புதன், 4 ஜூன், 2025

மொழியியலாளர் தமிழுக்கு எதிரிகளா?

மொழியியலாளர் தமிழுக்கு எதிரிகளா?
----------------------------------------------------------------
பேராசிரியர் செல்லப்பெருமாள் ஆதிமூலம்
-------------------------------------------------------------
தமிழக மொழியியலர்கள் எப்போதுமே தமிழுக்கு ஆதரவான கருத்துக்களைக் கூறமாட்டார்கள். மற்ற மாநில மொழியியலர்கள் அப்படி அல்ல. தங்களுடைய மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக தெலுங்குக்கு வாதிட்ட Bh. கிருஷ்ணமூர்த்தி, இப்போது குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் கன்னட மொழியியலர்களைக் குறிப்பிடலாம். தமிழ் நாட்டு மொழியியலர்கள் அவர்களுடைய கருத்தை விமர்சித்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள். ஆனால் தமிழின் சிறப்பைக் கூறினால் ' அறிவியல்' பார்வையில் ஓடிவந்து மறுப்பர். இதில் தமிழர்களுக்கு மொழி வெறியர் என்ற அவப் பெயர் உண்டு. உண்மையில் தமிழர்கள் Hypocritical in nature.
----------------------------------------------------------------------
தமிழ்ப் பல்கலைக்கழகம் வளராமல் போனதற்குக் காரணம் அங்கு தொடரந்து மொழியியலர்கள் துணைவேந்தர்களாக வந்தது தான். இலக்கியவாதிகள் கூட அங்கு துணைவேந்தர்களாக வந்துள்ளனர். இதுவரை அங்கு பண்பாட்டு அறிஞர்களை துணைவேந்தர்களாக அமர்த்தியதில்லை.
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------------------------------------
அன்பிற்குரிய பேராசிரியர் செல்லப்பெருமாள் ஆதிமூலம் அவர்களே. தமிழ் - கன்னடம் இரண்டுக்கும் உள்ள உறவு தாய் - மகளா அல்லது தங்கைகளா என்பதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, மொழியியலாளர்கள்மீது தங்கள் கோபத்தைக் காட்டவேண்டிய தேவை இல்லை. மேலும் எனது கருத்தை வைத்துக்கொண்டு மொழியியலாளர்களை மொத்தமாகத் திட்டவேண்டாம். நான் ஒரு அடிப்படை மொழியியல் மாணவன்தான். திராவிட மொழியியலில் ஆய்வு செய்தவன் இல்லை. எனக்குத் தெரிந்த அறிவைக்கொண்டு, தமிழ் - கன்னடம் உறவு தங்கைகள் உறவு என்று கூறியுள்ளேன். அவ்வளவுதான். எதிர்கால ஆய்வுகள் மாறுபட்ட முடிவுக்கு என்னை அழைத்துச் சொல்லலாம்.
ஆய்வு அடிப்படையில் அணுகவேண்டிய ஒன்றை, மொழியியலுக்கு எதிராகப் பேசுவதற்குப் பயன்படுத்தவேண்டாம். அதுவும் தாங்கள் மானிடவியல் பேராசிரியர். ஆய்வறிஞர். நமக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அது வேறு. மேலும் நான் ஏதோ தமிழுக்கு எதிரானவன்போலத் தாங்கள் கருதுவதாகத் தெரிகிறது. தமிழின் தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சிபற்றித் தொடர்ந்து பேசிவருபவன். தமிழ்த் தேசிய இன உரிமைகளுக்காகப் போராடுபவர்களில் ஒருவன்.
அடுத்து, மொழியியலாளர்கள் எல்லாம் தமிழுக்கு எதிரானவர்கள் என்று தாங்கள் - ஒரு பேராசிரியர் - கூறுவது சரி அல்ல. குறிப்பாக, எடுத்துக்காட்டுகள் கொடுத்து தங்கள் கருத்தை நிரூபியுங்கள். இதுபோன்ற சலசலப்புக்கு அஞ்சி, உண்மையைச் சொல்லத் தயங்குபவன் அல்ல நான். ஓடி ஒளிபவனும் இல்லை!
அதனையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பெரும்பாலும் மொழியியலாளர்களே இருந்துள்ளார்கள். அவர்களே அப்பல்கலைக்கழகத்தைக் ''கெடுத்துவிட்டார்கள்'' ! என்று வேறு கூறியுள்ளீர்கள். திராவிடம், தமிழ், கன்னடம் பற்றி பேசும்போது, தாங்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்பற்றிப் பேசவேண்டிய தேவை இல்லையே! பண்பாட்டுத்துறைசார்ந்த ஒருவர் துணைவேந்தராக நியிமிக்கப்பட்டால், அந்தப் பல்கலைக்கழகம்' வளர்ச்சியடையும்' என்று கூறியுள்ளீர்கள். தாங்கள் - பண்பாட்டுத்துறைப் பேராசிரியர் - விரைவில் அப்பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, அந்தப் பல்கலைக்கழகத்தைச் 'சரி செய்ய' வாழ்த்துகள்!
தமிழுக்கு மொழியியல் எதிரி என்றால் எப்படி என்று ஆதாரங்களுடன் கூறுங்கள். அடிப்படையற்ற அவதூறுகளை அள்ளி வீசாதீர்கள்! தங்களைப் போன்றவர்கள் ;தொடர்ந்து ' இவ்வாறு கூறுவதால், மொழியியல் அழிந்துவிடாது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது! சீப்பை ஒளித்து வைப்பதால், திருமணம் நின்றுவிடாது!
மொழியியல் துறை ஒரு மொழி அறிவியல் துறை. தமிழ்நாட்டு மொழியியலாளர்கள் தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு சென்றவர்கள், செல்பவர்கள்! ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதால் அது உண்மை ஆகிவிடாது.
மேலும் 'மூலமொழிக் கொள்கையில்' எனக்கு உடன்பாடு கிடையாது. இதுபற்றிப் பின்னர் தனியே எழுதுகிறேன்.

தமிழ் - கன்னடம் - கருத்து மோதல்

 தமிழ் - கன்னடம் - கருத்து மோதல்

----------------------------------------------------------------
இன்றைய தமிழ் - கன்னடம் தொடர்பான கருத்து மோதலில் என்னுடைய கருத்துகளைத் தெளிவாக முன்வைக்கும்படி ஒரு பேராசிரியர் கேட்டுள்ளார். இங்கே தெளிவாகக் குறிப்பிடுகிறேன்.
1) 'திராவிட மொழி ஒப்பாய்வின் அடிப்படையில் திராவிட மொழிகளின் பல சொற்களுக்குப் பொதுமை வடிவங்களை மொழியியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அவற்றை மூல சொல் வடிவங்கள் (Proto-forms) என்று அழைக்கின்றனர். அதனடிப்படையில் ''அந்த மூல வடிவங்களை உள்ளடக்கிய ஒரு 'மூல மொழி'(Proto-language) - அதாவது மூல திராவிட மொழி (Proto Dravidian language)நீடித்திருக்கவேண்டும்' என்று கூறப்படுகிறது. இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மொழி ஒப்பாய்வில் மொழிகளுக்கிடையேயான ஒற்றுமைகளை ஆய்வதற்காக உருவாக்கப்படுகிற சொல் வடிவங்களே 'மூல வடிவங்கள்'. அவை உண்மையில் நீடித்ததாகக் கொள்வது தவறு. 'மூல திராவிட மொழி' என்று ஒன்று நீடித்ததற்கும் சான்றுகள் கிடையாது.
2) அந்த 'மூலமொழி' தமிழ் ; தமிழிலிருந்துதான் 'கன்னடம்' பிறந்தது என்ற முன்வைக்கப்படுகிற கருத்துகள் சரி இல்லை என்பதும் எனது கருத்து. எனக்குத் தெரிந்தவரையில் இந்தக் கருத்தை மொழியியலாளர்கள் யாரும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு வைத்திருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இல்லை.

செவ்வாய், 3 ஜூன், 2025

இயற்கை நிகழ்வுக்கும் சமூக நிகழ்வுக்கும் - புறவய விதிகளே அடிப்படை ! சமூக மாற்றத்தைத் தடுக்கமுடியுமா?

 இயற்கை நிகழ்வுக்கும் சமூக நிகழ்வுக்கும் - புறவய விதிகளே அடிப்படை ! சமூக மாற்றத்தைத் தடுக்கமுடியுமா?

--------------------------------------------------------------------------
பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கோளங்கள், துணைக்கோளங்கள், புவி ஈர்ப்பு விதிகள், கடல் அலைகள் . . . இவையெல்லாம் நீடிப்பதற்கும் இயங்குவதற்கும் புறவய விதிகளே அடிப்படை. பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட இடத்தில் தன் இருத்தலை ஏற்படுத்தியுள்ள பூமியில் புவி ஈர்ப்பு விதி செயல்படுவது புறவய நிகழ்வு. இவற்றின் புறவய நீடிப்புகளும் அவற்றிற்கான புறவய இயக்குவிதிகளும் நமது மனம் . . . எண்ணம் . . . சிந்தனை . . . விருப்பு வெறுப்பு போன்றவற்றைச் சார்ந்தவை இல்லை! புறவயத் தன்மை உடைமை உடையவை!
இந்த விதிகளை இல்லாமல் ஆக்குவேன் என்று ஒருவர் கூறினால், அவரைப்பற்றி நாம் என்ன நினைப்போம்?
இதுபோன்றதே மனித சமூகத்தின் நீடிப்பும் அவற்றின் புறவய இயக்குவிதிகளும்!
சமூகத்தின் அமைப்பு, இயக்கம், மாற்றம் போன்ற அனைத்திற்கும் புறவய விதிகள் உண்டு. இவற்றை யாராலும் இல்லாமல் தன் விருப்பவெறுப்புப்படி ''ஆக்கமுடியாது, உருவாக்கமுடியாது''.
பிரபஞ்சத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையில் உள்ள ஒரு வேறுபாடு . . . பிரபஞ்சத்தின் நீடிப்பு, இயக்கம் ஆகியவற்றில் மனிதனின் செயல்களுக்கு இடம் இல்லை! ஆனால் சமூகத்தின் நீடிப்பு, இயக்கம், மாற்றத்தில் மனிதனின் செயல்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஆனால் இந்தப் பங்கின் தன்மை பற்றி ஒரு புரிதல் வேண்டும். சமூகத்தின் புறவயவிதிகளைப் புரிந்துகொண்டு, அதன் இயக்கத்தில் . . . மாற்றத்தில் மனிதன் தன் பங்கை ஆற்றலாமே ஒழிய, அந்தப் புறவயவிதிகளை இல்லாமல் ஆக்கமுடியாது.
அதுபோன்று பண்புரீதியாக முன்னேறிச் சென்ற ஒரு சமூக நிலையை அல்லது அமைப்பைப் பின்னோக்கித் திருப்பமுடியாது. மொட்டானது ஒரு கட்டத்தில் பூவாக மாறியபிறகு மீண்டும் மொட்டாக மாறமுடியாது. அதுபோன்றே இன்றைய சமூகம் கற்கால சமூகமாக மாறமுடியாதது . . . பின்னோக்கித் திரும்பமுடியாது!
அப்படியென்றால், சோவியத் ரசியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட சோசலிச மாற்றங்கள் இன்று நீடிக்கவில்லையே என்று நினைக்கலாம். இந்தச் சோசலிச மாற்றங்கள் முதலாளித்துவ சமூகத்திற்கும் அதற்கு அடுத்த பண்புரீதியான மாற்றமான பொதுவுடைமைச் சமூகத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலை. முன்னோக்கிச் செல்வதற்கான போராட்டம் நீடிக்கிற ஒரு நிலை! இதில் தற்காலிகப் பின்னடைவு ஏற்படலாம். அதற்குப் பல காரணிகள் உண்டு. ஆனால் உறுதியாக எதிர்காலத்தில் அது பொதுவுடைமைச் சமூகத்தை அடைந்தே தீரும். அதை யாராலும் தடுக்கமுடியாது!
சமூகத்தின் அமைப்பு, நீடிப்பு, மாற்றம், அதற்கான போராட்டம் ஆகியவைபற்றிய புறவயமான விளக்கங்களே அல்லது விதிகளே மார்க்ஸ், எங்கல்ஸ் போன்றோர் முன்வைத்தவை. அவர்கள் இந்த விளக்கங்கள் அல்லது விதிகளை, தங்கள் விருப்புவெறுப்புக்கு உட்பட்டு உருவாக்கவில்லை! தீவிரமான ஆய்வின்மூலம் அந்தப் புறவய விதிகளைக் கண்டறிந்தார்கள். அவர்களே மீண்டும் வந்து, 'நாங்கள் கூறிய விதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்' என்று கூறமுடியாது! அவர்கள் 'உருவாக்கியிருந்தால்' திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். புவிஈர்ப்பு விதிகளை நியூட்டனோ ஐன்ஸ்டினோ வந்து 'திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியுமா? அதுபோன்றதுதான் மார்கஸ், எங்கல்ஸின் சமூக ஆய்வு . . . கண்டுபிடிப்புகள்!
ஏன் இதை இப்போது இங்கே சொல்கிறேன் என்று நண்பர்கள் நினைக்கலாம்.
பொதுவுடைமைக்கான போராட்டங்களை - போராளிகளை - இந்த ஆண்டு, இந்த மாதத்தில் , இந்தத் தேதியில் இல்லாமல் ஆக்கிவிடுவோம் என்று முதலாளித்துவ ஆதிக்க சக்திகள் கூறினால், அது நகைப்புக்கு உரிய ஒன்றே என்பதைக் கூறவே இந்தப் பதிவு! இயற்கை அறிவியல்போன்றதே மார்க்சிய சமூக அறிவியல்! இயற்கை மாற்றத்திற்குப் புறவயவிதிகள் இருப்பதுபோலவே சமூக மாற்றத்திற்கும் புறவய விதிகள் உண்டு.
இயந்திர அசைவு (Mechanical motion) , இயற்பியல் இயக்கம் (Physical motion) , வேதியியல் இயக்கம் (Chemical motion) , உயிரியல் இயக்கம் (biological motion) ஆகியவற்றில் நீடிக்கிற இயக்கங்களைவிட மிகச் சிக்கலான இயக்கம் சமூக இயக்கம் (Social motion) . இதைப் புரிந்துகொள்ள மிகக் கடுமையாக உழைக்கவேண்டும். இது மிகச் சிக்கலான அறிவியல்.

தேசிய இனங்களின் ஒற்றுமையே இந்திமொழித் திணிப்பை முறியடிக்கமுடியும்!

 தேசிய இனங்களின் ஒற்றுமையே இந்திமொழித் திணிப்பை முறியடிக்கமுடியும்!

----------------------------------------------------------------------
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றே இன்றைய இந்தியா! தமிழ், கன்னடம், தெலுங்கு , மலையாளம் என்று பல்வேறு தேசிய இனங்கள் இந்தியாவின் தென்பகுதியில் நீடிக்கின்றன. தேசிய இனம் என்பது நிலப்பகுதி, அரசியல் , பொருளாதாரம், பண்பாடு, மொழி போன்ற பல கூறுகளைக் கொண்டு ஒன்று.
குறிப்பிட்ட ஒரு தேசிய இனம் என்பது முந்தைய வரலாற்றில் ஒன்றுபட்ட ஒன்றாக நீடிக்கவில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றைப் பார்த்தால், பல்வேறு நிலப்பகுதிகளாகவும், பல்வேறு அரசுகளின்கீழும் நீடித்து வந்துள்ளன. ஆனால் அவை அனைத்துக்கும் ஒரு பொதுக்கூறு தமிழ்மொழியும் தமிழர் பண்பாடும். அரசியல், பொருளாதாரக் கூறுகள் வேறுபட்டு இருந்தாலும், மொழி , பண்பாடு இரண்டும் அவற்றிக்குப் பொதுக்கூறுகளே.
கிபி 10 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு, அந்நியர்களின் படையெடுப்பு, அந்நியர்களின் அரசியல் ஆதிக்கம் போன்றவற்றாலும் நிலவுடமை அரசியல் பொருளாதார அமைப்பு பலவீனமடையத் தொடங்கியதாலும், உற்பத்திமுறை மாறத் தொடங்கியதாலும் தமிழ் பேசும் மக்கள் - தமிழ்ப்பண்பாடு உடைய மக்கள் - ஒரே திரட்சியாக - அரசியல் பொருளாதாரத் திரட்சியாக - தமிழ்த் தேசிய இனமாகப் பரிணமிக்கத் தொடங்கியது. இதுபோன்றே இந்தியப் பூகோளப் பகுதியில் பல்வேறு தேசிய இனங்கள் உருவெடுக்கத் தொடங்கின.
இவ்வாறுதான் இன்று இந்தியப் பூகோளப்பகுதியில் நிலவுகிற பல்வேறு தேசிய இனங்கள் தோன்றி வளர்ந்திருக்கமுடியும். இந்தத் தேசிய இனம் என்பது மனிதகுல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றி நிலவுகிற வரலாற்று விளைபொருளே ஆகும்.
இங்குத் தேசிய இனங்கள் தோன்றி வளர்ந்த சூழலில் உலகில் மேலைநாடுகளில் முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றி, வளர்ந்து நிலவியது. மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக, தங்கள் பூகோள எல்லைகளைத் தாண்டி, தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிறுவி, அதைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அந்த ஆதிக்க முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகள் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை நிறுவினர். தங்களுக்கு ஏற்றவகையில் இந்தியப் பகுதியின் பொருளாதார அமைப்பையும் மாற்றத் தொடங்கினர்.
அதன் ஒரு பகுதியாகவே இங்கு நிலவிய நிலவுடமை உற்பத்திமுறையும் மாறத் தொடங்கியது. இங்கு நிலவிய விவசாய உற்பத்தியும் உற்பத்திமுறையும் மாறத் தொடங்கின. இங்கிருந்த நிலவுடைமையாளர்கள் மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகளின் ஆதரவுடன் முதலாளித்துவ உற்பத்திக்கு மாறத் தொடங்கினர். இந்தியப் பகுதியின் பொருளாதாரம் காலனித்துவப் பொருளாதாரமாக மாறத் தொடங்கியது.
மேலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி வளர்ந்த ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலன்களுக்காகவே இங்குப் பொருளாதார உற்பத்திமுறைகளை மாற்றி அமைக்கும்போது, உள்ளூர் நிலவுடைமையாளர்களுடன் கைகோர்த்தபோது, ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த உள்ளூர் முதலாளிகள் வளரத் தொடங்கினர். அவர்களில் ஒரு சிறு பகுதியினர் முழுக்க முழுக்க ஏகாதிபத்திய தாசர்களாக மாறியநிலையில், உள்ளூர் முதலாளிகள் தங்கள் நலன்களுக்காகத் 'தங்கள் மண்' என்னும் முழக்கத்தை முன்வைக்கத் தொடங்கினர். இங்குள்ள நிலவுடைப் பொருளாதாரமும் மாறவேண்டும், அதேவேளையில் ஏகாதிபத்தியங்களும் முழுமையாக இங்கு ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்ற ஒரு நிலையை எடுக்கத் தள்ளப்பட்டனர்.
இதுபோன்ற ஒரு சூழலில் இந்தியப் பூகோளப் பகுதியில் பல்வேறு தேசிய இனங்கள் தோன்றி நிலைக்கத் தொடங்கின. இந்தத் தேசிய இனங்கள் அனைத்துக்கும் பொது எதிரியாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நீடித்தது.
ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு இவ்வாறு தேசிய இனங்கள் வளரத் தொடங்கியது ஆபத்து. எனவே, அவை தங்களுக்குள் ஒன்றிணைந்து பொது எதிரி என்ற வகையில் தனக்கு எதிராக நின்றுவிடக்கூடாது என்பதற்காகப் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டன. அவற்றின் ஒரு பகுதியே ஒப்பீட்டு மொழியியல் ஆய்வில் ஏற்பட்ட வளர்ச்சி. எல்லீஸ், சர் வில்லியம்ஸ் ஜோன், இராபர்ட் கால்டுவெல் போன்றோர் முன்வைத்த இந்தோ ஆரிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பம் போன்ற கருத்துகள். இவற்றை அடிப்படையாகக்கொண்டு, இந்தியப் பகுதியில் ஆரியர், திராவிடர் என்ற இரண்டு 'இனங்களே' உண்டு என்று கூறத் தொடங்கினர். பொது எதிரிக்கு - ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு - எதிராக இங்குள்ள தேசிய இனங்கள் ஒன்றுபட்டு விடக்கூடாது, தங்கள் அரசியல் அதிகாரம் பலவீனமடைந்துவிடக்கூடாது என்பதே அவற்றின் நோக்கம்.
தமிழ்த் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம், கன்னடத் தேசிய இனம், மலையாளத் தேசிய இனங்கள் , தங்களுடைய பொது எதிரிக்கு எதிராகப் போராடக்கூடாது, பிளவுபட்டு நிற்கவேண்டும் என்பதே இன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் - அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தின் விருப்பம் போன்று - விருப்பம். அதன் ஒரு பகுதியே திராவிடமொழிகளைப் பற்றிய ஆராய்ச்சியை - மூல திராவிடம் என்ற கருதுகோளை - ஆரியர், திராவிடர் என்ற கற்பனை 'இனங்கள்' பற்றிய கருத்தை - பலவகைகளில் தேசிய இனங்களின்மீது மீண்டும் திணிக்க விரும்புகிறது. அத்தோடு நிற்காமல், தமிழிலிருந்துதான் தெலுங்கு வந்தது, கன்னடம் வந்தது, மலையாளம் வந்தது அல்லது பிறந்தது போன்ற கருத்துகளைப் பரப்ப விரும்புகின்றன. தேசிய இனங்களின் ஒற்றுமைக்கு எதிரான இதுபோன்ற 'பரப்பல்களை' தெரிந்து சொய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி, அது தேசிய இனங்களின் ஒற்றுமையையை சீர்குலைக்கும். இன்றைய ஆளும் வர்க்கங்களின் ஆதிக்க அரசியலுக்கே பயன்படும்.
இந்த சூழ்ச்சிக்குத் தேசிய இனங்கள் பலியாகிவிடக்கூடாது. மொழிகளில் நீடிக்கிற ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்கிற மொழியியலின் ஒரு பிரிவைத் தவறாக அரசியல் நோக்கத்திற்காக ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்த முயல்கின்றன. தமிழ்த் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம் என்று அந்தந்தத் தேசிய இனங்கள் தங்களுடைய தேசிய இனத்தின் தனித்துவத்தைத் தக்கவைப்பதை மழுங்கடிக்க முயல்கின்றன. ஆங்கிலேயர் தொடங்கிவைத்த ஆரிய - திராவிட 'இனக் கோட்பாட்டை' பல வகைகளில் மீண்டும் திணிக்க முயல்கின்றன. இந்தச் சூழ்ச்சிக்கு நாம் பலியாகிவிடக்கூடாது.
இன்று தேவையானது அனைத்துத் தேசிய இனங்களின் தனித்துவமும் அரசியல் உரிமையும் மொழி உரிமையும் ஆகும். இந்திமொழியின் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும். அனைத்துத் தேசிய இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாக அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டும். அதற்காக அனைத்துத் தேசிய இனங்களும் ஒன்றுபட்டு, தங்களுக்கு எதிராக நிற்கிற பொது எதிரியை எதிர்த்துப் போராடவேண்டும். ஆளும் வர்க்கங்களின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடக்கூடாது.
ஒடுக்கப்படுகிற அனைத்தும் தேசிய இனங்களும் தங்களுக்கு எதிரான பொது எதிரியை எதிர்த்து ஒன்றுபட்டு நிற்கவேண்டும். தங்களது தேசிய இன உரிமைகளைப் பெறவேண்டும்.
--------------------------------------------------------------------------------------
நான் 'தமிழ்த் தேசிய இனம் (Nationality) ' என்னும் புறவய நீடிப்பை ஏற்றுக்கொண்டவன். பல்வேறு தேசிய இனங்களின் ஒரு ஒன்றிய நாடாகத்தான் (Country) இந்தியாவைப் பார்க்கிறேன்.
இந்தியாவில் தேசிய இனங்கள் கரைந்துவிடவில்லை.; மறைந்துவிடவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிற மக்கள் போராட்டங்களே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தங்களுடைய நிலைபாடுதான் காங்கிரஸ், பிஜேபி நிலைபாடு. என்னைப் பொறுத்தவரையில் 'திராவிட இனம் (Dravidian Race) ' என்பது கிடையாது. தமிழ்த்தேசிய இனம், தெலுங்கு தேசிய இனம், கன்னடத் தேசிய இனம்' மலையாளத் தேசிய இனம் என்றுதான் பல தேசிய இனங்கள் இங்கு நீடிக்கின்றன.
புறநானூற்றுக் காலத்திலேயே 'தமிழ்த் தேசிய இனம்' நீடித்தது என்ற கருத்தும் என்னுடைய அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டதின்படி தவறு. தமிழ்மொழி பேசிய மக்கள் என்பது வேறு; தமிழ் இலக்கியம் நீடித்தது என்பது வேறு. குறிப்பிட்ட அரசியல் பொருளாதார அமைப்பில் 'தமிழ்த் தேசிய இனம்' என்று ஒன்று தோன்றியது என்பது வேறு. தேசிய இனம் (Nationality), தேசம் (Nation) என்பதும் நாடு (Country) என்பதும் ஒன்று இல்லை.

ஞாயிறு, 1 ஜூன், 2025

மொழியியலில் வேறுபட்ட கோட்பாடுகள் . . .

 மொழியியலில் வேறுபட்ட கோட்பாடுகள் . . .

-----------------------------------------------------------------------
மொழியியலில் பல பிரிவுகள் உண்டு. ஒரே பிரிவில்கூட வேறுபட்ட கோட்பாடுகள் , ஆய்வுமுறைகள் உண்டு. எனவே, ஒரு குறிப்பிட்ட மொழியியல் கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு முடிவுக்கு வருகிற மொழி ஆய்வுக் கருத்துக்களைப் பொதுவாக 'மொழியியலாளர்கள் கருத்து' என்று குறிப்பிடுவதைவிட, குறிப்பிட்ட மொழியியல் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களின் முடிவு என்று கூறுவதே சரியாக இருக்கும்.
ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட மொழிக் கோட்பாட்டின் அடிப்படையில் கூறப்படுகிற கருத்துகளை ஏற்காதவர்கள், மொத்தத்தில் மொழியியலே இப்படித்தான் என்று கூறுவதைத் தவிர்க்கலாம்.
அமைப்புமொழியியல் கோட்பாட்டிலிருந்து மாறுபடுகிற மாற்றிலக்கணக் கோட்பாட்டில்கூட பல்வேறு உட்பிரிவுகள், வேறுபட்ட கருத்துகள், வேறுபட்ட ஆய்வுமுறைகள், வேறுபட்ட ஆய்வுமுடிவுகள் உள்ளன.
இது மொழியியலுக்கு மட்டும் பொருந்துவது இல்லை. பிற அறிவியல்களிலும் இந்நிலை உண்டு என்பது தெரிந்ததே. பிரபஞ்சத்தின் தோற்றம், உயிரின் தோற்றம் போன்றவற்றில் வேறுபட்ட கருத்துகள் இருப்பதுபோல, மொழியியலிலும் உண்டு. பொதுவாக, நேரடியாகப் பார்க்கமுடியாத, ஊகித்து அறிய வேண்டிய அறிவியல் பிரிவுகளில் இந்நிலை நீடிக்கும். மூலமொழி, மொழிக்கிளைப்பு போன்றவை இந்த வகையைச் சேர்ந்ததுதான்!
மேலும் மொழியியல் ஒரு அறிவியல் துறையாக இருப்பினும், ஆய்வாளரின் தத்துவக் கோட்பாடு, அரசியல், பண்பாட்டுக் கொள்கை ஆகியவை அவரது ஆய்வில் உறுதியாகப் பிரதிபலிக்கும். இது மற்ற அறிவியல்களுக்கும் - குறிப்பாக, பிரபஞ்சத் தோற்றம், பருப்பொருள் ஆய்வு, உயிர்த் தோற்றம், வளர்ச்சி ஆகிய பிரிவுகளில் வெளிப்படும்.

'மூல திராவிடம்' தமிழே! 'மூல திராவிட இனம்' தமிழ் இனமே ! இவை இரண்டும் நமது விருப்பமா? அல்லது அறிவியல் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளா?

 'மூல திராவிடம்' தமிழே! 'மூல திராவிட இனம்' தமிழ் இனமே ! இவை இரண்டும் நமது விருப்பமா? அல்லது அறிவியல் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளா?

----------------------------------------------------------------------
இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. ஆங்கிலேய ஆட்சியாளர் இந்தத் தேசிய இனங்கள் 'தேசிய இன உரிமை' அடிப்படையில் போராடத் தொடங்கினால் தங்களுக்கு ஆபத்து என்று எண்ணினர். அதற்கு அவர்கள் எல்லீஸ், வில்லியம் ஜோன்ஸ், கால்டுவெல் மொழியியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தினர். மொழி ஒப்புமை ஆய்வைப் பயன்படுத்தி, ஆரிய இனம், திராவிட இனம் என்று இரண்டு 'இனங்கள்'தான் இந்தியாவில் உண்டு என்று 'கற்பனை இனங்களை' உருவாக்கி மேலிருந்து திணித்தனர். இந்த வஞ்சகம் அவர்களுக்கு உதவியது. இந்த 'இனம்' என்பது ஐரோப்பியர்கள் திணித்த 'நிற, உடல் 'வேறுபாடுகளைக்கொண்ட 'இனமா (Race) ' அல்லது முதலாளித்துவ வளர்ச்சியையொட்டி மேலைநாடுகளில் தோன்றிய 'தேசிய இனமா (Nationality) ' ?
தமிழ்த் தேசிய இனம் (Tamil Nationality) உண்மையில் நிலவுகிற ஒன்று. அரசியல் பொருளாதாரக் கூறுகளின் அடிப்படையில் தோன்றி நிலவுகிற உண்மையான ஒன்று! ஆனால் 'திராவிட இனம் (Dravidian Race) ' என்பது திட்டமிட்ட ஒரு திணிப்பே!
மொழி ஒப்புமை ஆய்வில் பல மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை அடிப்படையாகக்கொண்டு, சில சொற்களின் 'மூலம்' என்ற ஒரு கருத்து முன்வைக்கப்- படுகிறது. இதை ஒப்பியல் அடிப்படையிலான உருவாக்கம் (proto form constructed by the comparative study) என்று கூறுவார்கள். இது hypothetical form - புனைவுகோள் வடிவம்! அதனடிப்படையில்தான் 'மூல திராவிடம் (Proto-Dravidian) ' என்னும் 'சொல் மூலத்தை' அடிப்படையாகக் கொண்டு, இரண்டு கற்பனைக் கருத்துகள் முன்- வைக்கப்பட்டன. ஒன்று, 'மூல திராவிடம்' என்ற ஒரு 'மூல மொழியிலிருந்துதான்' தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 25 மொழிகள் உருவாகின; அடுத்து, 'மூல திராவிடத்தைப்' பேசியவர்கள் 'திராவிட இனத்தினர்' . இதற்குத் தெளிவான ஏகாதிபத்திய அரசியல் பின்னணி உண்டு.
மேற்கூறிய 'கற்பனைக் கருத்துகள்' இன்று அடுத்த நிலைக்கு 'வளர்ந்துள்ளன'. 'மூல திராவிடம்' என்பதே 'தமிழ்தான்'! 'திராவிட இனம்' என்பதே 'தமிழ் இனம்தான்'! இவை உண்மையென்றால், தமிழன் என்ற முறையில் உண்மையில் நான் பெருமைப்படுவேன். ஆனால் இதை நிரூபிக்க அறிவியல்ரீதியான, புறவயமான, விருப்புவெறுப்பு அற்ற ஆய்வுமுறைகள் தேவை. அவற்றின் அடிப்படையில் இவை நிரூபிக்கப்படவேண்டும். அவ்வாறு நிரூபிக்காதவரை, நம் விருப்பத்திற்கு எதையும் கூறக்கூடாது.
திராவிட மொழி ஒப்பாய்வில் ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் நான்கும் தென்திராவிட மொழிகள் என்று கூறப்பட்டன. ஆனால் அதை விரும்பாத தெலுங்குமொழி ஆய்வாளர்கள் (குறிப்பாக பேரா. பி எச் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்) , தமிழோடு தெலுங்கை இணைவாக வைப்பது தவறு, தெலுங்குமொழியானது மத்திய திராவிட மொழி (South Central Dravidian language) என்று கூறினார்கள். இவ்வாறு இன்றைய தேசிய இனங்களின் உணர்வுகள் திராவிட மொழி ஒப்பாய்வைத் தங்கள் விருப்பத்திற்குத் திசைதிருப்புகின்றன.
இதுபோல்தான் தமிழ் உணர்வாளர்களும் 'மூல திராவிடம்' என்பதே 'தமிழ்தான்' என்றும் 'மூல திராவிட இனம்' என்பது தமிழ் இனமே என்றும் கூறுகின்றனர். கன்னடம், மலையாளம் , தெலுங்கு எல்லாம் 'மூல தமிழிலிருந்து' பிரிந்த குழந்தைகளே என்று கூறுகின்றனர். இதைத் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள்! அவ்வளவுதான்!
நம்பிக்கை வேறு! அறிவியல் ஆய்வு வேறு!
விருப்பம் வேறு! அறிவியல் முடிவு வேறு!

கன்னடம் தமிழிலிருந்து பிறந்ததா ? அல்லது தனியே பிறந்த வளர்ந்த ஒன்றா? - கருத்து மோதல்!

 கன்னடம் தமிழிலிருந்து பிறந்ததா ? அல்லது தனியே பிறந்து வளர்ந்த ஒன்றா? - கருத்து மோதல்!

--------------------------------------------------------------------
மனித மொழிகளுக்கிடையே நீடிக்கிற ஒற்றுமைகள், வேற்றுமைகள், இலக்கண வகைப்பாடுகள், மொழி வரலாறு போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள மொழியியல் துறையில் பலவகைப்பட்ட கோட்பாடுகள், ஆய்வுமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை முன்வைப்பவர்கள் அவற்றிக்கான காரணங்களை முதலில் தெளிவாக்கிக்கொண்டு, தங்கள் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அவ்வாறு ஆய்வுகளை மேற்கொள்ளும்போதுதான் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஆய்வுமுடிவுகளை அடையமுடியும்.
அவ்வாறு இல்லாமல் தாய்மொழிப்பற்று, விருப்பு வெறுப்பு, அரசியல் காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற கருத்துகள் பயனற்றவை.
மேற்கூறிய வகையிலான ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் முதலில் தங்களுடைய மொழிக்கோட்பாடு, மொழி ஆய்வுமுறை போன்றவற்றை முதலில் தெளிவாகக் கூறிவிட்டு, தங்கள் ஆய்வு முடிவுகளை முன்வைக்கவேண்டும்.
திராவிட மொழி ஒப்பிலக்கணத்தில் தலைசிறந்த பேராசிரியர் மறைந்த பி.எஸ். சுப்பிரமணியம் (பி எஸ் சுப்பிரமணிய சாஸ்திரி இல்லை இவர்). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியாகப் பணியாற்றியவர். ஆந்திராவைச் சேர்ந்த பேரா. பி எச் கிருஷ்ணமூர்த்தி போன்று திராவிட மொழியியலில் வல்லவர். என்னுடைய பேராசிரியர். அவரது திராவிட ஒப்பிலக்கண அறிவு ஒரு மிகப் பெரிய கடல் போன்றது.
அவர் திராவிட மொழிகள் ஒப்பிலக்கணத்தில் தலைசிறந்த 23 நூல்களைத் தமது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் (Dravidian Comparative Grammar -1 : 2008). அதுபோன்று 'Areal Diffusion and Genetic Inheritance - Problems in Comparative Linguistics Edited by Alexandra Y. Aikhenvald & R.M. w. Dixon :Oxford University Press: 2001). அதுபோன்று உலகமொழிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமைகளின் அடிப்படையில் "Language Typology" என்னும் மொழியியல் பிரிவு வளர்ந்துநிற்கிறது.
மேற்கூறிய நூல்களில் முன்வைக்கப்படுகிற ஆய்வுமுறைகள், முடிவுகள் ஆகியவற்றைப் படித்துவிட்டு, அதனடிப்படையில் முடிவுகளுக்கு வந்து, ஒருவர் கருத்து கூறினால் சரியாக இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒரு நடிகர் ஏதோ ஒரு கூட்டத்தில் போகிறபோக்கில் ஏதோ ஒன்றைக் கூறியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை. அவரது கருத்தைப்பற்றி 'எரிந்த கட்சி - எரியாத கட்சி' என்று பிரிந்துநின்று விமர்சிக்கத் தேவையே இல்லை என்பது எனது கருத்து.
மீண்டும் கூறுகிறேன் . . மொழி ஆய்வு என்பது ஒரு மிகப் பெரிய அறிவியல் துறை. பிற அறிவியல் துறைகளில் ஒன்றைப்பற்றி வேறுபட்ட கருத்துகள் இருப்பதுபோல் அதிலும் வேறுபட்ட கோட்பாடுகள், ஆய்வுவழிமுறைகள் உண்டு.
மேற்கூறிய மொழியியல் ஆய்வாளர்களின் நூல்களை மொழி ஆய்வாளர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டும். அறிவியல் ஆய்வுமுறைகளைப் பின்பற்றவேண்டும். மொழி உணர்வு, மொழிப்பற்று ஆகியவற்றை மொழி ஆய்வோடு வைத்துக் குழம்பிக்கொள்ளக்கூடாது; மற்றவர்களையும் குழப்பி விடவும்கூடாது.

திங்கள், 5 மே, 2025

இன்றைய கல்வி . . .

இன்றைய கல்விக்கும் இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார உற்பத்திக்கும் தொடர்பு கிடையாது. மொழிப் படிப்புகள் மட்டுமல்ல, இயற்பியல், வேதியியல், தாவரயியல் போன்ற படிப்புகளுக்கும் இது பொருந்தும். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பொறியாளர்களை உருவாக்கும் படிப்புகளுக்கே முக்கியத்துவம் அளிப்படுகிறது. எந்தப் படிப்புக்கு இந்தியாவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. மொழிப்படிப்புகளுக்கும் பொது அறிவியல் படிப்புகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அதனால்தான் அவற்றிற்கான துறைகளின் அவலநிலைபற்றி இங்குள்ள மாநில, நடுவண் அரசாங்கங்கள் கவலைப்படுவதில்லை. ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள பொது அறிவியல் துறைகள், மொழி, இலக்கியம், சமூகவியல் படிப்புகளுக்கான துறைகள் மூடப்பட்டாலும் கவலைப்படுவதில்லை.

மருத்துவத்துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்கருவிகள், மருந்துகள் ஆகியவற்றிற்கு சந்தை உருவாக்குவதற்கே இங்கு மருத்துவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் அந்த மருத்துவமனைகளில் 'இறக்குமதி செய்யப்பட்டுள்ள' மருத்துவ உபகரணங்களுக்கு (CT Scan, MRI, PET, Robotic instruments etc.,) நோயாளிகளைப் 'பிடித்துத்தரவேண்டும்'! இதற்கு ஒரு இலக்கை ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவர்களுக்குக் கொடுக்கிறது. அந்த இலக்கை முடித்துத்தராதவர்கள் அங்கு தொடர்ந்து பணியாற்றமுடியாது. மருந்துகள் பரிந்துரைப்பிலும் இதுதான் இங்கு நடைபெறுகிறது. பிறந்த குழந்தைக்கு முன்னால் ஒரு அம்மை தடுப்பூசி போடுவார்கள். இப்போதெல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்குத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குழந்தைக்கு என்ன தடுப்பூசி போடுகிறார்கள் என்ற விவரம்கூட மக்களுக்குத் தெரியாது. மருத்துவர் சொல்கிறோர், ஆகவே போடுகிறோம் என்றுதான் அவர்கள் கூறுவார்கள். இந்தத் தடுப்பூசி மருந்துகள் எல்லாம் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தியே ஆகும்!

எனவே, இன்றைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சந்தை உருவாக்கித்தரும் தொழில்களுக்கான படிப்புகளுக்கே கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஏனைய படிப்புகளைப் பெறுபவர்கள் வேலையின்றித் தெருக்களில் நிறுத்தப்படுகிறார்கள்.

''அனைத்தையும் துறத்தல்'' - பொருள் என்ன?

 ''அனைத்தையும் துறத்தல்'' - பொருள் என்ன?

-------------------------------------------------------------------
சிலர் தங்களது குடும்பம், சொத்து, சுகம், இளம்வயது வாழ்க்கை அனைத்தையும் துறந்து . . . ''தத்துவ வல்லுநர்களாக'' மாறி . . . ''இறைவனின் தூதர்களாக'' மாறி . . .
''சந்நியாசம்'' வாங்கிக்கொண்டு, இலட்சம் கோடிகள் சொத்துகளின் 'இளவரசர்களாக' மதங்களின் பீடங்களில் அமர முன்வருகிறார்கள் . . . இதுவல்லவோ ''தியாகம்?'' . . . இது இந்து மதத்தில்மட்டுமல்ல, கிறித்தவ மதம் , புத்த மதம், சமண மடம் போன்ற அனைத்து மதங்களிலும் உண்டு! வடிவங்கள் மாறலாம்! அவ்வளவுதான்!
இச்செய்தி பரவலாக ஊடகங்களில் தற்போது கூறப்பட்டுவருகிறது!
இந்தப் பதிவில் மதங்கள்பற்றியோ, மதங்களின் 'மடங்கள்' பற்றியோ நான் விமர்சனம் செய்யவில்லை! இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்யவில்லை!
சமூக வரலாற்றில் தோன்றிய நிலவுகிற 'இறை நம்பிக்கை' 'மடங்கள்' போன்றவை, சமூக வரலாற்றில் இன்னொரு கட்டத்தில் மறையும்! மறைந்துதான் தீரும்! எனவே அதுபற்றி விவாதிப்பதற்கான தளங்கள் வேறு!
ஒரே ஒரு செய்தியைத்தான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்!
'அனைத்தையும் துறத்தல்' என்பதுபற்றிய ஒரு கருத்தே இது! 'அனைத்து' என்பதை எவற்றைக் குறித்து நிற்கிறது? இதுதான் எனது ஐயம்!
இவ்வாறு 'இளவரசர்களாக' அல்லது 'சக்கரவர்த்திகளாக' மாறியவர்களுக்கு இருக்க இடம் இல்லையா? உண்ண உணவு இல்லையா? பயணிக்க ஊர்திகள் இல்லையா? உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? அரசாங்கங்களின் அரவணைப்பு இல்லையா? அதுமட்டுமல்ல . . . மடங்களின் சொத்துகளை அபகரிப்பதில் ஏற்படுகிற போட்டி, பொறாமைகள் . . . கொலைகளில்கூட முடிவடைகின்றன!
ஆனால், உண்மையில் மேற்கூறியவை எதுவும் இல்லாமல் . . . மக்களுக்காகவே . . . மக்களிடையே வாழ்ந்து . . . அவர்கள் அளிக்கிற கஞ்சியைக் குடித்துக்கொண்டு . . . கட்டாந்தரையில் படுத்து உறங்கிக்கொண்டு . . . மக்களுடைய உழைப்பிலும் பங்கேற்று . . . மக்களுக்காகவே போராடி . . . இறுதியில் மக்களுக்காகவே . . . அடித்து அல்லது சுட்டுக்கொல்லப்படுகிறார்களே . . . இது 'அனைத்தையும் இழத்தல்' என்னும் சொற்றொடருக்குப் பொருள் இல்லையா?
பகத்சிங், குருதேவ், வாஞ்சிநாதன் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டங்களில் தூக்கில் இடப்பட்டவர்கள்! அல்லது போராட்டத்தில் தாங்களாகவே தங்களைச் சுட்டுக்கொன்று மறைந்தவர்கள்! தங்களது நாட்டுக்காக இவர்கள் தங்கள் குடும்பம், பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து போராடியவர்கள்! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போராட்டங்களில் குதித்தவர்கள்!
கியூபாவில் மக்கள் புரட்சியில் பெரும்பங்காற்றிய பிறகும், பிற நாடுகளின் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் புரட்சியாளர் குவேரா. கியூபாவில் தனக்கு அளிக்கப்பட்ட அமைச்சர் பதவியைத் துறந்து, பொலிவியா நாட்டின் விடுதலைக்காகப் போராடி , இறுதியில் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்!
1948-50 களில் இந்தியாவிலும் ஹைதராபத் நிஜாமை எதிர்த்த விவசாயிகளின் புரட்சியில் பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், சொத்து, சுகங்களைத் துறந்து, போராட்டங்களில் பங்கேற்று, எதிரிகளால் கொல்லப்பட்டார்கள்!
1969-இல் இந்தியாவின் பல பகுதிகளில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகப் போராடிய பத்தாயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள்! அவர்களின் தலைவரான தோழர் சாரு மஜூம்தார் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறையிலேயே கொல்லப்பட்டார். இவர்கள் அனைவரும் குடும்பம், சொத்து, பதவி, சுகம் போன்றவற்றைத் துறந்து தியாகம் செய்தவர்கள்!
எனக்குத் தெரிந்து தமிழகத்திலேயே மேற்குறிப்பிட்ட புரட்சியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கொல்லப்பட்டவர்கள் தோழர்கள் அப்பு, கணேசன், சர்ச்சில், சீராளன், பாலன், தமிழரசன், இரவிச்சந்திரன் போன்ற இளைஞர்கள்! இவர்கள் எல்லோரும் தங்கள் படிப்பு, பதவி, குடும்பம், சொத்து போன்றவற்றைத் துறந்து , மக்களுக்காகப் போராடி . . . போராட்டங்களிலேயே உயிர்துறந்தவர்கள்!
மேலே நான் கூறிய வரிசையில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் . . . தங்கள் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், சொத்து, பதவி போன்ற அத்தனையையும் துறந்து போராடி உயிர் துறந்தவர்கள்!
எது 'அனைத்தையும் இழத்தல்' ? எது 'துறவறம்'? தற்போது இருக்கிற வாழ்க்கையைவிட வசதியான வாழ்க்கைக்குப் பட்டம் சூட்டிக்கொள்பவர்களா?
அல்லது தங்களுக்கு இருக்கிற சொத்து, சுகம் அனைத்தையும் துறந்துவிட்டு, மக்களுக்காவே வாழ்கிறார்களே, இவர்களின் நடைமுறையை அல்லது வாழ்க்கையை 'அனைத்தையும் துறத்தல்' என்பதற்குப் பொருளாகக் கொள்வதா?
ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது! ஆமாம், 'அனைத்தையும் துறத்தல்' என்னும் சொல்லுக்கும் பின்னாலும் வர்க்கங்கள் . . . வர்க்க நலன்கள் ஒளிந்துகொண்டிருக்கிறது!
அனைத்து நாடுகளிலும் . . . அனைத்து மதங்களின் மடங்கள் அல்லது தலைமைப்பீடங்களுக்கு . . . கோடியே கோடி சொத்துகளைக் கொட்டிக் கொடுத்தவர்கள் யார்? மடாதிபதிகளும் அவர்களுடைய சீடர்களும் உழைத்துச் சேர்த்த சொத்துகளா இவை? இல்லை.
மக்கள் உழைப்பைக் கொள்ளையடித்த அரசர்கள் . . . சக்கரவர்த்திகள் . . . அரசுகள் 'நன்கொடையாக' கொடுத்தவையே இச்சொத்துகள்! ! ஏன் அவ்வாறு கொட்டிக்கொடுத்தார்கள்? 'பொது நலனா'? அல்லது 'வேறு நலன்களா? ' சிந்தித்துப் பார்த்தால் விடை கிடைக்கும்!

'சில', 'பல' - எண்ணுப்பெயரடைகளா, எண்ணுப்பெயர்களா?

 'சில', 'பல' - எண்ணுப்பெயரடைகளா, எண்ணுப்பெயர்களா? ஒரு குழப்பம் எனக்கு! தமிழ் ஆய்வாளர்கள் தயவுசெய்து உதவவும்.

------------- -------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கருத்து:
-----------------
‘சில’, ‘பல’ என்பவை எண்ணுப்பெயரடைகளாகவும் (Quantifier) ‘சிலர்’, ‘பலர்’ என்பவை பால் ஈறுபெற்ற எண்ணுப்பெயர்களாகவும் பயன்படுகின்றன.
‘மாணவர்கள் சிலர் இன்னும் வரவில்லை’
‘சில புத்தகங்கள் கிடைத்தன’ ('புத்தகங்கள் சில கிடைத்தன')
மேற்கண்ட வாக்கியங்களில் ‘மாணவர்கள்’ ‘புத்தகங்கள்’ ஆகியவற்றின் எண்ணிக்கையைச் ‘சிலர்’ ‘சில’ என்பவை குறித்து நிற்கின்றன.
‘சில’ என்னும் எண்ணுப்பெயரடை , பலர்பால் பாலீறு ஏற்று ‘சிலர்’ எனவும், ‘பல’ என்னும் எண்ணுப்பெயரடை ‘பலர்’ எனவும் அமைகின்றன. ‘ஒரு’ என்னும் எண்ணுப்பெயரடை ‘அர்’ என்னும் பாலீறு பெற்று ‘ஒருவர்’ என்று அமைவதுபோல, ‘சில’ ‘பல’ என்பவையும் ‘சிலர்’ ‘பலர்’ என்று அமைகின்றன.
‘மாணவர்கள்’ என்னும் பெயர்ச்சொல் பன்மை விகுதி பெற்றிருப்பதால், அவர்களைக் குறித்து நிற்கிற ‘சிலர்’ ‘பலர்’ என்னும் சொல்லும் ஒன்றுக்குமேற்பட்ட மாணவர்களைக் குறிக்கின்றன.
மற்றொரு கருத்து:
-------------------------------------------------------
‘சில’ ‘பல’ என்பவை வேற்றுமைகளை ஏற்பதால், அவற்றை அஃறிணை ‘எண்ணுப் பெயராகவும்’ கொள்ளலாம். இங்கு ‘அவை’ ‘இவை’ என்னும் அஃறிணைப் பதிலிடு பெயர்கள் வேற்றுமைகள் ஏற்று, ‘அவற்றை’ ‘இவற்றை’ என்று மாறி அமைவதை ஒப்பிட்டு நோக்கலாம்.
‘ஆசிரியர் பல புத்தகங்கள் வாங்கினார்’
‘ஆசிரியர் புத்தகங்கள் பலவற்றை வாங்கினார்’
‘ஆசிரியர் சில புத்தகங்கள் வாங்கினார்’
‘ஆசிரியர் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினார்’
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளிலும் ‘பல + அற்று (சாரியை) , பலவற்று + ஐ --> பலவற்றை’ என்றும் அதுபோன்றே ‘சில + அற்று --> சிலவற்று + ஐ --> சிலவற்றை’ என்றும் மாறுகின்றன.
‘சில / பல புத்தகங்கள்’ என்று வரலாம்; ஆனால், ‘சில / பல மாணவர்கள்’ என்று வரக்கூடாது; அதற்குக் காரணம், ‘மாணவர்கள்’ உயர்திணை; எனவே, ‘மாணவர்கள் சிலர் / பலர்’ என்றுதான் கூறவேண்டும் என்னும் கருத்தும் உள்ளது.

புதன், 30 ஏப்ரல், 2025

தற்போதைய கல்வியை இந்தியாவில் தீர்மானிப்பது யார்? உள்நாட்டு வளர்ச்சிக்கான கல்வியா? அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கான கல்வியா?

 

தற்போதைய கல்வியை இந்தியாவில் தீர்மானிப்பது யார்? உள்நாட்டு வளர்ச்சிக்கான கல்வியா? அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கான கல்வியா?

------------------------------------------------------------------------

சீனம் விடுதலை அடைந்தது 1949 அக்டோபர் 1-ஆம் தேதி. மாசேதுங்கின் தலைமையிலான பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தியா 1947 - ஆகஸ்டு 15 ஆம் நாள் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியிலிருந்து விடுபட்டது. நம்மைவிட இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர்தான் சீனம் விடுதலை அடைந்தது. நம்மைவிட மக்கள்தொகை அதிகமான நாடு அது. வறுமையில் வாடிய நாடு அது.

ஆனால் அதனுடைய இன்றைய வளர்ச்சி . . . மேலைநாடுகளுக்கெல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இன்று சீனம் தடம்மாறி, ஏகாதிபத்தியமாக மாறி இருக்கிறது. ஏகாதிபத்திய பாதையில் நடைபோடுகிறது. அது வேறு.

ஆனால் மாவோவின் தலைமையில்தான் இன்றைய அத்தனை வளர்ச்சிக்கும் அடித்தளம் இடப்பட்டது. விவசாயம், தொழில் உற்பத்தி இரண்டுமே திட்டமிட்டு, உள்நாட்டு மூலதனத்தை வைத்துக்கொண்டு வளர்க்கப்பட்டது. அனைத்துத் துறைகளில் தலைநிமிர்ந்து நிற்கிறது!

ஆனால் இந்தியாவின் இன்றைய நிலை . . . அனைத்துக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்துதான் உள்ளது. ஏன் இந்த நிலை? நிலங்கள் இல்லையா? உழைப்பதற்குக் கரங்கள் இல்லையா? பீடியைத் தவிர - பற்பசை, சோப்புமுதல் அத்தனை பொருள்களும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திகள்! அல்லது அவற்றின் மூலதனம், தொழில்நுட்பம் ஆகியவற்றைக்கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றவை!

1947-இல் இந்தியாவில் நீடித்திருந்த மூலதனத்தைப்போன்று பல மடங்கு இன்று இந்தியாவில் அந்நிய மூலதனம் நீடிக்கிறது. ஒரு மிகப் பெரிய பாலம் கட்டுவதற்கும்கூட பன்னாட்டு நிறுவனங்களே தேவைப்படுகிறது. எல் & டி, கிடாச்சி என்று பன்னாட்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும் கட்டுமானத்திற்கும்கூட அந்நிய நாடுகள்தான் கடன் தருகின்றன!

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி உறுதியாகத் தேவை! அதில் ஐயமே இல்லை! அவற்றின் வளர்ச்சிதான் ஒரு நாட்டை அடுத்த உயர்ந்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும். அதற்காத்தானே ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப்போராடினோம்! வ உசி கப்பல் விட்டார். பகத்சிங் தூக்குமேடை ஏறினார்! எனவே, எந்தவொரு அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும் உள்நாட்டில் , உள்நாட்டு மூலதனத்தில் , உள்நாட்டுக் கரங்களாலும் மூளைகளாலும் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்!

ஆனால் உண்மை என்ன?

ஒருவர் தனது வீட்டுக்குவேண்டிய பொருள்களை - தொலைக்காட்சி, ஏ சி , வீடு, சிற்றுந்து வரை - தனது சொந்த வருவாயில் வாங்குவது வேறு! கடன் அட்டையில் வாங்குவது வேறு! இந்த வேறுபாடுதான் ஒரு நாட்டுக்கும் பொருந்தும்! இந்த நிலை மாறும்வரை . . . கல்வியும் உள்நாட்டுத் தேவைக்கான கல்வியாக இருக்காது . . . இருக்கமுடியாது!

இவைபற்றியெல்லாம் 'பூத் கமிட்டி' அரசியல் கட்சிகள் கவலைப்படுகிறதா? கிடா வெட்டுவது, ஸ்வீட் பாக்ஸ் அளிப்பது போன்றவற்றைத்தவிர . . . இந்தக் கட்சிகள் வேறு என்ன செய்கின்றன? நாட்டை நிர்வகிக்கும் ஐ ஏ எஸ் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க பெரிய தேர்வு முறை இருக்கிறது! ஆனால் நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பாராளுமன்றம் , சட்டசபைகளில் உறுப்பினர்களாக இடம்பெற என்ன தேவைப்படுகிறது இங்கே?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India