இன்றைய கல்விக்கும் இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார உற்பத்திக்கும் தொடர்பு கிடையாது. மொழிப் படிப்புகள் மட்டுமல்ல, இயற்பியல், வேதியியல், தாவரயியல் போன்ற படிப்புகளுக்கும் இது பொருந்தும். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பொறியாளர்களை உருவாக்கும் படிப்புகளுக்கே முக்கியத்துவம் அளிப்படுகிறது. எந்தப் படிப்புக்கு இந்தியாவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. மொழிப்படிப்புகளுக்கும் பொது அறிவியல் படிப்புகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அதனால்தான் அவற்றிற்கான துறைகளின் அவலநிலைபற்றி இங்குள்ள மாநில, நடுவண் அரசாங்கங்கள் கவலைப்படுவதில்லை. ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள பொது அறிவியல் துறைகள், மொழி, இலக்கியம், சமூகவியல் படிப்புகளுக்கான துறைகள் மூடப்பட்டாலும் கவலைப்படுவதில்லை.
மருத்துவத்துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்கருவிகள், மருந்துகள் ஆகியவற்றிற்கு சந்தை உருவாக்குவதற்கே இங்கு மருத்துவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் அந்த மருத்துவமனைகளில் 'இறக்குமதி செய்யப்பட்டுள்ள' மருத்துவ உபகரணங்களுக்கு (CT Scan, MRI, PET, Robotic instruments etc.,) நோயாளிகளைப் 'பிடித்துத்தரவேண்டும்'! இதற்கு ஒரு இலக்கை ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவர்களுக்குக் கொடுக்கிறது. அந்த இலக்கை முடித்துத்தராதவர்கள் அங்கு தொடர்ந்து பணியாற்றமுடியாது. மருந்துகள் பரிந்துரைப்பிலும் இதுதான் இங்கு நடைபெறுகிறது. பிறந்த குழந்தைக்கு முன்னால் ஒரு அம்மை தடுப்பூசி போடுவார்கள். இப்போதெல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்குத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குழந்தைக்கு என்ன தடுப்பூசி போடுகிறார்கள் என்ற விவரம்கூட மக்களுக்குத் தெரியாது. மருத்துவர் சொல்கிறோர், ஆகவே போடுகிறோம் என்றுதான் அவர்கள் கூறுவார்கள். இந்தத் தடுப்பூசி மருந்துகள் எல்லாம் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தியே ஆகும்!
எனவே, இன்றைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சந்தை உருவாக்கித்தரும் தொழில்களுக்கான படிப்புகளுக்கே கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஏனைய படிப்புகளைப் பெறுபவர்கள் வேலையின்றித் தெருக்களில் நிறுத்தப்படுகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக