வெள்ளி, 24 அக்டோபர், 2025

தமிழ்நாட்டு அரசியல் . . . 'மூளைகள்' பலியாக்கப்படுகின்றன!

 தமிழ்நாட்டு அரசியல் . . . 'மூளைகள்' பலியாக்கப்படுகின்றன!

------------------------------------------------------------------------------------------------------------
அண்மையில் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் எதிர்பாராதவிதமாக 41 உயிர்கள் பலியாகியுள்ளது உண்மையில் மிக மிக வேதனைக்குரிய ஒன்று. குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை . . . பலி! இந்த உயிர்களை இழந்த குடும்பத்தினருக்குக் கோடி கோடியே கொட்டிக்கொடுத்தாலும் அவர்களது இழப்புக்கு ஈடாகாது! இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு அரசியல் கட்சியும் வரும் தேர்தலை மனதில் வைத்து, லாவணி பாடிவருகிறது! இதற்குமேல் ஒரு படி . . . தமிழ்நாடு அரசு, காவல்துறை, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், விசாரணைக்குழு, சிபிஐ என்று அரசு சார்ந்த அமைப்புகளும் இந்தப் பலிகளைப்பற்றித் ''தங்களுக்கே உரிய வகையில்'' கருத்து தெரிவித்துவருகின்றன!
தமிழ்நாட்டில் (மற்ற மாநிலங்களும் இதற்கு விதிவிலக்குகள் இல்லைதான்!) அரசியல் என்றாலே 'தேர்தல் அரசியல்மட்டும்தான்'!
என்னைப் பொறுத்தவரையில் . . . 41 உயிர்கள் மட்டுமல்ல . . . கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் 'மூளைகளை' இந்த அரசியல் கட்சிகள் பலியிட்டுவருகின்றன!
சாதி, மதம், திரைப்படம் . . . இந்த மூன்றின் ஆதிக்கங்களே அத்தனை அரசியல் கட்சிகளிலும் நீடிக்கின்றன. இதற்குமேல் . . . போலி இந்தி எதிர்ப்பு (ஆங்கில ஆதரவு!) , 'செம்மொழித்தமிழ்' 'இலவசங்கள்' போன்றவையும் அரசியல் கட்சிகளால் 'பயன்படுத்தப்பட்டுவருகின்றன'. 'செம்மொழித் தமிழ் ' என்று நான் கூறுவதற்குக் காரணம், இன்றைய தமிழின் வளர்ச்சிபற்றி இங்கு யாரும் கவலைப்படுவதில்லை!
எந்தவொரு அரசியல் கட்சியும் இந்தியப் பொருளாதாரம்பற்றியோ, ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்பற்றியோ பேசுவது இல்லை! இன்னும் ஒருபடி மேலே சென்று, அரசுகளே பன்னாட்டு நிறுவனங்களுக்குச் 'சிவப்புக் கம்பளம்' விரித்து வரவேற்று வருகின்றன! மறுபுறம் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவாக்கிப் பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்ட வ உ சி -இன் நினைவுநாளையும் தவறாமல் போட்டி போட்டுக்கொண்டு கொண்டாடிவிடுகின்றன.
தேர்தலை மனதில்கொண்டு, அத்தனை சாதிகளின் மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கும் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மறக்காமல் ஆளுயர மாலைகளைப் போட்டிபோட்டுக்கொண்டு அணிவித்துவருகின்றன!
நாட்டின் உண்மையான அரசியல் பொருளாதாரம், விலைவாசி உயர்வு, வேலையில்லாத்திண்டாட்டம், பணவீக்கம் போன்ற உண்மையான பிரச்சினைகள்பற்றி எந்தவொரு கட்சியும் பேசுவதே இல்லை. அதுபற்றிக் கவலைப்படுவதே இல்லை! தேர்தல் கூட்டணி எவ்வாறு அமைக்கலாம் என்பதுபற்றிமட்டுமே கவலைப்படுகின்றன. அது இக்கட்சிகளின் 'வாழ்க்கைப் பிரச்சினை'! இருந்துவிட்டுப் போகட்டும்! பணம் சம்பாதிப்பதும் (வட்டம் முதல் உயர்மட்டம்வரை!) குலத்தொழிலாக வாரிசுகளை உருவாக்குவதுமே இக்கட்சிகளின் நிர்வாகிகள் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை முதன்மையான வேலைகளாகக் கொண்டிருக்கின்றனர்! இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்! இதில் எந்தவொரு கட்சியும் விதிவிலக்கு இல்லை! இவர்களது 'முக்கியப் பணியே' மக்களுக்கு உண்மையில் தேவையான 'அரசியல் பொருளாதாரக் கருத்துகள்' சென்றுவிடாமல் தடுப்பதே ஆகும்!
என்னைப் பொறுத்தவரையில் 41 உயிர்களை மட்டுமல்ல . . . தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களின் 'மூளைகளை' இந்த அரசியல்கட்சிகள் அனைத்தும் 'பலியாக்கிவருகின்றன'! இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மிகப் பெரிய ஆபத்து! மக்கள் தங்களது உண்மையான பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கான அத்தனை வேலைகளையும் இந்த அரசியல் கட்சிகள் செய்கின்றன!
இந்த நிலையை எப்படி மாற்றுவது? உண்மையில் மிகப் பெரிய 'சமூகக் கொலை' இங்கு நடந்துவருகிறது! தற்போதைய தலைமுறையினர் மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையினர்களும் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உட்படுவார்கள்!
மக்களைச் சரியான வழியில் சிந்திக்கவைக்க அரசியல் கட்சிகள் இங்குத் தோன்றாதா? வளராதா? எப்படி இவ்வளவு பெரிய 'சமூகக்கொலையைத்' தடுத்துநிறுத்துவது? எனக்குச் சமூக இயக்கத்தில் நம்பிக்கை உண்டு! சமுதாயம் உறுதியாகத் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வழிகளை உருவாக்கும்! இந்த நம்பிக்கை எனக்கு உண்டு! ஆனால் இது எப்படி, எப்போது நடைபெறும் என்பதுபற்றிக் கருத்து கூறமுடியவில்லை! 'காற்று அடித்துத் தூசி விலகும்' என்று எதிர்பார்ப்பது தவறு!
சமூக மாற்றத்தை உருவாக்க விழையும் அரசியல் உணர்வாளர்கள் முதலில் தமிழ்நாட்டில் சாதி, மதம், திரைப்படம் போன்றவை அரசியலில் தலையிடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கொண்டுசெல்லவேண்டும். இது இன்றைய தலையாய அரசியல் பணி! இந்த மூன்றும் மிகப் பெரிய சமூக விரோதிகள்! மக்களைப் பிளவுபடுத்தவும், திசைதிருப்பவும் இந்த மூன்றும் தமிழகத்தில் கடுமையாக 'வேலை செய்கின்றன'!
இளைஞர்கள் இந்தச் 'சமூக விரோதிகளை' எதிர்த்துக் கடுமையாகப் போராடவேண்டும்! உண்மையான அரசியலை மக்களிடையே கொண்டுசெல்வதற்கு இவையே இன்று மிக முக்கியமான தடைக்கற்களாக நீடிக்கின்றன. சாதிய விரோதங்கள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன! பிற்போக்கு மதக் கருத்துகள் திணிக்கப்படுகின்றன! திரைப்பட அரசியல் தலைதூக்கி நிற்கின்றன. இவை மூன்றையும் எதிர்த்த போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெறவேண்டும். மக்களின் ' மூளைகள்' 'சிந்தனைகள்' தொடர்ந்து மேற்கூறிய மூன்றுக்குப் பலியாகாமால் தடுக்கவேண்டும்!
மக்களின் 'மூளைகள்' சரியான திசையில் சிந்திக்கத் தொடங்கினால், உறுதியாக மாற்றம் ஏற்படும்! இது தானாக நடக்காது! இளைஞர்கள் உண்மையான, சரியான அரசியல் கருத்துகளைக் கற்று உணரவேண்டும்! அவற்றை மக்களிடையே கொண்டுசெல்லவேண்டும்!

செய்யறிவுத்திறனில் (Artificial Intelligence - AI) அமைந்துள்ள பெரும்மொழிமாதிரியின் (Large Language Model - LLM) அடிப்படையும் மொழியியலும் (Linguistics) . . . (மொழி, மொழியியல் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு பதிவு இது) -------------------------------------------------------------------------

 செய்யறிவுத்திறனில் (Artificial Intelligence - AI) அமைந்துள்ள பெரும்மொழிமாதிரியின் (Large Language Model - LLM) அடிப்படையும் மொழியியலும் (Linguistics) . . . (மொழி, மொழியியல் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு பதிவு இது)

-------------------------------------------------------------------------
மொழியியலில் வேறுபட்ட பல கோட்பாடுகள் உண்டு. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. முதலாவது குறிப்பிட்ட மொழியியல் கோட்பாட்டின் நோக்கம்.
(1) மாற்றிலக்கணக் கோட்பாட்டின் (குறிப்பாக, நோம் சாம்ஸ்கி ) நோக்கம், பிறந்த குழந்தை எவ்வாறு குறைந்த காலத்தில் ( மூன்று ஆண்டுகளுக்குள்), தாய்மொழி அறிவை (இலக்கணம், சொற்களஞ்சியம்) நிறைவாகப் பெற்றுக்கொள்கிறது? அதற்கு அடிப்படையான மொழித்திறன் குழந்தை பிறக்கும்போதே - மனிதமூளைக்குள் - அத்திறன் நீடிக்கிறதா? அவ்வாறு நீடித்தால் அத்திறனின் அடிப்படைக் கூறுகள் (''பொதுமை இலக்கணம்'' - Universal Grammar - UG) என்ன? அத்திறன் மனிதமூளைக்கே உரிய மரபணுப் பண்பு சார்ந்ததா? குழந்தை தனது வளர்ச்சியில் மொழியைக் ''கற்றுக்கொள்கிறதா''? அல்லது ''பெற்றுக்கொள்கிறதா''? குழந்தைக்குப் பிற திறன்கள் - தவழுதல், நடத்தல் போன்ற திறன்கள் - தாமாகவே ''வருவதுபோல'' அல்லது ''வளர்வதுபோல'' மொழியும் 'வளர்கிறதா?''
கணினிமொழியியலில் நீடிக்கிற ''நரம்பு வலைப்பின்னல் (Neural Network) " வழிமுறையானது கணினிக்கு இயற்கைமொழியின் அறிவைக் கொடுப்பதற்குத் தேவையான ''வழிமுறையை (algorithm / architecture)'' உருவாக்குவதாகும். அதனுடைய இன்றைய வளர்ச்சியே செய்யறிவுத்திறனில் கூறப்படுகிற ''ஆழ்நிலைக் கற்றல் (Deep Learning)'' ஆகும். இந்த ஆழ்நிலைக் கற்றல் வழிமுறையே தனக்குக் கொடுக்கப்படுகிற மொழித்தரவுகளைக் கொண்டு, ''தேவையான'' மொழி அறிவைக் கணினி பெற்றுக்கொள்கிறது. ஆனால் இந்த அறிவு குழந்தையின் மூளையில் இருக்கின்ற இலக்கண. சொற்களஞ்சிய அறிவு என்று கூறிவிடமுடியாது. வேறுபட்ட ஒன்றாகத்தான் அது அமைகிறது. இருப்பினும் மாற்றிலக்கண மொழியியலின் அடிப்படை இதற்கு உள்ளது. 'மனிதமூளையின்' உள்ளே உள்ள ''பொதுமை இலக்கணம்'' போன்ற ஒன்றைக் கணினிக்குக் கொடுக்க முயல்கிறது.
(2) அடுத்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிர்த் (Firth), ஹாலிடே (Halliday), சிங்க்ளயர் (Sinclair) போன்றோர் முன்வைக்கிற மொழியியல் கோட்பாடு. இக்கோட்பாடு ஆங்கிலத்தில் "Systemic Grammar" என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் மற்றவர் பேச்சை அல்லது மொழியைப் புரிந்துகொள்வதில் மூன்று முக்கியக் கூறுகள் உண்டு. ஒன்று , 'குறிப்பட்ட தொடர் அல்லது வாக்கியம்("Text") ' ; இரண்டு, அத்தொடருக்கு அல்லது வாக்கியத்திற்கு முந்தைய, பிந்தைய தொடர்கள் அல்லது வாக்கியங்கள் (Co-text)' ; மூன்று, குறிப்பிட்ட தொடர் அல்லது வாக்கியம் முன்வைக்கப்படுகிற மொழிசாராக் கூறுகள்( Context).
இம்மூன்றுமே ஒருவர் மற்றொருவர் முன்வைக்கின தொடரை அல்லது வாக்கியங்களின் பொருண்மையைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
செய்யறிவுத்திறன் மென்பொருளில் அமைந்துள்ள 'மொழித்திறன்' என்பது குறிப்பிட்ட சொல் அல்லது தொடரின் முந்தைய , பிந்தைய சொற்கள், தொடர்கள், பத்திகள் ஆகியவற்றன் அடிப்படையில்தான் அமைகிறது. இதைத்தான் செய்யறிவுத்திறனில் 'சூழற் சாளரம் "(Context Window") என்று இதில் அழைக்கிறார்கள். ஆனால் மனித மூளைக்கும் செய்யறிவுத்திறனுக்கும் இடையில் உள்ள ஒரு அடிப்படை வேறுபாடு, மனித மூளைக்கு ஒரு தொடரின் முன்னால் அல்லது பின்னால் அமைகிற ஒரு சில சொற்கள் போதும். ஏனெனில் சூழல்சார் அறிவு துணை செய்கிறது. பேசப்படுகிற சூழலை அல்லது பேசப்படுகிற பொருளைப் புரிந்துகொள்ளும் திறன் (உலக அறிவு ) மனித மூளைக்கு உள்ளது. இதில் டெல் ஹைம்ஸ் (Dell Hymes) என்பவரின் கருத்தாடல் திறன் (Communicative Competence) என்பதும் அடங்கும்.
ஆனால் இந்த அறிவு கணினிக்கு இல்லாததால், அதற்கு ஒரு சொல் அல்லது தொடருக்கு முந்தைய , பிந்தைய ஆயிரக்கணக்கான , லட்சக்கணக்கான சொற்கள் அல்லது தொடர்கள் தேவைப்படுகிறது. எனவேதான் செய்யறிவுத்திறன் மென்பொருளில் அமைந்துள்ள பெரும்மொழிமாதிரியில் கோடியே கோடியே சொற்கள் இடம்பெறுகின்றன. இச்சொற்களின் எண்ணிக்கை மேலும் கூடக்கூட, அதன் 'மொழித்திறமும்' கூடும்.
ஆகவே, மொழியியலின் அடிப்படைகளே செய்யறிவுத்திறனில் அமைந்துள்ள பெரும்மொழிமாதிரிகளில் நிலவுகின்றன. மொழியியல், கணினிமொழியியல் ஆகியவற்றின் கடந்த 150 ஆண்டுகால வளர்ச்சியே செய்யறிவுத்திறனின் பெரும்மொழிமாதிரிகளை (Pre-trained Large Language Model - LLM) உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
தமிழ்போன்ற மொழிகளில் கோடியே கோடி மின்தரவுகள் கிடைக்காததால்தான், ஆங்கிலத்திற்கு இருக்கிற மொழித்திறன் தமிழுக்குச் செய்யறிவுத்திறன் மென்பொருள்களில் கிடைப்பதில்லை. அதற்கு மாற்றுவழியே 'நுட்ப மேம்படுத்தல் (Fine-tuning) ' என்னும் வழிமுறையாகும். இந்த வழிமுறையில் மொழிதரவுகளுடன் மொழி இலக்கண அறிவும் இணைத்துக் கொடுக்கப்படுகிறது. இதற்குக் குறிப்பிட்ட மொழியின் இலக்கண அறிவும் மொழியியல் ஆய்வுமுறையும் தேவைப்படுகின்றன.
மேற்கூறியவை எல்லாம் முதல் காரணத்தில் அடங்கும். இரண்டாவது காரணம், ஒரே மொழியியல் கோட்பாட்டின் நோக்கத்தை வெவ்வேறு வழிமுறைகளில் நிறைவேற்ற முயல்வது ஆகும். மாற்றிலக்கண மொழியியல் கோட்பாட்டில் வெவ்வேறு வழிமுறைகளைக் கொண்ட மொழியியல் பிரிவுகள் உண்டு. அதுபற்றி வேறொரு பதிவைப் பின்னால் இடுகிறேன்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India