திங்கள், 5 மே, 2025

இன்றைய கல்வி . . .

இன்றைய கல்விக்கும் இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார உற்பத்திக்கும் தொடர்பு கிடையாது. மொழிப் படிப்புகள் மட்டுமல்ல, இயற்பியல், வேதியியல், தாவரயியல் போன்ற படிப்புகளுக்கும் இது பொருந்தும். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பொறியாளர்களை உருவாக்கும் படிப்புகளுக்கே முக்கியத்துவம் அளிப்படுகிறது. எந்தப் படிப்புக்கு இந்தியாவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. மொழிப்படிப்புகளுக்கும் பொது அறிவியல் படிப்புகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அதனால்தான் அவற்றிற்கான துறைகளின் அவலநிலைபற்றி இங்குள்ள மாநில, நடுவண் அரசாங்கங்கள் கவலைப்படுவதில்லை. ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள பொது அறிவியல் துறைகள், மொழி, இலக்கியம், சமூகவியல் படிப்புகளுக்கான துறைகள் மூடப்பட்டாலும் கவலைப்படுவதில்லை.

மருத்துவத்துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்கருவிகள், மருந்துகள் ஆகியவற்றிற்கு சந்தை உருவாக்குவதற்கே இங்கு மருத்துவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் அந்த மருத்துவமனைகளில் 'இறக்குமதி செய்யப்பட்டுள்ள' மருத்துவ உபகரணங்களுக்கு (CT Scan, MRI, PET, Robotic instruments etc.,) நோயாளிகளைப் 'பிடித்துத்தரவேண்டும்'! இதற்கு ஒரு இலக்கை ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவர்களுக்குக் கொடுக்கிறது. அந்த இலக்கை முடித்துத்தராதவர்கள் அங்கு தொடர்ந்து பணியாற்றமுடியாது. மருந்துகள் பரிந்துரைப்பிலும் இதுதான் இங்கு நடைபெறுகிறது. பிறந்த குழந்தைக்கு முன்னால் ஒரு அம்மை தடுப்பூசி போடுவார்கள். இப்போதெல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்குத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குழந்தைக்கு என்ன தடுப்பூசி போடுகிறார்கள் என்ற விவரம்கூட மக்களுக்குத் தெரியாது. மருத்துவர் சொல்கிறோர், ஆகவே போடுகிறோம் என்றுதான் அவர்கள் கூறுவார்கள். இந்தத் தடுப்பூசி மருந்துகள் எல்லாம் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தியே ஆகும்!

எனவே, இன்றைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சந்தை உருவாக்கித்தரும் தொழில்களுக்கான படிப்புகளுக்கே கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஏனைய படிப்புகளைப் பெறுபவர்கள் வேலையின்றித் தெருக்களில் நிறுத்தப்படுகிறார்கள்.

''அனைத்தையும் துறத்தல்'' - பொருள் என்ன?

 ''அனைத்தையும் துறத்தல்'' - பொருள் என்ன?

-------------------------------------------------------------------
சிலர் தங்களது குடும்பம், சொத்து, சுகம், இளம்வயது வாழ்க்கை அனைத்தையும் துறந்து . . . ''தத்துவ வல்லுநர்களாக'' மாறி . . . ''இறைவனின் தூதர்களாக'' மாறி . . .
''சந்நியாசம்'' வாங்கிக்கொண்டு, இலட்சம் கோடிகள் சொத்துகளின் 'இளவரசர்களாக' மதங்களின் பீடங்களில் அமர முன்வருகிறார்கள் . . . இதுவல்லவோ ''தியாகம்?'' . . . இது இந்து மதத்தில்மட்டுமல்ல, கிறித்தவ மதம் , புத்த மதம், சமண மடம் போன்ற அனைத்து மதங்களிலும் உண்டு! வடிவங்கள் மாறலாம்! அவ்வளவுதான்!
இச்செய்தி பரவலாக ஊடகங்களில் தற்போது கூறப்பட்டுவருகிறது!
இந்தப் பதிவில் மதங்கள்பற்றியோ, மதங்களின் 'மடங்கள்' பற்றியோ நான் விமர்சனம் செய்யவில்லை! இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்யவில்லை!
சமூக வரலாற்றில் தோன்றிய நிலவுகிற 'இறை நம்பிக்கை' 'மடங்கள்' போன்றவை, சமூக வரலாற்றில் இன்னொரு கட்டத்தில் மறையும்! மறைந்துதான் தீரும்! எனவே அதுபற்றி விவாதிப்பதற்கான தளங்கள் வேறு!
ஒரே ஒரு செய்தியைத்தான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்!
'அனைத்தையும் துறத்தல்' என்பதுபற்றிய ஒரு கருத்தே இது! 'அனைத்து' என்பதை எவற்றைக் குறித்து நிற்கிறது? இதுதான் எனது ஐயம்!
இவ்வாறு 'இளவரசர்களாக' அல்லது 'சக்கரவர்த்திகளாக' மாறியவர்களுக்கு இருக்க இடம் இல்லையா? உண்ண உணவு இல்லையா? பயணிக்க ஊர்திகள் இல்லையா? உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? அரசாங்கங்களின் அரவணைப்பு இல்லையா? அதுமட்டுமல்ல . . . மடங்களின் சொத்துகளை அபகரிப்பதில் ஏற்படுகிற போட்டி, பொறாமைகள் . . . கொலைகளில்கூட முடிவடைகின்றன!
ஆனால், உண்மையில் மேற்கூறியவை எதுவும் இல்லாமல் . . . மக்களுக்காகவே . . . மக்களிடையே வாழ்ந்து . . . அவர்கள் அளிக்கிற கஞ்சியைக் குடித்துக்கொண்டு . . . கட்டாந்தரையில் படுத்து உறங்கிக்கொண்டு . . . மக்களுடைய உழைப்பிலும் பங்கேற்று . . . மக்களுக்காகவே போராடி . . . இறுதியில் மக்களுக்காகவே . . . அடித்து அல்லது சுட்டுக்கொல்லப்படுகிறார்களே . . . இது 'அனைத்தையும் இழத்தல்' என்னும் சொற்றொடருக்குப் பொருள் இல்லையா?
பகத்சிங், குருதேவ், வாஞ்சிநாதன் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டங்களில் தூக்கில் இடப்பட்டவர்கள்! அல்லது போராட்டத்தில் தாங்களாகவே தங்களைச் சுட்டுக்கொன்று மறைந்தவர்கள்! தங்களது நாட்டுக்காக இவர்கள் தங்கள் குடும்பம், பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து போராடியவர்கள்! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போராட்டங்களில் குதித்தவர்கள்!
கியூபாவில் மக்கள் புரட்சியில் பெரும்பங்காற்றிய பிறகும், பிற நாடுகளின் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் புரட்சியாளர் குவேரா. கியூபாவில் தனக்கு அளிக்கப்பட்ட அமைச்சர் பதவியைத் துறந்து, பொலிவியா நாட்டின் விடுதலைக்காகப் போராடி , இறுதியில் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்!
1948-50 களில் இந்தியாவிலும் ஹைதராபத் நிஜாமை எதிர்த்த விவசாயிகளின் புரட்சியில் பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், சொத்து, சுகங்களைத் துறந்து, போராட்டங்களில் பங்கேற்று, எதிரிகளால் கொல்லப்பட்டார்கள்!
1969-இல் இந்தியாவின் பல பகுதிகளில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகப் போராடிய பத்தாயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள்! அவர்களின் தலைவரான தோழர் சாரு மஜூம்தார் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறையிலேயே கொல்லப்பட்டார். இவர்கள் அனைவரும் குடும்பம், சொத்து, பதவி, சுகம் போன்றவற்றைத் துறந்து தியாகம் செய்தவர்கள்!
எனக்குத் தெரிந்து தமிழகத்திலேயே மேற்குறிப்பிட்ட புரட்சியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கொல்லப்பட்டவர்கள் தோழர்கள் அப்பு, கணேசன், சர்ச்சில், சீராளன், பாலன், தமிழரசன், இரவிச்சந்திரன் போன்ற இளைஞர்கள்! இவர்கள் எல்லோரும் தங்கள் படிப்பு, பதவி, குடும்பம், சொத்து போன்றவற்றைத் துறந்து , மக்களுக்காகப் போராடி . . . போராட்டங்களிலேயே உயிர்துறந்தவர்கள்!
மேலே நான் கூறிய வரிசையில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் . . . தங்கள் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், சொத்து, பதவி போன்ற அத்தனையையும் துறந்து போராடி உயிர் துறந்தவர்கள்!
எது 'அனைத்தையும் இழத்தல்' ? எது 'துறவறம்'? தற்போது இருக்கிற வாழ்க்கையைவிட வசதியான வாழ்க்கைக்குப் பட்டம் சூட்டிக்கொள்பவர்களா?
அல்லது தங்களுக்கு இருக்கிற சொத்து, சுகம் அனைத்தையும் துறந்துவிட்டு, மக்களுக்காவே வாழ்கிறார்களே, இவர்களின் நடைமுறையை அல்லது வாழ்க்கையை 'அனைத்தையும் துறத்தல்' என்பதற்குப் பொருளாகக் கொள்வதா?
ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது! ஆமாம், 'அனைத்தையும் துறத்தல்' என்னும் சொல்லுக்கும் பின்னாலும் வர்க்கங்கள் . . . வர்க்க நலன்கள் ஒளிந்துகொண்டிருக்கிறது!
அனைத்து நாடுகளிலும் . . . அனைத்து மதங்களின் மடங்கள் அல்லது தலைமைப்பீடங்களுக்கு . . . கோடியே கோடி சொத்துகளைக் கொட்டிக் கொடுத்தவர்கள் யார்? மடாதிபதிகளும் அவர்களுடைய சீடர்களும் உழைத்துச் சேர்த்த சொத்துகளா இவை? இல்லை.
மக்கள் உழைப்பைக் கொள்ளையடித்த அரசர்கள் . . . சக்கரவர்த்திகள் . . . அரசுகள் 'நன்கொடையாக' கொடுத்தவையே இச்சொத்துகள்! ! ஏன் அவ்வாறு கொட்டிக்கொடுத்தார்கள்? 'பொது நலனா'? அல்லது 'வேறு நலன்களா? ' சிந்தித்துப் பார்த்தால் விடை கிடைக்கும்!

'சில', 'பல' - எண்ணுப்பெயரடைகளா, எண்ணுப்பெயர்களா?

 'சில', 'பல' - எண்ணுப்பெயரடைகளா, எண்ணுப்பெயர்களா? ஒரு குழப்பம் எனக்கு! தமிழ் ஆய்வாளர்கள் தயவுசெய்து உதவவும்.

------------- -------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கருத்து:
-----------------
‘சில’, ‘பல’ என்பவை எண்ணுப்பெயரடைகளாகவும் (Quantifier) ‘சிலர்’, ‘பலர்’ என்பவை பால் ஈறுபெற்ற எண்ணுப்பெயர்களாகவும் பயன்படுகின்றன.
‘மாணவர்கள் சிலர் இன்னும் வரவில்லை’
‘சில புத்தகங்கள் கிடைத்தன’ ('புத்தகங்கள் சில கிடைத்தன')
மேற்கண்ட வாக்கியங்களில் ‘மாணவர்கள்’ ‘புத்தகங்கள்’ ஆகியவற்றின் எண்ணிக்கையைச் ‘சிலர்’ ‘சில’ என்பவை குறித்து நிற்கின்றன.
‘சில’ என்னும் எண்ணுப்பெயரடை , பலர்பால் பாலீறு ஏற்று ‘சிலர்’ எனவும், ‘பல’ என்னும் எண்ணுப்பெயரடை ‘பலர்’ எனவும் அமைகின்றன. ‘ஒரு’ என்னும் எண்ணுப்பெயரடை ‘அர்’ என்னும் பாலீறு பெற்று ‘ஒருவர்’ என்று அமைவதுபோல, ‘சில’ ‘பல’ என்பவையும் ‘சிலர்’ ‘பலர்’ என்று அமைகின்றன.
‘மாணவர்கள்’ என்னும் பெயர்ச்சொல் பன்மை விகுதி பெற்றிருப்பதால், அவர்களைக் குறித்து நிற்கிற ‘சிலர்’ ‘பலர்’ என்னும் சொல்லும் ஒன்றுக்குமேற்பட்ட மாணவர்களைக் குறிக்கின்றன.
மற்றொரு கருத்து:
-------------------------------------------------------
‘சில’ ‘பல’ என்பவை வேற்றுமைகளை ஏற்பதால், அவற்றை அஃறிணை ‘எண்ணுப் பெயராகவும்’ கொள்ளலாம். இங்கு ‘அவை’ ‘இவை’ என்னும் அஃறிணைப் பதிலிடு பெயர்கள் வேற்றுமைகள் ஏற்று, ‘அவற்றை’ ‘இவற்றை’ என்று மாறி அமைவதை ஒப்பிட்டு நோக்கலாம்.
‘ஆசிரியர் பல புத்தகங்கள் வாங்கினார்’
‘ஆசிரியர் புத்தகங்கள் பலவற்றை வாங்கினார்’
‘ஆசிரியர் சில புத்தகங்கள் வாங்கினார்’
‘ஆசிரியர் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினார்’
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளிலும் ‘பல + அற்று (சாரியை) , பலவற்று + ஐ --> பலவற்றை’ என்றும் அதுபோன்றே ‘சில + அற்று --> சிலவற்று + ஐ --> சிலவற்றை’ என்றும் மாறுகின்றன.
‘சில / பல புத்தகங்கள்’ என்று வரலாம்; ஆனால், ‘சில / பல மாணவர்கள்’ என்று வரக்கூடாது; அதற்குக் காரணம், ‘மாணவர்கள்’ உயர்திணை; எனவே, ‘மாணவர்கள் சிலர் / பலர்’ என்றுதான் கூறவேண்டும் என்னும் கருத்தும் உள்ளது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India