பெரியார், பாரதியார் இருவரும் பிற்போக்குவாதிகளா? முற்போக்காளர்களா?
---------------------------------------------------------------------
பெரியார் அவர்கள் தமிழகத்தில் பிரமாணியர் ஆதிக்கம், மதத்தின் பெயரில் சமுதாயத்தில் திணிக்கப்பட்ட
மூடநம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றை உறுதியாக எதிர்த்தார். பெண்ணடிமை, ஆண் ஆதிக்கக் குடும்ப அமைப்பு ஆகியவற்றை எதிர்த்தார்.
பெண் கல்வியை உயர்த்திப்பிடித்தார். இதில் எந்தொரு ஐயமும் எனக்கு இல்லை. எனவே அவர் ஜனநாயகவாதி என்பதிலும் எந்தவொரு ஐயமும் கிடையாது.
ஆனால் அவர் எதிர்த்த அத்தனை
பிற்போக்குத்தனங்களுக்கும் அடிப்படை . . . சமுதாயத்தின் அடிப்படை அரசியல்
பொருளாதாரக் கட்டுமானமே என்பதை வலியுறுத்தவோ அதை எதிர்த்த அரசியல் போராட்டத்தையும்
முன்னெடுக்கவோ செய்யவில்லை.
அதற்குக் காரணம் அவருடைய கண்ணோட்டமானது வரலாற்றுப்
பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் இல்லை. தத்துவப்பார்வையும் இயங்கியல்
பொருள்முதல்வாதம் இல்லை. இந்த இரண்டு கண்ணோட்டங்களும் இல்லையென்றாலே, ஒருவர் வெளிப்படையாகச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
கருத்துமுதல்வாதியாகவே இருக்கமுடியும். மார்க்சியத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டவன்
என்று முறையில் இதைக் கூறுகிறேன்.
பெரியார் நடைமுறையில் வெளிப்படையாகத் தென்படுகிற
சமுதாயக்கொடுமைகளைக் கடுமையாக எதிர்த்தார். அதில் ஐயம் இல்லை. ஆனால் அவற்றிற்கு
அடிப்படையான அரசியல் பொருளாதார அமைப்புக்கு எதிரான ஒரு ஒட்டுமொத்த ஜனநாயகப்
புரட்சியை முன்னெடுக்கவில்லை.
பாரதியாரும் சமுதாயத்தில் அன்று நீடித்த பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம், சில மூட நம்பிக்கைகளை
எதிர்த்தார். தமிழ்மொழியின் பெருமையையும் வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தினார்.
அத்துடன் அவர் தமது வாழ்க்கையில் பெரும்பகுதியை ஆங்கிலேயருக்கு எதிரான
போராட்டத்தில் செலவழித்தவர், தமது இறுதிக்காலத்தில்
ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்திலிருந்து பின்வாங்கினார். அதற்கான
காரணங்கள்பற்றி நான் தனியே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். பாரதியாரும் ஒரு
கருத்துமுதல்வாதியே. இருப்பினும் அவர் ஒரு ஜனநாயகவாதியே. அந்த வகையில் அவர் ஒரு
முற்போக்குவாதி என்று நான் குறிப்பிடுகிறேன்.
பொதுவுடமைக் கொள்கையையும் இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் கண்ணோட்டங்களையும்
ஏற்றுக்கொள்ளாதவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகளாகவே இருக்கவேண்டும் என்பது இல்லை.
அவர்கள் தங்கள் காலகட்டத்தில் நீடித்த சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடினால்
ஜனநாயகவாதிகளே. மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை! பகுதிப் பிரச்சனை என்பது
முழுமையின் ஒரு பகுதியே. எனவே, முழுமைக்கு எதிரான
போராட்டத்தின் வெற்றியே பகுதிப்பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும்.
இல்லையென்றால் பகுதிப் பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் தலைதூக்கும்! ஆனால்
அதற்காகப் பகுதிப் பிரச்சினைகளுக்காகப் போராடக்கூடாது என்று கூறுவது தவறு.
முற்போக்காளர்களே! குறிப்பிட்ட காலகட்டத்தில்
முற்போக்காளர்களாக இருப்பவர்கள் எல்லாம் பொதுவுடைமைவாதிகளாக இருக்கவேண்டுமென்று
கருதக்கூடாது.
பொதுவுடைமைவாதிகள் எல்லோரும் முற்போக்காளர்களே. ஆனால்
முற்போக்காளர்கள் எல்லோரும் பொதுவுடைமைவாதிகள் இல்லை. அவ்வாறு இருந்தால் நல்லது.
அது வேறு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக