட்ட முடிவுக்கு என்னை அழைத்துச் சொல்லலாம்.
ஆய்வு அடிப்படையில் அணுகவேண்டிய ஒன்றை, மொழியியலுக்கு எதிராகப் பேசுவதற்குப் பயன்படுத்தவேண்டாம். அதுவும் தாங்கள் மானிடவியல் பேராசிரியர். ஆய்வறிஞர். நமக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அது வேறு. மேலும் நான் ஏதோ தமிழுக்கு எதிரானவன்போலத் தாங்கள் கருதுவதாகத் தெரிகிறது. தமிழின் தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சிபற்றித் தொடர்ந்து பேசிவருபவன். தமிழ்த் தேசிய இன உரிமைகளுக்காகப் போராடுபவர்களில் ஒருவன்.
அடுத்து, மொழியியலாளர்கள் எல்லாம் தமிழுக்கு எதிரானவர்கள் என்று தாங்கள் - ஒரு பேராசிரியர் - கூறுவது சரி அல்ல. குறிப்பாக, எடுத்துக்காட்டுகள் கொடுத்து தங்கள் கருத்தை நிரூபியுங்கள். இதுபோன்ற சலசலப்புக்கு அஞ்சி, உண்மையைச் சொல்லத் தயங்குபவன் அல்ல நான். ஓடி ஒளிபவனும் இல்லை!
அதனையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பெரும்பாலும் மொழியியலாளர்களே இருந்துள்ளார்கள். அவர்களே அப்பல்கலைக்கழகத்தைக் ''கெடுத்துவிட்டார்கள்'' ! என்று வேறு கூறியுள்ளீர்கள். திராவிடம், தமிழ், கன்னடம் பற்றி பேசும்போது, தாங்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்பற்றிப் பேசவேண்டிய தேவை இல்லையே! பண்பாட்டுத்துறைசார்ந்த ஒருவர் துணைவேந்தராக நியிமிக்கப்பட்டால், அந்தப் பல்கலைக்கழகம்' வளர்ச்சியடையும்' என்று கூறியுள்ளீர்கள். தாங்கள் - பண்பாட்டுத்துறைப் பேராசிரியர் - விரைவில் அப்பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, அந்தப் பல்கலைக்கழகத்தைச் 'சரி செய்ய' வாழ்த்துகள்!
தமிழுக்கு மொழியியல் எதிரி என்றால் எப்படி என்று ஆதாரங்களுடன் கூறுங்கள். அடிப்படையற்ற அவதூறுகளை அள்ளி வீசாதீர்கள்! தங்களைப் போன்றவர்கள் ;தொடர்ந்து ' இவ்வாறு கூறுவதால், மொழியியல் அழிந்துவிடாது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது! சீப்பை ஒளித்து வைப்பதால், திருமணம் நின்றுவிடாது!
மொழியியல் துறை ஒரு மொழி அறிவியல் துறை. தமிழ்நாட்டு மொழியியலாளர்கள் தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு சென்றவர்கள், செல்பவர்கள்! ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதால் அது உண்மை ஆகிவிடாது.
மேலும் 'மூலமொழிக் கொள்கையில்' எனக்கு உடன்பாடு கிடையாது. இதுபற்றிப் பின்னர் தனியே எழுதுகிறேன்.

தமிழ் - கன்னடம் - கருத்து மோதல்

 தமிழ் - கன்னடம் - கருத்து மோதல்

----------------------------------------------------------------
இன்றைய தமிழ் - கன்னடம் தொடர்பான கருத்து மோதலில் என்னுடைய கருத்துகளைத் தெளிவாக முன்வைக்கும்படி ஒரு பேராசிரியர் கேட்டுள்ளார். இங்கே தெளிவாகக் குறிப்பிடுகிறேன்.
1) 'திராவிட மொழி ஒப்பாய்வின் அடிப்படையில் திராவிட மொழிகளின் பல சொற்களுக்குப் பொதுமை வடிவங்களை மொழியியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அவற்றை மூல சொல் வடிவங்கள் (Proto-forms) என்று அழைக்கின்றனர். அதனடிப்படையில் ''அந்த மூல வடிவங்களை உள்ளடக்கிய ஒரு 'மூல மொழி'(Proto-language) - அதாவது மூல திராவிட மொழி (Proto Dravidian language)நீடித்திருக்கவேண்டும்' என்று கூறப்படுகிறது. இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மொழி ஒப்பாய்வில் மொழிகளுக்கிடையேயான ஒற்றுமைகளை ஆய்வதற்காக உருவாக்கப்படுகிற சொல் வடிவங்களே 'மூல வடிவங்கள்'. அவை உண்மையில் நீடித்ததாகக் கொள்வது தவறு. 'மூல திராவிட மொழி' என்று ஒன்று நீடித்ததற்கும் சான்றுகள் கிடையாது.
2) அந்த 'மூலமொழி' தமிழ் ; தமிழிலிருந்துதான் 'கன்னடம்' பிறந்தது என்ற முன்வைக்கப்படுகிற கருத்துகள் சரி இல்லை என்பதும் எனது கருத்து. எனக்குத் தெரிந்தவரையில் இந்தக் கருத்தை மொழியியலாளர்கள் யாரும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு வைத்திருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இல்லை.

செவ்வாய், 3 ஜூன், 2025

இயற்கை நிகழ்வுக்கும் சமூக நிகழ்வுக்கும் - புறவய விதிகளே அடிப்படை ! சமூக மாற்றத்தைத் தடுக்கமுடியுமா?

 இயற்கை நிகழ்வுக்கும் சமூக நிகழ்வுக்கும் - புறவய விதிகளே அடிப்படை ! சமூக மாற்றத்தைத் தடுக்கமுடியுமா?

--------------------------------------------------------------------------
பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கோளங்கள், துணைக்கோளங்கள், புவி ஈர்ப்பு விதிகள், கடல் அலைகள் . . . இவையெல்லாம் நீடிப்பதற்கும் இயங்குவதற்கும் புறவய விதிகளே அடிப்படை. பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட இடத்தில் தன் இருத்தலை ஏற்படுத்தியுள்ள பூமியில் புவி ஈர்ப்பு விதி செயல்படுவது புறவய நிகழ்வு. இவற்றின் புறவய நீடிப்புகளும் அவற்றிற்கான புறவய இயக்குவிதிகளும் நமது மனம் . . . எண்ணம் . . . சிந்தனை . . . விருப்பு வெறுப்பு போன்றவற்றைச் சார்ந்தவை இல்லை! புறவயத் தன்மை உடைமை உடையவை!
இந்த விதிகளை இல்லாமல் ஆக்குவேன் என்று ஒருவர் கூறினால், அவரைப்பற்றி நாம் என்ன நினைப்போம்?
இதுபோன்றதே மனித சமூகத்தின் நீடிப்பும் அவற்றின் புறவய இயக்குவிதிகளும்!
சமூகத்தின் அமைப்பு, இயக்கம், மாற்றம் போன்ற அனைத்திற்கும் புறவய விதிகள் உண்டு. இவற்றை யாராலும் இல்லாமல் தன் விருப்பவெறுப்புப்படி ''ஆக்கமுடியாது, உருவாக்கமுடியாது''.
பிரபஞ்சத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையில் உள்ள ஒரு வேறுபாடு . . . பிரபஞ்சத்தின் நீடிப்பு, இயக்கம் ஆகியவற்றில் மனிதனின் செயல்களுக்கு இடம் இல்லை! ஆனால் சமூகத்தின் நீடிப்பு, இயக்கம், மாற்றத்தில் மனிதனின் செயல்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஆனால் இந்தப் பங்கின் தன்மை பற்றி ஒரு புரிதல் வேண்டும். சமூகத்தின் புறவயவிதிகளைப் புரிந்துகொண்டு, அதன் இயக்கத்தில் . . . மாற்றத்தில் மனிதன் தன் பங்கை ஆற்றலாமே ஒழிய, அந்தப் புறவயவிதிகளை இல்லாமல் ஆக்கமுடியாது.
அதுபோன்று பண்புரீதியாக முன்னேறிச் சென்ற ஒரு சமூக நிலையை அல்லது அமைப்பைப் பின்னோக்கித் திருப்பமுடியாது. மொட்டானது ஒரு கட்டத்தில் பூவாக மாறியபிறகு மீண்டும் மொட்டாக மாறமுடியாது. அதுபோன்றே இன்றைய சமூகம் கற்கால சமூகமாக மாறமுடியாதது . . . பின்னோக்கித் திரும்பமுடியாது!
அப்படியென்றால், சோவியத் ரசியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட சோசலிச மாற்றங்கள் இன்று நீடிக்கவில்லையே என்று நினைக்கலாம். இந்தச் சோசலிச மாற்றங்கள் முதலாளித்துவ சமூகத்திற்கும் அதற்கு அடுத்த பண்புரீதியான மாற்றமான பொதுவுடைமைச் சமூகத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலை. முன்னோக்கிச் செல்வதற்கான போராட்டம் நீடிக்கிற ஒரு நிலை! இதில் தற்காலிகப் பின்னடைவு ஏற்படலாம். அதற்குப் பல காரணிகள் உண்டு. ஆனால் உறுதியாக எதிர்காலத்தில் அது பொதுவுடைமைச் சமூகத்தை அடைந்தே தீரும். அதை யாராலும் தடுக்கமுடியாது!
சமூகத்தின் அமைப்பு, நீடிப்பு, மாற்றம், அதற்கான போராட்டம் ஆகியவைபற்றிய புறவயமான விளக்கங்களே அல்லது விதிகளே மார்க்ஸ், எங்கல்ஸ் போன்றோர் முன்வைத்தவை. அவர்கள் இந்த விளக்கங்கள் அல்லது விதிகளை, தங்கள் விருப்புவெறுப்புக்கு உட்பட்டு உருவாக்கவில்லை! தீவிரமான ஆய்வின்மூலம் அந்தப் புறவய விதிகளைக் கண்டறிந்தார்கள். அவர்களே மீண்டும் வந்து, 'நாங்கள் கூறிய விதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்' என்று கூறமுடியாது! அவர்கள் 'உருவாக்கியிருந்தால்' திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். புவிஈர்ப்பு விதிகளை நியூட்டனோ ஐன்ஸ்டினோ வந்து 'திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியுமா? அதுபோன்றதுதான் மார்கஸ், எங்கல்ஸின் சமூக ஆய்வு . . . கண்டுபிடிப்புகள்!
ஏன் இதை இப்போது இங்கே சொல்கிறேன் என்று நண்பர்கள் நினைக்கலாம்.
பொதுவுடைமைக்கான போராட்டங்களை - போராளிகளை - இந்த ஆண்டு, இந்த மாதத்தில் , இந்தத் தேதியில் இல்லாமல் ஆக்கிவிடுவோம் என்று முதலாளித்துவ ஆதிக்க சக்திகள் கூறினால், அது நகைப்புக்கு உரிய ஒன்றே என்பதைக் கூறவே இந்தப் பதிவு! இயற்கை அறிவியல்போன்றதே மார்க்சிய சமூக அறிவியல்! இயற்கை மாற்றத்திற்குப் புறவயவிதிகள் இருப்பதுபோலவே சமூக மாற்றத்திற்கும் புறவய விதிகள் உண்டு.
இயந்திர அசைவு (Mechanical motion) , இயற்பியல் இயக்கம் (Physical motion) , வேதியியல் இயக்கம் (Chemical motion) , உயிரியல் இயக்கம் (biological motion) ஆகியவற்றில் நீடிக்கிற இயக்கங்களைவிட மிகச் சிக்கலான இயக்கம் சமூக இயக்கம் (Social motion) . இதைப் புரிந்துகொள்ள மிகக் கடுமையாக உழைக்கவேண்டும். இது மிகச் சிக்கலான அறிவியல்.

தேசிய இனங்களின் ஒற்றுமையே இந்திமொழித் திணிப்பை முறியடிக்கமுடியும்!

 தேசிய இனங்களின் ஒற்றுமையே இந்திமொழித் திணிப்பை முறியடிக்கமுடியும்!

----------------------------------------------------------------------
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றே இன்றைய இந்தியா! தமிழ், கன்னடம், தெலுங்கு , மலையாளம் என்று பல்வேறு தேசிய இனங்கள் இந்தியாவின் தென்பகுதியில் நீடிக்கின்றன. தேசிய இனம் என்பது நிலப்பகுதி, அரசியல் , பொருளாதாரம், பண்பாடு, மொழி போன்ற பல கூறுகளைக் கொண்டு ஒன்று.
குறிப்பிட்ட ஒரு தேசிய இனம் என்பது முந்தைய வரலாற்றில் ஒன்றுபட்ட ஒன்றாக நீடிக்கவில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றைப் பார்த்தால், பல்வேறு நிலப்பகுதிகளாகவும், பல்வேறு அரசுகளின்கீழும் நீடித்து வந்துள்ளன. ஆனால் அவை அனைத்துக்கும் ஒரு பொதுக்கூறு தமிழ்மொழியும் தமிழர் பண்பாடும். அரசியல், பொருளாதாரக் கூறுகள் வேறுபட்டு இருந்தாலும், மொழி , பண்பாடு இரண்டும் அவற்றிக்குப் பொதுக்கூறுகளே.
கிபி 10 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு, அந்நியர்களின் படையெடுப்பு, அந்நியர்களின் அரசியல் ஆதிக்கம் போன்றவற்றாலும் நிலவுடமை அரசியல் பொருளாதார அமைப்பு பலவீனமடையத் தொடங்கியதாலும், உற்பத்திமுறை மாறத் தொடங்கியதாலும் தமிழ் பேசும் மக்கள் - தமிழ்ப்பண்பாடு உடைய மக்கள் - ஒரே திரட்சியாக - அரசியல் பொருளாதாரத் திரட்சியாக - தமிழ்த் தேசிய இனமாகப் பரிணமிக்கத் தொடங்கியது. இதுபோன்றே இந்தியப் பூகோளப் பகுதியில் பல்வேறு தேசிய இனங்கள் உருவெடுக்கத் தொடங்கின.
இவ்வாறுதான் இன்று இந்தியப் பூகோளப்பகுதியில் நிலவுகிற பல்வேறு தேசிய இனங்கள் தோன்றி வளர்ந்திருக்கமுடியும். இந்தத் தேசிய இனம் என்பது மனிதகுல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றி நிலவுகிற வரலாற்று விளைபொருளே ஆகும்.
இங்குத் தேசிய இனங்கள் தோன்றி வளர்ந்த சூழலில் உலகில் மேலைநாடுகளில் முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றி, வளர்ந்து நிலவியது. மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக, தங்கள் பூகோள எல்லைகளைத் தாண்டி, தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிறுவி, அதைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அந்த ஆதிக்க முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகள் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை நிறுவினர். தங்களுக்கு ஏற்றவகையில் இந்தியப் பகுதியின் பொருளாதார அமைப்பையும் மாற்றத் தொடங்கினர்.
அதன் ஒரு பகுதியாகவே இங்கு நிலவிய நிலவுடமை உற்பத்திமுறையும் மாறத் தொடங்கியது. இங்கு நிலவிய விவசாய உற்பத்தியும் உற்பத்திமுறையும் மாறத் தொடங்கின. இங்கிருந்த நிலவுடைமையாளர்கள் மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகளின் ஆதரவுடன் முதலாளித்துவ உற்பத்திக்கு மாறத் தொடங்கினர். இந்தியப் பகுதியின் பொருளாதாரம் காலனித்துவப் பொருளாதாரமாக மாறத் தொடங்கியது.
மேலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி வளர்ந்த ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலன்களுக்காகவே இங்குப் பொருளாதார உற்பத்திமுறைகளை மாற்றி அமைக்கும்போது, உள்ளூர் நிலவுடைமையாளர்களுடன் கைகோர்த்தபோது, ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த உள்ளூர் முதலாளிகள் வளரத் தொடங்கினர். அவர்களில் ஒரு சிறு பகுதியினர் முழுக்க முழுக்க ஏகாதிபத்திய தாசர்களாக மாறியநிலையில், உள்ளூர் முதலாளிகள் தங்கள் நலன்களுக்காகத் 'தங்கள் மண்' என்னும் முழக்கத்தை முன்வைக்கத் தொடங்கினர். இங்குள்ள நிலவுடைப் பொருளாதாரமும் மாறவேண்டும், அதேவேளையில் ஏகாதிபத்தியங்களும் முழுமையாக இங்கு ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்ற ஒரு நிலையை எடுக்கத் தள்ளப்பட்டனர்.
இதுபோன்ற ஒரு சூழலில் இந்தியப் பூகோளப் பகுதியில் பல்வேறு தேசிய இனங்கள் தோன்றி நிலைக்கத் தொடங்கின. இந்தத் தேசிய இனங்கள் அனைத்துக்கும் பொது எதிரியாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நீடித்தது.
ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு இவ்வாறு தேசிய இனங்கள் வளரத் தொடங்கியது ஆபத்து. எனவே, அவை தங்களுக்குள் ஒன்றிணைந்து பொது எதிரி என்ற வகையில் தனக்கு எதிராக நின்றுவிடக்கூடாது என்பதற்காகப் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டன. அவற்றின் ஒரு பகுதியே ஒப்பீட்டு மொழியியல் ஆய்வில் ஏற்பட்ட வளர்ச்சி. எல்லீஸ், சர் வில்லியம்ஸ் ஜோன், இராபர்ட் கால்டுவெல் போன்றோர் முன்வைத்த இந்தோ ஆரிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பம் போன்ற கருத்துகள். இவற்றை அடிப்படையாகக்கொண்டு, இந்தியப் பகுதியில் ஆரியர், திராவிடர் என்ற இரண்டு 'இனங்களே' உண்டு என்று கூறத் தொடங்கினர். பொது எதிரிக்கு - ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு - எதிராக இங்குள்ள தேசிய இனங்கள் ஒன்றுபட்டு விடக்கூடாது, தங்கள் அரசியல் அதிகாரம் பலவீனமடைந்துவிடக்கூடாது என்பதே அவற்றின் நோக்கம்.
தமிழ்த் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம், கன்னடத் தேசிய இனம், மலையாளத் தேசிய இனங்கள் , தங்களுடைய பொது எதிரிக்கு எதிராகப் போராடக்கூடாது, பிளவுபட்டு நிற்கவேண்டும் என்பதே இன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் - அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தின் விருப்பம் போன்று - விருப்பம். அதன் ஒரு பகுதியே திராவிடமொழிகளைப் பற்றிய ஆராய்ச்சியை - மூல திராவிடம் என்ற கருதுகோளை - ஆரியர், திராவிடர் என்ற கற்பனை 'இனங்கள்' பற்றிய கருத்தை - பலவகைகளில் தேசிய இனங்களின்மீது மீண்டும் திணிக்க விரும்புகிறது. அத்தோடு நிற்காமல், தமிழிலிருந்துதான் தெலுங்கு வந்தது, கன்னடம் வந்தது, மலையாளம் வந்தது அல்லது பிறந்தது போன்ற கருத்துகளைப் பரப்ப விரும்புகின்றன. தேசிய இனங்களின் ஒற்றுமைக்கு எதிரான இதுபோன்ற 'பரப்பல்களை' தெரிந்து சொய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி, அது தேசிய இனங்களின் ஒற்றுமையையை சீர்குலைக்கும். இன்றைய ஆளும் வர்க்கங்களின் ஆதிக்க அரசியலுக்கே பயன்படும்.
இந்த சூழ்ச்சிக்குத் தேசிய இனங்கள் பலியாகிவிடக்கூடாது. மொழிகளில் நீடிக்கிற ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்கிற மொழியியலின் ஒரு பிரிவைத் தவறாக அரசியல் நோக்கத்திற்காக ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்த முயல்கின்றன. தமிழ்த் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம் என்று அந்தந்தத் தேசிய இனங்கள் தங்களுடைய தேசிய இனத்தின் தனித்துவத்தைத் தக்கவைப்பதை மழுங்கடிக்க முயல்கின்றன. ஆங்கிலேயர் தொடங்கிவைத்த ஆரிய - திராவிட 'இனக் கோட்பாட்டை' பல வகைகளில் மீண்டும் திணிக்க முயல்கின்றன. இந்தச் சூழ்ச்சிக்கு நாம் பலியாகிவிடக்கூடாது.
இன்று தேவையானது அனைத்துத் தேசிய இனங்களின் தனித்துவமும் அரசியல் உரிமையும் மொழி உரிமையும் ஆகும். இந்திமொழியின் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும். அனைத்துத் தேசிய இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாக அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டும். அதற்காக அனைத்துத் தேசிய இனங்களும் ஒன்றுபட்டு, தங்களுக்கு எதிராக நிற்கிற பொது எதிரியை எதிர்த்துப் போராடவேண்டும். ஆளும் வர்க்கங்களின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடக்கூடாது.
ஒடுக்கப்படுகிற அனைத்தும் தேசிய இனங்களும் தங்களுக்கு எதிரான பொது எதிரியை எதிர்த்து ஒன்றுபட்டு நிற்கவேண்டும். தங்களது தேசிய இன உரிமைகளைப் பெறவேண்டும்.
--------------------------------------------------------------------------------------
நான் 'தமிழ்த் தேசிய இனம் (Nationality) ' என்னும் புறவய நீடிப்பை ஏற்றுக்கொண்டவன். பல்வேறு தேசிய இனங்களின் ஒரு ஒன்றிய நாடாகத்தான் (Country) இந்தியாவைப் பார்க்கிறேன்.
இந்தியாவில் தேசிய இனங்கள் கரைந்துவிடவில்லை.; மறைந்துவிடவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிற மக்கள் போராட்டங்களே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தங்களுடைய நிலைபாடுதான் காங்கிரஸ், பிஜேபி நிலைபாடு. என்னைப் பொறுத்தவரையில் 'திராவிட இனம் (Dravidian Race) ' என்பது கிடையாது. தமிழ்த்தேசிய இனம், தெலுங்கு தேசிய இனம், கன்னடத் தேசிய இனம்' மலையாளத் தேசிய இனம் என்றுதான் பல தேசிய இனங்கள் இங்கு நீடிக்கின்றன.
புறநானூற்றுக் காலத்திலேயே 'தமிழ்த் தேசிய இனம்' நீடித்தது என்ற கருத்தும் என்னுடைய அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டதின்படி தவறு. தமிழ்மொழி பேசிய மக்கள் என்பது வேறு; தமிழ் இலக்கியம் நீடித்தது என்பது வேறு. குறிப்பிட்ட அரசியல் பொருளாதார அமைப்பில் 'தமிழ்த் தேசிய இனம்' என்று ஒன்று தோன்றியது என்பது வேறு. தேசிய இனம் (Nationality), தேசம் (Nation) என்பதும் நாடு (Country) என்பதும் ஒன்று இல்லை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India