வெள்ளி, 14 நவம்பர், 2025

வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகும்! தொகைச்சொற்கள் ஒரு சொல் நீர்மை உடையவை!

 வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகும்!

தொகைச்சொற்கள் ஒரு சொல் நீர்மை உடையவை!
(தமிழ் மாணவர்கள் - ஆய்வாளர்கள் கவனத்திற்கு.)
-----------------------------------------------------------------------------------------------------------
வேறொரு பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் இது!
'இந்த அச்சு பிழையின்றி இருக்கிறது' என்பதில் 'அச்சு' என்பது எழுவாய்த்தொடரின் பகுதியாக இருக்கிறது.
ஆனால் 'இந்த அச்சுப்பிழை ஏற்கத் தக்கதன்று ' என்பதிலும் 'அச்சுப்பிழை' என்பது எழுவாய்த்தொடரின் பகுதியாகவே நீடிக்கிறது.
எழுவாயில் தனிப்பெயர்ச்சொல்லும் அமையலாம்; தொகைச்சொல்லும் அமையலாம் அல்லவா?
அதுபோன்றே இரண்டாவது எடுத்துக்காட்டிலும் 'அணி' 'அணித்தலைவர்' இரண்டுமே எழுவாய்தொடர்களின் பகுதிகள்தான்!
இங்குச் சிக்கல், 'அச்சுப்பிழை' என்பதும் 'அணித்தலைவர்' என்பதும் இரண்டுமே தொகைச்சொற்கள் என்பதை உணர்ந்து, தேவையான ஒற்று இடவேண்டும். தொகைச்சொற்களைப் பிரித்து எழுதாமல் சேர்த்து எழுதினால் சிக்கல் இல்லை. மேலும் தொகை என்பதைச் சுட்டிக்காட்டவே ஒற்று இடையில் அமைகிறது.
ஆனால் இன்று நடைமுறைத் தமிழில் பலர் 'அச்சுப் பிழை' என்று பிரித்தே எழுதுகிறார்கள். தமிழில் தொகைச்சொற்களை இவ்வாறுதான் எழுதவேண்டுமென்ற தரப்படுத்தப் பணி இல்லை. இப்படித்தான் எழுதவேண்டுமென்று நாம் கூறினால், அதைத் திணிப்பு என்று கூறுவார்கள்.
இச்சூழலில் தொகை என்பதைத் தெரியப்படுத்த அமைகிற 'ஒற்றைப்' பயன்படுத்தினால், பிரித்து எழுதினாலும் அது தொகையே என்று நாம் தெரிந்துகொள்ளலாம். ஒற்று இல்லையென்றால் இதற்கும் தனிச்சொல்லுக்கும் இடையில் நீடிக்கும் வேறுபாடு தெரியாமல் இல்லாமல் போய்விடும். பொருண்மையும் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்.
தொகையில் நிலைமொழிச்சொல்லுக்கும் வருமொழிச்சொல்லுக்கும் இடையில் ஒரு தொடரியல் உறவு - வேற்றுமை உறவு - நீடிக்கிறது. ஒரு தொடரே - 'அச்சால் விளைந்த பிழை' அல்லது ' அச்சில் உள்ள பிழை' என்பதே 'அச்சுப்பிழை' என்று மாற்றமடைகிறது. 'உருபும் பயனும் உடன்தொக்க தொகை' என்று இலக்கண ஆசிரியர்கள் இதை விளக்குகிறார்கள். ஆகவேதான், தொகையைத் 'தொகைநிலைத்தொடர்' என்றும் சிலர் அழைக்கின்றனர்.
தொடரிலிருந்து வந்தாலும் , தொடரியல் உறவு மறைந்து, ஒருசொல் நீர்மை பெறுவதால் இதைச் சொல்நிலையிலேயே வைத்துப்பார்க்கலாம்.
தொகைச்சொற்கள் ஒருசொல் நீர்மை உடையவை என்பதை விளக்கக் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கலாம்.
'இந்த அச்சு பிழையின்றி இருக்கிறது' --> இது பிழையின்றி இருக்கிறது'
'இந்த அச்சுப்பிழை ஏற்கத்தக்கதன்று --> இது ஏற்கத்தக்கதன்று'
மேற்காட்டிய தொடர்களில் 'இந்த அச்சு' என்பதும்' இந்த அச்சுப்பிழை' என்பதும் இரண்டுமே 'இது' என்னும் ஒரு சொல்லால் பதிலிடு செய்யமுடியும்.
அதுபோன்று, 'எங்கள் அணி தலைவர் இல்லாதது' --> இது தலைவர் இல்லாதது'.
'எங்கள் அணித்தலைவர் திறமையானவர்' --> இவர் திறமையானவர்'
அதாவது ஒரு தொகைச்சொல்லுக்குப் பதிலீடாக 'இது' 'இவர்' என்னும் தனிச்சொற்களை இடமுடியும். (சுட்டுப்பெயர்கள் பொதுவாகத் தனிச்சொல்லாக மட்டும் இல்லாமல், ஒரு தொகை அல்லது ஒரு தொடருக்கே மாற்றாக அமையமுடியும்.)
'அவர் நேற்று நன்றாகப் பேசினார்' ஒரு முழுத்தொடர் அல்லது வாக்கியம். இதற்கு வேறு ஒரு அமைப்பில் 'இது' என்பது பதிலிடுவாக அமையலாம்.
'அவர் நேற்று நன்றாகப் பேசினார்; அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது'
இங்கு இரண்டாவது வாக்கியத்தில் அமைந்துள்ள 'அது' என்பது முதல் வாக்கியம் முழுமைக்கும் பதிலாக இரண்டாவது வாக்கியத்தில் அமைகிறது.
(இந்தப் பின்னூட்டத்தில் போதிய விளக்கம் இல்லையென்றாலோ அல்லது பிழைகள் தென்பட்டாலோ சுட்டிக்காட்டினால் நன்றி உடையவனாக இருப்பேன்.)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India