கன்னடம் தமிழிலிருந்து பிறந்ததா ? அல்லது தனியே பிறந்து வளர்ந்த ஒன்றா? - கருத்து மோதல்!
--------------------------------------------------------------------
மனித மொழிகளுக்கிடையே நீடிக்கிற ஒற்றுமைகள், வேற்றுமைகள், இலக்கண வகைப்பாடுகள், மொழி வரலாறு போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள மொழியியல் துறையில் பலவகைப்பட்ட கோட்பாடுகள், ஆய்வுமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை முன்வைப்பவர்கள் அவற்றிக்கான காரணங்களை முதலில் தெளிவாக்கிக்கொண்டு, தங்கள் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அவ்வாறு ஆய்வுகளை மேற்கொள்ளும்போதுதான் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஆய்வுமுடிவுகளை அடையமுடியும்.
அவ்வாறு இல்லாமல் தாய்மொழிப்பற்று, விருப்பு வெறுப்பு, அரசியல் காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற கருத்துகள் பயனற்றவை.
மேற்கூறிய வகையிலான ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் முதலில் தங்களுடைய மொழிக்கோட்பாடு, மொழி ஆய்வுமுறை போன்றவற்றை முதலில் தெளிவாகக் கூறிவிட்டு, தங்கள் ஆய்வு முடிவுகளை முன்வைக்கவேண்டும்.
திராவிட மொழி ஒப்பிலக்கணத்தில் தலைசிறந்த பேராசிரியர் மறைந்த பி.எஸ். சுப்பிரமணியம் (பி எஸ் சுப்பிரமணிய சாஸ்திரி இல்லை இவர்). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியாகப் பணியாற்றியவர். ஆந்திராவைச் சேர்ந்த பேரா. பி எச் கிருஷ்ணமூர்த்தி போன்று திராவிட மொழியியலில் வல்லவர். என்னுடைய பேராசிரியர். அவரது திராவிட ஒப்பிலக்கண அறிவு ஒரு மிகப் பெரிய கடல் போன்றது.
அவர் திராவிட மொழிகள் ஒப்பிலக்கணத்தில் தலைசிறந்த 23 நூல்களைத் தமது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் (Dravidian Comparative Grammar -1 : 2008). அதுபோன்று 'Areal Diffusion and Genetic Inheritance - Problems in Comparative Linguistics Edited by Alexandra Y. Aikhenvald & R.M. w. Dixon :Oxford University Press: 2001). அதுபோன்று உலகமொழிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமைகளின் அடிப்படையில் "Language Typology" என்னும் மொழியியல் பிரிவு வளர்ந்துநிற்கிறது.
மேற்கூறிய நூல்களில் முன்வைக்கப்படுகிற ஆய்வுமுறைகள், முடிவுகள் ஆகியவற்றைப் படித்துவிட்டு, அதனடிப்படையில் முடிவுகளுக்கு வந்து, ஒருவர் கருத்து கூறினால் சரியாக இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒரு நடிகர் ஏதோ ஒரு கூட்டத்தில் போகிறபோக்கில் ஏதோ ஒன்றைக் கூறியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை. அவரது கருத்தைப்பற்றி 'எரிந்த கட்சி - எரியாத கட்சி' என்று பிரிந்துநின்று விமர்சிக்கத் தேவையே இல்லை என்பது எனது கருத்து.
மீண்டும் கூறுகிறேன் . . மொழி ஆய்வு என்பது ஒரு மிகப் பெரிய அறிவியல் துறை. பிற அறிவியல் துறைகளில் ஒன்றைப்பற்றி வேறுபட்ட கருத்துகள் இருப்பதுபோல் அதிலும் வேறுபட்ட கோட்பாடுகள், ஆய்வுவழிமுறைகள் உண்டு.
மேற்கூறிய மொழியியல் ஆய்வாளர்களின் நூல்களை மொழி ஆய்வாளர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டும். அறிவியல் ஆய்வுமுறைகளைப் பின்பற்றவேண்டும். மொழி உணர்வு, மொழிப்பற்று ஆகியவற்றை மொழி ஆய்வோடு வைத்துக் குழம்பிக்கொள்ளக்கூடாது; மற்றவர்களையும் குழப்பி விடவும்கூடாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக