ஜனநாயக மொழிக்கொள்கை
-----------------------------------------------------------------ஒரு மொழியியல் மாணவன் என்ற முறையிலும் மக்கள் ஜனநாயகக்கொள்கையை விரும்புகிறவன் என்ற வகையிலும் நான் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை. எல்லா மொழிகளும் மனிதசமுதாயத்தின் - மனிதமூளையின் - படைப்புத்தான். அவை மக்களால்தான் தான் பேசப்படுகின்றன. ஒரு மொழியைத் தரக்குறைவாகக் கருதுவது என்பது அந்த மொழி பேசும் மக்களைத் தரக்குறைவாகப் பார்ப்பதாகும் என்பது எனது கொள்கை.
எனவே ஆங்கிலமோ, இந்தியோ, சமசுகிருதமோ - எந்தமொழியாக இருந்தாலும் அதை நான் மதிக்கிறேன்.
ஆனால்.... எனது தாய்மொழியின்மீது வேறொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தனது தாய்மொழியின்மீது பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தாய்மொழியில் ஒருவர் தனது அத்தனை மொழிச்செயற்பாட்டுத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் வசதியும் வேண்டும். இதுவே மக்கள் ஜனநாயக அடிப்படையிலான ஒரு மொழிக்கொள்கையாக இருக்கமுடியும்.
எந்தவொரு இனமும் தனது அனைத்துக் கருத்துப் புலப்பாட்டுச் செயல்களுக்கும் தனது தாய் மொழியையே பயன்படுத்தவேண்டும். எந்தவொரு அடிப்படையிலும் பிற மொழிகளை அவற்றிற்குப் பயன்படுத்தக்கூடாது.
1) தமிழகத்திலும் தமிழ் இனம் தனது தாய்மொழியாகிய தமிழ்மொழியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
2) ஆங்கிலமோ இந்தியோ இரண்டுமே தமிழ் இனத்திற்கு அயல்மொழிகள்தான்!
3) அரசு அலுவலகப் பணிகள் அனைத்தும் தமிழில்தான் நடைபெறவேண்டும்.
4) தொடக்கக்கல்விமுதல் உயர்நிலை ஆய்வுவரை பயிற்றுமொழியாகத் தமிழ்தான் தமிழகத்தில் நீடிக்கவேண்டும்.
5) வழிபாட்டுத்தலங்களில் தமிழ்தான் பயன்படுத்தப்படவேண்டும்.
6) தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் தமிழ்தான் முழுமையாகப் பயன்படுத்தப்படவேண்டும்.
7) ஆங்கிலமோ பிரஞ்சுமொழியோ எந்த ஒரு அயல்மொழியும் ஒருவருக்குத் தேவையென்றால், அதை அவர் படிப்பதற்குக் கல்வி நிறுவனங்கள் உதவவேண்டும். ஆனால் அது தேவைப்படாதவர்கள்மீது அந்த மொழிகளைத் திணிக்கக்கூடாது.
8 ) பொது ஊடகங்கள் அயல்மொழிக் கலப்பின்றி, முறையாக, தவறின்றி, தமிழைப் பயன்படுத்த முன்வரவேண்டும்.
9) சிறுபான்மை இன மக்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்கத் தேவையானவற்றை அரசு செய்துகொடுக்கவேண்டும்.
தமிழ்நாடு என்பது தமிழ்மொழி நாடாக இருக்கவேண்டும்; ஆங்கிலம், இந்தி போன்ற எந்தவொரு அயல்மொழிகளின் மேலாண்மையும் தமிழ் மொழியின்மேல் இருக்கக்கூடாது. தமிழ்நாடு, குசராத்தாகவோ இங்கிலாந்தாகவோ இருக்கக்கூடாது.
ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்படுவதற்கு . . . முதல் தேவை இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழியாக இந்திமட்டும் இல்லாமல், அனைத்து இந்தியமொழிகளும் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும். அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் தேவையான உதவிகளை இந்திய ஒன்றிய அரசாங்கம் அளிக்கவேண்டும். எந்தவொரு மொழிக்கும் தனிப்பட்ட உரிமைகள் அளிக்கக்கூடாது.
அதற்காக இந்திய ஒன்றியத்தில் இந்தி அல்லாத பிறமொழிகள் பேசும் இனங்கள் ஒன்றுபட்டு, இணைந்து, போராடவேண்டும்.
மொழிக்கொள்கைபற்றிய எனது முகநூல் பதிவையொட்டி நண்பர் திரு. மாலன் அவர்கள் அனைவருக்கும் எழக்கூடிய ஐயங்களைக் கேட்டுள்ளார்கள்.
ஐயம்: 1. // இன்னொரு இந்திய மொழி பேசும் சக இந்தியரோடு உரையாட, உறவாட, வணிகம் செய்வதற்கான தொடர்பு மொழி எது? //
பதில்: எனது மொழிக்கொள்கையில் நான் தெளிவாக முன்வைத்திருப்பது : தமிழகத்தில் . . . தமிழர்கள் . . . தங்களது அனைத்துப் பணிகளையும் தங்களது தாய்மொழியாகிய தமிழில்தான் மேற்கொள்ளவேண்டும் என்பதே ஆகும்.
ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வணிகமொழி - இந்த மூன்று தகுதிகளையும் ஒரு இனத்தின் தாய்மொழி பெறவேண்டுமா கூடாதா என்பதுதான் இங்கு அடிப்படையாகப் பேசப்படுகிறது.
ஆட்சிமொழி . . . இந்திய ஒன்றியத்தில் ஆட்சிப்பணிகளில் தமிழர்கள் இந்திய ஒன்றிய அரசோடு தமிழிலேயே தொடர்புகொள்ளும் உரிமை வேண்டும். அதற்குத் தேவை - தமிழும் ஆட்சிமொழிகளில் ஒன்றாக அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டும். ''ஆட்சிமொழி'' அதாவது அரசாங்கப் பணிகளுக்கான மொழி!
பயிற்றுமொழி . . . தமிழகத்துக் கல்விக்கூடங்களில் மாணவர்கள் தங்கள் துறைசார்ந்த அறிவைத் தாய்மொழிவழியே பெறும் நிலைமை ஏற்படவேண்டும். தமிழகத்துக் கல்விநிறுவனங்களில் தமிழே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும்.
பொருளாதார உற்பத்தி , வணிகம் ஆகியவற்றிற்கான மொழி . . . தமிழர்கள் தமிழ்நாட்டில் தங்களது வணிகம் உட்பட பிற பொருளாதார நிறுவனங்கள், நிலையங்களில் தமிழ்வாயிலாகத் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் உரிமை வேண்டாமா? இங்கு விற்கப்படும் பொருள்களைப்பற்றித் தமிழிலே தெரிந்துகொள்ளும் உரிமை வேண்டாமா?
ஒரு இனம் தனக்குத் தொடர்புள்ள ஆட்சிப்பணிகளைத் தன் தாய்மொழிவழியாக மேற்கொள்ள உரிமை இல்லாத ஒரு இனமாக நீடிக்கவேண்டுமா?
ஒரு இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தங்களது தாய்மொழிவழியாக அறிவுத்துறைகளில் பயிற்சிபெற உரிமை வேண்டாமா? இவற்றை உள்ளடக்கியதுதான் நான் முன்வைத்துள்ள மொழிக்கொள்கை!
ஆனால் வணிகம், அரசியல் தொடர்புகாரணமாக, பிறமொழி பேசுபவர்களிடமும் உரையாடல் செய்யவேண்டியிருக்குமே! அப்போது என்ன செய்வது?
இதுதான் நண்பர் மாலன் அவர்களின் ஐயம்!
இங்குச் ''சக இந்தியர்'' என்றால் யார் ? 20 மொழிகளுக்குமேல் பேசக்கூடிய ''இந்திய ஒன்றியத்தில்'' இந்தச் ''சக இந்தியர்களின்'' - அதாவது தமிழரைத்தவிர - தாய்மொழிகள் ஒன்று இல்லை! பல. அதில் ஒன்று இந்திமொழி. தமிழர்கள் தெலுங்கர்களோடு உறவாட, வணிகம் செய்யத் தேவையானது தெலுங்குதான்.
ஆனால் இந்தத் ''தமிழர்'' தெலுங்கரோடு மட்டும் அல்லாமல், கன்னடர்கள், மலையாளிகள், வங்காளிகள் , இந்திமொழி பேசுகிறவர்கள் என்று பலமொழி பேசுகிறவர்களோடு ''உறவாடத்'' தேவை இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது, தெலுங்குமட்டும் போதாதே. அப்போது என்ன செய்வது?
ஏதாவது ஒரு மொழியைப் பொதுமொழியாகக் கொண்டால் நல்லதுதானே என்ற எண்ணம் உருவாகுவது இயற்கைதான்! அந்த இணைப்புமொழியாக இந்தியோ ஆங்கிலமோ இருக்கலாம் அல்லவா? இதுதான் நண்பர் மாலன் அவர்கள் முன்வைக்கிற ஐயம்!
என்னைப்பொறுத்தவரை இந்த ஐயம் ஒரு தேவையான ஐயம் என்றாலும் கல்வித்துறை, ஆட்சித்துறை, தமிழக உள்மாநில பொருளாதாரத்துறை ஆகியவற்றிற்கு வெளியே உள்ள தனிநபர் வணிகத்துறை, பொருளாதாரத்துறை தொடர்பான ஐயம் இது!
இந்தப் பிற மாநிலங்களோடு ஏற்படும் வணிகத் தொடர்புக்காக, எந்த மொழி தேவையோ அந்த மொழியைத் தேவைப்படுகிறவர்கள் கற்றுக்கொள்ளட்டும். இதற்காக அனைத்து தமிழர்களையும் தாய்மொழி அல்லாத பிற இனத்தின் - அந்நிய இனத்தின் மொழியைப் படிக்க ஏன் கட்டாயப்படுத்தவேண்டும்?
பிற மொழி தேவைப்படுகிறவர்கள் அதைக் கற்றுக்கொள்ளட்டும்! அதைத் தடுக்கவேண்டும் என்று நான் கூறவரவில்லை! நான் முன்வைப்பதெல்லாம் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களுக்குத் தேவையான . . . அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டிய வேண்டிய மொழிக்கொள்கை!
ஐயம் 2: //ஆங்கிலமும் இந்தியும் அயல் மொழி, தேவையான அயல் மொழிகளைக் கற்க கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும் என்கிறீர்கள். மெத்தசரி. அது இந்திக்கும் பொருந்தும்தானே? விரும்புவோர் அதனைப் படிக்க அரசுக் கல்வி நிறுவனங்கள் உட்பட வாய்ப்பும் வசதியும் செய்து தரப்பட வேண்டும்தானே?//
பதில் : நான் இதில் தெளிவாக இருக்கிறேன். பிற மொழிகள் தேவைப்படுகிறவர்கள் தமிழகத்தில் அதைக் கற்றுக்கொள்வதற்கு . . . விருப்பத்தின் அடிப்படையில் . . . தேவையானவற்றை அளிப்பதில் எனக்குக் கருத்துவேறுபாடு இல்லை! ஆனால் அதைக் கட்டாயமாக்கக்கூடாது! விருப்பப்பாடமாக வையுங்கள்! தேவைப்படுகிறவர்கள் படித்துக்கொள்ளட்டும்!
ஐயம் 3 : //"பஞ்ச பூதத்தின் செயல்கள் அவை சார்ந்த தொழில்நுட்பங்கள் மூத்த வளருது மேற்கே. அவை குறித்த தகவல்கள் தமிழ் மொழியில் குறைவு. தமிழ் மட்டுமே அறிந்தோர் தங்களை இற்றைப்படுத்திக் கொள்ள யாது செய்தல் வேண்டும்?"//
பிறநாடுகளில் - பிறமொழிகள் பேசும் நாடுகளில் - வளர்கின்ற அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் தொடர்பான தகவல்களைத் தமிழிலிலேயே தமிழர்கள் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். அதற்குத் தேவையான உதவிகளை இந்திய ஒன்றிய அரசும் அளிக்கவேண்டும்.
நண்பர் மாலன் அவர்கள் எழுப்பியுள்ள ஐயங்கள் 2, 3 -க்காகத் தமிழக மக்கள்மீது இந்தியையோ அல்லது ஆங்கிலத்தையோ சட்டங்களின்வாயிலாகத் திணிப்பது. . . கட்டாயமாக்குவதைத்தான் நான் எதிர்க்கிறேன்!
எனது முக்கியக் கோரிக்கைகள் . . .
பலமொழிகள் பேசும் பல மாநிலங்களின் ஒன்றிய அரசாக இருக்கும் இந்திய அரசு . . . தனது அரசியல் சட்டத்தில் . . .ஒரு மொழியைமட்டும் . . .இந்திமொழியைமட்டும் . . .ஆட்சிமொழியாகத் தக்கவைப்பது சரி இல்லை!
இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ள அத்தனை இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாகச் சட்டத்தில் இடம்பெறவேண்டும்! இந்திய ஒன்றியமானது இந்திமொழி பேசும் இனத்தின் அரசு மட்டும் இல்லையே!
எனவே, ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பொருளாதார - வணிக மொழி என்ற மூன்று தகுதிகளையும் தமிழுக்குச் சட்டத்தின்வழியே அளிக்கப்படவேண்டும்!
ஒரு இனத்தின்மீது பிற இனங்களின் மொழிகளையோ பண்பாடுகளையோ அரசியல் சட்டங்களின் வழி திணிக்கக்கூடாது!
பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் அவர்கள் மொழிக்கொள்கைபற்றிய எனது பதிவை வரவேற்று எழுதியுள்ளார்கள். அதையொட்டி, நான் மேலும் ஒரு விளக்கத்தை இங்கு அளிக்கிறேன்!
''நன்றி பேராசிரியர் அவர்களே. ''தொடர்புமொழி'' பற்றிய உரையாடல் ஒருபுறம் இருக்கட்டும். அதைச் சமுதாய வளர்ச்சியின் இயக்கத்தில் மக்களே தீர்மானித்துக்கொள்வார்கள். ஆனால் அரசியல் சட்டத்தில் இந்திமொழியோடு பிற மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குவதில் என்ன சிக்கல்?
''சென்னை ஐ ஐ டி -யின் செயற்கை அறிவுத்திறன் வளர்ச்சிக்கும்'' இதற்கும் என்ன தொடர்பு? இதற்குக் கீழே நான் விடை அளிக்கிறேன் பேராசிரியரே. . . அது சரிதானா என்று பாருங்கள்!
'' இந்திமொழிதான் அரசியல்சட்டப்படி இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழி. அதற்கு இணையாகப் பிற இந்திய மொழிகளை ஆட்சிமொழிகளாக அரசியல் சட்டத்தில் சேர்க்கமாட்டோம். பிறமொழி பேசுபவர்களால் இந்தியில் ஒன்றிய அரசோடு தொடர்புகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் தங்கள் மொழிகளிலேயே ஒன்றிய அரசுக்குக் கோப்புகளை அனுப்பட்டும். நாங்கள் சென்னை ஐ ஐ டி-யின் உதவியுடன் அவற்றை இந்திமொழியில் மொழிபெயர்த்துக் கொள்கிறோம்! அவற்றிற்கான பதில்களை இந்தியில் நாங்கள் தயாரித்து, பின்னர் சென்னை ஐ ஐ டி-யின் உதவியுடன் அவரவர் மொழிகளுக்கு மொழிபெயர்த்து அனுப்புகிறோம். போதுமா? இதற்குப்பிறகும் பிற மொழிகள் ஏன் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும்? ''
காதில் பூ சுற்றுகிற ஏமாற்று வேலை இது! கணினி அறிவியல் வளர்ச்சிக்கும் இனங்களின் தன்னுரிமைக் கோரிக்கைகளுக்கும் என்ன தொடர்பு? பிறமொழிகள் ஆட்சிமொழிகளாக ஆக்கப்பட்டுவிட்டால், அந்தக் கணினி அறிவியல் வளர்ச்சி மக்களுக்குப் பயன்படாதா?
இங்கு எனக்குத் தெரிந்த ஒரு (100 விழுக்காடு) உண்மையைக் கூறுகிறேன் ... இந்திய ஒன்றிய அரசு இதுபோன்ற கணினிமொழியியல் வளர்ச்சித் திட்டங்களில் செய்வது என்ன? இந்தி (வடமொழி உட்பட) மொழியை அடிப்படையாகக்கொண்டு - அதன் அகரமுதலி, இலக்கணம் ஆகியவற்றிற்கு ஏற்ப பிற மொழிகளின் அகரமுதலிகளையும் இலக்கணங்களையும் கணினிவழியே ''செதுக்கிக்கொள்ள'' ஏராளமான கோடிகள் செலவிடப்படுகிறது.
அதற்காகவே TDIL ( Technology Development of Indian Languages) என்ற அமைப்பு ஒன்றிய அரசின் மின்னணுவியல் துறையின்கீழ் இயங்குகிறது. மேலும் வட இந்தியாவில் உள்ள IIT களும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நீடிக்கிற IIIT என்ற ஆய்வு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்தியை அடிப்படையாகக்கொண்டு தமிழ்க்கணினி மொழியியலில் யாரும் இங்கு வேலை செய்யத் தயாராக இருந்தால், அதற்கு எவ்வளவு நிதி வேண்டுமென்றாலும் கொடுக்க இந்திய ஒன்றிய அரசு தயாராக உள்ளது!
எனவே இதில் நாம் ஏமாறாமல் இருக்கவேண்டும்.
நமது ஒரே கோரிக்கை . . . தமிழ் உட்பட அனைத்து இந்தியமொழிகளுக்கும் இந்திய ஒன்றியத்தின் அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழி தகுதி வழங்கப்படவேண்டும். இந்திமொழி வளர்ச்சிக்கு அளிக்கப்படுகிற அத்தனை திட்டங்களும் பிற மொழிகளுக்கும் அளிக்கப்படவேண்டும். இதைச் செய்துவிட்டு, ஐ ஐ டி - களைப் பயன்படுத்தி, மக்களுக்கு உதவிபுரியட்டும்! வரவேற்போம்!
இந்திய அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு மட்டுமே ஆட்சிமொழித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது !
தமிழ் உட்பட பிற இந்தியமொழிகளுக்கு அரசியல் சட்டத்தில் அந்தத் தகுதி கொடுக்கப்படவில்லை! ஏன்? இதுதான் இன்றைய அடிப்படை வினா!
இந்திய ஒன்றிய அரசில் மாற்றி மாற்றி அமர்கிற பேராயக்கட்சியும் பா ஜ கட்சியும் இதற்கு விடை தரவேண்டும்! அதற்கு என்ன தடை என்பதை விளக்கவேண்டும்! அதை விட்டுவிட்டு . . .
'' மாநிலங்களை மூன்றாக வகைப்படுத்தியுள்ளோம்! அதன்படி, இந்தியைமட்டுமே தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் ஒரு வகை!
அவ்வாறு முழுமையாகக்கொள்ளாமல், 30 விழுக்காடு மக்கள்மட்டுமே இந்தியைப் பயன்படுத்துகிற மாநிலங்கள் இரண்டாவது வகை!
இந்திமொழியே பேசாத தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மூன்றாவது வகை!'' '' இந்த மூன்றாவது வகைப்பட்ட மாநிலங்கள் தங்கள் தாய்மொழிகளிலேயே கல்வியை மேற்கொள்ளலாம். அதற்கு எவ்விதத்தடையும் கிடையாது! இந்தி மொழியைப் படிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை!''
இவ்வாறு இன்று அனைத்துமொழிகளுக்கும் அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்படவேண்டும் என்ற மையமான கோரிக்கை பின்தள்ளப்பட்டு . . . மறைக்கப்பட்டு . . . மறக்கடிக்கப்பட்டு ..
கல்விக்கூடங்களில் இந்தித் திணிப்பு உண்டா இல்லையா என்பதுபற்றிய பேச்சாக . . . மொழிச்சிக்கல் இன்று திசை திருப்பப்படுகிறது!
இது சரி இல்லை! அடிப்படைச் சிக்கலை மறைக்காதீர்கள்! தமிழகத்தில் கல்விக்கூடங்களில் ஆங்கிலமா அல்லது இந்திமொழியா என்ற வாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
இதுவும் தவறு!
தமிழகத்துக் கல்விக்கூடங்களில் தாய்மொழியாகிய தமிழா அல்லது ஆங்கிலம், இந்தி போன்ற அந்நியமொழிகளா என்ற வினாவைநோக்கிப் பேச்சு திரும்பவேண்டும்!
எனவே இந்திய ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு மட்டுமல்லாமல், அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்பட வேண்டும் என்பதில்தான் முழுக்கவனமும் செலுத்தப்படவேண்டும்!
அந்தத் தகுதி தமிழுக்குக் கிடைத்துவிட்டாலே . .கல்விக்கூடங்களில் தமிழ்மொழி முழுமையான மேலாண்மையைப் பெற்றுவிடும்! இந்திமொழி இன்று பெறுகிற அத்தனை வசதிகளையும் தமிழ்மொழி பெற்றுவிடும்!
ஒரு சிக்கலில் பல உள் சிக்கல்கள் இருக்கலாம்! அவற்றில் ஒரு சிக்கலே அடிப்படையாக இருக்கும். அதனால்தான் மற்ற உள் சிக்கல்கள் நீடிக்கும். அந்த அடிப்படைச் சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டால், ஏனைய சிக்கல்களும் தீர்க்கப்பட்டுவிடும்!
இங்கு இந்திமொழி தவிர பிறமொழிகளுக்கு ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்படாததே அடிப்படைச் சிக்கல். அந்தச் சிக்கலைத் தீர்த்துவிட்டால், ஏனைய சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிடும்! அது தீர்க்கப்படாதவரை . . . பிற உள் சிக்கல்கள் தீராது!
இந்திய அரசியல் சட்டத்தில் இந்திமொழியோடு, தமிழ்மொழி உட்பட அனைத்து இந்தியமொழிகளையும் ஆட்சிமொழிகளாக்குவதில் . . . ஆண்ட பேராயக்கட்சிக்கும் . . .ஆளுகின்ற பா ஜ கட்சிக்கும் . . . என்ன சிக்கல்? என்ன தடை? ஏன் தயக்கம்?
இந்திபேசாத இனங்களைச் சேர்ந்தவர்கள் வருமானவரி, பிற வணிகவரி போன்றவற்றைக் குறைவாகச் செலுத்துகிறார்களா? அல்லது அந்த மொழிகளின் அமைப்புக்களில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா?
தமிழ் உட்பட பிற இந்தியமொழிகளை ஆட்சிமொழிகளாக ஆக்குவதில் பேராயக் கட்சிக்கும் பா ஜ கட்சிக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? அல்லது ஒருமித்த கருத்தா? நேரடியான விடை தேவை!
நண்பர் திரு. மாலன் அவர்கள் இந்திமொழிக்குமட்டுமே இந்திய அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்பட்டிருப்பதற்கான காரணங்கள்பற்றிச் சில விளக்கங்களை அளித்துள்ளார். நான் புரிந்துகொண்டவரையில், பின்வரும் கருத்துக்களே அவர் கூறுகிறார் என நினைக்கிறேன். எனது புரிதலில் தவறு இருக்கலாம்.
(1) ஆங்கிலேய மேலாண்மைக்கு எதிரான மக்களின் விடுதலைப் போராட்டங்களில் இந்திமொழி பேசும் பகுதிகளே முன்னணி வகித்தன.
(2) மேலும் ஆங்கிலம் படிக்க வாய்ப்புக்கிடைத்த தலைவர்களே விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமைதாங்கினார்கள்.
(3) ஆங்கிலேய மேலாண்மை முடிவுக்கு வந்து, இந்திய ஒன்றிய அரசு அமைக்கப்படும்போது, இந்திமொழி பேசாத மாநிலங்களின் விடுதலைப் போராட்டங்களை மேற்கொண்டவர்கள்கூட - இராஜாஜி போன்றவர்கள்கூட - இந்தியாவுக்கும் பொது மொழி ஒன்று வேண்டும்; அது இந்தியாகவே இருக்கலாம்; அப்படி ஒரு பொதுமொழி இல்லையென்றால் இந்தியா என்பது மேலும் பல பிரிவினைகளுக்கு உட்பட்டுவிடும் என்று மறைந்த அண்ணல் அம்பேத்கார்கூட கருதினார்; மேற்கூறிய காரணிகள் எல்லாம் செயல்பட்டு, இந்திமொழியைப் பொதுமொழியாகக்கொண்டு, அதற்கு ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்பட்டது என்று திரு. மாலன் அவர்கள் கூறுகிறார். அவரது வாதம் ... ''அன்றைய அரசியல் சூழல்'' காரணமாக அவ்வாறு நடைபெற்றது!
(4) அதுபோன்று இந்திமொழிமட்டுமே ஆட்சிமொழி என்பதில் பேராயக் கட்சிக்கும் பா ஜ கட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது; ஆனால் அதைச் செயல்படுத்தும் அணுகுமுறையில் வேறுபாடு உள்ளது; இன்றைய பா ஜ கட்சி அரசாங்கம் இந்திபேசாத மாநிலங்களில் அந்த மாநிலங்களின் மொழிகளின் முழுமையான பயன்பாட்டுக்கு - கல்விக்கொள்கை உட்பட - உதவி செய்கிறது என்பதும் அவரது கருத்து.
எனது கருத்துக்கள் . . . இந்தி பேசும் மாநிலங்களில் அன்றைய ''விடுதலைப் போராட்டத்தில்'' ஈடுபட்ட அன்றைய பேராயக் கட்சியின் ''தலைவர்கள்'' இரண்டு முதன்மையான காரணங்களுக்காகவே ஈடுபட்டார்கள்:
(1) ஆங்கிலேய அரசிடம் இங்குள்ள மேல்வர்க்கத்தினரும் படித்த இடைத்தட்டுவர்க்கத்தினரும் பலவகை சலுகைகளைப் பெறுவதற்கான ''மனு போடும்'' அமைப்பாகவே பேராயக்கட்சியை நடத்திச் சென்றனர். இவர்களே அன்றைய ''பேராயக் கட்சியின் மிதவாதிகள்'' - கோகலே போன்றவர்கள்!
(2) முகலாயப் பேரரசர்களால் ''இந்து மதம்'' பாதிக்கப்பட்டு இருந்தநிலையில் , அந்தப் ''பாதிப்பிலிருந்து'' இந்துமதம் மீண்டுவந்து, மீண்டும் இங்கு ''இந்துமத அரசு'' நிறுவப்படவேண்டும். அதற்குத் தேவையிருந்தால் , அந்நிய ஆங்கில அரசு அகற்றப்படவேண்டும். பாலகங்காதார திலகர் போன்றவர்கள் ((''பேராயத் தீவிரவாதிகள்'') இதில் உறுதியாக ஒரு கட்டும்வரை இருந்தனர்.
(3) ஆங்கிலேய மேலாண்மைக்கு எதிராக - உண்மையான விடுதலைப்போராட்டங்களுக்காக - பல முனைகளில் மக்கள் முன்னுக்கு வரும்போதெல்லாம், மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவினர்களும் அதை வளரவிடாமல் தவிர்த்தனர்; தடுத்தனர்.
(4) அதேவேளையில் தமிழகத்தைச் சேர்ந்த வ உ சி போன்றவர்கள் அரசியல் பொருளாதார அடிப்படையில் ஆங்கிலேய மேலாண்மையை எதிர்த்துப்போராட முன்வந்தனர். ஆனால் அவர்களைப் பேராயக்கட்சியே ஆங்கிலேய அரசின் உதவியுடன் ''செயலற்றவர்களாக'' ஆக்கினர். வ உ சி, பாரதி போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
(5) முதல், இரண்டாவது உலகப் போர்களினால் உலக அளவில் ஏகாதிபத்திய அரசுகள் காலனி நாடுகளில் தங்களுது பொருளாதார மேலாண்மையைத் தக்கவைக்க ... புதிய ''வழிமுறைகளை'' முன்வைத்தனர். அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவில் ஆங்கிலேய அரசும் பேராயக் கட்சியும் முஸ்லீம் லீக் கட்சியும் இணைந்து, ''1947 - அரசியல் மாற்றத்தை'' ஏற்படுத்தினர்.
இதுதான் உண்மையான வரலாறு!
பேராயக் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் இந்திமொழி பேசும் மாநிலங்களைச் சார்ந்தவர்களாக இருந்தததாலும், ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்ததாலும் ...பிற இனங்களின் நலன்களையோ, மொழிகளையோ மதிக்காதவர்களாக இருந்ததாலும் . . . இந்திய அரசியல் சட்டத்தில் இந்திமொழியைமட்டுமே ஆட்சிமொழியாக ஆக்கினார்கள். இந்தி முதல் மொழி ... ஆங்கிலம் இரண்டாவது மொழி. இதுதான் அன்றைய நிலைபாடு!
எனவேதான் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான முரண்பாடாக . . . மொழிக்கொள்கையில் இந்திமொழியா ஆங்கிலமா என்பதே முன்வைக்கப்படுகிறது.
இவையெல்லாம் 70 ஆண்டுகளுக்குமுன் நிலவிய ''மொழி அரசியல்''!
அந்த ''வரலாறு எல்லாம்'' ஒருபுறம் இருக்கட்டும்!
இன்று இந்திமொழிக்குமட்டுமே கொடுக்கப்பட்டுள்ள ''ஆட்சிமொழித் தகுதி'' தமிழ்போன்ற பிற மொழிகளுக்கும் கொடுப்பதற்கான தடைகள் என்ன?
அன்று ''தவறுகள்'' நடைபெற்றதால், அவை இன்றும் நீடிக்கவேண்டும் என்ற தேவை இல்லையே!
இந்திமொழி பேசும் மக்கள் தங்கள் தாய்மொழியை வளர்ப்பதற்காக ஆங்கிலத்தை அகற்ற முயல்வது உண்மையில் வரவேற்கத் தக்கது!
ஆனால் அதேவேளையில் தமிழ்நாடு போன்ற பிறமொழி மாநில மக்கள் தங்கள் மொழிகளுக்கும் ஆட்சிமொழித் தகுதி கேட்பதில் என்ன தவறு? அதற்கு என்ன தடை? எந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன?
எந்தக் கட்சிகள் ஆதரிக்கின்றன? இதற்குத் தெளிவான விடைகளை அரசியல் கட்சிகள் அளிக்கவேண்டும்!
வடமாநில மக்கள் ''இந்திமொழியா ஆங்கிலமா'' என்ற வினாவுக்கு . . . ''இந்திமொழியே ... எங்களது தாய்மொழியே'' என்று கூறும்போது,
நாமும் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் , தமிழ்மொழியை ஆட்சிமொழியாக அரசியல் சட்டத்தில் இணைக்கவேண்டும்; இந்திமொழி வளர்ச்சிக்கு அளிக்கப்படுகிற அத்தனை வாய்ப்புக்களும் தமிழுக்கும் அளிக்கப்படவேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு?
பிற இனங்கள் தங்கள் மாநிலங்களில் தங்கள் தாய்மொழிகளை ''வளர்க்க'' உதவிசெய்கிறோம்'' என்று கூறுகிற இந்திய ஒன்றிய அரசு . . . முதலில் இந்த மொழிகளுக்கு ''ஆட்சிமொழித்தகுதி'' அளிப்பதில் என்ன சிக்கல்?
அதைவிட்டுவிட்டு, ''புதிய கல்விக்கொள்கையில்'' மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம், குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல '' செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்'' அமைக்கிறோம் என்று கூறுவது எல்லாம் ஏமாற்றுவேலைதானே! தமிழ்மொழி உட்பட அனைத்து இந்திமொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்கிவிட்டு, மற்றவைபற்றி யாரும் பேசலாம்! அவ்வாறு ஆகிவிட்டாலே, மற்ற எல்லா மொழிச்சிக்கல்களும் தீர்ந்துவிடும்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் மொழிக்கொள்கை . . . ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு! ஐரோப்பிய யூனியனில் இருந்து கடந்த ஜூன் 24-ம் தேதி இங்கிலாந்து வெளியேறியது.
கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை அந்நாடு எடுத்துள்ளது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிகளில் பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்த விவகாரத்தில் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் 24 மொழிகள் ஆட்சிமொழிகளாகவும் பயன்பாட்டு மொழிகளாகவும் இருக்கின்றன.
ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஐரோப்பிய யூனியனின் ஆவணங்களைத் தனது தாய்மொழியில் பெறும் உரிமை உண்டு. தனது தாய்மொழியியலேயே எந்தவொரு மடலும் எழுதலாம். அதற்கானப் பதிலையும் தனது தாய்மொழியிலேயே பெறமுடியும். இதற்காக 1750 மொழியியலாளர்களும் 600 பிற அலுவலர்களும் பணிபுரிகின்றனர். மேலும் 600 முழுநேரப் பணியாளர்ளும் 3000 பகுதிநேர ஆர்வலர்களும் பணிபுரிகின்றனர். உலகத்திலேயே மிகப்பெரிய மொழிபெயர்ப்பு அமைப்பாக இது நீடிக்கிறது. மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.
http://ec.europa.eu/languages/policy/linguistic-diversity/official-languages-eu_en.htm
இந்தியாவில் 22+1 மொழிகள் ( அரசியல் சட்டப்ப்டி) உள்ளன. அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்கிவிட்டு, ஐரோப்பிய யூனியனில் இருப்பதுபோல 2000 அல்லது மூவாயிரம் பணியாளர்களை வைத்துக்கொண்டு, அவரவர் மொழியில் ஒவ்வொருவரும் கருத்தாடல் மேற்கொள்ள வழிவகை செய்யமுடியும் அப்படியிருக்க ..... தற்போது இந்த மொழி ஜனநாயகத்தை ஏற்று, நடைமுறைப்படுத்த ஏன் நடுவண் அரசு விரும்பவில்லை? நடைமுறைச் சிக்கல் இல்லை.
இந்திமொழி ஏகாதிபத்தியம்தான் காரணம்... ஆதிக்க உணர்வுதான் காரணம்... உண்மையில் மக்கள் உணர்வை மதிக்கக்கூடிய அரசுகளாக இருந்தால் .... தாங்கள் கூறுவது நடக்கும். இப்பிரச்சினையில் மக்கள் பொதுவாக்கெடுப்புக்கு அரசியல் சட்டத்தில் இடம் இல்லாமலிருந்தாலும், ... மக்களின் போராட்டங்களால் அப்படி ஒரு வாக்கெடுப்பை நடத்தவைக்கலாம். அனைத்து மொழிகளைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட்டால்... இது நடக்கும். நடக்கவைக்கமுடியும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக