சனி, 22 மார்ச், 2025

தமிழும் ஆங்கிலமும் . . .

 தமிழும் ஆங்கிலமும் . . .

------------------------------------------------
நான் ஒரு மொழியியல் மாணவன்; ஒரு தமிழ் ஆசிரியரும்கூட.
ஐம்பது ஆண்டுகளுக்குமேலாக மொழியியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறேன்! மொழியியல் ஆய்வுகளில் பல்வேறு கோட்பாடுகளை விளக்குவதற்கு மொழியியல் அறிஞர்கள் எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் அடிப்படையாகக்கொண்டு தங்கள் ஆய்வுகளை முன்வைக்கமாட்டார்கள். எந்தவொரு மொழியையும் மற்ற மொழிகளைவிடச் சிறப்பான மொழி, உயர்வான மொழி என்று கொள்ளமாட்டார்கள். அதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும்!
மொழியியல் ஆய்வுகளில் பல்வேறு மொழிகளைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கும். ஒரு கோட்பாட்டை விளக்குவதற்குப் பல மொழிகளை முன்வைத்துக் கருத்து தெரிவிப்பார்கள். எடுத்துக்காட்டாக, முதுபெரும் மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடானது நூற்றுக்கணக்கான மொழிகளுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கு முதன்முதலாகப் பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் அவர்கள் அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பேரா. ஹவுஸ்கோல்டர் வழிகாட்டுதலில் முதன்முதலாக மாற்றிலக்கணத்தைத் தமிழ்மொழிக்குச் செயல்படுத்தி, தமிழின் நுட்பங்களை அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கி, (இரண்டாவது) முனைவர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையைத் தோற்றுவித்து, மொழியியல் ஆய்வுக்கு வழிகாட்டியவர் பேரா. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள். அவர்தான் முதன்முதலாகத் தமிழ்மொழியின் வரலாற்றுச் சிறப்புப்பற்றி அமெரிக்காவின் இந்தியானப் பல்கலைக்கழகத்தில் 1965-இல் உரை நிகழ்த்தினார். பேரா. இ. அண்ணாமலை அவர்கள், பேரா. கு. பரமசிவம் அவர்கள் அமெரிக்காவில் மொழியியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருபதுக்குமேற்பட்ட மாணவர்கள் (வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள்) அங்குள்ள பேராசிரியர்கள் வழிகாட்டுதலில் மாற்றிலக்கணக் கோட்பாட்டில் ஆய்வு மேற்கொண்டார்கள். அவர்களில் சிலர் - பேரா. பொற்கோ, பேரா. இரா. கோதண்டராமன், பேரா. செம்மொழி ராமசாமி. டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பேரா. அரங்கன் அவர்கள். பூனாப் பல்கலைக்கழகத்தில் பேரா. சண்முகம் அவர்கள், திராவிட மொழி ஒப்பாய்வில் இந்தியாவின் தலைசிறந்த மொழியியல் பேராசிரியர் பி.எஸ். சுப்பிரமணியம் அவர்கள் (தெலுங்கு) பேரா, குசலப்ப கவுடா (கன்னடம்) , வழிகாட்டுதலில் பலர் திராவிட மொழி ஒப்பாய்வுகளை மேற்கொண்டார்கள். பேரா. குமாராசாமி ராஜா அவர்கள், பேரா. செ.வை. சண்முகம், பேராசிரியர் பிரபாகர வாரியார் (மலையாளம்), பேரா. க. முருகையன், பேரா. க. பாலசுப்பிரமணியன், பேரா. காமாட்சிநாதன், பேராசிரியர் எம்.எஸ். திருமலை, பேரா. சு. இராசாராம், பேரா, கருணாகரன், பேரா. சீனிவாச வர்மா, பேரா. வ. ஞானசுந்தரம், போன்றோர் வழிகாட்டுதலில் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. பேராசிரியர் வ.ஐ. சுப்பிரமணியன் அவர்களின் வழிகாட்டுதலில் (கேரளப் பல்கலைக்கழகத்தில்) பேரா , அகத்தியலிங்கம், பேரா. இராம. சுந்தரம், பேரா. தாமோதரன், பேரா. பா.ரா. சுப்பிரமணியன் போன்றோர் மொழியியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மதுரையில் பேரா. முத்துச்சண்முகம், பேரா. இஸ்ரேல், பேரா. விஜயவேணுகோபால், பேரா. நீதிவாணன் போன்றோர் மொழியியல் ஆய்வுகளை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு வழிகாட்டினர். இப்பட்டியலில் சிலர் விடுபட்டிருக்கலாம்.
இவ்வளவு பேராசிரியர்களையும் நான் மேலே குறிப்பிட்டதின் காரணம் . . . உலகின் பல்வேறு மொழிகளைப்பற்றிய உலக அளவிலான மொழியியல் ஆய்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடவே.
மேலும் இவர்கள் எல்லோரும் தமிழ்மொழி தாண்டி, உலகின் பிறமொழிகளின் மொழியியல் கூறுகளையும் தெரிந்தவர்கள்.
மேற்குறிப்பிட்டவர்களோடு அயல்நாட்டு மொழியியல் பேராசிரியர்கள் எமனோ, பரோவ், ஆஷர், ஆன்ட்ரனோவ், ஜார்ஜ் ஹார்ட், ஜப்பானியப் பேராசிரியர் ஓனோ, ஹெரால்ட் ஷிப்மேன் . . . பட்டியல் நீளும். இவர்கள் எல்லோரும் தமிழ்மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள். பேராசிரியர்கள் இரா.பி, சேது, பேரா. வையாபுரி, மு. வ., பேரா. வ. சுப. மாணிக்கம் , பேரா. இலக்குவனார், பேரா. சோ.ந. கந்தசாமி போன்றவர்கள் - தமிழைத்தாண்டி பிறமொழிகளிலும் அறிவுத்திறன் மிக்கவர்கள்; இவர்களும் தமிழின் சிறப்பை உலக அளவில் எடுத்துச் சென்றுள்ளார்கள்.
உலக அளவில் எந்தவொரு மொழியியல் ஆய்வாளரும் எந்தவொரு ஆய்விலும் ஒரு மொழியைவிட இன்னொரு மொழி அமைப்பில் - இலக்கணத்தில் - சிறப்புடையது என்று கூறவில்லை. ஏனெனில் அது உண்மையும் இல்லை! எல்லா மொழிகளும் மனித மூளையில் தோன்றி நிலவுகிற மொழிகளே. மனிதமொழியின் அமைப்பும் செயல்பாடும் அனைவருக்கும் ஒன்றே.
இலத்தீன், கிரேக்கம், தமிழ் போன்ற மொழிகள் நீண்ட வரலாறு உடையவை. அவ்வளவுதான். அதனாலேயே இவை மற்ற மொழிகளைவிட உயர்ந்தது என்பது கிடையாது. அந்தந்த மொழிச்சமுதாயத்தின் தேவைகளை அந்தந்த மொழிகள் நிறைவேற்றுகின்றன.
ஆங்கிலமும் ஆயிரக்கணக்கான மொழிகளில் ஒன்றுதான். அதன் அமைப்பானது - இலக்கணமானது - பிறமொழிகளைவிடச் சிறந்தது என்று கூறுவதற்கு எவ்வித மொழியியல் சான்றும் கிடையாது. மேலும் கூறப்போனால், ஒரு இளைய மொழி. இன்றைய ஆங்கிலம் 15, 16 ஆவது நூற்றாண்டில் வளர்ந்த ஒரு மொழிதான்.
இவ்வாறு மொழியியல் உண்மைகள் இருக்கும்போது, தமிழ்நாட்டில் கல்விக்குப் பயிற்றுமொழியாக ஏன் ஆங்கிலம் நீடிக்கிறது? தமிழ் ஏன் நீடிக்கவில்லை? மொழி அமைப்பில் - இலக்கணத்தில் - குறைபாடுகள் உண்டா? கிடையாது. கிடையவே கிடையாது.
கல்வியில் மட்டுமல்ல, தமிழகத்தில் பொருள் உற்பத்தி, வணிகம், வழிபாடு, நிர்வாகம் என்று பல துறைகளிலும் ஆங்கிலம் ஆதிக்கம் நீடிப்பதற்கு என்ன காரணம்? ஆறு நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சிசெய்த ஆங்கிலேய ஏகாதிபத்தியமே காரணம்! அதன் விளைவாக, இன்றும்கூட ... நாடு அவர்களின் நேரடி ஆட்சியிலிருந்து விடுபட்டபிறகும்கூட . . ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது! இந்த அரசியல், பொருளாதார ஆதிக்கமே ஆங்கிலத்தைத் தமிழ்நாட்டில் அரியாசனத்தில் உட்கார வைத்துள்ளது.
ஆங்கிலத்தால் மேற்கொள்கிற எந்தவொரு மொழிச்செயல்பாட்டையும் தமிழால் மேற்கொள்ளமுடியும். ஆனால் தமிழை இங்கு ஆங்கிலத்திற்கு அடிமையான ஒரு மொழியாக வைத்திருக்கிறோம். இதுதான் உண்மை. ஆங்கிலமொழியின் திறமை காரணம் இல்லை அதற்கு! அதனது நேரடியான, மறைமுகமான அரசியல், பொருளாதார ஆதிக்கமே காரணம்!
எனவே, தமிழால் இன்றே பயிற்றுமொழியாக ஆகமுடியுமா என்று ஐயப்படுவதற்கு எவ்விதக் காரணமும் இல்லை! நான் ஆங்கிலத்திற்கோ, இந்திக்கோ, அல்லது எந்தவொரு அயல்மொழிக்கோ எதிரானவன் கிடையாது! அந்தந்த தேசிய இனங்கள் அவரவர் தாய்மொழிகளைப் பயன்படுத்தவேண்டும் என்ற ஒரு ஜனநாயக , தேசிய இன உரிமையின் அடிப்படையில்தான் கூறுகிறேன்.
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை என்ற அடிப்படையிலும் மொழியியல் மாணவன் என்ற முறையிலும் . . . தமிழ்நாட்டில் தமிழே பயிற்றுமொழி உட்பட அனைத்துத் துறைகளிலும் நீடிக்கவேண்டும் என்று கூறுகிறேன். அறிவியல் அடிப்படையில்லாத உணர்ச்சியால் சொல்லவில்லை! ஆதாரங்களுடன்தான் - மொழியியல் ஆதாரங்களுடன்தான் - சொல்கிறேன்.

ஆட்சிமொழி, பயிற்றுமொழி தொடர்பாக . . .

 ஆட்சிமொழி, பயிற்றுமொழி தொடர்பாக . . .

-----------------------------------------------------------------------
இந்தியாவின் ஆட்சிமொழி இந்திமொழிதான் என்பதில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே உறுதியாக இருக்கின்றன.
ஆனால் இதுபற்றி அவற்றுடன் கூட்டணிகள் அமைக்கும் கட்சிகள் பேசுவதில்லை. ஒரு முன்நிபந்தனையாக இதை வைக்கலாம். ஆனால் வைப்பது கிடையாது. அவர்களைப்பொறுத்தமட்டில் தேர்தல் கூட்டணி என்பது வேறு! கொள்கை, திட்டம் என்பது வேறு. தேர்தல் வெற்றியே முதன்மையானது.
ஆனால் மொழிதொடர்பான கொள்கையில் மாற்றம் சாத்தியமில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்திபேசாத மக்கள் சிறுபான்மையாக இருந்தாலும்கூட, எல்லோருக்குமான இந்தியக் குடியரசில் அனைத்துமொழிகளுக்கும் சம உரிமை அளிக்கவேண்டும்.
தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதிதானே! அதன் மொழி தமிழ்தானே! அதற்கு ஏன் இந்திமொழிக்கு அளிக்கப்பட்டுள்ள ஆட்சிமொழி தகுதி அளிக்கக்கூடாது? எது ஒன்றிலும் , சிறுபான்மை, பெரும்பான்மை அடிப்படையில் பல தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு குடியரசு முடிவு எடுக்கக்கூடாது!
தமிழ்நாட்டுக்குள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் பயிற்றுமொழி என்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இங்குள்ள மாநில அரசுதான் பொறுப்பு. பிறமொழிகளை மாணவர்கள் தங்கள் விருப்பம், தேவை அடிப்படையில் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கவேண்டியதும் மாநில அரசுகளின் பொறுப்புதான்! ஆங்கிலம் உட்பட எந்த ஒரு அந்நிய மொழியையும் மாணவர்கள் கற்றுக்கொள்ளக்கூடாது என்று நான் கூறவில்லை.
ஆனால் . . . இந்திய அரசியல் சட்டத்தில் தமிழ்மொழியும் ஒரு ஆட்சிமொழியாக இடம்பெறவேண்டும். தாய்மொழி தமிழ்தவிர, பிற மொழிகளை எந்த ஒரு வடிவத்திலும் (இருமொழிக்கொள்கையோ, மும்மொழிக்கொள்கையே) தமிழ்நாட்டில் மேலிருந்து திணிக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் கல்வியில் அனைத்து நிலைகளிலும் தமிழே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். சாத்தியம் இல்லை என்று கூறுவது எல்லாம் வெறும் ஏமாற்றும் வேலையே!
மொழிக்கொள்கையில் இரண்டு கூறுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(1) தேசிய இனங்களின் உரிமை என்னும் அடிப்படையில் தமிழ்மொழியும் இந்திய அரசின் ஆட்சிமொழியாக அங்கீகரிக்கப்படவேண்டும்.
(2) தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தாய்மொழியில் கல்வியை அனைத்து நிலைகளிலும் பெறுவதற்கு உரிமை உண்டு. அறிவியல் அடிப்படையிலும் இதுவே சரி!

தொழிற்பெயர் பற்றி . . . தமிழ்மொழி ஆய்வாளர்கள், மாணவர்கள் பார்வைக்கு

 

தொழிற்பெயர் பற்றி . . . தமிழ்மொழி ஆய்வாளர்கள், மாணவர்கள் பார்வைக்கு . . -----------------------------------------------------------------------------------------------------

'நடை' என்பது தொழிற்பெயரா , முழுப்பெயரா என்ற வினாவுக்கு விடை தர முயன்ற வேறு ஒரு பதிவில் நான் மேற்கோள் காட்டிய மூன்று மொழியியல் பேராசிரியர்களின் கருத்துகள் . . .

தமிழ் மாணவர்களுக்குப் பயன்படலாம் என்பதால் அதை இங்குத் தனியாகவும் பதிவிடுகிறேன்.

மொழியியல் பேராசிரியர்கள் ச. அகத்தியலிங்கம், பொற்கோ , கு. பரமசிவம் மூவரும் இதுபற்றித் தெளிவாக எழுதியுள்ளார்கள்.

பேரா. அகத்தியலிங்கம் அவர்கள் வினையிலிருந்து பிறக்கும் மூவகைப்பெயர்களைக் குறிப்பிடுகிறார். (1) ஆக்கப்பெயர் ( முழுமையாகப் பெயர்த்தன்மை கொண்ட சொற்களாக மாறியவை - 'ஆக்கம்' , 'அழிவு', 'வாழ்க்கை' ), (2) காலம்காட்டாத்தொழிற்பெயர் ( வினைத்தன்மையும் பெயர்த்தன்மையும் உடைய சொற்கள் - ' வருதல்', 'ஓடுதல்' ,'பேசுதல்') , (3) காலம்காட்டும் தொழிற்பெயர் ( வினைத்தன்மையும் பெயர்த்தன்மையும் உடைய சொற்கள் - ' வந்தது', 'செல்வது', 'பேசுகிறது') என்று வகைப்படுத்தியுள்ளார். ('தமிழ்மொழி அமைப்பியல்' பேரா. அகத்தியலிங்கம் பக்கம் 229-230)

பேரா. பொற்கோ அவர்கள் 'வினைநடைப்பெயர்' என்று ஒரு வகையைக் குறிப்பிட்டு, அதில் (1) வினையிலிருந்து பிறந்தாலும் முழுமையாகப் பெயர்களாக ஆனவை (பேரா. அகத்தியலிங்கம் கூறியுள்ள ஆக்கப்பெயர்கள்) , (2) வினைத்தன்மையிலிருந்து முழுமையாக விடுபடாத தொழிற்பெயர்கள். அவற்றில் ஒருவகை காலம் காட்டாத் தொழிற்பெயர்; (3) மற்றொன்று காலம் காட்டும் தொழிற்பெயர். (;இக்காலத் தமிழிலக்கணம்' பேரா. பொற்கோ , பக்கம் 94)

பேரா. கு. பரமசிவம் அவர்கள் நான்கு வகைப்படுத்துகிறார்: (1) -அம், -சி, -பு விகுதிகள் உடைய 'ஆட்டம்', 'ஆராய்ச்சி', 'தேய்ப்பு - முழுக்க முழுக்கப் பெயர்ச்சொற்களாகவே அமைபவை (2) -தல் விகுதி பெற்ற 'வருதல்' , 'போதல்', 'பேசுதல்' -முழுக்க முழுக்கத் தொழிற்பெயர்கள் (3) -அல், -கை விகுதி பெற்றவை - 'ஆடல்' , 'நடக்கல்', ;ஆடுகை', 'பாடுகை', 'நடக்கை' - பாதி தொழிற்பெயராகவும் பாதி பெயர்ச்சொல்லாகவும் அமைபவை. (4) அத்தோடு இக்காலத் தமிழில் காலம் காட்டுகிற 'செய்தது', 'செய்வது', 'செய்கிறது' போன்ற தொழிற்பெயர்கள். ('இக்காலத் தமிழ் மரபு' பேரா. கு. பரமசிவம், பக்கம் 102-108).

--------------------------------------------------------------------

'மாடு வந்தது' - 'வந்தது' வினைமுற்று.

'வந்தது எது? - 'வந்தது' வினையாலணையும் பெயர்

'அவர் வந்தது எனக்கு மகிழ்ச்சி' - 'வந்தது' தொழிற்பெயர்.

மூன்றிலும் 'வந்தது' வருகிறது. ஆனால் அவை வேறு வேறு இலக்கணவகை.

'அது' வினைமுற்றில் திணை-எண்-பால் விகுதி.

'அது' தொழிற்பெயரில் தொழிற்பெயர் விகுதி.

'அது' வினையாலணையும்பெயரில் எண்-பால் விகுதி.

தமிழில் காலம் காட்டாத் தொழிற்பெயர் - 'வருதல்' 'போதல்' 'வருகை'

காலம் காட்டும் தொழிற்பெயர் - 'வந்தது' 'பேசியது' 'சென்றது'

வினையாலணையும்பெயரும் காலம் காட்டும். - 'வருகிறவன்' 'வந்தவன்' 'வருபவன்'

'மாடு வந்தது' - 'வந்தது' வினைமுற்று.

'வந்தது எது? - 'வந்தது' வினையாலணையும் பெயர்

'அவர் வந்தது எனக்கு மகிழ்ச்சி' - 'வந்தது' தொழிற்பெயர்.

மூன்றிலும் 'வந்தது' வருகிறது. ஆனால் அவை வேறு வேறு இலக்கணவகை.

'அது' வினைமுற்றில் திணை-எண்-பால் விகுதி.

'அது' தொழிற்பெயரில் தொழிற்பெயர் விகுதி.

'அது' வினையாலணையும்பெயரில் எண்-பால் விகுதி.

தமிழில் காலம் காட்டாத் தொழிற்பெயர் - 'வருதல்' 'போதல்' 'வருகை'

காலம் காட்டும் தொழிற்பெயர் - 'வந்தது' 'பேசியது' 'சென்றது'

வினையாலணையும்பெயரும் காலம் காட்டும். - 'வருகிறவன்' 'வந்தவன்' 'வருபவன்'

 

மொழி இலக்கண அறிவு செய்யறிவுத்திறன் மென்பொருள்களுக்குத் (Artificial Intelligence - AI) தேவையா?

 மொழி இலக்கண அறிவு செய்யறிவுத்திறன் மென்பொருள்களுக்குத் (Artificial Intelligence - AI) தேவையா?

---------------------------------------------------------------------------------------------------------
நாம் நமது கருத்து வெளிப்பாட்டுக்கும் பரிமாற்றத்திற்கும் (Communication) அடிப்படையாகப் பயன்படுத்துவது நமது இயற்கைமொழிகளையே (Verbal means) ! மொழிகளோடு நமது முகத்தோற்றம், கை , கால், உடல் அசைவுகள், படங்கள், குறியீடுகள் போன்றவையும் (Non-verbal means) பயன்படுத்துகிறோம். இவற்றிற்கும் கருத்துப் பரிமாற்றத்தில் ஒரு முக்கிய இடம் உண்டு. இருப்பினும் மொழிகளே அடிப்படையானவை.
பிறந்த குழந்தை ஒரு சில வருடங்களில் - குறிப்பாக மூன்று , நான்கு வருடங்களில் - தனது தாய்மொழிவழிக் கருத்துப்புலப்படுத்தத்திறனை (Communicative ability) வளர்த்துக்கொள்கிறது. அதன் மூளைக்குள் தாய்மொழியின் இலக்கணம் (Grammar) , சொற்களஞ்சியம் அல்லது அகராதி (Lexicon) இடம்பெறுகின்றன. அதன் பயனாகவே குழந்தை தனது மொழிவழிக் கருத்துப்புலப்படுத்தச் செயல்களை மேற்கொள்கிறது.
குழந்தையின் மூளையில் ஒரு குறிப்பிட்ட வயதில் மொழி இலக்கண, சொல் அறிவு வளர்ந்துநிற்கிறது என்பதில் மொழியியல் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அது எவ்வாறு வளர்கிறது என்பதில் சோம் சாம்ஸ்கி போன்றவர்களுக்கும் பி எஃப் ஸ்கின்னர் போன்றவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு. பிறக்கும்போதே குழந்தைக்கு ஒரு பொதுமை இலக்கணம் உயிரியல் அடிப்படையில் மூளையில் நீடிக்கிறது. அதன்பயனாக , குழந்தையானது குறைந்த தரவுகளில் நிறைந்த மொழியறிவைப் பெற்றுக்கொள்கிறது என்று சாம்ஸ்கி கூறுகிறார். ஸ்கின்னர் போன்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல், குழந்தைபிறகுதான் தனக்குக் கிடைக்கிற மொழித்தரவுகளின் அடிப்படையில் தனது மொழியறிவைப் பெற்றுக்கொள்கிறது என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு இரண்டு மாறுபட்ட கருத்துகள் நிலவினாலும், இரு தரப்பினருமே குழந்தையின் மூளையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மொழி இலக்கணம் வளர்ந்துநிற்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த மொழி இலக்கணமே நமது மொழித்திறனுக்கு அடிப்படை என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆனால் இன்றைய செய்யறிவுத்திறன் அறிவியலில் (AI) இதற்கு மாறுபட்ட கருத்து நிலவுகிறது. கணினிக்கு ஒரு மொழியின் இலக்கணம், சொற்களஞ்சியம் ஆகியவை அளிக்கப்படாமலேயே . . . தனக்கு கோடியே கோடி மொழித்தரவுகளை (language data in trillions) அளித்தாலே போதும் . . . நிகழ்தகவுப் புள்ளியியல் (Probabilistic statistics) அடிப்படையில் மனிதன் பெற்றுள்ள மொழித்திறனைக் கணினி பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது. நடைமுறையிலும் மொழி பெயர்ப்பு, கட்டுரை எழுதுதல், கட்டுரைச் சுருக்கம் தருதல் உட்பட ஏராளமான மொழிவழிச் செயல்பாட்டுத்திறன்களைக் ( language Performance) கணினி பெற்றுக் கொண்டு, மனிதனுக்குப் போட்டியாக மிகச் சிறப்பான முறையில் மொழிவழிக் கருத்துபரிமாற்றத்தை மேற்கொள்கிறது. இது ஒரு வியக்கத்தக்க வளர்ச்சி! மறுப்பதற்கு இல்லை!
ஒரு தொடரில் இந்தச் சொல் பெயர்ச்சொல், இந்தச்சொல் வினைச்சொல், இது விகுதி, இது சந்தி என்ற விவரங்கள் எல்லாம் கணினிக்குத் தேவை இல்லை! அப்படியென்றால் அதற்கு என்னதான் தேவை?
ஒரு தொடரில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்குமுன்னால் அமைகிற சொற்கள் என்ன? பின்னால் அமைகிற சொற்கள் என்ன? ஆனால் ஒரு சொல்லுக்குமுன்னால் அமைகிற ஒரு சில சொற்கள்மட்டும் போதாது. அதற்கு முன்னால் அமைகிற ஆயிரக்கணக்கான சொற்கள், பின்னால் அமைகிற ஆயிரக்கணக்கான சொற்கள் தேவை. அதை வைத்துக்கொண்டு . . . ஒரு சொல்லைப் புரிந்துகொள்ளும் அல்லது பயன்படுத்தும் திறனைக் கணினி பெற்றுவிடும். இதைத்தான் பெரியமொழிமாதிரி (Large Language Model - LLM) என்று அழைக்கிறார்கள்.
மொழியியலிலும் மேற்குறிப்பிட்ட கருத்துக்குத் தொடர்பான ஒரு கோட்பாடு உண்டு. இது இங்கிலாந்து மொழியியல் அறிஞர்களான பிர்த், ஹாலிடே போன்றவர்கள் உருவாக்கிய Systemic Grammar என்ற கோட்பாடாகும். ஒரு சொல்லை அல்லது தொடரைப் (Text) புரிந்துகொள்ள . . . அந்தச் சொல் அல்லது தொடர்மட்டும் அல்லாமல் . . . அவற்றிற்குமுன்பின் அமைகிற சொற்கள் அல்லது தொடர்களும் (Co-text) தேவை . . . இதைச் சொல் அல்லது தொடரின் சூழல் என்று கூறுவார்கள். ஆனால் அத்தோடு, சொற்கள் அல்லது தொடர்கள் பேசப்படுகிற மொழிசாராப் பின்னணி (Context) அறிவுத் தேவை. ஆனால் இக்கோட்பாடு மொழி இலக்கண அறிவு நமக்குத் தேவை இல்லை என்று கூறவில்லை. பெயர், வினை, வேற்றுமை, காலம் போன்றவைபற்றிய மொழி அறிவு உறுதியாகத் தேவை என்பதை ஏற்றுக்கொள்கிறது. அதுதான் சொல் அல்லது தொடர் அறிவு, முன்பின் அமைகிற சொல் அல்லது தொடர் அறிவு என்று கூறுகிறது.
ஆனால் இன்றைய கணினியின் மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சி நிலையில் . . . சொல், தொடர் போன்ற இலக்கண அறிவை நேரடியாகக் கணினிக்கு அளிக்கவேண்டிய தேவை இல்லை. மொழிவழிச் செயல்பாடுகளுக்குத் தேவையான அறிவு எல்லாவற்றையும் தரவுகள், நிகழ்தகவு ஆகியவற்றின்மூலமே கணினி பெற்றுக்கொள்ளும்.
ஆனால் இதற்கு முந்தைய வளர்ச்சியான கணினிமொழியியல் (Computational Linguistics) இவ்வாறு சொல்லவில்லை. மாறாக, மனித மூளையில் நீடிக்கிற மொழி அறிவைக் கணினிக்கு ஏற்ற வடிவத்தில் எவ்வாறு கொடுப்பது என்பதே அதன் நோக்கமாக இருந்தது.
ஆகவே, இன்றைய செய்யறிவுத்திறனின் மொழித்திறனுக்கு மொழியியல் ஆய்வு தேவை இல்லை . . . இலக்கண ஆய்வு தேவை இல்லை என்னும் கருத்து வலுப்பெற்றுவருகிறது. மனித மூளைக்கு இது தேவைப்படலாம். ஆனால் இன்றைய பிரம்மாண்ட வளர்ச்சிபெற்றுள்ள கணினிக்குத் தேவை இல்லை! என்பதே இதன் அடிப்படை!
தேவை எல்லாம். . . நம்மால் பயன்படுத்தப்பட்ட கோடானுகோடி மொழித்தரவுகளே என்று கூறப்படுகிறது! இந்த மொழித்தரவுகளைப் பெறவும் சேமித்து வைக்கவும் ஆய்வுசெய்யவும் பயன்படுத்தவும் இன்றைய கணினித்தொழில்நுட்பத்தால் முடியும் என்பதே இதன் கருத்து! ஆனால் அதற்குக் கூகுளும் மைக்ரோசாப்டும் பேஸ்புக்கும் அமேசானும் ஐபிஎம்மும் போன்ற பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் தேவை! அவற்றால்தான் இப்படிப்பட்ட கணினித்தொழில் நுட்பத்தைக் கொடுக்கமுடியும் இன்றைக்கு! உலகில் எந்தவொரு மொழியும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற . . . இந்த நிறுவனங்களையே சார்ந்துநிற்கவேண்டும்!
இங்கு நாம் கவனமாகப் பார்க்கவேண்டியது . . மனிதன் தன் மூளையைச் சாராமல், ஒரு கணக்கைச் செய்வதற்கு எவ்வாறு கணிப்பாணைச் சார்ந்துநிற்கிறானோ, அதுபோன்று ஒருவன் தன் மூளை, பேச்சு, எழுத்தைச் சாராமல், கணிவழியே தன் அனைத்துக் கருத்துப்பரிமாற்றதையும் செய்துகொள்ளலாம் என்று நினைத்தால் , அவனுக்கு மொழி அறிவு தேவை இல்லை. மொழிக்கல்வி தேவை இல்லை. இலக்கணங்கள் தேவை இல்லை!
அப்படி ஒரு மனித சமுதாயம் நீடிக்கமுடியாது! கவலை வேண்டாம். மனிதனுக்கு மொழி அறிவு தேவை . . . இலக்கணம் தேவை . . . சொற்களஞ்சியம் தேவை! இவையெல்லாம் கணினிக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம்! ஆனால் மனித சமுதாயத்திற்குத் தேவை! பொருள் உற்பத்திக்குத் தேவை. சமுதாயநீடிப்புக்குத் தேவை!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India