தற்போதைய கல்வியை
இந்தியாவில் தீர்மானிப்பது யார்? உள்நாட்டு வளர்ச்சிக்கான கல்வியா? அல்லது பன்னாட்டு
நிறுவனங்களின் தேவைக்கான கல்வியா?
------------------------------------------------------------------------
சீனம் விடுதலை அடைந்தது 1949 அக்டோபர் 1-ஆம் தேதி. மாசேதுங்கின்
தலைமையிலான பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தியா 1947 - ஆகஸ்டு 15 ஆம் நாள் ஆங்கிலேயரின்
நேரடி ஆட்சியிலிருந்து விடுபட்டது. நம்மைவிட இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர்தான்
சீனம் விடுதலை அடைந்தது. நம்மைவிட மக்கள்தொகை அதிகமான நாடு அது. வறுமையில் வாடிய
நாடு அது.
ஆனால் அதனுடைய இன்றைய
வளர்ச்சி . . . மேலைநாடுகளுக்கெல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
இன்று சீனம் தடம்மாறி, ஏகாதிபத்தியமாக
மாறி இருக்கிறது. ஏகாதிபத்திய பாதையில் நடைபோடுகிறது. அது வேறு.
ஆனால் மாவோவின்
தலைமையில்தான் இன்றைய அத்தனை வளர்ச்சிக்கும் அடித்தளம் இடப்பட்டது. விவசாயம், தொழில் உற்பத்தி இரண்டுமே
திட்டமிட்டு, உள்நாட்டு
மூலதனத்தை வைத்துக்கொண்டு வளர்க்கப்பட்டது. அனைத்துத் துறைகளில் தலைநிமிர்ந்து
நிற்கிறது!
ஆனால் இந்தியாவின் இன்றைய
நிலை . . . அனைத்துக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்துதான் உள்ளது. ஏன் இந்த
நிலை? நிலங்கள்
இல்லையா? உழைப்பதற்குக்
கரங்கள் இல்லையா? பீடியைத்
தவிர - பற்பசை, சோப்புமுதல்
அத்தனை பொருள்களும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திகள்! அல்லது அவற்றின் மூலதனம், தொழில்நுட்பம்
ஆகியவற்றைக்கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றவை!
1947-இல்
இந்தியாவில் நீடித்திருந்த மூலதனத்தைப்போன்று பல மடங்கு இன்று இந்தியாவில் அந்நிய
மூலதனம் நீடிக்கிறது. ஒரு மிகப் பெரிய பாலம் கட்டுவதற்கும்கூட பன்னாட்டு
நிறுவனங்களே தேவைப்படுகிறது. எல் & டி, கிடாச்சி என்று பன்னாட்டு நிறுவனங்களே ஆதிக்கம்
செலுத்துகின்றன. மேலும் கட்டுமானத்திற்கும்கூட அந்நிய நாடுகள்தான் கடன் தருகின்றன!
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி
உறுதியாகத் தேவை! அதில் ஐயமே இல்லை! அவற்றின் வளர்ச்சிதான் ஒரு நாட்டை அடுத்த
உயர்ந்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும். அதற்காத்தானே ஆங்கிலேயர் ஆட்சியை
எதிர்த்துப்போராடினோம்! வ உசி கப்பல் விட்டார். பகத்சிங் தூக்குமேடை ஏறினார்! எனவே, எந்தவொரு அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும்
உள்நாட்டில் , உள்நாட்டு
மூலதனத்தில் , உள்நாட்டுக்
கரங்களாலும் மூளைகளாலும் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்!
ஆனால் உண்மை என்ன?
ஒருவர் தனது
வீட்டுக்குவேண்டிய பொருள்களை - தொலைக்காட்சி, ஏ சி , வீடு, சிற்றுந்து வரை - தனது சொந்த வருவாயில் வாங்குவது
வேறு! கடன் அட்டையில் வாங்குவது வேறு! இந்த வேறுபாடுதான் ஒரு நாட்டுக்கும்
பொருந்தும்! இந்த நிலை மாறும்வரை . . . கல்வியும் உள்நாட்டுத் தேவைக்கான கல்வியாக
இருக்காது . . . இருக்கமுடியாது!
இவைபற்றியெல்லாம் 'பூத் கமிட்டி' அரசியல் கட்சிகள்
கவலைப்படுகிறதா? கிடா
வெட்டுவது, ஸ்வீட்
பாக்ஸ் அளிப்பது போன்றவற்றைத்தவிர . . . இந்தக் கட்சிகள் வேறு என்ன செய்கின்றன? நாட்டை நிர்வகிக்கும் ஐ ஏ
எஸ் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க பெரிய தேர்வு முறை இருக்கிறது! ஆனால் நாட்டின்
வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பாராளுமன்றம் , சட்டசபைகளில் உறுப்பினர்களாக இடம்பெற என்ன
தேவைப்படுகிறது இங்கே?