மொழியியலாளர் தமிழுக்கு எதிரிகளா?
----------------------------------------------------------------
பேராசிரியர் செல்லப்பெருமாள் ஆதிமூலம்
-------------------------------------------------------------
தமிழக மொழியியலர்கள் எப்போதுமே தமிழுக்கு ஆதரவான கருத்துக்களைக் கூறமாட்டார்கள். மற்ற மாநில மொழியியலர்கள் அப்படி அல்ல. தங்களுடைய மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக தெலுங்குக்கு வாதிட்ட Bh. கிருஷ்ணமூர்த்தி, இப்போது குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் கன்னட மொழியியலர்களைக் குறிப்பிடலாம். தமிழ் நாட்டு மொழியியலர்கள் அவர்களுடைய கருத்தை விமர்சித்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள். ஆனால் தமிழின் சிறப்பைக் கூறினால் ' அறிவியல்' பார்வையில் ஓடிவந்து மறுப்பர். இதில் தமிழர்களுக்கு மொழி வெறியர் என்ற அவப் பெயர் உண்டு. உண்மையில் தமிழர்கள் Hypocritical in nature.
----------------------------------------------------------------------
தமிழ்ப் பல்கலைக்கழகம் வளராமல் போனதற்குக் காரணம் அங்கு தொடரந்து மொழியியலர்கள் துணைவேந்தர்களாக வந்தது தான். இலக்கியவாதிகள் கூட அங்கு துணைவேந்தர்களாக வந்துள்ளனர். இதுவரை அங்கு பண்பாட்டு அறிஞர்களை துணைவேந்தர்களாக அமர்த்தியதில்லை.
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------------------------------------
அன்பிற்குரிய பேராசிரியர் செல்லப்பெருமாள் ஆதிமூலம் அவர்களே. தமிழ் - கன்னடம் இரண்டுக்கும் உள்ள உறவு தாய் - மகளா அல்லது தங்கைகளா என்பதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, மொழியியலாளர்கள்மீது தங்கள் கோபத்தைக் காட்டவேண்டிய தேவை இல்லை. மேலும் எனது கருத்தை வைத்துக்கொண்டு மொழியியலாளர்களை மொத்தமாகத் திட்டவேண்டாம். நான் ஒரு அடிப்படை மொழியியல் மாணவன்தான். திராவிட மொழியியலில் ஆய்வு செய்தவன் இல்லை. எனக்குத் தெரிந்த அறிவைக்கொண்டு, தமிழ் - கன்னடம் உறவு தங்கைகள் உறவு என்று கூறியுள்ளேன். அவ்வளவுதான். எதிர்கால ஆய்வுகள் மாறுபட்ட முடிவுக்கு என்னை அழைத்துச் சொல்லலாம்.
ஆய்வு அடிப்படையில் அணுகவேண்டிய ஒன்றை, மொழியியலுக்கு எதிராகப் பேசுவதற்குப் பயன்படுத்தவேண்டாம். அதுவும் தாங்கள் மானிடவியல் பேராசிரியர். ஆய்வறிஞர். நமக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அது வேறு. மேலும் நான் ஏதோ தமிழுக்கு எதிரானவன்போலத் தாங்கள் கருதுவதாகத் தெரிகிறது. தமிழின் தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சிபற்றித் தொடர்ந்து பேசிவருபவன். தமிழ்த் தேசிய இன உரிமைகளுக்காகப் போராடுபவர்களில் ஒருவன்.
அடுத்து, மொழியியலாளர்கள் எல்லாம் தமிழுக்கு எதிரானவர்கள் என்று தாங்கள் - ஒரு பேராசிரியர் - கூறுவது சரி அல்ல. குறிப்பாக, எடுத்துக்காட்டுகள் கொடுத்து தங்கள் கருத்தை நிரூபியுங்கள். இதுபோன்ற சலசலப்புக்கு அஞ்சி, உண்மையைச் சொல்லத் தயங்குபவன் அல்ல நான். ஓடி ஒளிபவனும் இல்லை!
அதனையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பெரும்பாலும் மொழியியலாளர்களே இருந்துள்ளார்கள். அவர்களே அப்பல்கலைக்கழகத்தைக் ''கெடுத்துவிட்டார்கள்'' ! என்று வேறு கூறியுள்ளீர்கள். திராவிடம், தமிழ், கன்னடம் பற்றி பேசும்போது, தாங்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்பற்றிப் பேசவேண்டிய தேவை இல்லையே! பண்பாட்டுத்துறைசார்ந்த ஒருவர் துணைவேந்தராக நியிமிக்கப்பட்டால், அந்தப் பல்கலைக்கழகம்' வளர்ச்சியடையும்' என்று கூறியுள்ளீர்கள். தாங்கள் - பண்பாட்டுத்துறைப் பேராசிரியர் - விரைவில் அப்பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, அந்தப் பல்கலைக்கழகத்தைச் 'சரி செய்ய' வாழ்த்துகள்!
தமிழுக்கு மொழியியல் எதிரி என்றால் எப்படி என்று ஆதாரங்களுடன் கூறுங்கள். அடிப்படையற்ற அவதூறுகளை அள்ளி வீசாதீர்கள்! தங்களைப் போன்றவர்கள் ;தொடர்ந்து ' இவ்வாறு கூறுவதால், மொழியியல் அழிந்துவிடாது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது! சீப்பை ஒளித்து வைப்பதால், திருமணம் நின்றுவிடாது!
மொழியியல் துறை ஒரு மொழி அறிவியல் துறை. தமிழ்நாட்டு மொழியியலாளர்கள் தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு சென்றவர்கள், செல்பவர்கள்! ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதால் அது உண்மை ஆகிவிடாது.
மேலும் 'மூலமொழிக் கொள்கையில்' எனக்கு உடன்பாடு கிடையாது. இதுபற்றிப் பின்னர் தனியே எழுதுகிறேன்.