வெள்ளி, 14 நவம்பர், 2025

'முயல் - முயற்சி ! 'முயல்கிறான் - முயற்சிக்கிறான்' எது சரி?

 'முயல் - முயற்சி ! 'முயல்கிறான் - முயற்சிக்கிறான்' எது சரி?

------------------------------------------------------------------------
முயல் ---> முயற்சி; வீழ் --> வீழ்ச்சி ; தளர் --> தளர்ச்சி. இவ்வாறு வினையடிகள் -சி, ச்சி ஆகிய பெயராக்க விகுதிகளை இணைத்துக்கொண்டு பெயர்களாக மாறி அமைகின்றன. 'போரில் வீழ்ந்தான்' அல்லது 'போரில் வீழ்ச்சி அடைந்தான்' என்று கூறலாம். 'நோயால் தளர்ந்தான்' அல்லது 'நோயால் தளர்ச்சி அடைந்தான்' . அதுபோன்று 'நான் வெற்றிபெற முயன்றேன்' அல்லது 'நான் வெற்றிபெற முயற்சி செய்தேன்' என்று கூறலாம். இது இன்றைய தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் 'வீழ்ச்சித்தேன்' 'வீழ்ச்சிகிறேன்' 'வீழ்ச்சிப்பேன்' என்று கூறுவதோ, 'தளர்ச்சித்தேன்' 'தளர்ச்சிகிறேன்' 'தளர்ச்சிப்பேன்' என்றோ யாரும் கூறமாட்டார்கள். அதுபோன்று 'முயற்சி செய்தேன்' என்று கூறலாம்' ஆனால் முயற்சித்தேன், முயற்சிக்கிறேன், முயற்சிப்பேன் என்று அமைவது பொது விதிக்குக் கட்டுப்பட்டு இல்லை. தவறுதான் என்று தெளிவாகக் கூறலாம்.
ஆனால் 'முயற்சித்தேன்' 'முயற்சிக்கிறேன்' 'முயற்சிப்பேன்' என்பதும் இப்போது பயன்படுத்துகின்றன என்பது உண்மை.
ஆனால் அவர்களே 'வீழ்ச்சித்தேன், வீழ்ச்சிக்கிறேன், வீழ்ச்சிப்பேன்' என்றோ அல்லது 'தளர்ச்சித்தேன், தளர்ச்சிக்கிறேன், தளர்ச்சிப்பேன்' என்றோ கூறுவது கிடையாது. ஏன் 'முயற்சி' மட்டும் வினையடியாகப் பயன்படுத்தப்படுகிறது ? இது ஆராயப்படவேண்டிய ஒன்று. 'முயல்கிறேன்' என்பதை 'முயற்சி செய்கிறேன்' என்றும் 'முயன்றேன்' என்பதை ' முயற்சி செய்தேன்' என்றோ 'முயல்வேன்' என்பதை 'முயற்சி செய்வேன் ' என்று கூறுவதில் தவறு இல்லை என நான் கருதுகிறேன்.
(முயற்சி என்பது வினைதான் என்ற நிலை எடுப்பவர்கள் முயற்சித்தான் , முயற்சிக்கிறான், முயற்சிப்பான் என்று கூறும்போது அவற்றைப் பின்வருமாறுதான் பிரிக்கவேண்டியுள்ளது - முயற்சி + த்த் + ஆன்; முயற்சி + க்கிறு + ஆன்; முயற்சி + ப்ப் + ஆன்)
--------------------------------------------------------------------
'விஷமருந்து' - அவன் விஷமருந்தினான்'
- அது விஷமருந்து'
இதுபோன்று சில சொற்கள் வினை, தொகை ஆகிய இரண்டு வகைப்பாடுகளுக்கும் உட்படுகின்றன. இதுபோன்று ஏராளமான சொற்கள் தமிழில் இருப்பதால், இவற்றில் உள்ள பொருண்மை மயக்கத்தைத் தவிர்க்க முன், பின் சொற்களை மனதில் கொள்ளவேண்டியுள்ளது. இதுவே கணினிக்கும் உள்ள சிக்கல். தற்போது செய்யறிவுத்திறனின் பெரும்மொழிமாதிரியில் தரவுகளின் அடிப்படையில் பெருமளவு தீர்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக , தொகையா, தொகை இல்லையா என்பதைப் பொறுத்து ஒற்று அமைவதால், கணினிக்குப் பெரிய சிக்கல் இது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India