''அனைத்தையும் துறத்தல்'' - பொருள் என்ன?
-------------------------------------------------------------------
சிலர் தங்களது குடும்பம், சொத்து, சுகம், இளம்வயது வாழ்க்கை அனைத்தையும் துறந்து . . . ''தத்துவ வல்லுநர்களாக'' மாறி . . . ''இறைவனின் தூதர்களாக'' மாறி . . .
இச்செய்தி பரவலாக ஊடகங்களில் தற்போது கூறப்பட்டுவருகிறது!
இந்தப் பதிவில் மதங்கள்பற்றியோ, மதங்களின் 'மடங்கள்' பற்றியோ நான் விமர்சனம் செய்யவில்லை! இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்யவில்லை!
சமூக வரலாற்றில் தோன்றிய நிலவுகிற 'இறை நம்பிக்கை' 'மடங்கள்' போன்றவை, சமூக வரலாற்றில் இன்னொரு கட்டத்தில் மறையும்! மறைந்துதான் தீரும்! எனவே அதுபற்றி விவாதிப்பதற்கான தளங்கள் வேறு!
ஒரே ஒரு செய்தியைத்தான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்!
'அனைத்தையும் துறத்தல்' என்பதுபற்றிய ஒரு கருத்தே இது! 'அனைத்து' என்பதை எவற்றைக் குறித்து நிற்கிறது? இதுதான் எனது ஐயம்!
இவ்வாறு 'இளவரசர்களாக' அல்லது 'சக்கரவர்த்திகளாக' மாறியவர்களுக்கு இருக்க இடம் இல்லையா? உண்ண உணவு இல்லையா? பயணிக்க ஊர்திகள் இல்லையா? உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? அரசாங்கங்களின் அரவணைப்பு இல்லையா? அதுமட்டுமல்ல . . . மடங்களின் சொத்துகளை அபகரிப்பதில் ஏற்படுகிற போட்டி, பொறாமைகள் . . . கொலைகளில்கூட முடிவடைகின்றன!
ஆனால், உண்மையில் மேற்கூறியவை எதுவும் இல்லாமல் . . . மக்களுக்காகவே . . . மக்களிடையே வாழ்ந்து . . . அவர்கள் அளிக்கிற கஞ்சியைக் குடித்துக்கொண்டு . . . கட்டாந்தரையில் படுத்து உறங்கிக்கொண்டு . . . மக்களுடைய உழைப்பிலும் பங்கேற்று . . . மக்களுக்காகவே போராடி . . . இறுதியில் மக்களுக்காகவே . . . அடித்து அல்லது சுட்டுக்கொல்லப்படுகிறார்களே . . . இது 'அனைத்தையும் இழத்தல்' என்னும் சொற்றொடருக்குப் பொருள் இல்லையா?
பகத்சிங், குருதேவ், வாஞ்சிநாதன் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டங்களில் தூக்கில் இடப்பட்டவர்கள்! அல்லது போராட்டத்தில் தாங்களாகவே தங்களைச் சுட்டுக்கொன்று மறைந்தவர்கள்! தங்களது நாட்டுக்காக இவர்கள் தங்கள் குடும்பம், பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து போராடியவர்கள்! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போராட்டங்களில் குதித்தவர்கள்!
கியூபாவில் மக்கள் புரட்சியில் பெரும்பங்காற்றிய பிறகும், பிற நாடுகளின் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் புரட்சியாளர் குவேரா. கியூபாவில் தனக்கு அளிக்கப்பட்ட அமைச்சர் பதவியைத் துறந்து, பொலிவியா நாட்டின் விடுதலைக்காகப் போராடி , இறுதியில் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்!
1948-50 களில் இந்தியாவிலும் ஹைதராபத் நிஜாமை எதிர்த்த விவசாயிகளின் புரட்சியில் பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், சொத்து, சுகங்களைத் துறந்து, போராட்டங்களில் பங்கேற்று, எதிரிகளால் கொல்லப்பட்டார்கள்!
1969-இல் இந்தியாவின் பல பகுதிகளில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகப் போராடிய பத்தாயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள்! அவர்களின் தலைவரான தோழர் சாரு மஜூம்தார் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறையிலேயே கொல்லப்பட்டார். இவர்கள் அனைவரும் குடும்பம், சொத்து, பதவி, சுகம் போன்றவற்றைத் துறந்து தியாகம் செய்தவர்கள்!
எனக்குத் தெரிந்து தமிழகத்திலேயே மேற்குறிப்பிட்ட புரட்சியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கொல்லப்பட்டவர்கள் தோழர்கள் அப்பு, கணேசன், சர்ச்சில், சீராளன், பாலன், தமிழரசன், இரவிச்சந்திரன் போன்ற இளைஞர்கள்! இவர்கள் எல்லோரும் தங்கள் படிப்பு, பதவி, குடும்பம், சொத்து போன்றவற்றைத் துறந்து , மக்களுக்காகப் போராடி . . . போராட்டங்களிலேயே உயிர்துறந்தவர்கள்!
மேலே நான் கூறிய வரிசையில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் . . . தங்கள் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், சொத்து, பதவி போன்ற அத்தனையையும் துறந்து போராடி உயிர் துறந்தவர்கள்!
எது 'அனைத்தையும் இழத்தல்' ? எது 'துறவறம்'? தற்போது இருக்கிற வாழ்க்கையைவிட வசதியான வாழ்க்கைக்குப் பட்டம் சூட்டிக்கொள்பவர்களா?
அல்லது தங்களுக்கு இருக்கிற சொத்து, சுகம் அனைத்தையும் துறந்துவிட்டு, மக்களுக்காவே வாழ்கிறார்களே, இவர்களின் நடைமுறையை அல்லது வாழ்க்கையை 'அனைத்தையும் துறத்தல்' என்பதற்குப் பொருளாகக் கொள்வதா?
ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது! ஆமாம், 'அனைத்தையும் துறத்தல்' என்னும் சொல்லுக்கும் பின்னாலும் வர்க்கங்கள் . . . வர்க்க நலன்கள் ஒளிந்துகொண்டிருக்கிறது!
அனைத்து நாடுகளிலும் . . . அனைத்து மதங்களின் மடங்கள் அல்லது தலைமைப்பீடங்களுக்கு . . . கோடியே கோடி சொத்துகளைக் கொட்டிக் கொடுத்தவர்கள் யார்? மடாதிபதிகளும் அவர்களுடைய சீடர்களும் உழைத்துச் சேர்த்த சொத்துகளா இவை? இல்லை.
மக்கள் உழைப்பைக் கொள்ளையடித்த அரசர்கள் . . . சக்கரவர்த்திகள் . . . அரசுகள் 'நன்கொடையாக' கொடுத்தவையே இச்சொத்துகள்! ! ஏன் அவ்வாறு கொட்டிக்கொடுத்தார்கள்? 'பொது நலனா'? அல்லது 'வேறு நலன்களா? ' சிந்தித்துப் பார்த்தால் விடை கிடைக்கும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக