செவ்வாய், 3 ஜூன், 2025

இயற்கை நிகழ்வுக்கும் சமூக நிகழ்வுக்கும் - புறவய விதிகளே அடிப்படை ! சமூக மாற்றத்தைத் தடுக்கமுடியுமா?

 இயற்கை நிகழ்வுக்கும் சமூக நிகழ்வுக்கும் - புறவய விதிகளே அடிப்படை ! சமூக மாற்றத்தைத் தடுக்கமுடியுமா?

--------------------------------------------------------------------------
பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கோளங்கள், துணைக்கோளங்கள், புவி ஈர்ப்பு விதிகள், கடல் அலைகள் . . . இவையெல்லாம் நீடிப்பதற்கும் இயங்குவதற்கும் புறவய விதிகளே அடிப்படை. பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட இடத்தில் தன் இருத்தலை ஏற்படுத்தியுள்ள பூமியில் புவி ஈர்ப்பு விதி செயல்படுவது புறவய நிகழ்வு. இவற்றின் புறவய நீடிப்புகளும் அவற்றிற்கான புறவய இயக்குவிதிகளும் நமது மனம் . . . எண்ணம் . . . சிந்தனை . . . விருப்பு வெறுப்பு போன்றவற்றைச் சார்ந்தவை இல்லை! புறவயத் தன்மை உடைமை உடையவை!
இந்த விதிகளை இல்லாமல் ஆக்குவேன் என்று ஒருவர் கூறினால், அவரைப்பற்றி நாம் என்ன நினைப்போம்?
இதுபோன்றதே மனித சமூகத்தின் நீடிப்பும் அவற்றின் புறவய இயக்குவிதிகளும்!
சமூகத்தின் அமைப்பு, இயக்கம், மாற்றம் போன்ற அனைத்திற்கும் புறவய விதிகள் உண்டு. இவற்றை யாராலும் இல்லாமல் தன் விருப்பவெறுப்புப்படி ''ஆக்கமுடியாது, உருவாக்கமுடியாது''.
பிரபஞ்சத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையில் உள்ள ஒரு வேறுபாடு . . . பிரபஞ்சத்தின் நீடிப்பு, இயக்கம் ஆகியவற்றில் மனிதனின் செயல்களுக்கு இடம் இல்லை! ஆனால் சமூகத்தின் நீடிப்பு, இயக்கம், மாற்றத்தில் மனிதனின் செயல்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஆனால் இந்தப் பங்கின் தன்மை பற்றி ஒரு புரிதல் வேண்டும். சமூகத்தின் புறவயவிதிகளைப் புரிந்துகொண்டு, அதன் இயக்கத்தில் . . . மாற்றத்தில் மனிதன் தன் பங்கை ஆற்றலாமே ஒழிய, அந்தப் புறவயவிதிகளை இல்லாமல் ஆக்கமுடியாது.
அதுபோன்று பண்புரீதியாக முன்னேறிச் சென்ற ஒரு சமூக நிலையை அல்லது அமைப்பைப் பின்னோக்கித் திருப்பமுடியாது. மொட்டானது ஒரு கட்டத்தில் பூவாக மாறியபிறகு மீண்டும் மொட்டாக மாறமுடியாது. அதுபோன்றே இன்றைய சமூகம் கற்கால சமூகமாக மாறமுடியாதது . . . பின்னோக்கித் திரும்பமுடியாது!
அப்படியென்றால், சோவியத் ரசியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட சோசலிச மாற்றங்கள் இன்று நீடிக்கவில்லையே என்று நினைக்கலாம். இந்தச் சோசலிச மாற்றங்கள் முதலாளித்துவ சமூகத்திற்கும் அதற்கு அடுத்த பண்புரீதியான மாற்றமான பொதுவுடைமைச் சமூகத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலை. முன்னோக்கிச் செல்வதற்கான போராட்டம் நீடிக்கிற ஒரு நிலை! இதில் தற்காலிகப் பின்னடைவு ஏற்படலாம். அதற்குப் பல காரணிகள் உண்டு. ஆனால் உறுதியாக எதிர்காலத்தில் அது பொதுவுடைமைச் சமூகத்தை அடைந்தே தீரும். அதை யாராலும் தடுக்கமுடியாது!
சமூகத்தின் அமைப்பு, நீடிப்பு, மாற்றம், அதற்கான போராட்டம் ஆகியவைபற்றிய புறவயமான விளக்கங்களே அல்லது விதிகளே மார்க்ஸ், எங்கல்ஸ் போன்றோர் முன்வைத்தவை. அவர்கள் இந்த விளக்கங்கள் அல்லது விதிகளை, தங்கள் விருப்புவெறுப்புக்கு உட்பட்டு உருவாக்கவில்லை! தீவிரமான ஆய்வின்மூலம் அந்தப் புறவய விதிகளைக் கண்டறிந்தார்கள். அவர்களே மீண்டும் வந்து, 'நாங்கள் கூறிய விதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்' என்று கூறமுடியாது! அவர்கள் 'உருவாக்கியிருந்தால்' திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். புவிஈர்ப்பு விதிகளை நியூட்டனோ ஐன்ஸ்டினோ வந்து 'திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியுமா? அதுபோன்றதுதான் மார்கஸ், எங்கல்ஸின் சமூக ஆய்வு . . . கண்டுபிடிப்புகள்!
ஏன் இதை இப்போது இங்கே சொல்கிறேன் என்று நண்பர்கள் நினைக்கலாம்.
பொதுவுடைமைக்கான போராட்டங்களை - போராளிகளை - இந்த ஆண்டு, இந்த மாதத்தில் , இந்தத் தேதியில் இல்லாமல் ஆக்கிவிடுவோம் என்று முதலாளித்துவ ஆதிக்க சக்திகள் கூறினால், அது நகைப்புக்கு உரிய ஒன்றே என்பதைக் கூறவே இந்தப் பதிவு! இயற்கை அறிவியல்போன்றதே மார்க்சிய சமூக அறிவியல்! இயற்கை மாற்றத்திற்குப் புறவயவிதிகள் இருப்பதுபோலவே சமூக மாற்றத்திற்கும் புறவய விதிகள் உண்டு.
இயந்திர அசைவு (Mechanical motion) , இயற்பியல் இயக்கம் (Physical motion) , வேதியியல் இயக்கம் (Chemical motion) , உயிரியல் இயக்கம் (biological motion) ஆகியவற்றில் நீடிக்கிற இயக்கங்களைவிட மிகச் சிக்கலான இயக்கம் சமூக இயக்கம் (Social motion) . இதைப் புரிந்துகொள்ள மிகக் கடுமையாக உழைக்கவேண்டும். இது மிகச் சிக்கலான அறிவியல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India