தமிழின் தொகை இலக்கண விதிகளைப் புறக்கணிக்கலாமா?
(தமிழ் மாணவர்கள் - ஆய்வாளர்கள் கவனத்திற்கு.)
---------------------------------------------------------------------------------------------------------
ஒரு தொடரில் தொகைச் சொற்களைப் பிரித்து எழுதும்போது தவறாமல் ஒற்று இட்டு எழுதவேண்டும். அப்போதுதான் இரண்டு சொற்களும் இணைந்து தொகையாக வருகிறது என்பது தெரியவரும். இல்லையென்றால் பொருள் குழப்பம் ஏற்படும். கணினிவழித் தமிழுக்கு நாங்கள் எடுத்துவரும் முயற்சியில் இதுதான் ஒரு பெரிய சிக்கல்.
கணினியானது தமிழைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்குச் சிக்கல் இல்லாமல் நாம் எழுதவேண்டும். நமது மூளையின் மொழித்திறனும் பேசுகிற அல்லது எழுதப்படுகிற சூழலும் நமக்கு ஐயம் ஏற்பட்டாலும் தீர்த்துக்கொள்ள உதவுகிறது. ஆனால் கணினி பாவம்! அதற்கு அந்த உதவி கிடைக்காது. எனவே, தேவை இல்லாமல் அதைத் துன்புறுத்தக்கூடாது.
'பால் குடத்தில் இருக்கிறது' - 'நான் பால் குடம் எடுக்கப்போகிறேன்'.
இவற்றில் அமைகிற வினைமுற்றுகளில் உள்ள திணை எண் பால் விகுதி, எது எழுவாய் என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறது. இரண்டாவது தொடரில் 'பால் குடம்' என்பதை 'அண்ணன் தம்பி ' போன்று உம்மைத் தொகையாகவும் கருதலாம் அல்லவா? 'நான் பாலும் குடமும் எடுக்கப்போகிறேன்' என்று இரண்டாவது தொடருக்குப் பொருள் கொள்ளலாம் அல்லவா? அவ்வாறு இல்லாமல் 'பாற்குடம் எடுக்கப்போகிறேன்' அல்லது 'பாற் குடம் எடுக்கப்போகிறேன்' என்று எழுதலாம் அல்லவா? சொல்லிறுதியில் 'ற்' வல்லினம் வராதே என்று நினைக்கலாம். புறச்சந்தியில் சொல் இறுதியில் வல்லினம் வரலாமே. 'க், ச். த், ப்' ஆகிய வல்லினங்கள் சந்தியில் நிலைமொழி இறுதியில் வரும்போது 'ற்' என்னும் வல்லினமும் வரலாமே!
ஆகவே, என் கருத்து, சந்தி உட்பட அனைத்து இலக்கண விதிகளும் நமக்குப் பொருள் மயக்கத்தைத் தவிர்த்து, தெளிவாக ஒரு தொடரைப் புரிந்துகொள்ளப் பயன்படுகிற உத்திகள்தான்! இலக்கண விதிகள் என்று கூறும்போது அவை தொல்காப்பியம், நன்னூல் இலக்கண விதிகள்மட்டுமே என்று கருதிவிடக்கூடாது. இன்றைய எழுத்துத்தமிழில் புதிதாகத் தோன்றி நிலவுகிற இலக்கண விதிகளையும் உள்ளடக்கியதுதான் இன்றைய தமிழ் இலக்கணம்!


9:55 PM
ந.தெய்வ சுந்தரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக