திங்கள், 3 மார்ச், 2025

நேற்று இன்ஃபோசிஸ் 400 பேரை வெளியேற்றியதையொட்டி நானும் நண்பர் மாலன் அவர்களும் எழுதிய உரையாடலின் தொடர்ச்சி இது . . . (பகுதி 3)

நேற்று இன்ஃபோசிஸ் 400 பேரை வெளியேற்றியதையொட்டி நானும் நண்பர் மாலன் அவர்களும் எழுதிய உரையாடலின் தொடர்ச்சி இது . . . (பகுதி 3)
-----------------------------------------------------------------------
நண்பர் திரு மாலன் அவர்கள்
------------------------------------------------
அம்பானி அதானியைப் பற்றிப் பேசவில்லை உங்கள் குடும்பப் பின்னணி எனக்குத் தெரியாது. ஆனால் எத்தனையோ பேர் தங்கள் தந்தையர் வாழ்ந்ததை விடப் பொருளாதாரத்தில் மேம்பட்ட வாழவை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தந்தை கிராமப்புற ப்ள்ளி ஆசிரியராக சில நூற் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்திருப்பார். அவர் மகன் பல்கலைக்கழகப் பேராசிரியரக, வங்கி அதிகாரியாக, ஏதோ ஒரு நிறுவன நிர்வாகியாக, மருத்துவராக, பொறியாளராக, கணக்கராக அவர் தந்தையை விட பல மடங்கு வருமானம் ஈட்டுபவராக இருப்பார். இவர்கள் யாரைச் சுரண்டி வளர்ந்தார்கள்? இந்தியா சோஷலிசக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்த காலத்தில் போன், வாகனம், சமையல் உருளை, ம்எல்லாவற்றிற்கும் வரிசை. கிடைக்க ஆண்டுக் கணக்காகும் இன்று இளைஞர்கள்35-40 வயதுக்குள் வீடு வாங்குகிறார்கள் வீட்டின் விலை பல லட்சம் ஒவ்வொரும் வாகனம் வைத்திருக்கிறார்கள் இரண்டு போன் வைத்திருக்கிறார்கள் பெற்றோர்கள் அயலகப் பயணம் போகிறார்கள் 90 களுக்குப்பின் இந்தியாவின் மத்தியதர வர்க்கம் வளர்ந்திருக்கிறது எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது அந்த வர்க்கம் கல்வியால், உழைப்பால், திறனால் முன்னேறிய வர்க்கம் எவரையும் சுரண்டி வளர்ந்த வர்க்கமல்ல.
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------------------------------------
நண்பர் மாலன் அவர்களே. தங்களுடைய கல்விப் பின்னணி எனக்குத் தெரியும், தங்களுடைய அறிவுத்திறனும் எனக்குத் தெரியும். தங்களுடைய நீண்ட அனுபவமும் எனக்குத் தெரியும். உண்மையில் இதில் தங்களுக்கு அருகில்கூட என்னால் வரமுடியாது.
இவ்வளவு திறமை, அறிவு உள்ள தங்களுக்கு வறுமைக்கு, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு , இன்றைய மோசமான பொருளாதாரச் சூழலுக்கு . . . காரணங்கள் தெரியாமலா இருக்கும்? தங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்லித் தங்களுக்குத் தெரியவேண்டியது எதுவும் இல்லை.
ஒன்றே ஒன்றில்தான் நாம் வேறுபடுகிறோம். உலகக் கண்ணோட்டம், தத்துவார்த்த நோக்கு, வர்க்க நலன்கள் இவற்றில்தான் வேறுபாடு. இந்த வேறுபாடுதான் ஒரு பிரச்சினையை வேறுபட்ட நோக்கில் பார்க்கவைக்கிறது. சரிதானே!
இதைத் தாங்கள் மறுக்கலாம். ஆனால் வெளிப்படையாகக் கூறுகிறேன் . . .
என்னுடைய உலகக்கண்ணோட்டம், தத்துவப் பின்னணி மார்க்சியம்தான் என்று! இதில் ஒளிவுமறைவு எனக்குத் தேவை இல்லை!

நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் மாலனுக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்! (பகுதி 1) -------------------------------------------------------

 நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் மாலனுக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்! (பகுதி 1)

-------------------------------------------------------------------
ந. தெய்வ சுந்தரம்
------------------------------
நண்பர் மாலன் அவர்களே. பயிற்றுமொழிபற்றிய விவாதம் வேறு. அதுபற்றி நிறையவே நான் எழுதியுள்ளேன். நான் இந்தப் பதிவில் கேட்டுள்ளது . . நடுவண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் விண்ணப்பப் படிவத்தில் , வகுப்பு நடத்துவதில் ஒருவருக்கு ஆங்கிலம் வசதியாக இருக்குமா, அல்லது இந்தி வசதியாக இருக்குமா? என்று கேட்டுள்ளது பற்றியே!
இந்தியைமட்டும் ஏன் சிறப்பித்துக் கூறவேண்டும்? ஆங்கிலம் அல்லது ஆசிரியரின் தாய்மொழி, எது வசதியாக இருக்கவேண்டும் என்றல்லவா கேட்டிருக்கவேண்டும்? அவ்வாறு இல்லாமல், ஆங்கிலத்தோடு இந்தியைமட்டும் சேர்த்துள்ளார்களே? எதனால்? அதற்கு ஆட்சிமொழித் தகுதி இருப்பதனால்தானே! பிற மொழிகளுக்கு 'அத்தகுதி' வழங்கப்படவில்லை. எனவே அவை சேர்க்கப்படவில்லை. நடுவண் அரசின் பல்கலைக்கழகம். எனவே அப்படிச் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஏன் சுற்றிவளைத்துப் பேசவேண்டும்? கேள்வியும் நேரடியாக இருக்கவேண்டும். பதிலும் நேரடியாக இருக்கவேண்டும்! Point to Point Travel!
அடுத்து, மொழித்துறைகள் அந்தந்த மொழிகளில்தான் பாடம் நடத்துவார்கள். அதில் சிக்கல் இல்லை. பிற பாடங்கள் ?
நண்பர் மாலன் அவர்கள்
---------------------------------------------
நேரடி பதில் இதுதான் 1. மத்தியப் பல்கலைகளில் இந்தியாவின் எந்த மாநிலத்தவரும் பணியில் சேரத் தகுதிபுள்ளவர்கள் (அவர்களது கல்வித் தகுதியைப் பொறுத்து) அவர்கக் எந்த மாநிலத்திலும் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்கள்.திருவாரூரில் பணியாற்றக்கூடிய வாய்ப்பு தமிழர்களுக்கு மட்டுமல்ல பஞ்சாபியருக்கும் உண்டு. அசாமில்ப்பணியாற்றக் கூடிய வாய்ப்பு தமிழருக்கும் உண்டு. உயர்கல்வியில் பயிற்று மொழி மாநில மொழியாக இல்லாத போது அதன் ஆசிரியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதே நேரம் மத்திய அரசின் அலுவல் மொழிகள் அறிந்திருந்தால் அதன் சுற்றறிக்கைகளை வாசித்து அறிந்து கொள்ள அவை உதவும். 2. மானவர்கள் எந்த மொழி வழியில் கற்க இணைந்திருக்கிறார்களோ அந்த வழியில்தான் கற்பிக்கப்படும் ஏனெனில் தேர்வுகள் அந்த மொழியில்தான் இருக்கும்.
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------
//மத்திய அரசின் அலுவல் மொழிகள் அறிந்திருந்தால் அதன் சுற்றறிக்கைகளை வாசித்து அறிந்து கொள்ள அவை உதவும்.// நண்பர் மாலன் அவர்கள்.
நண்பர் மாலன் அவர்களே. நடுவண் பல்கலைக்கழகங்களில் எந்த மாநிலத்தவரும் படிக்கலாம் என்பது தெரிந்ததே! பன்மொழி மாணவர்கள் இருப்பதால் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி என்பதும் தெரிந்ததே! அதுபற்றி நான் பேசவில்லை! மேலே அடைப்புக்குள் உள்ளதுபற்றியே
எனது கேள்வி. ஏன் நடுவண் அரசின் சுற்றறிக்கைகளை இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவன் ஆங்கிலம் அல்லது இந்தியில் படிக்கவேண்டும்? தன் தாய்மொழியில் ஏன் படிக்கமுடியவில்லை? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் இந்தியிலேயே படிக்கலாம். ஆனால் மற்ற மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் படிக்கவேண்டும். அல்லது இந்தி படித்திருக்கவேண்டும். இந்திமொழி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைக்கு என்ன காரணம்? இந்திதான் நடுவண் அரசின் ஆட்சிமொழி. அப்படித்தானே!
அதைத்தான் நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன்! பிற மொழிகளும் ஆட்சிமொழிகளாக இருந்தால், அந்த மொழிகளிலும் அறிக்கை வரும் அல்லவா? ஏன் அது நீடிக்கவில்லை? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஒன்று ஆங்கிலத்தில் அறிக்கைகளைப் படிக்கவேண்டும். அல்லது இந்திமொழியைப் படித்துவிட்டு இந்தியில் படிக்கலாம். ஆனால் தங்கள் தாய்மொழிகளில் சுற்றறிக்கைகளைப் படிக்கமுடியாது. இதுதானே இன்றைய நிலை! இது ஒரு மொழி ஆதிக்கம் இல்லையா?
ஆங்கிலம், இந்தி இரண்டுமே பிறமொழி மாணவர்களுக்கு அந்நியமொழிகள்தான்! எனவே பிறமொழி மாணவர்கள் இரண்டு அந்நியமொழிகளில் ஏதாவது ஒன்றைப் படித்திருக்கவேண்டும்? ஆனால் இந்திமொழி மாணவர்களுக்கு அது தேவை இல்லை! இது நியாயமா? என்பதுதான் எனது கேள்வி!

நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது !

 நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் மாலனுக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்! (பகுதி 2)

நண்பர் திரு மாலன் அவர்கள் ''பயணத்தில் இருந்ததால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை. விமானத்திலிருந்து இறங்கியதும் இதை எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்க. ' என்று கூறி, எனது ஐயங்களுக்கு நேரம் ஒதுக்கிப் பதில் அளித்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி!
-------------------------------------------------------------------------
நண்பர் திரு மாலன் அவர்கள்
---------------------------------------------------
1.) ஓர் அரசு அதன் அலுவல் மொழியில் தன் அலுவல்களை நடத்துவது பிழையாகுமா?தமிழக அரசின் அலுவல் மொழி தமிழும் ஆங்கிலமும். தமிழநாட்டில் வசிக்கும் அயல் மொழிக்காரர்கள் அவர்கள் தாய் மொழியில் அரசின் அறிக்கைகளை வாசிக்க முடியுமா?
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------------------------------
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட . . . தமிழும் தமிழரும் பெரும்பான்மையாக இருக்கிற பகுதியே தமிழ்நாடு. அந்த அடிப்படையில் தமிழ் தமிழ்நாட்டின் ஆட்சிமொழி. எனவே தமிழ் தமிழ்நாட்டில் அரசுமொழியாக இருக்கிறது. அப்படித்தானே, ஆந்திர, கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களும். எனவேதான், அவரவர் மொழிகள் அலுவல்மொழியாக இருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் இதுதானே நீடிக்கிறது!
ஆனால் இந்திய நடுவண் அரசு மொழிவாரி அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசு இல்லை. 22 -க்கும் மேற்பட்ட மொழிகளை உள்ளடக்கிய ஒரு நடுவண் அரசு. அனைத்து மொழியினர்க்கும் பொதுவான அரசு. குறிப்பிட்ட ஒரு மொழியினருக்கான அரசு இல்லை. எனவே, தமிழ்நாட்டில் தமிழ்மொழி அலுவலகமொழியாக இருப்பதற்கும் இந்திய நடுவண் அரசின் அலுவலக மொழியாக இந்திமொழி மட்டும் இருப்பதற்கும் வேறுபாடு இல்லையா? இந்திய நடுவண் அரசு ஒரு மாநில அரசு இல்லை!
இந்த வேறுபாடு தங்களைப்போன்ற பிரபலமான பத்திரிகையாளருக்கு . . . எழுத்தாளருக்குத் தெரியாதா ஒன்றா நண்பரே? எனக்குப் புரியவில்லை!
நண்பர் திரு மாலன் அவர்கள்
---------------------------------------------------------------
2.) இந்தி அரசின் மொழியாக இருப்பது சரியல்ல, எல்லா மொழிகளும் இருக்க வேண்டுமல்லவா என்ற கேள்வியை நீங்கள் கேட்க வேண்டியது அரசமைப்புச் சட்டத்தை யாத்தவர்களிடம். அவர்கள் பிழை செய்துவிட்டார்கள் என்றால் அதைத் திருத்தியிருக்க வேண்டியது இந்தி வேண்டாம் எனப் போராடியதாகச் சொல்லும் தமிழகக் கட்சிகள் செய்தீர்களா என நீங்கள் கேட்க வேண்டிய்து அவர்களை.அதை விட்டு விட்டு இங்கு வந்து கர்ஜிப்பதில் எந்தப் பயனும் இல்லை.
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரும்போது நான் பிறக்கவில்லை. எனவேதான் இப்போது கேட்கிறேன். இன்று புதிதாக அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டால், உறுதியாக இந்திமட்டுமே ஆட்சிமொழி என்றால் உறுதியாக நான் கேட்பேன்.
அடுத்து, தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போராட்டத்திற்கு எந்தவொரு குறிப்பிட்ட கட்சியும் உரிமை கொண்டாடமுடியாது. அது ஒரு மாபெரும் மாணவர் எழுச்சி. அரசியல் கட்சியினர் அதற்கு ஆதரவுகொடுத்தார்கள். போராட்டத்திலும் பங்கேற்று இருக்கலாம். எனவே, தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளை நான் குற்றம் சாட்டவேண்டுமென்பது தேவை இல்லை! ஆனாலும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இதற்காகப் போராடவேண்டுமென்பதே எனது நிலைப்பாடு! ஆனால் அவர்கள் போராடவில்லையென்பதால் , ஒரு இந்தியக் குடிமகன் என்ற தகுதி எனக்கு அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நான் இதுபற்றிக் கேட்பதற்கு முழு உரிமை இல்லையா?
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------------------------------
3 )இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ள்தவர்களும் அதை நாட்டின் பொது மொழியாக ஏற்றிருக்கிறார்கள் உதாரணம் காந்தி, அம்பேத்கர், போஸ், பாரதி
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------
காந்தி, அம்பேத்கார், போஸ், பாரதி ஆகியோர் இந்தியைப் பொதுமொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதால் நானும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற தேவை இல்லை!
நண்பர் திரு மாலன் அவர்கள்
---------------------------------------------
4) இப்போது யார் எந்த மொழியில் எழுதினாலும் அதை வேண்டும் மொழிக்கு மாற்றிக் கொள்ளும் தொழில்நுடபம் வந்துவிடது அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அது விரிவடையும் போது மொழியை வைத்து பிரிவினை அரசியல் பேசுவது முடிவுக்கு வரும்
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------
இந்த 'லாலிபப்பு' மிட்டாய் ஏமாற்றுவேலை வேண்டாம் என்பதுதான் எனது வாதம். சரி, தங்கள் நிலைபாட்டை அடிப்படையாகக்கொண்டே கேட்கிறேன். அது இந்திமொழிக்கும் பொருந்தும் அல்லவா? அப்போது என்ன பிரச்சினை? அனைத்துமொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குங்கள். இந்திமொழியினர் தமிழ் அறிக்கைகளைப் படிக்கவேண்டுமென்றால் , செயற்கைச் செய்யறிவுத்திறன் மென்பொருளைப் பயன்படுத்தட்டும்! அதுபோன்று மற்ற மொழியினர்களும் அதைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்!
ஒரு இந்தியக் குடிமகன் , நடுவண் அரசு இந்திக்குக் கொடுத்துள்ளதுபோல, தன் தாய்மொழிக்கும் உரிமை வேண்டும் என்று கேட்பது எப்படிப் பிரிவினை அரசியல் ஆகும்? எனக்குப் புரியவில்லை. பல தேசிய இனங்களைக்கொண்ட ஒரு அரசியல் அமைப்பில் எந்தவொரு இனமும் தன் தாய்மொழி உட்பட அனைத்து இன உரிமைகளையும் கேட்பது பிரிவினை ஆகாது. தங்களுக்கு அரசியல் சட்டமும் தெரியும். அப்படி ஏதாவது ஒரு சட்டப்பிரிவு இந்திய அரசியல் சட்டத்திலோ அல்லது பிற குற்றவியல் சட்டங்களிலோ இருந்தால் கூறுங்கள். நானும் தெரிந்துகொள்கிறேன்.
எனக்கு ஒரு ஐயம்! இந்திமொழிதான் இந்திய நடுவண் அரசின் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்பதற்கு ஏன் இவ்வளவு முயற்சி செய்து எழுதுகிறீர்கள்? தாங்களும் தமிழர்தானே? தங்கள் தாய்மொழியும் தமிழ்தானே? இவ்வாறு நான் கேட்பது தவறு என்றால் மன்னிக்கவும்!

தமிழகப் பள்ளிக் கல்வியில் மும்மொழிக்கொள்கையைத் திணிக்கும் நடுவண் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்ப்போம் !

 தமிழகப் பள்ளிக் கல்வியில் மும்மொழிக்கொள்கையைத் திணிக்கும் நடுவண் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்ப்போம் !

-------------------------------------------------------------------------
தமிழ்நாடு அரசு தமிழகத்துப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் . . . கல்வி முன்னேற்றத்திற்கான நிதி நல்குவோம் என்ற நடுவண் அரசின் மிரட்டலும் முடிவும் . . .
முழுக்க முழுக்க ஒரு ஜனநாயகவிரோத முடிவு!
தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்காத ஒரு முடிவு!
வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒரு முடிவு!
பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒரு குடியரசு நாட்டில் , ஐனநாயக மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் இந்திமொழியைத் திணிக்கிற இந்த முடிவைக் கடுமையாக எதிர்க்கவேண்டும்!
அதேவேளையில் தேசிய இனங்கள் தங்கள் தாய்மொழியையே முழுமையாக . . . கல்வி உட்பட - அனைத்துத்துறைகளிலும் தக்கவைக்கவேண்டும் !
தமிழகத்தில் ஆங்கிலம் உட்பட எந்தவொரு அந்நியமொழியும் தாய்மொழியான தமிழ்மொழியை ஆதிக்கம் செலுத்தக்கூடாது! ஆங்கில மோகம் கூடாது! இது ஒரு பொதுக்கோரிக்கை. பயிற்றுமொழி உட்பட அனைத்திலும் தமிழ்மொழியே நீடித்தல் வேண்டும்! தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளும் அரசும் இதில் தெளிவான முடிவு எடுத்துச் செயல்படவேண்டும்!
ஆனால் இன்றைக்கு நடுவண் அரசின் மிரட்டலே முதன்மையான முரண்பாடு!
அந்த வகையில் தமிழக அரசும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நின்று . . . நடுவண் அரசின் மொழிப் பாசிசத்தை எதிர்த்து உறுதியாகப் போராடவேண்டும்!
மும்மொழித்திட்டத்தை எதிர்த்து நிற்கவேண்டும்!
பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒரு குடியரசு நாட்டில் . . . ஒரு ஜனநாயக மொழிக்கொள்கை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதுபற்றிய சில பதிவுகளை ஏற்கனவே நான் முகநூலில் இட்டுள்ளேன். அவற்றைத் தொகுத்து இன்று எனது கீழ்க்கண்ட வலைப்பக்கத்தில் இட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்!

பள்ளிக்கல்வியில் மும்மொழித்திட்டம் எதற்கு?

 பள்ளிக்கல்வியில் மும்மொழித்திட்டம் எதற்கு?

--------------------------------------------------------------------------
'நாங்கள் மூன்றாம் மொழியாக இந்திமொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறவில்லை . . . தாய்மொழி, ஆங்கிலம் அல்லாத ஏதாவது ஒரு மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் கூறுகிறோம்' என்று நடுவண் அரசின் அமைச்சர் கூறுகிறார். எனவே இது 'இந்தித்திணிப்பு இல்லை' என்று கூறுகிறார்.
மூன்றாவது மொழிக்கு என்ன தேவை? ஆனால் புதிய கல்விக்கொள்கை (மும்மொழித்திட்டம் என்று முதலில் எழுதிவிட்டேன். அது தவறு. அதைச் சுட்டிக்காட்டிய பேரா. கோ. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி) என்பது 2010 -ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது. அப்போது இருந்த நடுவண் அரசு காங்கிரஸ் அரசுதான். எனவே, மும்மொழித்திட்டம்பற்றித் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலைபாடு என்ன?
அடுத்து, புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழியே குறைந்தது ஐந்தாவது வகுப்புவரை நீடிக்கவேண்டும் என்பதுபற்றித் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், தமிழ் நாடு அரசு ஆகியவற்றின் நிலைபாடு என்ன?
மொழிக்கொள்கையில் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் . . .
தமிழ்நாட்டில் தமிழ்மொழியே பள்ளிகளில் பயிற்றுமொழி என்பதை முழுமையாகத் தமிழ்நாடு அரசு அமுல்படுத்தவேண்டும். ஆங்கிலத்தை அருகருகே வைத்துக்கொண்டு, தமிழைப் பயிற்றுமொழியாகச் செயல்படுத்துவது கடினமே.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்திலும் தமிழ்மொழியே - தமிழ்மொழிமட்டுமே - பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் என்பதில் உறுதி தேவை.
ஆங்கிலம் ஒரு விருப்பமொழியாகமட்டுமே நீடிக்கவேண்டும். பயிற்றுமொழியாக நீடிக்கக்கூடாது.
அப்போதுதான் மாணவர்களின் அறிவுத்திறனும் வளரும். தமிழ்மொழியும் தனக்குரிய மதிப்பைப் பெறமுடியும்.
அடுத்து, உயர்கல்வியிலும் அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் தமிழ் பயிற்றுமொழியாக ஆக்கப்படவேண்டும். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் - பெயரளவுக்கு இல்லாமல் - மிகத் தீவிரமாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆங்கிலமும் அயல்மொழியே என்ற உணர்வும் தெளிவும் இங்கு ஏற்படவேண்டும்.
மூன்றாவது மொழியும் கட்டாயத் தேவை இல்லை! இரண்டாவது மொழியும் கட்டாயத் தேவை இல்லை! மேலும் உறுதியாக ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கக்கூடாது.
தேவைப்படுபவர்களுக்கு ஆங்கிலத்தை ஒரு மொழியாக நன்கு கற்றுக்கொடுக்கட்டும். தமிழில் படித்த பாடங்களை ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தும் திறன் மாணவர்களுக்கு ஏற்படும். ஒரு குறிப்பிட்ட வகுப்புவரை - அல்லது உயர்நிலைப்பள்ளிவரை - ஆங்கிலத்தை ஒரு பொதுநிலையில் (English for General Purpose - General English) கற்றுக்கொடுக்கட்டும்.
உயர்கல்விக்குச் செல்லும்போது, துறைசார்ந்த ஆங்கிலக்கல்வியை அளிக்கட்டும். 'அறிவியலுக்கான ஆங்கிலம்' 'பொருளாதாரத்திற்கான ஆங்கிலம்' 'இலக்கியத்திற்கான ஆங்கிலம்' என்று English for Special Purpose (ESP) , English for Science and Technology (EST) என்ற அடிப்படையில் கற்றுக்கொடுக்கலாம்.
பயிற்றுமொழிக்கும் மொழிக்கல்விக்கும் இடையில் உள்ள வேறுபாடு தமிழ்நாட்டில் சரியாக உணர்த்தப்படவில்லை! துறைரீதியான பாடங்களைக் கற்றுக்கொடுக்கிற அல்லது கற்றுக்கொள்கிற மொழியே பயிற்றுமொழி! அவ்வாறு இல்லாமல் ஒரு மொழியை மொழியாக - மொழித்திறனுக்காக - கற்றுக்கொள்கிற மொழிக்கல்வி வேறு! இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது.
இதுதான் சரியான - ஜனநாயக முறையிலான - கல்விக்கொள்கையாக இருக்கும்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு . . .

 தமிழ்மொழி வளர்ச்சிக்கு . . .

----------------------------------------------------------------------
தாய்மொழித் தமிழே தமிழர்களுக்கு அனைத்துத் துறைகளில் ஆட்சிமொழி ! பயிற்றுமொழி! வணிகமொழி! பொருள்உற்பத்திக்கான மொழி!
ஆங்கிலம் உட்பட பிறமொழிகள் நமக்கு அந்நிய மொழிகளே!
பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்வியைப் புத்தாக்கம் செய்யுங்கள்! மொழிப்பயிற்றல் முறைகளைப் புதுமைப்படுத்துங்கள்!
இலக்கியங்களையும் இலக்கணங்களையும் மட்டும் கற்றுக்கொடுப்பதே தமிழ்க்கல்வி என்னும் கண்ணோட்டத்தைக் கைவிடுங்கள்!
அறிவியல்தமிழுக்கு அதிகக் கவனம் செலுத்துங்கள்!
இன்றைய தமிழுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்!
தற்கால மொழியியல்துறையின் வளர்ச்சியைப் பயன்படுத்துங்கள்! தமிழ்மொழிக் கல்வியிலும் தமிழ் வளர்ச்சிக்கான பிற திட்டங்களிலும் மொழியியல் துறையினரை ஈடுபடுத்துங்கள்!
மொழியியலையும் தமிழ்மொழி ஆய்வையும் இணைத்துச் செயல்படுத்துங்கள்! அப்போதுதான் தமிழின் சிறப்பு உலக அளவில் அறிஞர்களை எட்டும்!
இன்றைய தமிழ் இலக்கணம், இன்றைய தமிழ் அகாரதிகளைத் திட்டமிட்டு உருவாக்குங்கள்.
தொலைநோக்குப் பார்வையில் தமிழ்மொழி வளர்ச்சித்திட்டம் உருவாக்கிச் செயல்படுத்துங்கள்!
விருதுகள், சிலைகள், மாநாடுகள் என்றுமட்டும் தமிழைச் சுருக்கிவிடாதீர்கள்!
இதுவே தமிழ்நாட்டின் மொழிக்கொள்கையாக இருத்தல்வேண்டும்!
------------------------------------------------------------------

உலகத் தாய்மொழி தினம் . . .

 உலகத் தாய்மொழி தினம் . . .

--------------------------------------------
21 - 02 - 2025 . . . 'தாய்மொழி தினம்' என்று கொண்டாடப்படுகிறது.
'தாய்மொழி ' என்னும் உணர்வு ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அடிப்படையான தேவை ஆகும்!
ஒரு இனத்தின் அடையாளமே அதன் தாய்மொழியில்தான் அடங்கியுள்ளது!
ஒரு இனத்தை அழிக்க முயலும் மற்றொரு இனம், முதலில் செய்வது எதிரி இனத்தின் மொழியைச் சிதைப்பதும் அழிப்பதுமே ஆகும்.
இது உலக வரலாறு நமக்கு உணர்த்துகிற ஒன்று!
அந்த வகையில் பல தேசிய இனங்களைக்கொண்ட இந்தியாவில் இந்தி என்னும் ஒரு குறிப்பிட்ட மொழியை அதைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இனங்களின்மீது திணிப்பது ஒரு ஜனநாயக விரோதச் செயலே ஆகும்! மும்மொழிக் கல்விக்கொள்கை என்பது மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் ஒரு முயற்சியே. இதைக் கடுமையாக எதிர்த்து நிற்பது தேசிய இனங்களின் ஒரு முக்கியக் கடமை என்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்கமுடியாது. இருக்கவும் கூடாது.
அதேவேளையில் இந்திய வரலாற்றில் ஆங்கிலேய அரசு 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே தனது மொழியை - ஆங்கிலத்தை - பலவகைகளில் கல்வியில் புகுத்தியது. ஆட்சி நிர்வாகத்தில் புகுத்தியது. இந்த ஆங்கில ஆதிக்கம் நான்கு நூற்றாண்டு வரலாறு உடையது.
நான்கு நூற்றாண்டு வரலாறு உடைய ஆங்கில ஆதிக்கமும், 75 ஆண்டுகால வரலாறு உடைய இந்தி ஆதிக்கமும் இரண்டுமே இங்குள்ள தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்காத ஒரு ஜனநாயகவிரோத செயலே ஆகும்.
ஆங்கிலம் இல்லையென்றால் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையே இல்லை என்னும் ஒரு தவறான மனப்போக்கு இன்று திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, இந்திய நடுவண் அரசின் நிர்வாகச் செயல்பாடுகளுக்கு இந்தி ஆட்சிமொழி என்னும் ஒன்று இல்லையென்றால், நிர்வாகம் செயல்படமுடியாது என்னும் தவறான கருத்தையும் திணிக்க நடுவண் அரசு முயல்கிறது.
50, 60 ஆண்டுகளுக்குமுன்பு தமிழ் நாட்டில் பள்ளிகளில் தமிழே பயிற்றுமொழி என்று நீடித்த ஒரு நிலை இன்று தலைகீழாக மாறியுள்ளது. ஆங்கிலப் பயிற்றுமொழியே ஆதிக்கம் செலுத்துகிறது. பள்ளிகளில் தமிழ் பெற்றிருந்த இடத்தை இன்று ஆங்கிலம் கைப்பற்றிக்கொண்டுள்ளது என்பது உண்மையே. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதுபற்றிக் கடந்த சில தினங்களாகவே நாம் விவாதித்துவருகிறோம்.
தாய்மொழி தினத்தன்று . . .
நாம் ஒன்றில் தெளிவாக இருக்கவேண்டும்!
ஆங்கிலமும் நமக்கு அந்நிய மொழியே! இந்தியும் நமக்கு அந்நிய மொழியே! அதனால் அவற்றின் மீது நமக்குக் காழ்ப்புணர்ச்சி கொள்ளவேண்டியது இல்லை! . அவை அவற்றின் இனங்களின் மொழிகள்! அதை நாம் மதிக்கவேண்டும்! ஆனால் அந்த மொழிகள் நம் தாய்மொழியை 'மிதிக்க' அனுமதிக்கக்கூடாது! எந்தவொரு மொழியையும் படிக்க விரும்புவர்கள் படிப்பதை நாம் எதிர்க்கவில்லை! கட்டாயப்படுத்தக்கூடாது என்பதே நமது நிலைபாடாக இருக்கவேண்டும்!
தமிழ்மொழியே நம் மொழி! நம் இனத்தின் மொழி! பள்ளிகள், கல்லூரிகள், அரசுத் துறைகள், வணிகம், பொருள் உற்பத்தி, வழிபாடு என்று அனைத்து நிலைகளிலும் . . .
தாய்மொழியாகிய தமிழே நீடிக்கவேண்டும்!
எந்த நிலையிலும் . . எந்தவொரு சூழ்நிலையிலும் . . எந்தவொரு வடிவத்திலும் பிற மொழிகளின் திணிப்பு தமிழ் இனத்தின்மீது கூடாது என்பதே 'தாய்மொழி தினத்தின்' முழக்கமாக இருக்கவேண்டும்!
எல்லா உணர்ச்சிகளும்:
தோழர் ஞானம், Sivakumar Padmanabhan மற்றும் 20 பேர்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India